முதலாவிண் - 1

மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர் அறிவித்தபோது தன் புலவரவையில் அமர்ந்திருந்த பாண்டியன் “அழைத்து வருக!” என்று ஆணையிட்டான்.

அவன் அவைக்கு ஒவ்வொருநாளும் வடபுலத்திலிருந்து பாணரும் புலவரும் வந்துகொண்டிருந்தனர். ஆகவே மெல்லிய ஆவலே அவனிடமிருந்தது. ஆனால் வந்த பாணனின் தோற்றம் அவனை வியப்படையச் செய்தது. “வருக, பாணரே” என்று அவன் வரவேற்றான். அவைப்பீடம் அளித்து “உங்கள் வருகையால் முத்துக்களின் நிலம் மகிழ்கிறது” என்று முகமன் உரைத்தான். “அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான என் பெயர் சீர்ஷன். நான் தொல்குடிப் பாணன். வடக்கே இமைக்கணக்காடு என் குருநிலை” என்றான்.

அவனுடைய தோற்றத்தை பாண்டியன் நோக்குவதை உணர்ந்து “அரசே, என் முன்னோர் தென்புலத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் என்று என் அன்னைவழித் தொல்கதைகளில் இருந்து அறிந்திருக்கிறேன். ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் என்பவர் தொல்நாளில் தெற்கே கடல்கொண்ட நிலத்திலிருந்து மாமதுரை நகரினூடாக வடபுலம் சென்றார். அவருடைய குருதிவழியினன் நான்” என்றான்.

அவையிலிருந்த புலவர்கள் திகைத்தனர். அமைச்சர் குன்றூர் பெருஞ்சாத்தனார் எழுந்து “பாணரே, அப்பெயரை மீண்டும் ஒருமுறை கூறுக!” என்றார். அவன் “ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் என் மூதாதை” என்றான். “இங்கு ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் கூத்தன் கொடிவழியினராகிய கண்ணுதலார் அமர்ந்திருக்கிறார்” என்று பெருஞ்சாத்தனார் சொன்னார். அனைத்து விழிகளும் அங்கே திரும்பின.

ஏழ்பனைநாட்டு மருதூர் குன்றன் மகன் கண்ணுதலார் எழுந்து நின்று “அவர் உள்ளே வரும்போதே நான் நோக்கி சொல்லிழந்துவிட்டேன், அமைச்சரே. அவர் என்னுடைய ஆடிப்பாவை எனத் தோன்றுகிறார்” என்றார். அதை அனைவரும் உணர்ந்துவிட்டிருந்தனர். மூச்சொலிகளும் வியப்பொலிகளும் எழுந்தன. பெருஞ்சாத்தனார் “ஐயமே தேவையில்லை. இதுவே சான்று” என்றார். அவையினர் “ஆம்! ஆம்!” என்றனர்.

“அறிக பாணரே, என் மூதாதையான தென்குன்றூர் பெருஞ்சாத்தனார் முன்பு ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் என்பவனிடம் அமைச்சராக இருந்தார். அவருடைய குறிப்புகளில் அங்கே உமது மூதாதையான ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் பாடிச்சென்ற இளிவரல்செய்யுள் உருவான கதை உள்ளது. அச்செய்யுள் இன்றும் சொல்சொல்லென அழியாது திகழ்கிறது. ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் இன்று அவ்விளிவரலால்தான் நினைக்கப்படுகிறார்” என்றார் பெருஞ்சாத்தனார்.

அவையிலிருந்து சிரிப்பொலியும் வியப்பொலியும் எழுந்தது. பெருஞ்சாத்தனார் “அந்நிலம் இன்றில்லை. அந்த மக்கள் குடிபெயர்ந்து அடையாளமிழந்து மறைந்துவிட்டனர். பாடியோனும் இன்றி பாடப்பட்டோனும் இன்றி பாடுநிலமும் இன்றி அச்செய்யுள் மட்டும் நின்றுள்ளது. விதையில் மரமென அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது” என்றார். பாண்டியன் சிரித்து “பாடுக அச்செய்யுளை!” என்றான். ஒரு அவைப்பாணன் எழுந்து தன் கிணையை மீட்டி ஆழ்ந்த குரலில் பாடினான்.

கொற்றக் குடையோய் கொற்றக் குடையோய்
புதுமழை கலித்த வெண்குடை அன்ன
பொல்லா பெருநிழல் கொற்றக்குடையோய்!
இன்சோறு மணப்ப சூழ்ந்தெழு ஞமலியின்
பெருநிரை அன்ன பாணர் குழுமி
தினைப்புனம் புக்க புன்செவிக் காரான்
ஓட்டுதல் எனவே பெருஞ்சொல் ஒலிக்கும்
மாண்புகழ் சிறப்பின் பழையன் முடிமேல்
கவிகை செய்யா கொற்றக்குடையோய்
வாழிய அம்ம நின்திறம் இனிதே.

சீர்ஷன் சிரித்து “இதே பாடல் சில மாற்றங்களுடன் எங்கள் மொழியிலும் உள்ளது, என் தொல்மூதாதையே யாத்தது என்றான். “பாடுக!” என்றான் பாண்டியன். சீர்ஷன் தன் யாழை விரல்தொட்டு மீட்டி பாடினான்.

“வெண்ணிறமான காளான் கொற்றக்குடையாகிறது

அதன்கீழே உணவின் மணம் எழுகிறது.

நாய்கள்போல வாயூறி சூழ்கின்றனர் தவளைச்சூதர்

வயலில் புகுந்த எருமையை விரட்டுவதுபோல

கூச்சலிட்டு பாடுகின்றனர்.

கூழாங்கல்மேல் அமர்ந்திருக்கும் தவளை அரசன்

நான் நான் நான் என்று கொக்கரிக்கிறான்.

அப்பால் சுருண்டிருக்கும் பாம்புக்கு கேட்கும்படியாக.”

அவை உரக்கச் சிரித்து ஆர்ப்பரித்தது. பாண்டியன் முகம் மலர்ந்து “கூறுக சூதரே, நீங்கள் விழைவது என்ன?” என்றான்.

“தென்நிலத்தின் தலைவனே, நான் மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா எனும் நிரையில் நீடுவாழியாக இருந்துவரும் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசனின் மாணவராகிய உக்ரசிரவஸ் என்னும் சூததேவரின் மாணவர்நிரையில் வந்தவன். சூததேவரான உக்ரவாக் என்னை தன் மாணவனாக்கி சொல்லளித்தார். வழிவழியாக வந்த மரபின்படி ஒரு பெருநிகழ்வை நிகழ்த்தி அதன் சான்றென அமையும்பொருட்டு இங்கே தென்னிலம் தேடி வந்தேன்” என்றான் சீர்ஷன்.

அவை உளக்கூர் கொண்டது. “இங்கே கடல்கொண்ட தென்மதுரைக்கும் அப்பால் அஷ்டகுலாசலங்கள் என நூல்கள் கூறும் எட்டு மாமலைகளில் ஒன்று உள்ளது. மந்தரம், கயிலாயம், விந்தியம், நிடதம், நீலம், ஏமகூடம், கந்தமாதனம், மாகேந்திரம் என்னும் அவை எட்டில் பரதகண்டத்தின் தென்முனையில் அமைந்திருந்தது மாகேந்திர மலை. அங்கு அன்னை சிவை எவ்விழியும் தொடா இளங்குமரியென ஒற்றைக் காலில் நின்று தன் இறைவனுக்காக தவம் செய்தாள். பிறிதொரு காலை ஊன்றினால் பிறிதொன்று எண்ணியதாக ஆகும் என அவள் கருதினாள். ஒன்றன்றி பிறிது உளத்தெழாது அங்கே மலைமேல் எழுந்த இளங்குருத்தென நின்றாள்.

அவள் தவம் கண்டு அங்கே விண்ணில் எழுந்தார் முதலிறைவன். அவள் காதலைக் கண்டு புன்னகைத்து ஆம் என்றார். அவ்வொலியில் இருந்து எழுந்தது இப்புவியிலேயே இனிய மொழி. அதை தன் செவியின் மீன்வடிவக் குழையென அணிந்து எக்கணமும் ஒழியாமல் தன்னருகே அது ஒலிக்கச் செய்தார் விழிநுதலோன். ஓமென்னும் முதற்சொல்லில் எழுந்து முளைத்து பெருகியது அம்மொழி. தம் அமிழ்து என விழிநுதலோன் உணர்ந்த அந்த மொழி தமிழ் என்று அழைக்கப்பட்டது. என்றுமுள தொல்மொழி எழில் குறையாமல் வாழ்க!

முக்கண் முதல்வன் அகத்திய முனிவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் வெள்விடைமேல் அமர்ந்து காட்சியளித்து ஐந்திறம் என்னும் பெருநூலை நுண்சொல்வடிவில் அருளிய இடம் அது. அகத்தியரும் மாணவர்களும் தமிழாய்ந்து இலக்கணம் அமைத்த மலைமுடி. அங்கே பரசுராமர் ஷத்ரியர்களை அழித்த பழி தீர வந்தமர்ந்து ஊழ்கம் செய்து தூய்மை அடைந்தார் என்கின்றன வடநூல்கள். அது கடற்கோளால் நீருள் மறைந்தது. அம்மலையால் தடுக்கப்பட்ட பெருநீர் மேலும் மேலும் எல்லை கடந்து வந்து ஏழ்பனைநாட்டையும் ஏழ்தெங்குநாட்டையும் மூழ்கடித்து இறுதியாக மதுரையை உண்டது.

அரசே, சூதர்கதைகளின்படி மாபெரும் குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் மகாவியாசர் குருக்ஷேத்ரக் களத்துக்கு சென்றார். காலையொளியில் அச்செம்மண்வெளி குருதியால் கருமைகொண்டு கிடப்பதை கண்டார். அங்கே நடந்துகொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு என உணர்ந்தார். அதன்பின் வியாசர் குருக்ஷேத்ரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரிவுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னக நிலவெளிகளிலும் வாழ்ந்தார். கற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார்.

அறுதியாக அவர் வந்து சேர்ந்த இடம் மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரிமுனை. இங்கே அவர் வந்தபோது கடல் பின்வாங்கி பாறைகளை மேலே நீட்டி அவருக்கு வழியமைத்தது. கடலுக்குள் இருந்து மாகேந்திர மலையின் உச்சி மேலெழுந்து வந்தது. அங்கே நெடுந்தவக் குமரியன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அலைகளை நோக்கி அமர்ந்திருந்தபோது அவர் தன்னுள் மோதும் மூன்று கடல்களை கண்டுகொண்டார். நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்த மீன்மணம் கண்டு கீழே நீல நீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின. கண்களை மூடி அவர் யோகத்திலமர்ந்தபோது மீன்கள் ஒவ்வொன்றாக விலக, அவருக்குள்ளிருந்து மறைந்த அத்தனை சொற்களும் சென்ற வெளியில் நிறைந்த ‘மா’ என்ற முதற்சொல்லை கண்டடைந்தார்.

அவ்வண்ணம் அவர் சொல்லை அடைந்த நாள் ஆடிமாதம் எழுநிலவு முழுமையுறும் நாள். அதை குருபூர்ணிமை என்றும் வியாசபூர்ணிமை என்றும் எங்கள் குருமரபு கொண்டாடுகிறது. அன்று பரதகண்டத்தின் எட்டு எல்லைகளிலும், அத்தனை குருநிலைகளிலும் எங்கள் ஆசிரியனின் அழியாச் சொல் ஓதப்படுகிறது. அதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை நிறைநாள். அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது எங்கள் வழக்கம்.

“அதன்படி நான் தென்திசைக்கு வந்துள்ளேன். மாகேந்திரமலையின் உச்சிக்குச் சென்று அங்கே அதை ஓத எண்ணியுள்ளேன்” என்று சீர்ஷன் சொன்னான். பெருஞ்சாத்தனார் “அந்நிலம் கடல்கொண்டது என்றும் அந்த மலை நீருள் உள்ளது என்றும் நீர்தான் சொன்னீர்” என்றார். “ஆம், ஆனால் இன்னும் நான்கு நாளில் குருபூர்ணிமையில் என் ஆசிரியனின் சொல் கேட்க அந்த மலை கடலுக்குள் இருந்து எழும்” என்றான் சீர்ஷன். “நீர் ஏதோ கதைகளை நம்பி வந்துள்ளீர்” என்றார் பெருஞ்சாத்தன்.

“என் ஆசிரியர்கள் வந்துள்ளனர். நான் அதன்பொருட்டு பணிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இங்கிருந்து தோணியும் துழைவோரும் அளிக்கப்படவேண்டும். இல்லையேல் நானே செம்படவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு கடல்புகுவேன்” என்று சீர்ஷன் சொன்னான். “என் கடமை அது, என் சொல் என்னை வழிநடத்தும்.”

மேலும் பெருஞ்சாத்தனார் பேசுவதற்குள் பாண்டியன் கையமர்த்தி “அவர் விழைவதை அளிப்போம். அவர் சொல்லுக்கு மாமலை நீருள் இருந்து எழுமென்றால் அவர் தன் சொல்லை அதற்கு உரைக்கட்டும்” என்றான். “இம்முறை நானும் வருகிறேன். நம் அவையோரில் விரும்பியவர் உடன்வருக! தென்கடலுள் உறையும் இந்நிலத்தின் மூதாதை வடிவை காணும் பேறு எனக்கிருக்குமென்றால் அவ்வாறே ஆகுக!”

அன்றே மதுரையிலிருந்து பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியும் அவன் அமைச்சர் தென்குன்றூர் பெருஞ்சாத்தனாரும் அவையினரும் கிளம்பி தென்குமரிநிலம் நோக்கி சென்றனர். அங்கே பெருமணல் பரப்பில் பாடிவீடமைத்து தங்கினர். முக்கடல் அலை வந்து அறைந்து உருவான மணல்மேட்டின்மீது தாழைப்புதர்கள் மண்டியிருந்தன. அங்கே கடற்சீற்றம் மிகுதியென்பதனாலும், பாறைகள் முதலைப்பற்கள் என எழுந்து நின்று உயிர்கொள்பவை என்பதனாலும் மீனவர்கள் எவரும் படகோட்டுவதில்லை. சூழவும் நெடுந்தொலைவுக்கு ஊர்கள் எவையுமில்லை.

தன்னந்தனிமையில் நீள்நிலத்து முனையில் பாண்டியன் காய்சினவழுதி கட்டிய சிறிய கல்லாலயம் அமைந்திருந்தது. சுட்டுவிரலில் தொட்டு கடல்நோக்கி நீட்டிய பனித்துளிபோல என்று பாணர் பாடும் ஆலயம் அது. அதன் கருவறையில் குமரியன்னை வைர மூக்குத்தி ஒளிவிட சிற்றாடை கட்டி சிறுமியென நின்றிருந்தாள். பாண்டியனும் அமைச்சரும் புலவர்குழாமும் அங்கே அன்னையை வணங்கி நோன்பிருந்தனர்.

குருநிலவு நாளில் மூன்று படகுகளிலாக அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். அவர்கள் கிளம்பும்போது மாலைவெளிச்சம் அணைந்துகொண்டிருந்தது. கடற்பறவைகள் செம்முகில்களின்மேல் நீந்துவனபோல சென்றுகொண்டிருந்தன. இருண்டுவந்த கடல் அலையில்லாது கருங்கல்பரப்பென தெரிந்தது. அலையறையும் பாறைகள் நீர்த்தடம் காய்ந்து நிறம் மாறிக்கொண்டிருந்தன.

அவர்களின் படகைச் செலுத்தியவன் பதினாறண்டு அகவை நிறைந்தவனாகிய கீரன் குலத்து கண்ணன். இளமையின் அழகு கொண்ட கண்களும் மின்னும் கரிய உடலும் கொண்டிருந்தான். அமைச்சர் ஆணைப்படி அருகிருந்த மீனவச்சிற்றூரில் இருந்து வந்தவன். அவன் தாய்மாமனாகிய குட்டன் கீரத்தன் “இந்தக் கடலில் மீன்படு வழிகள் மட்டுமே எங்களுக்கு தெரியும். இவன் ஒளிபடு வழிகளை தேடிச்செல்பவன். அரசே, நீங்கள் தேடும் இடம் ஒருவேளை இவனுக்குத் தெரிந்திருக்கும்” என்றான்.

துடுப்பை தன் உளமாக்கி படகை தன் உடலென்று ஆக்குமளவுக்குப் பழகியிருந்தான் கண்ணன் கீரத்தன். “நீ கடலுக்குள் பாறைமுகடுகளை கண்டுள்ளாயா?” என்று அமைச்சர் தென்குன்றூர் பெருஞ்சாத்தன் கேட்டார். “இக்கடலின் ஆழத்தில் உறைவன முடிவில்லாதவை” என்று அவன் சொன்னான். “நான் நகரங்களையே கண்டிருக்கிறேன்.”

அரசன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதி வியந்து “நகரங்களையா?” என்றான். “ஆம் அரசே, உங்கள் தொல்மூதாதை நெடுவேலெறிந்த சினம் பொறாது ஆழி எழுந்து மூடிய தொல்நகர்களில் ஒன்று” என்று அவன் சொன்னான். “அதன் பெயர் கபாடபுரம்.” பாண்டியன் “அக்கதைகளை நீ அறிவாயா?” என்றான். “ஆம், நவின்றும் உள்ளேன்” என்றான் கண்ணன் கீரத்தன்.

“நீ நூலறிந்தவனா?” என்று அரசன் திகைப்புடன் கேட்டான். “ஆம், நானே கற்றுக்கொண்டேன்” என்று அவன் சொன்னான். “முத்துச்சிப்பிக்குமேல் கடல் வரிவடிவில் எழுதிய செய்தியையும் என்னால் படித்தறிய முடியும்.” அரசன் “நீ அறிந்துள்ளாயா மகேந்திர மலை எழுவதை?” என்றான். “நான் இருமுறை கண்டுள்ளேன். ஒருமுறை அதன்மேல் சென்றும் உள்ளேன்” என்றான் கண்ணன் கீரத்தன். “எங்களை அங்கு அழைத்துச் செல்க!” என்று அரசன் ஆணையிட்டான். “கடல் ஒப்புதல் அளித்தால் அழைத்துச் செல்கிறேன். நீரின் கதவுகளை நாம் தட்டுவோம். கடலரசன் திறக்கட்டும்” என்று கண்ணன் கீரத்தன் சொன்னான்.

வானில் நிலவு தோன்றியதும் கடல் கொந்தளிக்க தொடங்கியது. படகு அனைவரையும் தூக்கி தனக்குள் வீசிச் சுழற்றியது. அலைகள் மேலும் மேலும் பெரிதாக எழுந்தன. நீர்வளைவு ஒருகணம் மலையென அருகே ஓங்கி தெரிந்தது. மறுகணம் அவர்கள் அந்த மலைமேல் இருந்தனர். வீழ்ந்து எழுந்து வீழ்ந்து எழுந்து வானிலென அலைந்தனர். அடியில் நீர்ப்பரப்பு பாறை என அறைந்தது. கலம் உடைந்து சிம்புகளாக தெறித்துவிடுமென அச்சம் தோன்றியது. மறுகணம் படகுக்கு அடியில் வெறும் காற்றே இருந்தது. அது அடியிலி நோக்கி விழுந்துகொண்டிருந்தது.

தங்கள் படகிலிருந்து மற்ற படகுகளை பார்த்தவர்கள் மத்தகமும் துதிக்கையும் எழுந்த பேரலைகள் அப்படகுகளை தூக்கிச் சுழற்றி வீசிப் பிடித்து எறிந்து ஆடியதை கண்டனர். சுற்றி வளைத்தன மாநாகங்கள். படமெடுத்துச் சீறி வெண்நுரை நாக்கு காட்டின. பல்லாயிரம் புரவிகள் பிடரி பறக்க குளம்புக் கால்கள் தூக்கி தாவி அவர்கள்மேல் பாய்ந்து சென்றன. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை கயிறுகளால் பாய்மரங்களுடன் இறுக கட்டிக்கொண்டனர். அலையுமிழ்ந்த நீர் அவர்கள் மேல் அறைந்து சிதறியது.

அலைக்கொந்தளிப்புக்கு மேல் முழுநிலவு செந்நிறவட்டமென வந்து நின்றது. அது சுடர்கொள்ளும்தோறும் அலைகளின் வெறி கூடிவந்தது. அவர்களின் உடல்களில் நீரின் அறையாலேயே வீக்கம் எழுந்தது. நீர் அறைந்து செவியும் உதடுகளும் கிழியமுடியும், பற்கள் உடைந்து உதிரமுடியும் என அவர்கள் அறிந்தனர். நீரின் ஓலம் செவிகளை நிறைத்திருந்தது. அவர்களின் நோக்கும் நீரால் நிறைந்திருந்தது. உள்ளெழுந்த அச்சமும் நீரின் வடிவிலேயே அமைந்திருந்தது.

அரசனை அங்கே கொண்டுவந்திருக்கலாகாதோ என்ற எண்ணத்தை அமைச்சர் அடைந்தார். ஆனால் பாண்டியன் தன் படகின் அமரமுனையில் நின்று கடலை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். படகு ஊசலாடியபோது அவன் கயிற்றில் கட்டி சுழற்றப்பட்டவனாக வானில் பறந்தலைந்தான். ஆனால் அவன் கால்கள் நிலைதடுமாறவில்லை. அவன் உடலின் நிகர்நிலை பெயரவுமில்லை.

அவன் தொன்மையான பரதவக் குடியினன் என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார். கடலை அவன் கால்கள் அறிந்திருக்கும். அவனுக்குள் நிறைந்துள்ள குருதி கடலின் நீருடன் ஒத்திசையக் கற்றிருக்கும். அவன் முன்னோர்களில் ஒருவன் கடலை அம்பெறிந்து வென்றான். அச்சினம் பொறாது கடல் எழுந்து பஃறுளி ஆற்றோடு பன்மலை அடுக்கத்து குமரிக்கோட்டையும் மாமதுரை நகரையும் உண்டது. அவன் கடலின் மைந்தன், கடலுடன் போரிட்டு எழுந்தவன்.

பின்னர் கடல் ஓயலாயிற்று. அலைகள் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு திரும்பிச் சென்றன. நோக்கியிருக்கவே கடல் முற்றமைதி கொண்டது. காற்று வீசி அவர்களின் குழலையும் உடைகளையும் உலரச் செய்தது. கடலில் அலையெழுந்ததா என்ற ஐயமெழும் அளவுக்கு அமைதி நிலவியது. ஒரு சொல் ஒரு முனகல் இல்லாமல் நீர்ப்பரப்பு கிடந்தது. நிலவின் ஒளி அதன்மேல் பரவி நெளிந்துகொண்டிருந்தது.

தொலைவில் ஏதோ எழுந்து நின்றிருந்தது. நிழலுருவாகவே அது தெரிந்தது. அதற்குள் ஒவ்வொருவரும் மெய்ப்புகொண்டிருந்தனர். பாண்டியன் கைகூப்பியபடி படகில் நின்றான். “அதோ” என்றான் கண்ணன் கீரத்தன். துடுப்பிடுவோர் படகை செலுத்த அது மெல்ல அணுகியது.

அந்த மலைமுடி ஆலயக்கோபுரம் போன்ற அமைப்பு கொண்டிருந்தது. அதன்மேல் விழுந்த நிலவொளியில் அதில் பல ஆலயக்கோபுரங்கள் இருப்பது தெரிந்தது. அணுக அணுக அவை மேலும் கூர்கொண்டு தெரிந்தன. அக்கோபுரங்கள் அனைத்திலும் குடமுகடுகள் இருந்தன. எண்கோணவடிவில் எட்டுபுறங்களிலும் இணையாகச் சரிந்திறங்கும் வடிவம். வழிந்த நீரில் நிலவொளி கரைந்து பொன்பூச்சென தெரிந்தது.

அருகணைந்தபோது மிகத் தெளிவாக பார்க்க முடிந்தது. சிற்பங்களேதுமற்ற கோபுரவடிவங்கள் அவை. பதினெட்டு பெரிய கோபுரங்கள். நூற்றெட்டு சிறு கோபுரங்கள். நடுவே ஒற்றைக்கோபுரம் மையமென எழுந்து நின்றது. பாறைவிளிம்பில் படகை முட்டி நிறுத்தினர். முதலில் கண்ணன் கீரத்தன் தாவி அங்கே சென்றான். படைவீரர்கள் உடன் தாவி இறங்கி அந்தப் பாறையை கூர்நோக்கினர். அங்கே மீன்களோ கடலுயிரிகளோ ஏதுமில்லை. அதன் பின் அவர்கள் கைகாட்ட படகிலி்ருந்து பலகையை பாலமென அமைத்தனர்.

பாண்டியன் கைகூப்பியபடி அதனூடாக இறங்கி அப்பாறைமேல் கால்வைத்து குனிந்து தொட்டு சென்னிசூடினான். பிறகு பெருஞ்சாத்தனாரும் பிறரும் ஒவ்வொருவராக இறங்கி தொட்டு வணங்கி நின்றனர். சீர்ஷன் “இந்த இடம்தான்” என்றான். “எப்படி அறிவீர்?” என்று பாண்டியன் கேட்டான். “என் முன்னோர்களின் சொற்கள்” என்றான் சீர்ஷன். “பூனையின் செவிகள் என எழுந்த கற்கோபுரங்கள் குவிந்து கூர்ந்து ஒலிகூர்ந்திருக்கும் பெரும்பாறை முகடு. இங்கே ஒரு எண்கால் மண்டபத்தில் அன்னை ஒருகால்தவம் செய்த பாறைச்சுவடு உண்டு.”

கண்ணன் கீரத்தன் “இங்குளது அது” என்றான். அவர்கள் அவன் சுட்டிய திசையில் நடந்தனர். இருண்ட வாசல்களுடன் மண்டபங்கள் ஒழிந்து கிடந்தன. படிகள் ஏறிச்சென்றன. அமிழ்ந்து சென்ற குகைகளில் இறங்கி மறைந்தன. எங்கும் சொல்அதிரும் அமைதி. உள்ளத்தை அழுத்திச் சுருக்கி இறுக்கி முத்தென்றாக்கிவிடும் பேரெடை கொண்டது. அவர்களின் காலடியோசைகள் மெல்லிய முணுமுணுப்புகளாக கேட்டன. நிலவின் ஒளியில் அக்கல்மண்டபங்கள் பொன்னென்று இருந்தன. நீருக்கடியில் கிடந்து சற்றே உருவழிந்திருந்த அவை உருகி வழிந்துகொண்டிருப்பவை என்று தோன்றின.

எட்டு தூண்களால் ஏந்தப்பட்ட எண்கோண மண்டபத்தின்மேல் கவிழ்ந்த தாமரை வடிவிலான கல்மலர்க்கூரை. கீழே இயற்கையான பாறையில் பதிந்திருந்த காலடித்தடம். சீர்ஷன் அதனருகே அமர்ந்தான். அவனுக்கு முன் பாண்டியன் அமர்ந்தான். பிறர் அரசனுக்குப் பின்னால் அமர்ந்தனர். சீர்ஷன் தன் யாழ்மேல் மெல்ல விரலை மீட்டிக்கொண்டிருந்தான். அவன் சொற்களுக்காக பிறர் காத்திருந்தனர். நிலவின் ஒளியில் அவன் தலைமுடி மின்னியது. அவன் முகத்தில் ஒளியலைகள் நெளிந்தன.

சீர்ஷன் சொன்னான் “அரசே, இப்பெருங்காவியம் எங்கள் குருவழியின் முதல்வரான மகாவியாசர் கிருஷ்ணதுவைபாயனரால் இயற்றப்பட்டது. அவருடைய மாணவர்களான வைசம்பாயனரும் பைலரும் ஜைமினியும் சுமந்துவும் இக்காவியத்தை முழுமையடையச் செய்தனர். ஆனால் இக்காவியத்தின் முடிவை இயற்றியவர் எங்கள் ஆசிரியரான சூததேவர்.”

“உக்ரசிரவஸ் என்னும் பெயர் கொண்ட சூதமாமுனிவர். லோமஹர்ஷணர் என்னும் சூதர்குலத்து பெருங்கவிஞரின் மைந்தராகப் பிறந்தவர். நைமிஷாரண்யத்தில் நூற்றெட்டுமுறை இப்பெருநூலை அவர் சொல்குறையாது முனிவர்களுக்கு சொன்னார். அவ்வண்ணம் இப்பெருநிலத்தில் என்றுமழியாமல் இதை நிலைநாட்டினார். இதை நாடெங்கும் சொல்லிநிறுத்தும்பொருட்டு ஒரு குருநிரையை உருவாக்கினார். அவ்வழியில் வந்தவன் நான்.”

“முன்பு அஸ்தினபுரியில் சர்ப்பசத்ரயாகம் என்னும் பெருவேள்வி நடந்தது. அதில்தான் இப்பெருங்காவியத்தை முதல் வியாசர் அருளிச்செய்தார். அங்கே இதை முடித்துவைக்கும் பணியை தேவர்கள் என் ஆசிரியரான சூததேவரிடம் அளித்தனர். அங்கு அவர் இதன்மேல் முழுச் சொல்லுரிமையை அடைந்தார். அவர் புகழ் நீடுவாழ்க!” என்று சீர்ஷன் சொன்னான். யாழை மீட்டியபடி பாடலானான்.

முதலாவிண் - 2

அஸ்தினபுரியில் ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் ஆயிரங்கால் பந்தலில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவர்களில் நாலாமவரான சுமந்து இறுதிச்சுவடியை படித்தார். “பாரதனே, ஆற்றலும் அறிவும் நுண்ணுணர்வும் நம்பிக்கையும் செல்வத்தால் விளைவன. செல்வம் அழியும்போது அவையும் அழிகின்றன. தனஞ்சயா, உலகத்திற்கு அடிப்படையான இவையனைத்துக்கும் காலமே முதற்பொருள் என்று உணர்க! காலம் இவற்றை ஆக்கி பின் அழிக்கிறது. ஒருவன் இணையற்ற ஆற்றலுடன் திகழ்வதும் அனைத்தையும் இழந்து பிறிதொருவருக்கு அடிபணிய நேர்வதும் காலத்தின் ஆணையின்படியே.”

“அர்ஜுனா, நீ கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் காலத்தின் விழைவுக்கு ஏற்ப உன்னிடம் தோன்றி தங்கள் வினைமுடித்து மீண்டுவிட்டன. காலம் விழைகையில் மீண்டும் அவை பிறிதொருவர் கையில் வந்து தோன்றும். நீங்களும் காலத்தின் கருவிகளே. உங்கள் வினை முடிந்தது என்று கருதுக! கொண்டவை அனைத்தையும் கைவிட்டு வீடுபேறடைக! பொன்றாப் புகழ் உங்களுக்கு அமையும் வழி இதுவே. அர்ஜுனனுக்கு கிருஷ்ண துவைபாயன மகாவியாசன் சொன்ன மொழி இது. அவன் அதை தலைக்கொண்டான். காண்டீபத்தை தன் உள்ளத்திலிருந்தும் ஒழிந்தான். பின்னர் அஸ்தினபுரி நோக்கி சென்றான். அவனுள் யாதவனாகிய கிருஷ்ணனின் பெருமை மட்டுமே எஞ்சியிருந்தது.”

இறுதியாக அமைந்த பதினெட்டு வாழ்த்துச்செய்யுட்களை சீரான குரலில் படித்து முடித்தபின் சுமந்து சுவடிகளை அடுக்கி செம்பட்டு நூலால் சுற்றிக் கட்டி தன் முன் இருந்த மரப்பலகையில் வைத்தார். அவருடைய மாணவன் ஒருவன் அதை எடுத்து தனக்கு அருகிலிருந்த சிறு வெண்கலப்பேழைக்குள் வைத்தான். சுமந்து கைகூப்பி ”இவ்வண்ணமே ஆயிற்று. கிருஷ்ண துவைபாயன மகாவியாசனால் இயற்றப்பட்டதும் இமையமலைகளைப்போல் என்றுமென நிலைகொள்வதும், கங்கைப்பெருக்கு என கைவிரித்து வளர்வதும், கடல் அலைபோல ஓயாது கொந்தளிப்பதும், வான் என முடிவிலாது விரிவதுமான இக்காப்பியம் இங்கு நிறைவடைகிறது” என்றார்.

அவையில் இருந்த ஒவ்வொருவரும் அசைவு கொண்டனர். ஜனமேஜயன் அரியணையில் இருந்து எழுந்து கைகூப்பி வியாசரையும் அவையையும் வணங்கினார். வெளியே கொம்பொலிகள் எழுந்தன. அவை ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு நகரெங்கும் பரவ திசைகளில் இருந்து வாழ்த்தொலிகள் பெருகி அவர்களை சூழ்ந்துகொண்டன. ஜனமேஜயன் “நான் அறியவேண்டியன ஏதும் இனியில்லை. இங்கு இவ்வண்ணம் அழியாச் சொல் நிறைவுகொள்ளும்பொருட்டே என் உள்ளத்தில் அறியாமை எழுந்தது என உணர்கிறேன். இதுவும் என் முந்தையோரின் நல்வாழ்த்தே” என்றார்.

“இக்காவியநிறைவை தெய்வங்கள் வாழ்த்தும்பொருட்டு இவ்வேள்வி உருமாற்றப்படவேண்டும். திசைத்தேவர்களும் இந்திரனும் பிரம்மனும் இங்கு எழவேண்டும். உண்டும் குடித்தும் ஆடியும் பாடியும் இந்நகர் இந்நாளை கொண்டாடவேண்டும். இங்கே இது நிறுவப்பட்டது என்பதற்குச் சான்றென கற்தூண் நிறுவப்படவேண்டும். என் கொடிவழியினர் இந்நாளை கொண்டாடவேண்டும். இன்று ஆஷாடமாதம் எழுநிலவு முழுமைகொள்ளும் நாள். இது வியாசபூர்ணிமை என்று ஆகுக! இதை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றே கொண்டாடுக!” என்றார்.

“மைந்தா” என்று வியாசர் அழைத்தார். “அதை முடிவுசெய்யவேண்டியவர் ஆஸ்திகர். அவர் கூறட்டும்” என்றபின் “நிறைவுற்றீர்களா, ஆஸ்திகரே?” என்று கேட்டார். அவர் உதடுகளில் செவி வைத்து கூர்ந்து கேட்டு அதை உரக்க திரும்பி கூவினார் வைசம்பாயனர். அவையினர் அனைவரும் ஆஸ்திகனை நோக்கி திரும்பினர். ஆஸ்திகன் அதுவரை கண்மூடி கைகூப்பியபடி அமர்ந்திருந்தான். விழிதிறந்து “யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தனும் நைஷ்டிக பிரம்மசாரியுமான ஆஸ்திகனின் சொல் இது. இக்காவியம் முழுமை கொள்ளவில்லை. எஞ்சும் சில சொற்கள் உள்ளன என்று தோன்றுகிறது” என்றான். அவையில் கலைந்த ஓசை எழ வியாசர் “கூறுக!” என்றார்.

“இப்பெருங்காவியத்தின் பாட்டுடைத்தலைவன் விண்மறைந்தான். அது பேரெழிலுடன் கூறப்பட்டுள்ளது. காவியத்தின் கதை அங்கே முடிவடைகிறது. எனினும் காவிய நிறைவு என்பது இது அல்ல. பெருங்காவியம் அலைகொண்டு கொப்பளிக்கலாம். ஒன்பது உணர்வுகளையும், எட்டு வழிகளையும், ஆறு தத்துவங்களையும், ஐந்து நிலங்களையும், நான்கு அறங்களையும், மூன்று ஊழையும், இருமையையும் ஒருமையையும் வெறுமையையும் அது கூறலாம். எனினும் அனைத்தும் உருகி ஒன்றென ஆகி அமைதியில் இறுதிச்சுவை அடைந்தாகவேண்டும். சாந்தம் அமையாது காவியம் நிறைவுறுவதில்லை” என்றான் ஆஸ்திகன். “அனைத்து வண்ணங்களும் இணைந்து வெண்மையென்றாவதுபோல. வெண்மையே அறத்தின் நிறம்.”

வியாசர் “ஆம், இதை அவையில் ஒருவர் கூறுவார் என்று நான் எண்ணினேன். நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன். என் கண்முன் நான்கு தலைமுறைகள் தோன்றி மறைந்தன. இந்நீள்வாழ்வே வாழ்வை கண்டு கண்டு ஒவ்வொன்றும் கரைந்து பொருளிழந்து மறைவதை உணர்ந்து என் உளமடங்கக்கூடும் என்பதனால் எனக்கு அருளப்பட்டதாக இருக்கலாம். ஆயினும் இது என் மைந்தரின் கதை என்பதனால், துயரமும் பேரழிவும் வெறுமையும் அவர்கள் அடைந்தது என்பதனால், இதிலிருந்து என்னால் முற்றாக விலக இயலவில்லை. ஆகவே உளமடங்கி இதன் இறுதி அமைதியை என்னால் அடையவும் இயலவில்லை” என்றார். “உண்மை, என்னுள் காற்றில் அலையும் சுடர் என்றே உள்ளம் அமைந்திருக்கிறது. சுடர் நிலைத்த ஒருகணம் திகழவில்லை என்பதனால் இக்காவியம் முழுமையடையவில்லை.”

அவையிலிருந்த ஒவ்வொருவரும் திகைத்தவர்போல் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வியாசர் “இனி என்னால் ஒரு சொல்லும் உரைக்க இயலாது. வியாசவனத்தில் இருந்து இங்கு வருகையில் அதை உணர்ந்தேன், என் இறுதிச் சொல்லையும் படைத்துவிட்டேன் என்று. அதை இக்காவியநிறைவு என்று எண்ணிக்கொண்டேன். நான் அடைந்தது என் சொல்நிறைவின் வெறுமையை மட்டுமே” என்றார். “இனி இதில் ஒரு சொல்லைக் கூட சேர்க்க என்னால் இயலாது. இதை இன்னொருமுறை செவிகொள்ளவே என் உளம் அமையாது. இதுவே ஊழ் போலும். இக்காவியம் முழுமையடையாமல் நிற்கவேண்டும் எனில் அவ்வாறே ஆகுக!” என்றார்.

“முடிவடையாமையும் பேருருவங்களின் வடிவே” என்று வியாசர் தொடர்ந்தார். “இவ்வண்ணமே இது நின்றிருக்கவேண்டும் என்பது இறையாணை போலும். மாகிஷ்மதி, மகோதயபுரம், துவாரகை, இந்திரப்பிரஸ்தம் போன்ற பெரு நகரங்களைப்பற்றி ஒரு கூற்றுண்டு. அவை மானுட ஆணவத்தின் உச்ச வெளிப்பாடுகள். ஆணவத்திற்கு முடிவு இல்லை என்பதனால் அவை கட்டி முடிக்கப்படவே இல்லை. முடிவை அணுகுவதற்குள்ளாகவே அவை மறுபுறம் தங்கள் அழிவை தொடங்கிவிட்டிருந்தன, முழு வடிவு நிகழாமலேயே மறைந்தன. இதுவும் அவ்வண்ணம் ஓர் ஆணவமே என்று தோன்றுகிறது.”

ஆஸ்திகன் “அவ்வாறல்ல வியாசரே, நீங்கள் இயற்றிய இக்காவியம் கேட்டறிந்த கதைகளால் ஆனதல்ல. உங்கள் நெஞ்சக்குருதியைத் தொட்டு எழுதியதனாலேயே இது அழிவின்மை கொள்ளும். உங்கள் சார்புகளையும், நம்பிக்கைகளையும், நெறிகளையும், கொள்கைகளையும் கடந்து இது நிகழ்ந்திருப்பதனாலேயே முடிவிலாது தன்னை காட்டிக்கொண்டிருக்கும். ஆசிரியனைக் கடந்து, அவனை வென்று, அவனை உண்டு தன்னுள் ஒரு துளியென்று ஆக்கிக்கொண்டு பேருருவம் கொண்டெழும் நூலே தெய்வங்களுக்குரியதென ஆவது. இது அத்தகைய பெருங்காவியம் என்பதில் ஐயமில்லை” என்றான்.

“இது இப்புவியில் நிகழ்ந்த விண்வடிவன் ஒருவனின் கதை என்பதனால் அழியாச் சொல்லென நிற்கும். அவனுடைய ஐந்தாவது வேதம் திகழ்ந்திருப்பதனால் என்றும் ஞானத்தில் அமைந்த முனிவராலும் செயலில் உழலும் மானுடராலும் பயிலப்படும். இது கேட்போர் ஒவ்வொருவரும் உட்புகுந்து நடிக்கும் மாபெரும் நாடகம். சொல்கொண்டவர் ஒவ்வொருவரும் தங்கள் சொற்களையும் எழுதிச்சேர்க்கும் முடிவிலாப் பெருநூல். இதன் நடிகர்கள் கோடானுகோடிபேர் இன்னும் பிறக்கவில்லை. இதன் ஆசிரியர்கள் இன்னும் காலத்தில்கூட கருக்கொள்ளவில்லை. இது உங்கள் கைகளில் இருந்து பரதகண்டத்தின் கைகளுக்கு சென்றுவிட்டது. அந்த விண்பேருருவ ஆசிரியனால் அது இனி இயற்றப்படும். ஆகவே பாரதம் என்றே இது பெயர்பெறும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் ஆஸ்திகன்.

வியாசர் சலிப்புடன் தலையசைத்து “இல்லை. இந்நீடு தவத்திலிருந்து நான் உணர்ந்தது ஒன்று உள்ளது, அவ்வண்ணம் ஒரு முழுநிறைவு என்னில் எந்நிலையிலும் ஏற்படாது. அதை நான் முன்னரே உணர்ந்திருக்க வேண்டும். முன்பொருமுறை ஒரு நதியைக் கடக்கையில் என் மைந்தனுக்கு வழிவிட்ட காமம் எனக்கு வாயில்களை மூடியது. அன்றே நான் என் எல்லையை அறிந்திருக்கவேண்டும். கங்கை என் காவியத்தின் ஆழம் நானறியாதது என்று எனக்கு காட்டியது, அன்றே நான் தெளிந்திருக்கவேண்டும்” என்றார்.

ஆஸ்திகன் “முனிவரே, அந்தக் காமத்தால் எழுதப்பட்டது இந்தக் காவியம். காமமோஹிதம் என்ற சொல் இதில் பயின்று வந்து அதை காட்டுகிறது. விடுவதனால் அல்ல, அனைத்தையும் அள்ளிப் பற்றுவதனால்தான் காவியங்கள் உருவாகின்றன. கடப்பதனால் அல்ல, உழல்வதனாலேயே அவை மெய்மையை சென்றடைகின்றன. கூர்வதனால் அல்ல, விரிவதனாலேயே தங்கள் வடிவத்தை நிகழ்த்துகின்றன. அவ்வண்ணம் நிகழ்ந்த காவியம் இது” என்றான்.

கையசைத்து அவனைத் தடுத்து “ஆம், அவ்வண்ணம் விரிந்தேன். ஆகவேதான் இறுதி என்னும் அமைதி நோக்கி குவிய என்னால் இயலவில்லை” என்றார் வியாசர். “நான் இனி இங்கிருப்பதில் பொருளென ஏதுமில்லை. நான் எழும்பொழுது வந்துவிட்டது” என்று வைசம்பாயனரை நோக்கி கைகாட்டினார். அவரை “பொறுங்கள், ஆசிரியரே” என்று ஆஸ்திகன் தடுத்தான். வியாசர் பெருமூச்சுடன் அவன் சொற்களுக்காகக் காத்தார்.

“தாங்கள் நீடுவாழி என்றொரு நற்சொல் உண்டு. நீடுவாழிகள் தெய்வங்களால் முடிவிலா புவிவாழ்க்கை அருளப்பட்டவர்கள். என்றாவது இக்காவியம் முழுமையாக படிக்கப்படுமெனில், எவராவது இதை முழுக்க சுருக்கிவிட முடியுமெனில், பிறிதொருவர் இதன் மையமென்ன என்று கண்டடைந்து கூறிவிட முடியுமெனில் அன்று நீங்கள் விண்புகுவீர்கள். அதுவரை இங்கு மீளமீள நிகழ்வதும், ஒவ்வொருமுறையும் புதிதெனத் திகழ்வதுமான மானுட வாழ்க்கை எனும் பிரம்மத்தின் அலைகளைப் பார்த்தபடி இங்கிருப்பீர்கள்” என்றான் ஆஸ்திகன்.

“மெய், உங்களால் அந்த இறுதி அமைதலை இயற்றிவிட இயலாது” என்று ஆஸ்திகன் தொடர்ந்து கூறினான். “ஆனால் மாணவர்கள் ஆசிரியரின் நாவுகள் என்றே அறியப்படுகிறார்கள். உங்கள் மாணவர்கள் எவரேனும் இதன் முடிவை எழுதலாம். எவர் தகுதியுடையவர்கள் என்று நீங்கள் கூறுக!” வியாசர் “அல்ல, அவ்வாறு கூற நான் தகுதியுடையவன் அல்ல. என் மாணவர்களான வைசம்பாயனரும் சுமந்துவும் ஜைமினியும் பைலரும் உக்ரசிரவஸும் இந்நூலை என்னுடன் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர்” என்றார்.

“அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொற்களை இக்காவியத்தில் விதைகள் என வைத்திருக்கிறார்கள். இவர்களின் கனவுகளில் சென்று நான் திகழ்ந்தேன். அங்கிருந்துகொண்டு நான் செல்லமுடியாத திசைகளை பார்த்தேன். என் நாவால் சொல்லமுடியாதவற்றை சொன்னேன். இவர்கள் ஒவ்வொருவரும் என்னிலிருந்து கிளைத்து காடுகளென பெருகவிருப்பவர்கள்” என்றார் வியாசர். “ஆம், அவர்களில் ஒருவரால் இதன் முடிவு எழுதப்படக்கூடும். எவர் என நான் வகுத்துரைக்க இயலாது.”

வேத வேள்வித் தலைவரான வைசம்பாயனரை நோக்கி “முனிவரே, நீர் இந்த வேள்விக்கு தலைவர். சொல்க, இப்போது என்ன செய்வது?” என்று ஜனமேஜயன் கேட்டார். “நான் அறியேன். இங்கே இம்முடிவை எடுக்கும் நிலையில் நான் இல்லை” என்று வைசம்பாயனர் சொன்னார். “இங்குள அவைமுனிவர் முடிவெடுக்கட்டும். எம்முடிவும் எனக்கு உகந்ததே.”

அரங்கிலிருந்த முனிவர்களில் மூத்தவரான கணாதர் “தொன்றுமுதல் இங்கிருக்கும் வழிமுறை ஒன்றே. சொல் தேர்ந்தவன் உடலில் அது அனலென உறையும் என்கிறார்கள். அவன் விழிகளில் ஒளியென, நாவில் சுடர் என, கைகளில் மின் என, நெஞ்சில் வெம்மை என உறையும். இங்கு வியாச மகாபாதரின் நான்கு மாணவர்களும் வந்து தங்கள் வெறும் கையால் நெய்யூற்றி சமித் அமைக்கப்பட்ட வேள்விக்குளத்தை தொடட்டும். நால்வரில் எவர் தொடுகையில் அது அனல் கொள்கிறதோ அவரால் அவ்விறுதிப் பகுதி எழுதப்படட்டும்” என்றார். “ஆம், அது தொன்றுதொட்டு வரும்முறைதான்” என்று ஆஸ்திகன் கூறினான். “அனலே சான்று என்பதே தொல்நெறி.”

செங்கல் அடுக்கி நான்கு வேள்விக்குளங்கள் ஒருக்கப்பட்டபோது வியாசர் “இன்னொரு மாணவன் எனக்குள்ளான். அவன் சூதன். அவனுக்கும் வேள்விக்குளம் அமைக்கவேண்டும்” என்றார். “சூதன் அவியளிக்கலாமா?” என்று எவரோ கேட்க வைசம்பாயனர் “இது பூதவேள்வி. நாற்குலமும் அவியளிக்கலாகும்” என்றார். “சூதன் எங்கே?” என்று குரலெழுந்தது. “உக்ரசிரவஸ் எங்கே?” எவரோ “அவர் இங்கு வரவே இல்லை” என்றனர். “இந்நகரில் அவர் இன்று நுழைந்திருக்கிறார்” என்று அமைச்சர் சொன்னார். “எனில் சென்று அவரை அழைத்து வருக!” என்று ஜனமேஜயன் ஆணையிட்டார்.

அப்போது வேள்விப்பந்தலின் முகப்பில் ஓசை எழுந்தது. வியாசர் முகம் மலர்ந்து “அவன்தான்!” என்றார். அவை கலைந்து திரும்பி நோக்கியது. வேள்விப்பந்தலுக்குள் சூததேவர் நுழைந்தார். நெடிய கரிய உருவம் கொண்டவராகவும், நீண்ட கைகளை அசைத்து நடப்பவராகவும் இருந்தார். புலித்தோலாடை உடுத்து கழுத்தில் கல்மாலை அணிந்திருந்தார். தோளில் உடுக்கும் கோலும் தொங்கியது. சடைத்திரிகளை தோல்நாடாவால் கட்டி பின்னாலிட்டிருந்தார். உரத்த குரலில் “லோமஹர்ஷண முனிவரின் மைந்தனும் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மாணவனுமாகிய உக்ரசிரவஸ்” என்று தன்னை அறிவித்துக்கொண்டார்.

வைசம்பாயனரும் ஜைமினியும் சுமந்துவும் பைலரும் எழுந்து அவரை முகம் மலர்ந்து வரவேற்றனர். வைசம்பாயனர் சென்று அவரை கைபற்றி அழைத்துச்சென்று வியாசரின் முன் நிறுத்தினார். வியாசரின் முன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் சூததேவர். அவர் தலைமேல் கைவைத்து வியாசர் வாழ்த்தினார். அவர் முகம் கனிந்து அழுகைக்குச் செல்வதுபோல் ஆகியது. சுருங்கிய வாய் பதைத்தது. விழிகளில் இருந்து நீர் வழிந்தது. வைசம்பாயனர் அதை மெல்ல துடைத்தார். சூததேவர் வியாசரின் காலடியில் அமர்ந்தார். வியாசர் அவர் தலைமேலேயே தன் கையை வைத்திருந்தார்.

ஐந்து புதிய வேள்விக்குண்டங்களில் சமித்துகள் அடுக்கப்பட்டன. வைசம்பாயனரும் ஜைமினியும் சுமந்துவும் பைலரும் எழுந்து அவைக்கு கை கூப்பி நான்கு வேள்விக்குண்டங்களில் சென்று அமர்ந்தனர். நெய்யில் குளிர்ந்து அமைந்திருந்த விறகுகள் மேல் ஒவ்வொருவரும் தங்கள் வலக்கை சுட்டுவிரலால் தொட்டனர். அவர்கள் உதடுகளில் வேள்விச்சொற்கள் எழுந்தன. நான்கு எரிகுளங்களுமே பற்றிக்கொண்டு நீலச்சுடர் விட்டு எழுந்தன. நான்கும் சுடர் கொள்வதைக் கண்டு அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் திகைத்தனர்.

வியாசரின் அருகே அமர்ந்திருந்த சூததேவர் அங்கிருந்தே உரக்க “என் நாவிலும் சொல்லிலும் திகழும் சொல்லன்னையே, சென்று அந்தச் சுடரை எழுப்புக!” என்று சொன்னார். அக்கணமே நெய்குளிர்ந்து அமைந்திருந்த ஐந்தாவது வேள்விக்குளம் பற்றிக்கொண்டது. அவையெங்கும் வியப்பொலிகள் எழுந்தன. வேள்விக்காவலனாகிய ஜனமேஜயன் “வேள்வித்தலைவர் முடிவு கூறுக!” என்றார். வைசம்பாயனர் “மானுடர் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவரே தகுதியானவர்” என்றார்.

ஆஸ்திகன் “சூததேவரே, இக்காவியத்தை நீங்கள் முடித்துவையுங்கள்” என்றான். “இந்தப் பெருங்காவியத்தை எழுத எழுத கற்று இந்நாநிலமெங்கும் நான் சொல்லி அலைந்தேன். அன்னையர் நாவின் குழவிக்கதைகள், வேடர்கதைகள், ஆயர்கதைகள், கடற்கதைகள், வணிகர்களின் கதைகள், அசுரரும் அரக்கரும் சொல்லும் கதைகள் என எண்புறத்திலிருந்தும் கதை கொண்டு சேர்த்து நான் செழுமை செய்தேன். இக்காவியம் இவ்வண்ணம் முழுமையுறவேண்டும் என்று எண்ணினேன். எளியோர் அளிக்க அறிஞர் யாக்கும் கதைகளே காவியங்களென நிலைகொள்ள வேண்டும். எடுத்த இடத்திற்கே அவை ஒளியூட்டப்பட்டு சென்று சேரவேண்டும்” என்றபின் சூததேவர் வணங்கி மேடையில் சென்று அமர்ந்தார்.

ஏழு கற்றுச்சொல்லிகள் அவரைச் சுற்றி ஓலையுடன் அமர்ந்தனர். அவர்கள் தங்கள் எழுத்தாணிகளை ஓலைமேல் வைத்து நிகழவிருக்கும் கணத்திற்காக காத்திருந்தனர். சூததேவர் வியாசர் அமர்ந்திருந்த திசை நோக்கி தலைவணங்கினார். வேள்வி அனலை வணங்கி அவையையும் அரசரையும் வணங்கினார். கண்மூடி அமர்ந்து “ஓம்!” என்ற ஒலியை எழுப்பினார். இரு கைகளையும் விரித்து அவருடைய தொல்குலத்து முறைப்படி நீள்விரலால் உள்ளங்கையைத் தொட்டு யோகமுத்திரை அமைத்து “மகாவியாசரின் சொல்கேட்டு பாண்டவர்கள் ஐவரும் பிரியா துணைவியுடன் விண்புகுந்த கதை இது” என்று சொல்லத்தொடங்கினார்.

முதலாவிண் - 3

அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை வாயிலில் பாண்டவர் ஐவருடைய கொடிகளும் அருகருகே பறந்தன. அதை அந்நகருக்குள் நுழைந்த அயல்வணிகர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று சுட்டிக்காட்டி வியப்புடன் பேசிக்கொண்டனர். அந்நகருக்கு அவர்கள் வரத்தொடங்கிய நெடுங்காலமாகவே அவ்வண்ணம் ஐவர் கொடிகளும் சேர்ந்து பறந்ததில்லை. உத்கலத்தில் இருந்து வந்த பெருவணிகரான குபேரரும் அவருடைய தோழர்களும் அக்கூட்டம் ஒன்றில் நின்று அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டனர்.

“அவர்கள் ஐவரும் அஸ்தினபுரியில் ஒன்றிணைந்து இருந்தால் அஸ்தினபுரி அழியும், அன்றி அவர்களுடைய தொல்குடி முற்றழியும் என்றொரு தீச்சொல் உண்டு” என்று சூதன் ஒருவன் சொன்னான். “இளமையில் அவர்கள் வாரணவதம் எனும் ஊரில் தங்கள் அன்னையுடன் சென்று தங்கியிருக்கையில் துரியோதனனால் அவர்கள் தங்கியிருந்த மாளிகை எரியூட்டப்பட்டது. அதிலிருந்து தப்பும் பொருட்டு அவர்கள் ஐந்து மைந்தருடன் வந்த வேட்டுவ அன்னையொருத்திக்கு ஊனளித்து அவளை அரக்கு மாளிகையில் வைத்து பூட்டிவிட்டு நிலவறையினூடாக ஒளிந்து விலகிச் சென்றனர். எரிந்து பொசுங்கி அழிந்த அம்மைந்தரும் அன்னையும் இறக்கும் தருவாயில் அந்தத் தீச்சொல்லை விடுத்தனர்.”

“மலைக்குறத்தியின் சொற்கள் எரியென்றே எழுந்தன. ‘உங்கள் அன்னையுடன் துணைவியருடன் மைந்தருடன் கூடிவாழும் குடிவாழ்வு இனி ஒருபோதும் உங்களுக்கு அமையாது. அவ்வண்ணம் கூடியமையும் நாளில் நீங்களும் இதுபோல் முற்றழிவீர்கள். உங்கள் நகர் உடனழியும். எரி அறிக இச்சொல்!’ என்று அந்த அன்னை உரைத்தாள். தன் மைந்தர் ஊனுருகி எரிவதைக் கண்டு மேலும் வெறிகொண்டு நெஞ்சிலறைந்து ‘உங்கள் மைந்தர்கள் ஒருவர் எஞ்சாமல் அனைவரும் இவ்வண்ணமே எரியுண்டு அழிவார்கள்… அறிக மண்ணுள் வாழும் எங்கள் மூதாதையர்!’ என்று அவள் தீச்சொல்லிட்டாள்.”

“அவ்வண்ணமே ஆயிற்று” என்று சூதன் சொன்னான். “அச்சொல் அவர்களை தொடர்ந்தது. அவர்கள் இந்திரப்பிரஸ்த மாநகரை அமைத்தனர். அங்கே அரசாள இயலவில்லை. கான்வாழ்க்கையே அவர்களுக்கு அமைந்தது. அவர்கள் காட்டில் தங்கியிருந்த இடங்களிலெல்லாம் காட்டெரி எழுந்து சுழன்றது. ஏழுமுறை அவர்கள் காட்டிலிருந்து தப்பினர். தீங்கு தொடர்வதை உணர்ந்தபின் நிமித்திகன் ஒருவனை உசாவி அவ்வண்ணம் ஒரு தீச்சொல் அவர்கள் மேல் இடப்பட்டிருப்பதை அறிந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஐவரும் எந்நகரிலும் சேர்ந்திருந்ததில்லை.”

“எப்போதும் ஐவரில் ஒருவர் நகர் நீங்கி பயணம் செய்துகொண்டிருப்பார். சிலர் திசைவெல்ல கிளம்பியிருப்பார்கள். சிலர் தனிமையூழ்கத்திற்கு கானேகியிருப்பர். இந்நகரில் இருந்தாலும் ஒருவர் புராணகங்கைக்குள் காட்டிலேயே இருப்பார். அவை கூடுகையிலும் ஒருவர் இல்லாமலிருப்பது அவர்களின் வழக்கம். அதன் வழியாக அத்தீச்சொல்லை அத்தனை நெடுங்காலம் தங்களை அணுகாது அகற்றி நிறுத்தியிருந்தனர்” என்றான் சூதன். “அறிந்திருப்பீர்கள், அவர்களின் மைந்தர்கள் அனைவருமே எரியுண்டு மறைந்தனர். அவர்களில் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது அப்பெருந்துயர்.”

“எனில் இப்போது இந்நகர் எரிகொள்ளுமா?” என்று ஒருவன் கேட்டான். “அவர்கள் ஐவரும் நகர் திரும்பியிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இருந்தால்கூட அவையில் ஒருவர் குறைந்திருப்பார், புராணகங்கைக்குள் இருப்பார்” என்றான் சூதன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லத் தொடங்கினர். “மூத்தவர் யுதிஷ்டிரன் நைமிஷாரண்யக் காட்டில் ஊழ்கத்தில் இருந்தார் என்று சொன்னார்கள். இளையவர்கள் நான்கு திசைகளுக்கும் சென்றார்கள் என்று அறிந்தேன்” என்றார் ஒருவர். “ஆம், சகதேவன் தென்திசைக்கும் நகுலன் மேற்குக்கும் பீமன் வடக்குக்கும் சென்றனர். அர்ஜுனன் காண்டீபத்துடன் கிழக்கை நாடினார்” என்றார் இன்னொருவர். “அனைவருமே மீண்டுவிட்டனரா?” என்றார் ஒருவர். “அவ்வண்ணமே கொடிகள் கூறுகின்றன” என்றார் ஒரு முதிய வணிகர்.

குபேரரும் அவர் தோழர்களும் கோட்டை வாயிலிலேயே கூடாரநிழல்களில் அமர்ந்து அதைப் பற்றி பேசிக்கொண்டர்கள். “பாண்டவர்கள் நகரில் இருக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் சந்திக்கவேண்டும்” என்றார் குபேரர். “பிறிதொருமுறை அவர்களை நாம் சந்திக்கவே முடியாமலாகலாம் என்று தோன்றுகிறது.” முதியவரான சுவர்ணர் “நாம் ஏன் அவர்களை சந்திக்கவேண்டும்? அவர்களுக்கும் நம் வணிகத்திற்கும் என்ன தொடர்பு?” என்றார். “வணிகத்திற்கு எல்லா செய்திகளும் தொடர்புடையவையே. நாம் அவர்களை சந்தித்தால் அச்செய்தியே பல அரசுகளில் நமக்கு அவைநுழையவும் அரசர்முன் நின்று பேசவும் வாய்ப்பளிக்கும். வணிகர்களுக்கு அரசத்தொடர்புபோல நலம்பயப்பது வேறில்லை” என்றார் குபேரர்.

“ஆனால் அவர்கள் இங்குள்ளனரா என எவ்வண்ணம் அறிவது?” என்றார் மரகதர். “கொடிகள் காட்டுகின்றனவே?” என்றார் குபேரர். “கொடிகளில் பொருளில்லை என்றல்லவா பேசிக்கொள்கிறார்கள்?” என்றார் மரகதர். “ஆம், எவ்வண்ணம் அதை உறுதிப்படுத்துவது?” என்று முதுவணிகரான சுவர்ணர் கேட்டார். “ஒன்று செய்யலாம். அது வணிகர்களின் வழக்கமான முறை. ஏதேனும் ஓர் அரிய பரிசுடன் அரசரின் அவைக்கு செல்வோம். அரண்மனைக்குள் பாண்டவ ஐவரில் எவரெல்லாம் இருக்கிறார் என்று பார்ப்போம்” என்றார் குபேரர். “எவர் இருந்தாலும் நமக்கு நன்றே. இன்று தெய்வ உருவங்கள் என கதைகளில் வாழ்பவர்கள் பாண்டவர்கள். அவர்களை நாம் விழிநோக்கி சொல்லெடுத்தோம் என்பதே நமக்கு தகுதி என்றாகும்.”

மறுநாள் காலையிலேயே அவர்கள் அரசருக்குரிய பரிசுடன் கிளம்பி அஸ்தினபுரியின் அரண்மனைக்கு சென்றனர். உத்கலத்தில் இருந்து அவர்கள் பரிசளிக்கவென்றே கொண்டுவந்திருந்த மரகதத்தாலான காளைச் சிலை அது. அவர்கள் நல்லாடை அணிந்து, தலைப்பாகைகளில் தங்கள் குலமுத்திரை பொறித்த பொன்வில்லைகளைச் சூடி, நகரினூடாக பட்டு மஞ்சலில் சென்றனர். மஞ்சல் சுமப்பவர்களை கோட்டைமுகப்பிலேயே அமர்த்திக்கொண்டார்கள். நகருக்குள் சூதர்களை அனுப்பி தங்களுக்கு கட்டியம் கூற முதுசூதனை ஏற்படுத்தினர். வெள்ளிக்கோலுடன் முன்னால் சென்ற முதுசூதன் அவர்களின் குலப்பெருமையை அறிவித்து வழிபெற்று சென்றான்.

மஞ்சலின் அருகே அவர்களுடன் நடந்தபடி சூதனொருவன் அஸ்தினபுரியை சுட்டிச்சுட்டி விளக்கிக்கொண்டு வந்தான். அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் தலைமை ஊர் என மாறிவிட்டிருந்தது. முன்பு அங்கு மாமன்னர் ஹஸ்தியால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு நகரமே இருந்தது. உயரமற்ற மரத்தாலான மாளிகைகளும், இடுங்கலான தெருக்களும், சிறிய சதுக்கங்களும், நெரிசலான சந்தையிடங்களும் கொண்ட ஒரு தொல்நகரம். அங்கிருந்த தொல்குடிகளும் தங்கள் குடிப்பெருமை அன்றி பிறிதொன்று அறியாதவர்கள். தொழிலோ வணிகமோ தேராதவர்கள். ஆனால் ஆணவம் கொண்டவர்கள். பெருமிதமே தங்கள் செல்வம் என்று எண்ணியவர்கள்.

அஸ்தினபுரி அன்று குன்றாது குறையாது நீர்நிறைந்து நின்றிருக்கும் குளம் போலிருந்தது. அம்மக்களின் பேச்சுக்கள் பெரும்பாலும் முறைமைச் சொற்கள். அவர்களின் பாவனைகளும் மாறாதவை. அவர்களின் முகங்கள்கூட வழிவழியாக ஒன்றே. முதிய வணிகர்கள் ஒவ்வொரு முறை வருகையிலும் எல்லா நகரங்களும் மாறிக்கொண்டே இருக்க அஸ்தினபுரி மட்டும் அவ்வண்ணமே இருப்பதை கண்டனர். எவரும் அங்கே இறப்பதே இல்லை என்று ஒரு நம்பிக்கை சிலரிடமிருந்தது. அங்குள்ள ஓசைகளில்கூட எந்த மாற்றமும் இருப்பதில்லை.

அவர்கள் அனைவருமே அந்நகர்விட்டு செல்லும்படி அமைந்தது. அங்கு நிகழ்ந்த மாபெரும் போரில் அவர்கள் ஒவ்வொருவரின் குடியிலும் பலர் களம்பட்டனர். களம்பட்டவர்கள் அங்கு எழுந்த பெருந்தீயில் உண்ணப்பட்டனர். அவர்களுக்கு உரிய முறையில் இறுதிக்கடன் செலுத்துவதற்காக உடலோ சாம்பலோ கிடைக்கவில்லை. ஆகவே அந்நிலத்தையே ஓர் உடலாகக்கொண்டு பொதுவாக நீர்க்கடன்கள் செலுத்தப்பட்டன. அதில் நிறைவுறாத நீத்தோர் அங்கிருந்து கிளம்பி வந்து அஸ்தினபுரியில் தம் உறவினர்களை பற்றிக்கொள்ளத் தொடங்கினார்கள். நகரெங்கும் நீத்தோரின் நுண்ணுடல்கள் செறிந்தன.

உண்ண ஊண்கலம் முன் அமர்கையில் அருகே கண்ணுக்கு தெரியாத பிறரும் இருப்பதை தந்தையர் உணர்ந்தனர். அள்ள எடுத்த கையை அவர்கள் பசியுடன் பற்றிக்கொள்வதுபோல தோன்ற அன்னத்தை தாலத்தில் இட்டு நடுங்கி விழிநீர் உகுத்தனர். இரவுகளில் அவர்களின் கதவுகளைத் தட்டி ‘அன்னையே! அன்னையே!’ என்று மைந்தர்கள் அழைத்தனர். புரவிகளும் பசுக்களும் உருவிலிகளைக் கண்டு திகைத்து குரலெழுப்பின. கதவுகள் திறந்து மூடின. இருண்ட அறைகளுக்குள் இருந்து மெல்லிய விசும்பலோசைகள் எழுந்தன. புலரியில் கதவை திறக்கையில் முற்றத்தில் பூழியில் காலடித்தடங்கள் தெரிந்தன.

அவர்கள் அஞ்சி நிமித்திகர்களிடம் உசாவினர். பூசகர்கள் சொன்ன சடங்குகளை செய்தனர். கணியர்களைக் கொண்டு மாற்றுச்சடங்குகளை இயற்றினர். அன்னமும் நீரும் அளிக்கப்பட்டது. தெய்வங்கள் கொடை பெற்றன. அந்தணர் பொருள் கொடுக்கப்பட்டனர். எவற்றாலும் நீத்தார் நிறைவுறவில்லை.

நீத்தாருக்கு அணுக்கமானவர் துர்வாசரே என்று அவர்களுக்கு முதிய நிமித்திகர் சொன்னார். சாவும் பிணியும் நோயும் துயரும் என புவியாளும் மூத்தவளுக்கு அணுக்கமானவர், அவளை வழிபடுபவர் என்பதாலேயே அவர் கெடுமணம் கொண்ட உடலர் ஆகி துர்வாசர் என்று பெயர் பெற்றார். குடித்தலைவர் பன்னிருவர் கொண்ட குழு ஒன்று நெடுந்தொலைவு தேடிச்சென்று துர்வாச முனிவரை அணுகி பணிந்து அவரிடம் “மாற்றுவழி என்ன? எங்களவர் மீள நாங்கள் இயற்றவேண்டியது என்ன? சொல்லி எங்களை காத்தருள்க!” என்று உசாவியது.

“அவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை உங்களால் எவ்வகையிலும் நிறைவு செய்ய இயலாது. ஏனெனில் அவர்கள் வந்திருப்பது தங்கள் கொடிவழியினரின் எள்ளும் நீரும் பெறுவதற்காக மட்டுமல்ல. தாங்கள் இறந்த அந்தப் போரினால் உண்மையில் என்ன பயன் என்னும் அழியா வினாவை அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கிறார்கள். எதன்பொருட்டு அது நிகழ்ந்தது என அறியத் துடிக்கிறார்கள். அப்பொருளின்மையே அவர்களை கொந்தளிக்கச் செய்கிறது. நீங்கள் எவரேனும் அப்பொருளின்மைக்கு அவர்கள் ஏற்கும் மறுமொழியைக் கூற முடிந்தால் அவர்கள் நிறைவுறுவார்கள்” என்றார் துர்வாசர்.

திகைப்புடன் “அப்பெரும்போருக்கான மறுமொழியை நாங்கள் எவ்வாறு கூற முடியும்? அது எவ்வாறு ஒருங்கிணைந்தது ஏன் நிகழ்ந்தது எவ்வண்ணம் முடிந்தது என்று எவரும் அறியார்” என்றனர் குடியினர். “ஆம், அது இந்நிலத்தில் நிகழ்ந்த மாபெரும் பொருளிலா ஆடல். அதில் இனி வரும் தலைமுறைகள் பொருளேற்றம் செய்யும். அப்பொருள் சொல்தோறும் பெருகும். அது முடிவிலி வரை உருப்பெருக்கும்” என்று துர்வாசர் கூறினார். “இனி எழும் யுகங்களில் எங்கோ என்றோ மானுடர் மேலும் பல போர்களினூடாக இப்போருக்கு பொருள்கொள்ள முடியும். இதுவே இப்புவியில் இன்னும் பலமுறை நிகழ்ந்து இதன் பொது நெறிகள் தெரியவரக்கூடும். அதுவரை இந்நீத்தார் அடங்கப்போவதில்லை.”

“முனிவரே, அருள்க! நாங்கள் என்னதான் செய்வது?” என்று அவர்கள் அழுது பணிந்தனர். “அவ்வினா அஸ்தினபுரியை மையம் கொண்டது. அவர்களால் அவ்வினாவுடன் அஸ்தினபுரியிலிருந்து வெளிவர இயலாது. குருக்ஷேத்ரத்திற்கும் அஸ்தினபுரிக்கும் அவர்கள் குறுங்காற்றுகளென சென்றுகொண்டே இருப்பார்கள். நீங்கள் அஸ்தினபுரியை கைவிட்டு விலகிச் செல்லுங்கள். புது நிலம் தேடுங்கள். புது வாழ்வை தொடங்குங்கள். அங்கே புது மைந்தர் எழட்டும். அவர்களிடம் நீத்தார் பற்றி எதுவும் கூறவேண்டியதில்லை. நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் நீர்க்கடன்களை இறுதிக்கடனென அஸ்தினபுரியிலேயே அளித்து, கங்கையிலேயே அவர்களை நினைவுதுறந்து விட்டுச்செல்க!” என்று துர்வாசர் சொன்னார்.

“அவர்களின் பெயர் உங்களிடம் எஞ்சலாகாது. அவர்கள் பயன்படுத்திய பொருள் எவையும் இருக்கலாகாது. அவர்களைப்பற்றிய சொல் எதுவும் உங்களிடம் நீடிக்கலாகாது. உங்களின் உள்ளத்திலிருந்து அவர்கள் ஒழிவார்கள் எனில் நீங்கள் விடுதலை கொள்வீர்கள். இது ஒன்றே வழி” என்றார் துர்வாசர். அவ்வண்ணம் அஸ்தினபுரியின் தொல்குடியினர் நகரை நீத்து அந்நீத்தாருக்கான இறுதி நீர்க்கடன்களை கங்கையிலேயே செலுத்திவிட்டு அவ்வண்ணமே கிளம்பி வேறு திசைகளுக்குச் சென்று மறைந்தனர்.

அவ்வொழிந்த நகரில் உலகெங்கிலுமிருந்து பிறர் குடியேறினர். அவர்கள் புது வேதம் விடுத்த அழைப்பை ஏற்று வந்தவர்கள். உழவர்கள், ஆயர்கள், வணிகர்கள், வீரர்கள். அவர்களுக்கு இங்கிருந்த பழைய நகர் உவப்பாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலத்திலிருந்து வந்தவர்கள். ஆகவே யவனர்கள் மேற்கின் செம்பாறையின் தன்மையிலும், திருவிடர்கள் தெற்கின் கல்லின் அழகுடனும், கிழக்கினர் மூங்கில் பின்னலாலும், நடுநிலத்தோர் மரத்தின் அடுக்குகளாலும் தங்கள் இடங்களை அமைத்தனர். இந்நகர் முற்றாக மாறியது. தெருக்கள், இல்லங்கள் அனைத்தும் பிறிதொன்றாயின.

இதன் தொல்மொழி மறைந்தது. இங்கு பேசப்படும் இந்த மொழி இங்கு முன்பு வாழ்ந்த அஸ்தினபுரியின் தொல்குடிகள் எவருக்கும் தெரியாதது. இது இங்கு வந்தவர்களின் மொழிகள் கலந்து உருவான ஒன்று. கங்கையின் புதுமழைப் பெருக்கில் கரையோரம் ஒதுங்கும் நுரைபோன்றது. நூறு பாறைகளில் அடிபட்டு, நூறாயிரம் அலைகளால் திரட்டப்பட்டு உருவாகி வந்தது. அதில் அத்தொன்மொழியின் சொற்கள் பெரும்பாலும் ஏதுமில்லை. இன்று இங்கே அவர்களில் ஒருவர் எஞ்சியிருப்பாரெனில் அவர் உளம் பதைத்து பித்தனென அலைந்துகொண்டிருப்பார்.

உண்மையில் இப்போதுகூட இந்நகர்களின் தெருக்களில் அத்தகைய பித்தர்களை நாம் பார்க்க முடியும். அவர்கள் பிறிதொரு காலத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைச் சுற்றியும் எந்த வெளிச்சத்திலும் பலநூறு நிழல்கள் விழுவதை பார்க்கலாம். இங்கு வாழ்ந்து குருக்ஷேத்ரத்தில் களம்பட்டவர்களின் நுண்ணுடல்கள் அவை. நீத்தோர் இங்கு வருகையில் இப்பித்தர்களை மட்டுமே அடையாளம் காண்கின்றனர். அவர்களை மட்டுமே மொய்த்துக்கொள்கின்றனர். அவர்களுடன் உரையாடுகின்றனர். அவர்களை பித்தாக ஆக்குகின்றனர். இங்குள்ள பிறரை அந்த நுண்ணுடலர் அறியார். அவர்களுடன் பேச அவர்கள் முயல்வதில்லை.

இந்நகரில் ஒரு நம்பிக்கை உள்ளது, இங்கு பேசப்பட்ட அத்தொல்மொழியை எவரும் மறந்தும் பேசலாகாது. விளையாட்டுக்கெனவோ, வேறேதும் தொழில் பற்றியோ அம்மொழியில் ஓரிரு சொற்களை ஒருவர் சொன்னார் என்றாலே அவருடைய நிழல் பெருகத்தொடங்குவதை பார்க்கலாம். அச்சொற்கள் இந்நகரெங்கும் முட்டி மோதி அலைந்துகொண்டிருக்கும் நுண்ணுடலர் அனைவரையும் அழைத்து அவர்களின் அருகே கொண்டுவந்துவிடுகின்றன. அவர்கள் ஊனில் ஈக்களென பற்றிக்கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து மீள்வது எளிதல்ல. ஏனென்றால் அவர்கள் மேலும் மேலும் தங்கள் சொற்களால் நம் சித்தத்தை நிரப்பிவிடுவார்கள்.

எப்பொழுதேனும் களிமண் பலகையிலோ மரப்பட்டையிலோ ஓலையிலோ எழுதப்பட்ட அந்தத் தொல்ஆவணங்களை படிப்பதற்காக வணிகமன்று கூடியிருக்கும் என்றால் அவ்வண்ணம் நிழலுருக்கள் பெருகாமல் இருக்கும் பொருட்டு அவ்வறையின் தென்மேற்கு மூலையில் சுடர் கொளுத்தி வைத்து அருகே ஒரு கிளியை நிறுத்துவார்கள். அக்கிளி சூதர்களால் பயிற்றுவிக்கப்பட்டது. அது அந்த நீத்தார் தொன்மொழியின் சில சொற்களை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும். அக்கிளியைச் சுற்றி கிளியின் நிழல்கள் பெருகியிருக்கும். அப்பணி முடிந்ததும் அக்கிளியை கூண்டுடன் எடுத்துச் சென்று நகருக்கு வெளியே திறந்துவிடுவார்கள். அக்கிளியை மொய்த்திருக்கும் நுண்ணுடலர்களும் கிளியுடனே நகரிலிருந்து வெளியே செல்வார்கள்.

இந்நகரம் இறந்தவர்களால் நிறைந்திருக்கிறது. இங்கு வாழ்பவர்களைவிட நூற்றெட்டு மடங்கு நீத்தார் இருக்கிறார்கள் என்பது சூதர் கூற்று. ஆனால் அந்நீத்தார் இன்று வாழ்பவர்களுடன் ஒரு சொல்லும் பேச முடியாது, ஒருவகையிலும் தங்கள் இருப்பை உணர்த்த இயலாது என்பதனால் அவர்கள் நமக்கு இல்லாதவர்களே. ஒன்றுடன் ஒன்று ஊடுருவாமல் இரு பேருலகங்கள் இங்கே திகழ்கின்றன.

வணிகர்களே, அந்த நுண்ணுடலர்கள் இந்நகரின் இந்தப் புதிய மாளிகைகளையும் தெருக்களையும் அறிவதே இல்லை. அவர்கள் இங்கே நுண்வடிவில் இருக்கும் அப்பழைய மாளிகைகளில் வாழ்கிறார்கள். அவை இல்லாமலாகிவிட்டனவா? இல்லை, எவையுமே இங்கு முற்றாக மறைவதில்லை என்று உணர்க! உச்சிப்பொழுதிலோ முழுநிலவு நடுவான் அடைகையிலோ சில தருணங்களில் இந்த நகரின் மாளிகைகளின் நிழல்களை பாருங்கள். அவை அப்பழைய நகரின் மாளிகைகளின் நிழல்கள் என்று காண்பீர்கள்.

அஸ்தினபுரியின் நகரினூடாகச் சென்ற குபேரரும் தோழர்களும் அதன் புதிய பளிங்கு அரண்மனையை சென்றடைந்தனர். கட்டியங்காரன் அவர்களை அறிவித்தான். அவர்களை நோக்கி வந்த காவலர்தலைவரிடம் உத்கலத்தின் பெருவணிகர்களாகிய தாங்கள் அஸ்தினபுரியின் அரசரை காண விழைவதாக கூறினர். காவலர்தலைவர் “இன்று இங்கு அரசு கொண்டிருப்பவர் பேரரசர் யுயுத்ஸு. அவரது துணைவி பேரரசி சம்வகை இந்நகரத்தை ஆள்கிறார். உங்கள் வணக்கத்தையும் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்கள் அவர்களே” என்றார்.

“அல்ல, நாங்கள் இந்நகரின் மெய்யான மணிமுடிக்குரியவராகிய யுதிஷ்டிரனை பார்க்கும்பொருட்டு வந்துள்ளோம். அவருக்கும் அவரது நான்கு தம்பியருக்கும் பேரரசி திரௌபதிக்குமான பரிசுப்பொருட்களுடன் உத்கலத்திலிருந்து வந்தோம்” என்றார் குபேரர். “அவர்கள் எவரையும் தாங்கள் சந்திக்க இயலாது. வருகையர் எவரும் தன்னை சந்திக்கவேண்டியதில்லை என்பது அரசரின் ஆணை” என்றார் காவலர்தலைவர்.

“நாங்கள் இந்நகருக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அரசரையும் அரசியையும் கண்டு வணக்கம் தெரிவித்து பரிசில் வழங்கிக்கொண்டிருக்கிறோம். பாண்டவ ஐவரை பார்ப்பதற்கும் மூதரசி திரௌபதியை வணங்குவதற்குமான வாய்ப்பு இப்போது அமைந்துள்ளது. கோட்டை முகப்பில் கொடி பறக்கிறது. ஐவரும் இங்குள்ளார்கள் என்று அறிந்து வந்தோம்” என்றார் மரகதர்.

காவலர்தலைவர் புன்னகைத்து “உண்மையில் ஐவரும் இங்கில்லை. பீமசேனன் புராணகங்கைக்குள் காட்டிற்குள் சென்றுவிட்டார். கொடி பறப்பது அவருடைய தரப்பு என சகதேவன் நின்று பேசுவார் என்பதனால்தான். பேரரசி திரௌபதி எந்த அவையிலும் கலந்துகொள்வதில்லை. அவர் இங்கு நோன்பு மாடத்தில் இருக்கிறார். இன்று அந்தியில் அரசரும் அரசியும் பாண்டவ மூத்தோர் நால்வரையும் சந்திக்கிறார்கள். அது குடியவையும் ஐவர் அவையும் கூடும் நிகழ்வு. அதில் சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன” என்றார்.

குபேரர் “தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்” என்றார். காவலர்தலைவர் மிகைச்சொல்லர் என்று உணர்ந்துகொண்டிருந்தார். காவலர்தலைவர் மகிழ்ந்து “இந்நகரம் மீளுருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இதன் பட்டத்து இளவரசராகிய பரீக்ஷித் இதுவரை மருத்துவர்களால் பேணப்பட்டு அகத்தளத்திலேயே வளர்க்கப்பட்டார். அவருக்கு அரசகுண்டலம் அணிவிக்கும் நிகழ்வு முடிவுசெய்யப்படுகிறது. பட்டத்து இளவரசராக அவரை அமர்த்திவிட்டு பாண்டவர்கள் இங்கிருந்து மீண்டும் கிளம்பவிருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது” என்றார்.

குபேரர் “இன்று அந்தியில் நிகழும் அந்தப் பேரவைக்கு உத்கலத்து குலவணிகர்களின் தரப்பென்று நாங்கள் பங்கெடுக்க இயலுமா?” என்றார். “தங்கள் கணையாழியுடன் குலமுறைப் பெயர்களையும் எழுதி சிற்றமைச்சர் விசாகரிடம் அளியுங்கள். அவரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்தால் கலந்துகொள்ளலாம்” என்றார் காவலர்தலைவர். குபேரர் காவலர்தலைவருக்கு ஐந்து கழஞ்சு பொன்நாணயத்தை வழங்கினார். அவர் புன்னகைத்து தலைவணங்கி வாழ்த்துரைத்தார்.

குபேரர் தலைமையில் வணிகர்கள் விசாகரை அணுகினர். விசாகர் சிறு பதற்றத்தில் இருந்தார். குபேரர் கணையாழியைக் காட்டி தங்களை அறிமுகம் செய்துகொண்டு “நாங்கள் அரசவைநுழைவை விழைகிறோம்” என்றார். “வணிகர்களுக்கு எதற்கு அவைநிகழ்வு?” என்றார் விசாகர். “பதினெட்டு அகவை நிறைகையில் இங்கு பரீக்ஷித் மீண்டும் அரசு கொள்வார் என்பது உண்மையா என்று அறிய விரும்புகிறோம். எங்கள் வணிகத்திட்டங்களை அதன் அடிப்படையிலேயே வகுக்கமுடியும்” என்றார் குபேரர். விசாகர் “ஆம், அரசர் யுயுத்ஸுவும் அரசி சம்வகையும் ஆள்வது இளவரசர் பரீக்ஷித்தின் பொருட்டே” என்றார்.

“அதற்கு இங்கே மாற்றுக் கருத்து எதுவும் உண்டா?” என்றார் குபேரர். “இங்கு அரசி சம்வகைக்கு எதிராக எண்ணுவதே தலை போகும் செயல்” என்றார் விசாகர். “நன்று, நாங்கள் இங்கு அனைத்து சந்தைகளும் உயிர்த்துடிப்புடன் இருக்கவேண்டும் என்று மட்டுமே எண்ணிக்கொள்கிறோம். வணிகர்களாகிய நாங்கள் எதையும் விரும்புபவர்கள் அல்ல. எங்கள் பரிசில்களை இன்று பேரவையில் அளிக்கவிருக்கிறோம். எங்கள் குலமுறையை பொறித்த ஓலை, முத்திரைக் கணையாழி ஆகியவற்றை அளிக்கிறோம்” என்றார் குபேரர். “ஆய்ந்து தங்களை அழைப்போம்” என்று விசாகர் சொன்னார். அவருக்கும் ஐந்து கழஞ்சு பொன் கொடுத்து தலைவணங்கி அவர்கள் விடைபெற்றனர்.

முதலாவிண் - 4

அஸ்தினபுரியின் பேரங்காடியை ஒட்டி உத்கலத்திலிருந்து வரும் வணிகர்களுக்காக அவர்களால் பணம் சேர்த்து கட்டப்பட்ட அந்நான்கடுக்கு மரமாளிகை ‘ரிஷபம்’ அமைந்திருந்தது. அதன் மேல் உத்கலத்தின் வணிகக் கூட்டமைப்பின் எருதுக்கொடி பறந்தது. மாளிகை முகப்பில் குபேரனின் சிலையும் அக்கூட்டமைப்பின் நாற்பத்திரண்டு உறுப்பினர்களின் குறிப்பாக நாற்பத்திரண்டு எனும் எழுத்தும் அமைந்திருந்தன. வணிகர்களின் புரவிகளையும் வண்டிகளையும் பேணுவதற்காக அங்கே பின்புறம் மிக விரிந்த முற்றம் ஒன்றும் புரவிக்கொட்டில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விலங்குகளைப் பேணும் சூதர்களுக்குரிய சிறு குடியிருப்புகளும் இருந்தன.

மாளிகையின் முற்றத்தில் நூறு பல்லக்குகளும் ஐம்பது புரவித்தேர்களும் வந்து நின்று செல்லும் அளவிற்கு இடமிருந்தது. மாளிகைக்குள் நூறு படுக்கையறைகளும், அனைவரும் கூடி அமரும் பெருங்கூடமொன்றும், உணவுக்கூடமொன்றும் இருந்தன. அனைவருக்குமான அடுமனை சற்று அப்பால் பிறிதொரு கட்டடமாக அமைந்திருந்தது. அங்கு குடியிருந்தவர்கள் அனைவருமே அந்திக்குள் தங்கள் வணிகங்களை முடித்துவிட்டு உணவருந்தி ஓய்வாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மிகச் சிலரே பரத்தையர் மனைகளுக்கும், சூதர்களங்களுக்கும், மதுவிடுதிகளுக்கும் சென்றனர். எஞ்சியோர் உத்கலத்தின் மாளிகையிலேயே பாதுகாப்பாக தங்க விரும்பினர்.

பொற்பணங்களையும் அரும்பொருட்களையும் தங்கள் அறைகளிலேயே பாதுகாப்பாக பூட்டி வைத்துவிட்டு, தங்கள் மொழியறிந்த தங்கள் குடிச்சூழலிலேயே அமர்ந்து உரையாடுவதில் அவர்கள் இன்பம் அடைந்தனர். அதில் அவர்களின் வணிகத்துக்குரிய செய்திகள் வந்துகொண்டே இருப்பது வழக்கம். கூடுதலாக சூதர்களை வரவழைத்து கதை கேட்பதும் உண்டு. பெரிய கூடம் தரையில் கம்பளி விரிப்பு விரிக்கப்பட்டு, அதன் மேல் தலையணைகளும் சாய்வு மணைப்பலகைகளும் போடப்பட்டு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இயல்பாக அமர்ந்து பேசும்படி இருந்தது. வணிகர்கள் தங்களுக்குள் மிகத் தாழ்ந்த குரலில் வணிகம் பேசி பழகியிருந்தமையால் நூறு பேருக்குமேல் அங்கு பேசிக்கொண்டிருந்தாலும்கூட மெல்லிய முழக்கமாகவே ஓசை வெளியே கேட்டது.

குபேரரும் அவருடன் வந்த உத்கலத்து வணிகர்களும் அங்கிருந்து அவர்கள் கண்டடைந்த புதிய வணிகன் மிருத்திகனுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உத்கலத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தவனாகவும் அஸ்தினபுரியிலேயே தொடர்ந்து தங்கி அங்கேயே வேரூன்றிவிட்டு அங்கிருந்து பொருட்களை வாங்கி அஸ்தினபுரிக்கு வரும் உத்கல வணிகர்களுக்கு விற்பவனாகவும் இருந்தான். இடைநிலையாளனாக பெரும் செல்வம் சேர்த்து அங்கு இல்லமும் மனையாட்டியும் மைந்தரும் ஏவலருமாக பெருவணிகனாக நிலைகொண்டிருந்தான். உத்கலத்தில் இருந்து தன்னுடைய உடன்பிறந்தாரையும் தங்கை மைந்தரையும் அஸ்தினபுரிக்கு வரவழைத்திருந்தான்.

மிருத்திகன் அஸ்தினபுரியின் அனைத்து அங்காடிகளையும் வணிகர்களையும் தெரிந்தவனாகவும் அவற்றை வணிகர்களுக்குரிய முறையில் கூறுபவனாகவும் இருந்தான். வணிகர்கள் சூதர்களை பணம் கொடுத்து வரலாறுகளையும் கதைகளையும் சொல்லவைத்து கேட்டு தெரிந்துகொள்வதில் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தனர். செல்லுமிடத்தைப் பற்றிய அனைத்துக் கதைகளையும் செல்வதற்கு முன்னரே சூதர்களிடம் கேட்டுக்கொள்வார்கள். அங்குள்ள அரசியல் சூழலும் வணிகச் சூழலும் பாதுகாப்பும் கதைகளினூடாகவே அவர்களுக்கு தெரியவரும். அதற்கப்பால் பிறிதொரு வணிகனிடமும் அவர்கள் கதை கேட்பார்கள். சூதர்கள் சொல்லாத செய்திகள் வணிகர் கதைகளில் இருக்கும். வணிகர்களால் அறிய முடியாத கற்பனைகளும் கணிப்புளும் சூதர்களிடம் இருக்கும்.

மிருத்திகன் அஸ்தினபுரி மீண்டெழுந்த கதையை விரித்துரைத்தான். அங்கு நெடுங்காலம் சாலையெங்கும் சுங்கம் தவிர்க்கப்பட்டது. கோட்டைக்குள் நுழையும் ஓர் இடத்தில் மட்டும் சுங்கம் கொள்ளப்பட்டது. சாலையெங்கும் சுங்கம் தவிர்க்கப்பட்டதனாலேயே அரசமுத்திரை கொண்டவர்கள் பலர் சுங்கம் கொள்வதும், கொண்ட சுங்கம் தலைநகருக்கு வந்து சேர்வதிலுள்ள இடர்பாடுகளும் களையப்பட்டன. சுங்கம் தவிர்க்கப்படுகிறது என்ற செய்தியே மேலும் மேலும் வணிகர்கள் வருவதற்கு வழி வகுத்தது. விற்பதற்கு மட்டுமின்றி கொள்வதற்கும் வணிகர்கள் வரத்தொடங்கியபோது அஸ்தினபுரியின் சந்தைகள் மையங்களாக மாறின.

“ஒரு பேராறு பாறையொன்றில் முட்டி வழி திரும்பிச்செல்வதுபோல அஸ்தினபுரியில் பாரதவர்ஷத்தின் வணிகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று அவன் சொன்னான். “இங்கு எடைமிக்க பெரும்பொருட்களை கொண்டுவருவதற்கான வழிகள் இல்லை. கங்கையில் இருந்து இறங்கி இவ்வளவு தூரம் வரவேண்டியிருந்தது. முதலில் அது இங்கு சந்தைகள் வளர்வதற்கான இடர்பாடாக மாறும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது. அஸ்தினபுரியின் சந்தைகள் விரிவாகக்கூடும் என்று சென்ற தலைமுறையில் எவரிடமேனும் சொல்லியிருந்தால் புன்னகைத்திருப்பார்கள். இப்போது இங்கு ஆட்சி செய்யும் சம்வகை ஒவ்வொன்றையும் முற்கண்டு அதற்குரிய வழி கண்டு உறுதியுடன் அதை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட பேரரசி. அவர் நிகழ்த்திய மாயம் இது.”

“இன்று இங்கு நிகழும் வணிகம் என்ன என்று அறிந்தால் திகைப்பீர்கள்” என்று அவன் தொடர்ந்தான். “இங்கு விற்கப்பட்டு வாங்கப்படும் பொருட்கள் எவையும் இங்கு வருவதே இல்லை. அவை கங்கைக்கரையிலேயே படகுகளில் அமைந்துள்ளன. கங்கையை ஒட்டி அஸ்தினபுரி நிறுவியுள்ள பன்னிரண்டு படகுத்துறைகளில் நீரில் நின்றிருக்கும் படகுகள் அனைத்தும் இங்கே சந்தைகளில் விற்கப்பட்டு வாங்கப்படும் பொருட்கள் நிறைந்தவை. ஒருநாளில் இந்த அங்காடிகளில் பல்லாயிரம் படகுகளில் பொருட்கள் விற்பனையாகின்றன.

அவை முதலில் வாய்ச்சொற்களாகவே விற்கப்பட்டு வாங்கப்பட்டன. ஆனால் கண்ணுக்கு முன் தெரியாத ஒன்றை விற்றுபெற்றால் அது வணிகம் என்று ஆவதில்லை. ஆகவே கடற்சோழிகளும் சிறு சங்குகளும் அப்படகுகளாக மாறின. அச்சிப்பிகளிலும் சங்குகளிலும் படகுகளின் பெயர்களும் அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு படகு நிறைய பீதர் நாட்டு பட்டையோ யவன மதுவையோ வாங்கினால் உங்களுக்கு அச்சங்கு அல்லது சோழிதான் அளிக்கப்படும். அதை பிறிதொருவருக்கு நீங்கள் மேலும் விலை வைத்து விற்று பொருள் ஈட்டலாம்.

“ஈட்டுபொருள் இங்கு பிழையென கருதப்படுவதில்லை. முன்பெல்லாம் ஒரு வணிகத்தில் ஒருவன் பொருள் ஈட்டினால் அது எவ்வகையிலோ அரசனுக்கு எதிரானது என்ற எண்ணம் ஆட்சியர்களுக்கு இருந்தது. அவர்கள் அவனை துரத்திப் பிடித்து அந்த ஈட்டுபொருளில் பெரும்பகுதியை தாங்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இன்று ஈட்டுபொருள் ஒருவனின் திறமைக்கான சான்றென்று கருதப்படுவதனால் இங்கு சொல்வணிகமே பெரும்பாலும் தழைக்கிறது. இந்த வணிக நிலையில் ஏறி நின்று இந்நகரை பார்த்தால் இங்கே எறும்புகள்போல பலநூறுபேர் ஒருவருக்கு ஒருவர் முட்டி சொல்பேசி திரும்புவதை காணலாம். அவை ஒவ்வொன்றும் வணிகச்செயல்பாடுகள். பொன்னும் மணியுமென கைமாறப்படுபவை.”

அவர்கள் அவனுடைய சொற்களை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தனர். “இத்தகைய வணிகத்தில் நம்பிக்கை மீறல் பெரும் இடர். ஒரு வணிகன் விற்கும் சங்கு பொய்யானதாக இருக்கலாம். வாங்குபவன் ஒருமுறை தன் ஆட்களைக்கொண்டு நோக்கி உறுதி செய்ய முடியுமெனினும்கூட அதில் ஒருவனை ஏமாற்றுவதற்கு எல்லா வழிகளும் உள்ளன. அந்த ஏமாற்றுக்கு அரசு எந்நிலையிலும் தண்டனை அளிக்கும் எனும் உறுதிப்பாடு தேவை. அதை அரசி வழங்குகிறார். அஸ்தினபுரியின் எல்லைக்குள் அறிந்து செய்யப்படும் தவறுக்கு அதை செய்தவனும் உடன்நின்றவனும் பாரதவர்ஷத்தில் எங்கு சென்றாலும் தண்டிக்கப்படுவார்கள்.”

ஓரிருமுறை அவ்வாறு இங்கு சிலரை ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்றவர்கள் தெற்கே விஜயபுரியிலும் மேற்கே யவன நாட்டிலும்கூட துரத்திச்சென்று கண்டுபிடிக்கப்பட்டு சிறைபிடித்துக் கொண்டுவந்து இங்கே கழுவில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். தீங்கு செய்யும் வணிகனின் முழுக் குடியும் அவனுடன் தண்டிக்கப்படவேண்டும் என்ற ஆணை இங்குள்ளது. முன்பு யவன நாட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவரப்பட்ட வணிகன் கழுவேற்றப்பட்டான். அவனுடைய குலக்குழுவைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வணிகர்களுக்கும் வணிக உரிமை மறுக்கப்பட்டது. அவர்களின் பொன்னும் பொருளும் பிடுங்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.

அச்செய்தி இங்குள்ள அனைத்து வணிகர்களுக்கும் தெளிவுற சென்று சேர்ந்தது. இன்று ஒரு வணிகன் சற்றேனும் பிழை புரிந்தால் அவனது குலக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவனைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்து இந்த சந்தை காக்கும் தலைமை ஆட்சியாளர்களிடம் அளித்துவிடும் வழக்கம் உள்ளது. பிழை நிகழாது என்று அரசு உறுதியளிக்குமெனில் சொல்லே பணம் என்றாகிறது. அதன்பின் பொருள் என்பது கையில் வரவேண்டியதில்லை.

இன்று அது மேலும் வளர்ந்துள்ளது. இன்று உத்கலத்திலோ மகதத்திலோ கலிங்கத்திலோ உள்ள பொருட்களைக்கூட இங்கே வாங்கி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள ஒரு பொருளுடன் அந்த வணிகத்தை இணைத்துக்கொண்டால் போதும். பிழை செய்பவனுக்கு எதிராக அஸ்தினபுரியின் தண்டம் எழும். சம்வகையின் சொல்லும் கையும் செல்லாத இடமேதும் பாரதவர்ஷத்தில் இல்லை என்பதனால் அனைவரும் அஞ்சுகிறார்கள். எந்த அரசனையும் இங்கு அரசவைக்கு வந்து சொல்லளிக்கும்படி ஆணையிட அவர்களால் முடியும்.

இன்று பாரதவர்ஷத்தில் நிகழும் வணிகத்தில் பாதிக்கு மேல் இந்த ஒரு நகரில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு குவியும் செல்வம் இதை மேலும் மேலும் ஆற்றல் கொண்டதாக ஆக்குகிறது. இதன் வெற்றிகளில் முதன்மையானதென்று நான் எண்ணுவது இந்நகருக்குள் படைவீரர்கள் மிகக் குறைவு என்பதே. கண்ணுக்குத் தெரியும் திசைகள் எங்கும் படைவீரர்கள் நின்றிருப்பது வணிகர்களை சோர்வுறச் செய்யும். எப்போதுமே படைவீரர்களை அஞ்சும் தன்மை வணிகர்களுக்கு உண்டு. வணிகர்களை பொறாமையுடன் நோக்குவதும் படைவீரர்களின் இயல்பு. பெருஞ்செல்வம் ஈட்டுகிறார்கள் வணிகர்கள், ஆகவே அவர்கள் பிழையானவர்கள் என்றே படைவீரர் நினைப்பார்கள். அவர்கள் சந்தித்துக்கொண்டால் எவ்வகையிலும் பணம் பறிக்கப்படும். தவிர்க்கவே முடியாது.

அஸ்தினபுரியை காக்கும் அனைத்துப் படைகளும் ஒரு முரசறைவில் வரும் தொலைவில் அஸ்தினபுரியை சூழ்ந்துள்ள வெவ்வேறு படைநிலைகளில் உள்ளன. அஸ்தினபுரிக்கு வரும் பாதைகளில் எங்கும் நீங்கள் படைகளை பார்க்க இயலாது. ஆனால் ஒரு சிறு கொம்பொலியில் அரைநாழிகையில் பெரும்படைகள் வந்து அனைத்து இடங்களையும் நிறைத்துவிடவும் முடியும். ஆகவே முற்றாகவே காக்கப்பட்டும் காக்கப்படுவதைப்பற்றி எந்த அறிதலும் இல்லாமலே இந்நகர் இருக்கிறது. அன்னைப் புலி தன் மைந்தரை விளையாடவிட்டு தான் பார்க்காததுபோல் திரும்பி அமர்ந்திருக்கும். அதன் வால் மைந்தருடன் வந்து விளையாடி நெளிந்து கொண்டிருக்கும். அதைப்போல சம்வகை இந்நகரை ஆட்சி செய்கிறார்.

இந்நகரில் பாண்டவர்கள் முற்றாக கையொழிந்து யுயுத்ஸுவிடம் முடிப்பொறுப்பை அளித்துச் சென்றது ஒருவகையில் நன்று. அவர்கள் படைவென்று இந்நகரை இந்நிலத்தை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் மேல் இங்குள்ள ஒவ்வொரு குடியும் கசப்பும் உளப்பழியும் கொண்டிருக்கிறது. அவர்களின் களவெற்றி கள்ளமுள்ளது என்று எவ்வண்ணமோ சூதர்களால் சொல்லிச் சொல்லி நிறுத்தப்படுகிறது. பீஷ்மரின் துரோணரின் குருதி இங்கு பழி தேடி அலைகிறது என்று மூத்த குடிகள் எண்ணுகின்றனர். இந்நகரை தந்தையென அமைந்து காத்த துரியோதனன் பிழைப் போரில் கொல்லப்பட்டார் என்பதும் சூதர் நாவில் ஒவ்வொரு நாளும் இங்கே உரைக்கப்படுகிறது.

இங்கிருந்து அவர்கள் அகன்றதும் தாங்கள் அப்பழியிலிருந்து விடுபட்டோம் என்ற உணர்வை இங்குள்ளோர் அடைந்திருக்கிறார்கள். அதன்பொருட்டே அவர்களும் நகர்நீங்கினார்கள் என்று கூறப்படுகிறது. இந்நகரின் இப்பெருவளர்ச்சிக்கும், இன்று அது பாரதவர்ஷத்தின் தலைமையென திகழ்வதற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது இதுவே. பாண்டவர்கள் இங்குள்ள மக்களின் அன்றாடச் சொல் என இல்லை. அவர்கள் இங்கே தொல்கதைகளில் மட்டுமே வாழ்கிறார்கள்.

இன்னும் ஓரிரு தலைமுறைகளில் இன்றிருக்கும் படைவல்லமைகூட இந்நகருக்கு தேவைப்படாது. ஏனெனில் பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளின் வணிகமும் அஸ்தினபுரியின் சந்தைகளை நம்பி அமையும். ஓர் அரசன் படைகொண்டு வந்து இந்நகரை கைப்பற்றுவான் எனில் பாரதவர்ஷத்தின் மாபெரும் வணிகவலையின் மையத்தை அழித்தவனாவான். தனக்குத்தானே அழிவை தேடிக் கொண்டவன். ஆகவே பாரதவர்ஷமே இணைந்து இந்நகரை பாதுகாக்கவேண்டிய நிலைமை உருவாகும்.

இனி ஒருமுறைகூட எவருக்கு எதிராகவும் வாளெடுக்காமல் இந்நகர் வாழ முடியும் என்கிறார்கள். இன்றேகூட இந்நகரில் குற்றங்கள் பெரும்பாலும் இல்லை. ஏனென்றால் இங்கே வறுமையும் இல்லை. குற்றங்கள் நிகழுமெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டு எவ்வகையிலும் தண்டிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உள்ளத்தாலும் குற்றம் இழைக்கப்படுவதில்லை. குற்றமில்லாத முறையில் பணம் ஈட்டி குலம் பெருக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இன்று திருட்டையும் வழிக்கொள்ளையையும் குடித்தொழிலாகக் கொண்டிருந்தவர்கள்கூட வணிகத்திற்கும் வேளாண்மைக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

“ஒரு தலைமுறைக்குள் இங்கு எவ்வகையிலும் படைக்கலம் எடுப்பவர் இல்லாதாகிவிடுவார்கள். குற்றங்கள் குறைந்துவரும்போது படைகளின் தேவையும் குறையும். இங்கே ஒருநாள் வாள் முற்றாக கைவிடப்படும். அடுத்த தலைமுறை அதை எடுத்து ஒரு தொல்பொருளென விளையாடும் என்று ஒரு சூதன் பாடினான். அது நிகழக்கூடும்” என்றான் மிருத்திகன். “நான் வாழ விழையும் உலகம் அதுவே. பொன் அனைத்துப் படைக்கலங்களையும் மழுங்கச் செய்துவிடும் என்ற சொல் ஒன்று உண்டு. நான் எண்ணும் பொன்னுலகு அதுவே.”

“எவ்வண்ணம் இது நிகழ்ந்தது?” என்று குபேரர் கேட்டார். “எவ்வண்ணம் இது நிகழ்ந்தது? எப்போது இதை கையுதறிச் செல்லலாம் என்று பாண்டவர்கள் முடிவெடுத்தார்கள்?” மிருத்திகன் “அவர்கள் இங்கே வாழமுடியவில்லை. இந்நகரில் நிறைந்துள்ள நீத்தோர் அவர்களை ஒருகணமும் உளம் அமைய விடவில்லை. குறிப்பாக பீமனும் அர்ஜுனனும் ஒருகணம்கூட இந்நகரில் உளம் ஒட்டவே இல்லை. திசைவென்று பொருள் கொண்டுவந்து தங்கள் மூத்தவருக்கு அளித்த மறுகணமே இங்கிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டார்கள்” என்றான்.

“திசைப்பயணத்திற்கு முன்னரே அவர்கள் அவ்வுளநிலையில்தான் இருந்தனர். திசைப்பயணம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அது முடிந்ததும் மீண்டும் கிளம்பினர். நகுலனும் சகதேவனும்கூட இங்கிருந்து விடைகொள்ளும் உளநிலையை சென்றடைந்தார்கள். இந்நகரின்மீது ஆறாப் பற்றுடன் இதை தழுவிக்கொண்டிருந்தவர் யுதிஷ்டிரன் மட்டும்தான். ஏனெனில் இந்நகரின் ஒவ்வொரு இடத்தையும் எண்ணி எண்ணி சமைத்தவர் அவர். ஆகவே ஒவ்வொரு நாளும் இதைவிட்டு கிளம்புவதைப் பற்றிய கனவுடன் எழுந்து இந்நகர் பற்றிய பெருங்கவலையுடன் துயிலச்சென்றார் என்று சூதர்கள் கூறுகிறார்கள்” என்றான் மிருத்திகன்.

திசைப்பயணம் அவர்களுக்கு ஒரு விடுதலையாக அமைந்தது. அதற்கு வழிவகுத்தது அஸ்தினபுரியின் குருகுலத்தில் விண்நீத்தவர் அனைவருக்குமாக நீத்தார்கடன் அளிக்கும் பொருட்டு ஓராண்டு நிறைவின்போது நடந்த நீர்ச்சடங்கு. அன்று இந்நகர்க்குடிகள் விட்டுச்சென்றுகொண்டிருந்தனர். ஆகவே சிறிய அளவில், பிறர் அறியாமல் அதை செய்தனர். இங்குள்ள அந்தணர் குடிபெயர்ந்துவிட்டிருந்தமையால் புறநாட்டு அந்தணரைக்கொண்டு அது நிகழ்த்தப்பட்டது.

யுதிஷ்டிரன் நிமித்திகர்களையும் கணிகர்களையும் அழைத்து அதற்குரிய நாளை முடிவு செய்தார். குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாளிலிருந்து ஓர் ஆண்டு, அதே திதி, அதே இலக்கினத்தில் அந்நிகழ்வு வகுக்கப்பட்டது. நகர்துறந்து சென்றவர்கள் மீண்டும் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழையலாகாது. ஆகவே இந்நாட்டு எல்லைக்கு வெளியே கங்கைக்கரையில் அதற்கென இடம் பார்க்கப்பட்டது. அங்கு மூங்கில்களாலும் ஈச்சையோலைகளாலும் மரப்பட்டைகளாலும் பாடிவீடுகள் அமைக்கப்பட்டன.

அந்த பலிநகருக்கு இங்கிருந்து அரசகுடியினர் அனைவரும் தேர்களில் கிளம்பி சென்று சேர்ந்தார்கள். நாடெங்கிலுமிருந்து சூதர்களும் அந்தணர்களும் அங்கு சென்றனர். சடங்குகளை நிகழ்த்தும் நிமித்திகர்கள் முன்னரே அங்கு சென்று முற்சடங்குகளை செய்துகொண்டிருந்தார்கள். சிறுகச்சிறுக அது பெருநிகழ்வென ஆகியது. அந்நிகழ்வை இங்குளோர் அன்றி பிறர் அறியவில்லை. சூதர்பாடல்களினூடகவே இன்று அது நினைவுகூரப்படுகிறது. ஆகவே மெய்யும் கற்பனையும் கலந்து கதையாகிவிட்டிருக்கிறது.

இந்நகரிலிருந்து நெடுங்காலத்திற்கு முன் மறைந்த பிதாமகர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் அன்றுதான் அங்கே வந்தார். நான் அவரை பார்த்தேன், ஆனால் அவர் கிருஷ்ண துவைபாயனரா என்று என்னால் கூற முடியவில்லை. கிருஷ்ண துவைபாயனர் முதியவர்களுக்கும் முதியவர். அன்று வந்தவர் கிருஷ்ண துவைபாயனரின் குருமரபின் ஒரு மாணவராக இருக்கலாம். ஆனால் கிருஷ்ண துவைபாயனர் என்றே அவருக்கு அனைத்து முறைமைகளும் செய்யப்பட்டன. அவர் நூற்றி ஐம்பது அகவைக்குமேல் கடந்தவர் என்றார்கள். அத்தனை நெடுங்காலம் மானுடர் வாழ இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நோக்குக்கு எண்பது அகவை ஆனவர் போலத்தான் தோன்றினார்.

நெடுங்காலம் முன்பு, திருதராஷ்டிரரும் பாண்டுவும் மைந்தர்களாக இருக்கையில் இந்நகர்விட்டுச் சென்றவர் வியாசர். அன்று முதல் இங்கு எவ்வண்ணமோ அவர் இருந்துகொண்டிருக்கிறார் என்று பேச்சு இருந்தது. சூதர்கதைகளில் அவரே இங்கு வந்து ஒவ்வொன்றையும் நிகழ்த்தினார் என்று சொல்லப்படுவதுண்டு. பாண்டவர் உளங்கலங்கி நின்றிருக்கையில் எல்லாம் அவர் தோன்றி வழிகாட்டி நெறியுரைத்தார். எங்கிருந்தோ அவருடைய சொல் என கவிதைகள் வந்தபடியே இருந்தன. அவை நகரில் என்றும் பாடப்பட்டன.

போர் முடிந்த களத்திற்கு வியாசர் வந்துசென்றார் என்று கதைகள் கூறப்பட்டன. அங்கே அவர் ஊழ்கத்தில் அமர்ந்தார் என்றும் மாண்டவர்கள் அனைவரையும் தன் சொல்வல்லமையால் எழுப்பி அவர்களிடம் நடந்தவற்றை நேரில் கேட்டு தெரிந்துகொண்டார் என்றும் கூறினார்கள். அவர் அஸ்தினபுரிக்குள் அப்போது நுழையவில்லை. ஓராண்டு நிறைவின்போது அவர் நகர்நுழைந்தது இளவரசர் பரீக்ஷித்தை பார்ப்பதற்காகவே என்றனர். அவருடைய குருதிவழியில் எஞ்சிய சிறுவிதை அவர். அவரைத் தொட்டு வாழ்த்த அவர் விழைந்தார்.

அந்நாட்களில்தான் துவாரகையிலிருந்து பரீக்ஷித் அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். அதை குடிகளுக்கு அறிவிக்கவில்லை. குடித்தெய்வங்களின் ஆலயங்களில் நிகழ்ந்த பூசனைகளிலிருந்தே இளவரசர் நகர்வந்திருக்கக்கூடும் என்று குடிகள் உய்த்துணர்ந்தனர். ஆனால் சென்றுகொண்டிருந்த குடிகள் அதை செவிகொள்ளவில்லை, வந்துகொண்டிருந்தோர் அதை பொருட்படுத்தவுமில்லை.

உண்மையில் அவ்வண்ணம் ஒருவர் இங்கிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எவரும் அவரை பார்த்ததில்லை. அஸ்தினபுரியின் குருதிமரபில் எஞ்சும் ஒரே துளியான அவ் இளவரசன் முன்னரே இறந்துவிட்டார் என்று ஒரு சிலர் சொன்னார்கள். அவர் உடல் முத்துச்சிப்பியில் வைத்து துவாரகைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் அங்கே அவர் வளர்ந்த பிறகு திரும்ப கொண்டுவரப்பட்டார் என்றும் ஒரு சிலர் கூறினார்கள். மறைந்த இளவரசர் அபிமன்யுவின் மைந்தர் அல்ல அவர் என்றும் நிஷாத இளவரசிக்கு முன்னரே கரு இருந்தது என்றும் ஒரு பேச்சு இங்கே புழங்கியது. இன்று அதையெல்லாம் எண்ணுபவர்களே இங்கில்லை.

பரீக்ஷித்தின் உடலில் தோல் வளரவே இல்லை. உரிக்கப்பட்ட வெற்றுத்தசை போன்ற உடலுடன் அவர் வளர்ந்தார். அது அர்ஜுனன் மேல் நாகர் குலத்து சிறுவன் இளந்தட்சன் விடுத்த தீச்சொல்லின் விளைவு என்றனர். அவை அனைத்தும் கதைகள் என்றும் அவ்வண்ணம் ஒரு இளவரசனே இல்லை என்றும், இந்நாட்டின் மீது பிறர் படையெடுக்கலாகாது என்பதற்காக அது உருவாக்கப்பட்டது என்றும், திசைவென்று அர்ஜுனன் மீள்கையில் அவருடன் நாகநாட்டிலிருந்தோ மணிபூரகத்திலிருந்தோ மைந்தர்கள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு முடிசூட்டப்படும் என்றும் இன்னொரு செய்தி இருந்தது.

ஒருநாள் எவரும் அறியாமல் நகரில் நுழைந்து மஞ்சலில் அரண்மனைக்குச் சென்ற வியாசர் அரசரால் அழைத்துச் செல்லப்பட்டு அகத்தளத்தில் மருத்துவர்களால் வளர்க்கப்பட்ட பரீக்ஷித்தை பார்த்தார். அம்மைந்தன் கைக்குழவிபோல தோலிலாது வெளிறிய உடலுடன், விழிமங்கல் கொண்டு தென்பட்டான். செம்பட்டை தலைமயிருடன், வெட்டுக்கிளியென நடுங்கும் உடலுடன் சிறு கலத்தில் ஊற்றப்பட்ட தேனுக்குள் கிடந்தான்.

“வியாசர் அவனை தன் கைகளால் தொட்டு “வளர்க!” என்று வாழ்த்துரைத்தார். அவர் விரல்கள் அப்போது நடுங்கின. பெருவீரர்களின் கதைகளைச் சொன்ன நாவால் அவர் அம்மைந்தனை வாழ்த்துகையில் தெய்வங்கள் எண்ணியது என்ன? தெய்வங்கள் மானுடரைப்பற்றி ஏதேனும் எண்ணிக்கொள்வதுண்டா? ஆனால் அதன் பின்னரே அக்குழவி வளர்ந்து மைந்தன் என்று ஆகியது என்கிறார்கள். அவர் அவ்வாழ்த்துக்குப் பின் நகரிலிருந்து கிளம்பி புறத்தே அமைக்கப்பட்டிருந்த வியாசவனத்திற்குச் சென்றார். அங்கே தங்கியிருந்தார். அங்கிருந்தே பலிநகருக்கு வந்துசேர்ந்தார்” என்றான் மிருத்திகன்.

முதலாவிண் - 5

உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும் என்றும், வணிகத்திற்காக அன்றி பிற எதற்காகவும் அங்கு செல்லலாகாது என்றும், என் மூதாதையர் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.

ஏனென்றால் விழவுக்களியாட்டுகள் உழைக்கும் மக்களுக்குரியவை. உழைப்பிலிருந்து அவர்கள் ஓய்வு பெறுவதற்குரியவை. அவர்கள் ஈட்டும் செல்வம் சிறிது. ஆகவே அவர்களால் களியாட்டை ஓரளவுக்குமேல் எடுத்து மகிழவும் இயலாது. ஆனால் களியாட்டுக்குச் செல்லும் வணிகன் தன் செல்வம் அனைத்தையும் இழந்துவிடக்கூடும். அவன் உள்ளத்தில் தன் வாழ்வு வீணானதென்றும் களியாட்டொன்றே வாழ்வில் உண்மையானதென்றும் எண்ணம் விழுந்துவிட்டால் அவன் பின் பெண்ணிலும் சூதிலும் மதுவிலும் தன் முழுச் செல்வத்தையும் இழப்பான்.

களியாட்டு நிகழும் இடங்களில் இறங்கி நின்றிருக்கும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் கின்னரர்களும் பல்வேறு தேவர்களும் தங்கள் இரை என உரிய மானுடரை கொள்கிறார்கள். தேன் இருக்கும் மலரை வண்டுகள் அறிவதுபோல் செல்வம் இருக்கும் மானுடரை அத்தேவர்கள் அறிகிறார்கள். அவன் உள்ளத்தில் விழைவை எழுப்புகிறார்கள். குன்றாத நிறைவின்மையை செலுத்திவிடுகிறார்கள். ‘இங்கில்லை, எங்கோ அனைத்தும் உள்ளது கிளம்புக!’ என்ற ஒற்றை எண்ணம் மட்டுமே அவனில் எஞ்சியிருக்கச் செய்கிறார்கள். பின் அவன் வாழ்வதில்லை.

ஆயினும் அவ்விழவுக்கு நான் சென்றேன். ஏனெனில் அரண்மனையிலிருந்து எனக்கு ஆணை வந்தது. அந்நிகழ்வுக்குரிய அனைத்தையும் ஒருக்கிக்கொண்டிருந்தனர். கான்வாழ்வுக்குப்பின் யுதிஷ்டிரன் நகர்புகுந்து சில நாட்களே ஆகியிருந்தன. அவர் இளையோர் வெவ்வேறு இடங்களில் அஸ்தினபுரியின் எல்லைகளை உறுதிசெய்தும், படைகளை ஒருங்கமைத்தும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அரண்மனையில் பழையவர்கள் சென்று புதியவர்கள் பழகாமல் குழப்பம் நிலவியது. என் உதவியை அமைச்சர் சுரேசர் கேட்டார்.

தேவைப்படும் எல்லா பொருட்களையும் பலிநகருக்கு கொண்டுவரவேண்டும் என்றும், அத்துடன் பாண்டவர்கள் கௌரவர்கள் என இரு தரப்பிலிருந்தும் விண்புகாது எஞ்சிய அனைத்து அரசியரையும் அங்கு அழைத்து வரவேண்டும் என்றும் எனக்கு கூறப்பட்டது. போருக்குப் பின் அஸ்தினபுரிக்கும் கௌரவர்களின் அரசியருக்குமான தொடர்புகள் முற்றாக அறுந்துவிட்டிருந்தன. மச்சர்கள், நிஷாதர்கள், அசுரர்கள் என புறக்குடி அரசிகளில் ஏராளமானவர்கள் மறுமணம் செய்துகொண்டுவிட்டிருந்தனர். சிறுகுடி ஷத்ரியர்களில் ஓராண்டு நிறைவுக்குப் பின் மறுமணம் செய்ய பலர் காத்திருந்தனர். மறுமணம் செய்யும் வழக்கமில்லாத குடிகளில் அரசியர் தங்கள் அரண்மனையின் இருளுக்குள் கைம்மை நோன்புக்குள் ஒடுங்கியிருந்தனர்.

கௌரவர்களின் அனைத்து நினைவுகளையுமே அஸ்தினபுரி முற்றாக இழந்துவிட்டிருந்தது. அந்நாடுகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் வணிகர்கள் மட்டுமே. ஆகவே அவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார்கள், எவருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று அரசி சம்வகைக்கு தெரிந்திருக்கவில்லை. அதன்பொருட்டே அச்செயல்களை ஒருங்கிணைக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். எனக்கு மொழிகள் தெரியும், எல்லா நாடுகளிலும் என் வணிகக்குழுவினர் இருந்தனர். அவர்களுடன் ஓலைத்தொடர்பிலும் இருந்தேன்.

அனைத்து அரசியரும் அங்கு கூடவேண்டும் என்பது எவருடைய ஆணை என்றே தெரியவில்லை. அது தென்னிலத்திலிருந்து வந்த ஏதோ நிமித்திகன் கூறியதென்று அறிந்தேன். அவ்வரசியர் எஞ்சும் நினைவறுத்து முழு நீர்க்கடன் முடித்து கங்கையிலிருந்து தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் சென்றால் அஸ்தினபுரிக்குள் உலவிக்கொண்டிருக்கும் அனைத்து நுண்ணுடலர்களும் விண்புகுவர் என்று அந்நிமித்திகன் கூறியிருந்தான். அன்று இந்நகரில் அவ்வண்ணம் நீத்தாரை அகற்றும்பொருட்டு நூறுநூறு சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. சுரேசர் அதை ஒருங்கிணைத்தார், அரண்மனையிலேயே பலருக்கும் அது தெரிந்திருக்கவில்லை.

அந்நிகழ்வுக்கென அனைத்து நாடுகளிலிருந்தும் பலிப்பொருள்கள் அஸ்தினபுரிக்கு வந்தன. அவற்றை அமைச்சர் சுரேசரும் அவருடைய துணையமைச்சர்களும் ஒருங்கமைத்தனர். அவை சீர் நோக்கப்பட்டு, பயன் வகுக்கப்பட்டு, அடையாளமிட்டு எண்ணளிக்கப்பட்டு, வெவ்வேறு சிற்றமைச்சர்களின் பொறுப்பில் கங்கைக்கரைக்கு அனுப்பப்பட்டன. நான் எனது துணைவணிகர்களுடன் கௌரவக் குடியினரான இளவரசியர் அனைவரின் ஊர்களுக்கும் ஓலை அனுப்பி என் குடியினரான வணிகர்கள் வழியாக அந்த இளவரசியர் எங்கிருக்கிறார்கள், எவ்வாறு இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அவர்களில் கைம்மை நோன்பு நோற்பவர்களின் செய்திகளை மட்டும் சுரேசருக்கு அளித்தேன்.

அதன்படி அவர்கள் அனைவருக்கும் பரிசுப்பொருட்களுடன் அஸ்தினபுரியின் தூதர்கள் சென்று அழைப்பு விடுத்தனர். அவர்களில் ஷத்ரியர்கள் சிலர் தங்கள் அரசியரை அனுப்ப மறுத்துவிட்டனர். மச்சர்களில் சிலருக்கு அவ்வாறு அனுப்பும் மரபில்லை என்றிருந்தது.

காசிநாட்டிலிருந்து ஒற்றர்கள் திரும்பி வந்து பானுமதியும் அசலையும் அஸ்தினபுரிக்கு மீண்டுவர விரும்பவில்லை என்று கூறினார்கள். அவர்கள் அங்கேயே இளமைந்தன் ஒருவனை துரியோதனனின் பெயருக்குரியவனாக எடுத்து அவனைக்கொண்டு நீர்க்கடன்களை செய்தனர். “காசிநாடு துரியோதனனை ஒருபோதும் மறக்காது, வஞ்சத்தையும் இழக்காது. அதை யுதிஷ்டிரனிடம் சொல்” என்று அசலை கூறியதாக ஒற்றன் சொன்னான்.

எஞ்சியோர் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். அவர்கள் நகர்நுழைய வேண்டியதில்லை என்றும் கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருந்த படகுத்துறையிலிருந்து நேராக அந்த பலிநகருக்கு சென்றுவிடலாம் என்றும் கூறப்பட்டது. அவர்கள் எவருக்கும் அரசமுறைப்படியான வரவேற்போ பிற முகமனுரைகளோ தேவையில்லை என்று வகுத்தனர்.

ஒவ்வொருவராக வந்திறங்கிய அந்நிகழ்வு சோர்வை அளித்தது. படகுகளில் இருந்தும் தேர்களில் இருந்தும் இறங்கிய ஒவ்வொரு அரசியும் ஒவ்வொரு வகையில் உருமாறி வேறெங்கோ சென்று வேறெவரோ ஆகிவிட்டிருந்தனர். உடல்களினூடாகவே மானுடர் நெடுந்தொலைவு செல்லமுடியும். அங்கு கூடியிருந்த எவருக்கும் அவர்களை முன்னர் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிய நூல்களிலிருந்து அவர்களின் இளமையையும் அழகையும் அறிந்திருந்தார்கள். அரசகுடியின் ஏவலர்களும் மூத்த காவலர்களும் சிலர் அவர்களை கண்டிருந்தார்கள். அவர்களால் வந்திறங்கியவர்களை அடையாளம் காண முடியவில்லை.

பலர் ஓராண்டுக்குள் முதுகிழவிகள் என ஆகியிருந்தார்கள். உடல் வற்றி உலர்ந்து, முகமெங்கும் சுருக்கங்கள் படர்ந்து, கண்கள் மட்கி ஒளியிழந்திருக்க, சிறுநடுக்கத்துடன், சொல்லெழா அமைதியுடன் ஒவ்வொருவரும் ஏற்கெனவே இறந்தவர் போலிருந்தனர். இறந்தோர் இருப்பவரை எவ்வண்ணம் துயருறுத்த முடியும் என்பதற்கான விழிக்காட்சிகளாக அவர்கள் இலங்கினர். அவர்களைக் கண்ட ஒவ்வொருவரும் சொல்லிழந்தனர். அவர்களில் பலர் போரை சொல்லென்றே அறிந்தவர்கள், வந்து குடியேறியவர்கள். அவ்வரசியரினூடக அவர்கள் போர் என்பது உண்மையில் என்ன என்று உணர்ந்தனர்.

பலிநகரின் முகப்பிலிருந்த துறைமேடையில் நின்றிருந்தேன். பலிநகரில் இருந்து வந்து நின்ற தேர்கள் எனக்குப் பின்னால் அணிவகுத்தன. நான் படகிலிருந்து இறங்கிய அரசியர் ஒவ்வொருவரையும் பார்த்து வணங்கி தேரிலேற்றி அவர்கள் தங்கும் குடில்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். மெல்லிய குரலில், முகபாவனைகளினூடாகவே அவர்களிடம் பேசினேன். இவ்வுலகுடன் உரையாடுவதை அவர்களில் பலர் நிறுத்திவிட்டிருந்தனர். அவர்களை நோக்க நோக்க அந்திக்குள் நான் உளம் கலங்கி கைதளர்ந்துவிட்டேன். அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்றும் அது எனக்குரியதல்ல என்றும் எனக்குத் தோன்றியது. களியாட்டுகளில் நம்மிடம் அணையும் தெய்வம் அல்ல இது. இது பிறிதொன்று.

இது இங்குள்ள அனைத்தையும் பொருளற்றதாக்குகிறது. தனிமை கொள், துறந்து செல் என்று நமக்கு ஆணையிடும் தெய்வம் இது. இதிலிருந்து தப்பிவிடவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் என் அறைக்குச் சென்றபின் என் குடில் முழுக்க மலர்களையும் உணவுப்பொருட்களையும் பொன்னையும் நிரப்பிவைத்து நெடுநேரம் பார்த்துக்கொண்டு ஊழ்கத்தில் அமர்ந்து என் உள்ளத்தில் மங்கலம் நிறைத்து அதன் பின்னரே துயில்கொண்டேன். ஆயினும் என் கனவுகளுக்குள் வெறித்த பார்வையும் வற்றிய உடலும் இறந்தவர்களின் முகபாவனையுமாக எழுந்து வந்துகொண்டே இருந்தனர் அப்பெண்டிர்.

அஸ்தினபுரியிலிருந்து விலகிச்சென்று அயலூர்களில் குடியேறியிருந்த ஷத்ரியகுடியின் கைம்பெண்கள் தங்கள் மைந்தருடன் வந்தனர். அவர்கள் அஸ்தினபுரிக்குள் நுழைவதில்லை என்று வஞ்சினம் கொண்டிருந்தமையால் கங்கையினூடாக நேராக பலிநகருக்கு வந்தனர். அஸ்தினபுரியின் கொடியோ அடையாளமோ இல்லாமல் காட்டில் கட்டப்பட்டிருந்த குடில்களில் அவர்கள் தங்கினர்.

மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் வந்து குடில்களை நிறைத்தனர். மூன்றாவது நாள் நான் குடில்முற்றத்தில் நின்றுகொண்டிருந்தபோது புரவியில் வந்த ஒற்றன் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் வந்துகொண்டிருப்பதாக சொன்னான். முதற்கணம் அது கிருஷ்ண துவைபாயனர் அல்ல, அவ்வடிவு கொண்டு வந்த பிறிதெவரோ ஒருவர் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் அனைத்து முனிவர்களுக்கும் அவர்களின் அழியாத் தொடரென மாணவர் நிரை இருந்தது. கிருஷ்ண துவைபாயனருக்கும் அவ்வண்ணம் ஒரு நிரை இருக்கும் என்று எண்ணினேன்.

ஏழு அந்தணர்களை மங்கலங்களுடன் வாயிலில் சென்று நிற்கச்சொன்னேன். வாழ்த்துரைக்க சேடியரையும் ஒருக்கினேன். நான் புத்தாடை அணிந்துகொண்டு முகப்புக்குச் சென்று நின்றேன். தேரில் வருபவர் எத்தனை அகவை நிறைந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை. நெடுநேரம் கடந்தும் தேர் வரவில்லை. “என்ன ஆயிற்று? படகுத்துறையிலிருந்து அரைநாழிகைக்குள் வந்துவிடலாமே?” என்று நான் கேட்டேன். “அவர் வருவது வியாசவனத்தில் இருந்து. அங்கு நேற்றே வந்துவிட்டார்” என்றார்கள். “அவ்வண்ணமென்றாலும் இத்தனை பொழுதாகாதே?” என்றேன்.

“இல்லை. நெடுந்தொலைவு வரும் தேரின் அசைவை அவர் உடல் தாங்காது. ஆகவே மெல்லவே வருகிறார்” என்றார்கள். “மஞ்சலிலா?” என்றேன். “இல்லை, அவர் நெடுந்தொலைவைக்கூட நடந்தே செல்ல பழகியவர். தன் மாணவர்களுடன் நடந்தே வருகிறார்” என்றான் காவலன். “நடந்தா?” என்று திகைத்தேன். “சீரான விரைவில் விட்டில்போல வந்துகொண்டே இருக்கிறார்” என்றான். “அவர் நூறாண்டு அகவை கடந்தவர் அல்லவா?” என்றேன். “ஆம், ஆனால் உடல் வலுவாகவே உள்ளது.”

சற்று நேரத்தில் கொம்பொலி எழுந்தது. வெண்கொடி ஒன்று தோன்றியது. அதை ஏந்திய புரவிவீரன் அணுகி வந்தான். அதைத் தொடர்ந்து ஒரு சிறுகுழு நடந்து வந்தது. முகப்பில் இரு மாணவர்களைத் தொடர்ந்து சற்றே வளைந்த மெல்லிய உடலுடன் நரைத்த தாடி தொங்கும் முதியவர் ஒருவர் வந்தார். நான் நோக்கிக்கொண்டிருந்தபோது மிக நெடுங்காலத்துக்கு முன்னாலிருந்து, சென்றுவிட்ட ஒரு யுகத்திலிருந்து அவர்கள் வந்துகொண்டே இருந்தனர். துவாபர யுகத்திலிருந்து கலியுகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார் வியாசர்.

அவர் அருகே வந்து விரைவு குறைந்ததும் அந்தணர் முன்னால் சென்று வேதமோதி கங்கை நீர் தெளித்து அவரை வரவேற்றனர். கணிகையரும் இசைச்சூதரும் மங்கல இசை முழங்கி வாழ்த்துரைத்து வரவேற்றனர். அவ்வண்ணம் அங்கே எவரும் வரவேற்கப்படவில்லை. வீரர்கள் “பிதாமகர் கிருஷ்ண துவைபாயனர் வாழ்க! சொல் நிலைகொண்ட முதல் வியாசன் வாழ்க! வெல்க குருகுலம்! வெல்க வேதப்பெருஞ்சொல்!” என்று வாழ்த்துரைத்தனர்.

நான் கைகூப்பி நின்றிருந்தேன். அவருக்கு இருபுறமும் அவருடைய மாணவர்கள் நடந்துவந்தனர். அவருடைய முதன்மை மாணவர்களும் உபவியாசர்களுமான வைசம்பாயனர், ஜைமினி, சுமந்து, பைலர் ஆகியோர் வரவில்லை. அவர் களைத்திருந்தாலும் இயல்பாகவே இருந்தார். ஆனால் அவர் அங்கிருப்பவர்களை, அச்சூழலை அறிந்தவர்போலத் தெரியவில்லை. அவர் உள்ளம் வேறெங்கோ இருப்பதாகத் தோன்றியது. அவர் எவரையும் பார்க்கவில்லை என்று விழிகள் காட்டியமையால் அவர் பித்தரோ என்ற எண்ணமும் எழுந்தது.

நான் அருகே சென்று வணங்கி “அஸ்தினபுரியின் பலிநகர் தங்கள் வருகையால் தூய்மை அடைகிறது, மூதாதையே. இங்கு அரசரும் பிறரும் வந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் அருள்கொள்ள விழைகிறார்கள்” என்றேன். அவர் எவ்வுணர்ச்சியும் இன்றி “வெல்க! நிறைவுறுக!” என்றார். அவர் தங்கும்பொருட்டு அப்பலிநகரத்தில் கிழக்காக ஒரு சிறுசோலையில் குடில்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு குடிலில் அவரும் அவர் மாணவர்களும் தங்கினர். அவருடன் வந்த ஏவலரும் பிறரும் பிற குடில்களில் தங்கினர்.

ஒவ்வொரு நாளும் மூவேளை அங்கு அனல் ஓம்பப்படும் என்றனர். அதற்குரிய அனைத்தையும் நான் ஒருங்கு செய்தேன். முதலில் அவர் வந்தது எனக்கு விந்தையாக இருந்தது. மைந்தர்கள், பெயர் மைந்தர்கள், குடிமைந்தர்கள் என பெருநிரையே களம்பட்ட பின்னர் அவ்வண்ணம் ஒருவர் மெய்யாகவே உயிருடன் இருக்க முடியுமென்பதும், அங்கு அவர்களின் நீர்க்கடனுக்காக அவர் வரமுடியும் என்பதும் திகைப்பூட்டியது. ஆனால் துயர் இன்பம் இரண்டுக்கும் அப்பாற்பட்டவராக, பிறிதொரு உலகிலிருந்து சற்றே திரைவிலக்கி எட்டிப்பார்ப்பவராக அவர் தோன்றினார்.

அன்று உச்சிப்பொழுதில் திருதராஷ்டிரரும் காந்தாரியும் படகில் வந்திறங்கினார்கள். அவர்கள் கங்கைக்கரை காடொன்றில் குடில் அமைத்து தங்கியிருந்தார்கள். அவர்களிடம் அந்த முழு நீர்க்கடன் குறித்து செய்திகள் கூறப்பட்டபோது அதன் தேவை என்ன என்று அவர்களுக்கு புரியவில்லை என்றார்கள். இருமுறையும் அந்தணர்கள் சென்று அவர்கள் வர ஒப்பவில்லை. பின்னர் சுரேசர் நேரில் சென்று விளக்கிய பின்னரே அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

சுரேசர் அவரிடம் “இக்காட்டில் பதினொரு மாதகாலம் தவம் செய்தும் உங்களுக்கு உயிர் நீக்கும் ஆணையை தெய்வங்கள் வழங்கவில்லை. உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லாமல் அவர்கள் தவிர்ப்பது ஏன் என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டபோது காந்தாரி திகைத்து கைகூப்பினார். “உங்கள் கடன் இங்கு எஞ்சியிருக்கிறது. ஒருவேளை இந்த ஆண்டுநிறைவில் அதை நீங்கள் தீர்க்கக்கூடும். அதன்பொருட்டே தெய்வங்கள் காத்திருக்கின்றன” என்றார். காந்தாரி உடனே சொல்லளித்துவிட்டார்.

அஸ்தினபுரியிலிருந்து சென்ற வீரர்கள் அவர்களை காட்டிலிருந்து கங்கையில் படகிலேற்றி அழைத்து வந்தனர். அவர்கள் இருவரும் அந்த ஒற்றைப்பாய் படகிலிருந்து இறங்கியபோது அங்கு வரவேற்கவோ வாழ்த்துரைக்கவோ எவரும் இருக்கவில்லை. பலிக்கடன் கொடுக்க வருபவர்களில் அரசமுடி இல்லாத எவருக்கும் எந்த முறையான வரவேற்பும் வேண்டியதில்லை என்பதே முன்னர் வகுக்கப்பட்டதாக இருந்தது. அதைக் கடந்து வியாசருக்கு மட்டுமே நான் அவ்வரவேற்பை அளித்தேன். அவர் சொல் மகுடம் அணிந்து காவியம் எனும் அரியணையில் அமர்ந்திருப்பவர் என்று எண்ணிக்கொண்டேன்.

அவ்வண்ணம் ஏன் எனக்குத் தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை. அதை ஆணையிட்ட பின்னர் சுரேசரிடம் என்ன சொல்வதென்று எண்ணி அவ்வரியை நான் கண்டடைந்தேன். எங்கோ எவரோ அதை சொல்லியிருந்தார்கள். ஆனால் அவ்வரியை அடைந்ததுமே நான் நிறைவுற்றேன். ‘நன்று, உகந்த ஒன்றை செய்துவிட்டேன்’ என்று எண்ணினேன். மகாவியாசரை நான் சந்தித்தது என் வாழ்வின் நிறைவு என்றே எண்ணுகிறேன்.

காந்தாரியும் திருதராஷ்டிரரும் சிறிய ஒற்றைப்புரவித் தேரில் பலிநகருக்குள் வந்தனர். திருதராஷ்டிரர் உடல் மெலிந்து காட்டு வாழ்வின் சுவடுகளுடன் இருப்பார் என்று நான் எண்ணினேன். மாறாக அவர் அதே பெருந்தோள்களும் விரிந்த கரிய பேருடலும் கொண்டிருந்தார். கரிய தசை திரண்ட கைகளை தேரில் இருபுறமும் விரித்து, கால் நீட்டி, தலையை சற்றே சரித்து ஓசைகளை செவிகொண்டு அமர்ந்திருந்தார்.

மாறாக காந்தாரி மிக மெலிந்து வெண்ணிற நிழலுருபோல தோன்றினார். அவர் அணிந்திருந்த மரவுரியும் நைந்திருந்தது. கன்னங்கள் குழிந்து உடல் வற்றி ஒரு சிறுமியைப்போல் தோன்றினார். நீலத்துணியால் கண்களை கட்டியிருந்தார். முன்பு அவர் வெண்ணிறப் பேருருவாக இருந்தார் என்று கேட்டிருந்தேன். எனில் அப்போது இருந்த உருவில் ஐந்தில் ஒரு மடங்குதான் இப்போது இருக்கிறார் என்று தோன்றியது. அவர்களை எதிர்கொண்டு, சொல்லின்றி வணங்கி, அவர்களுக்குரிய குடிலில் கொண்டு தங்க வைத்தேன்.

அன்று அந்தியில் விதுரரும் குந்தியும் காட்டிலிருந்து சிறுபடகில் ஒற்றை வீரன் ஒருவனால் அழைத்துவரப்பட்டனர். குந்தி எந்த மாற்றமும் இல்லாமல் கானுக்குச் சென்ற அதே வடிவில் அவ்வண்ணமே இருப்பதாக என் அருகே நின்ற முதிய வீரன் சொன்னார். விதுரர் நீண்ட தாடியும் தோளில் புரண்ட சடைமுடிகளுமாக உடல் வற்றி கூன்விழுந்து முதிய முனிவர் போலிருந்தார்.

ஒவ்வொருவராக வந்தணைந்துகொண்டிருந்தனர். அனைவரும் வந்துவிட்டார்கள் என்ற செய்தியை நான் அஸ்தினபுரிக்கு அனுப்பினேன். அங்கிருந்து முதலில் தேரில் சுரேசரும் அமைச்சர்களும் வந்தனர். தொடர்ந்து ஐந்து வெவ்வேறு தேர்களிலாக பாண்டவர்கள் வந்தனர். அவர்கள் இறுகிய முகம் கொண்டவர்களாக, எண்ணங்களில் தனித்தவர்களாக, துயர்கொண்ட அசைவுகளும் ஓசையற்ற சொற்களும் கொண்டவர்களாக இருந்தனர். வெவ்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் வந்தனர். யுதிஷ்டிரனுக்கு மட்டும் வேதியர் நீர்தெளித்து வேதமோதி வாழ்த்துரைத்தனர். வீரர் வாள்தாழ்த்தினர்.

தொடர்ந்து தன் தேரில் திரௌபதி வந்தார். பெரிய கொண்டை தோளில் சரிந்திருக்க, நெஞ்சில் கைகளைக் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். மூதன்னை போலிருந்தாலும் அவருடைய நிகர்நிலை கொண்ட தோள்களும், நிமிர்ந்த உடலும், ஒழுகுவது போன்ற நடையும் விந்தையான ஒரு தெய்வத்தன்மையை காட்டின. அவரை முன்னரே அவ்வப்போது ஓரிருமுறை பார்த்திருந்தாலும்கூட தொடர்ச்சியாக அவ்வண்ணம் பார்க்கையில் முதன்முறையாகக் காண்கிறேன் என்று எண்ணத் தோன்றியது.

இறுதியாக சம்வகையும் யுயுத்ஸுவும் தேரில் வந்தனர். சம்வகை பெருத்த பேருடலும் இறுகிய முகமும் எவரையும் நோக்காது அனைவரையும் அறிந்திருக்கும் விழிகளும் கொண்டிருந்தார். அரசியருக்கான உடலும் நடையும் அவர்கள் குலத்தால் வருவதல்ல, இயல்பால் வருவது என்று அப்போது அறிந்தேன். யுயுத்ஸு யுதிஷ்டிரனைப் போலவே கூன்விழுந்த உடலும் தணிந்த தலையும் ஐயுற்று அசைவுகொண்டிருந்த கண்களுமாக இருந்தார்.

அனைவரும் வந்திறங்கியபோது அந்திக்கான கொம்புகள் முழங்கின. அந்திப்பொழுதின் வேள்விச் சடங்குகள் அங்கே தொடங்கின. இளமைந்தன் அங்கு வரவில்லை. அவனை கொண்டுவரும் பொருட்டு ஒரு தனியான தேர் ஒருங்கிக்கொண்டிருப்பதாகவும் மறுநாள் புலரியில் அவன் அங்கு வந்து சேரும்படி பயணம் ஒருக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. உண்மையில் அந்நீர்க்கடனே பரீக்ஷித்தின் கையால் நீத்தோருக்கு அன்னம் அளிக்கும்பொருட்டும், குந்திக்கும் திருதராஷ்டிரருக்கும் காந்தாரிக்கும் விதுரருக்கும் மைந்தனை காட்டும் பொருட்டும்தான் அமைக்கப்பட்டிருந்தது என நான் நினைத்தேன்.

முதலாவிண் - 6

அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர் இருந்த பீடம் விடப்பட்டிருந்தது. அது அசைவில் நீர்க்கலத்தின் நான்கு மூலைகளிலும் முட்டிக்கொள்ளாமல் இருக்கும்பொருட்டு எல்லாத் திசைகளிலும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தோற்பட்டையாலான தொட்டில்களில், மூங்கில்கள் தொங்கவிடப்படும் பட்டுத்துணி மஞ்சல்களில் முதியவர்களை உடல் அலுப்பின்றி கொண்டு செல்வதை அதற்கு முன் பார்த்திருக்கிறேன். நீரில் மிதக்கும் ஒரு கலத்தை தேரில் அமைப்பதைப்பற்றி அதற்கு முன் எண்ணிப்பார்த்ததுகூட இல்லை. அந்த எண்ணம் வந்த சிற்பி எவரென்றே எண்ணி வியக்கத்தோன்றியது.

அந்தத் தேர் வந்து அருகணைந்து நிற்கும் வரை அது ஏதோ பெரிய பொருள் ஒன்றை கொண்டுவரும் சுமைத்தேர் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதை வரவேற்க சுரேசரும் பிற அமைச்சர்களும் பலிநகரின் முகப்புவாயிலிலேயே நின்றனர். வாழ்த்தொலிகள் எதுவும் எழவில்லை. அந்தக் கலத்திலிருந்து மிக மெதுவாக மிதக்கும் கலத்தை வெளியே எடுத்தார்கள். அப்போதுதான் அதில் என் முழங்கையைவிட சற்றே பெரிய மெலிந்த சிற்றுடல்கொண்ட சிறுவன் ஒருவன் மிதப்பதுபோல தேனில் கிடப்பதைப் பார்த்தேன். அவர் உடலில் தோலே இல்லை. ஆங்காங்கே சில இடங்களில் தோல் முளைத்து கறைபோல பரவியிருப்பதையே காண முடிந்தது. விரல்கள் கைகால்கள் எல்லாமே வெண்ணிறமாக தளிர்போல சுருண்டு கூம்பியிருந்தன.

சிறுவன் ஒருவனின் கை நகங்கள் அத்தனை சூம்பி, பாளைக்குள் இருந்து எடுக்கப்பட்ட தளிர் போலிருப்பதை அப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். கால் நகங்கள் நீண்டு சுருண்டு வளர்ந்திருந்தன. அந்தக் கலம் மீது மெல்லிய பட்டொன்றைப் போர்த்தி தேரிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவர் கொண்டுசெல்லப்பட்ட பிறகுதான் அவருக்கு ஆடை எதுவும் அணிவிக்கப்படவில்லை என்பதும், வெற்றுடலாகவே அத்தனை தொலைவு வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. நான் திகைத்து நின்றிருக்க என் அருகே நின்றிருந்த முதிய படைவீரர் “கதைகளில் எஞ்சும் அந்த நாகச்சிறுவன் இளந்தட்சன் இவ்வண்ணம்தான் தோலுரிந்து சிறுகுழவியாக இருந்தான் என்பார்கள்” என்றார். நான் அவரை திரும்பிப்பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றேன்.

எனக்குரிய சிறு குடிலை அடைந்து அன்றைய செய்திகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி ஓலைச்சுவடிகளில் எழுதி அடுக்கினேன். இயற்றவேண்டியவை, இயற்றியவை ஆக இரு சுவடிக்கட்டுகளையும் தனித்தனியாக இரு பெட்டிகளில் போட்டு மூடிவைத்தபோது மெல்ல உள்ளம் அடங்கிவிட்டிருந்தது. புலர்காற்றின் குளிரை உணர்ந்தபடி கைகளைக் கோத்து பீடத்தில் கண்மூடி அமர்ந்திருந்தேன். அப்போது முதற்புலரிக்கான சங்கொலி எழுந்தது. அதற்கெனக் காத்திருந்ததுபோல் பலிநகரெங்கும் ஓசைகள் முழங்கின. நான் எழுந்து என் மரவுரியையும் தாளிக்குழம்பு செப்பையும் எடுத்துக்கொண்டு விரைந்து சிற்றடிகளுடன் ஓடிச்சென்று கங்கையை அடைந்தேன்.

இருண்டு குளிர்ந்து மென்படலமாக ஆவி எழ இருளொளியுடன் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் கரை முழுக்க மக்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மரத்தாலான படிக்கட்டுகளினூடாக இறங்கிச் சென்று எண்ணாமல் முழுக்கிட்டு சிறுதாளிக் குழம்பை தேய்த்துக் குளித்து மரவுரியால் தலை துவட்டிகொண்டு வந்து ஆடைகளை அணிந்துகொண்டேன். தலைப்பாகையும் அணிகளும் அணிந்தபின் விரைந்த சிற்றடிகளுடன் அரசரின் அவைக்கு சென்றேன். தன் குடிலுக்கு வெளியே யுதிஷ்டிரன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். சுரேசர் நின்று ஏதோ அவருக்கு உரைத்துக்கொண்டிருந்தார். நான் அணுகி ஓசையின்றி தலை தாழ்த்தி வணங்கி அதற்கு அப்பால் நின்றேன்.

சுரேசர் பலிச்சடங்குகளுக்கான அனைத்து முறைமைகளும் தொடங்கிவிட்டதை யுதிஷ்டிரனுக்கு உரைத்தார். யுதிஷ்டிரன் நிகழட்டும் என்பதுபோல் கைகாட்டினார். அந்த அவையில் அர்ஜுனன் இல்லை என்பதை கண்டேன். பீமன் சற்று அப்பால் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறெங்கோ நோக்கி நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் மட்டுமே யுதிஷ்டிரனின் அருகே இருந்தனர். அவர்கள் எவரும் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. யுதிஷ்டிரன் இறுதியாக “மைந்தன் இறுதியாக வந்தால் போதும், மிகுதியாக அவனை விழிமுன் நிறுத்தவேண்டாம்” என்றார். “ஆம், வெயில் அளவாகவே படவேண்டும் என்பது மருத்துவர் கூற்று” என்றார் சுரேசர்.

நான் அங்கிருந்து விலகி கங்கைக்கரைக்கு சென்றேன். என் எண்ணங்கள் குழம்பியிருந்தன. ஈட்டுவது இதெல்லாமென்றால் எதன்பொருட்டு போரிடுகிறோம் என்ற எண்ணம் எழுந்தது. ஷத்ரியர்கள் அனைவரையும் போருக்குப் பின் அவ்வெண்ணம் பீடிக்கிறது. பசி கெட்டபின் வணிகன் அதை சென்றடைகிறான். மைந்தருக்கு நிலத்தை அளித்தபின் வேளான் அவ்வெண்ணத்தை கொள்கிறான். ஆனால் அவ்வெண்ணங்களால் எவரும் எதையும் துறப்பதில்லை. அது தன் பிடியை விட்டாலும் நாம் விட்டுவிடுவதில்லை. அடைதலுக்காக வாழ்நாளெல்லாம் போரிடுகிறோம். விடுதல் அதைவிட நூறுமடங்கு கடினமானது என அறிவதில்லை.

கங்கைக்கரையில் அந்தணர்கள் நிரைநிரையாக அமர்ந்து வேள்விக்குரிய சடங்குகளை தொடங்கிவிட்டிருந்தனர். இறந்தோருக்குரிய அன்னம் சமைப்பதற்குரிய சிற்றடுப்புகளும் மென்விறகுகளும் பசுங்கலங்களும் ஒருங்கியிருந்தன. ஏவலர்களும் காவலர்களும் சற்று தள்ளி அழைப்புக்கு அணுகும் ஆணையுடன் முனைப்புகொண்டு நின்றுகொண்டிருந்தனர். சுரேசர் ஒவ்வொன்றையும் முன்னரே உய்த்துணர்ந்து முழுமையாகவே ஒருக்கியிருந்தார். அன்று பலிச்சடங்கு என காகங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. சூழ்ந்திருந்த காட்டுக்குள் அவை துயிலெழுந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தன.

நான் திருதராஷ்டிரரை சந்திக்கும்பொருட்டு சென்றேன். அவருக்கு ஒருக்கப்பட்டிருந்த குடில் தெற்கு எல்லையில் அமைந்திருந்தது. அதன் முன் குருகுலத்தின் கொடியோ அவருக்கான அரசஅடையாளங்களோ எதுவும் இல்லை. வானப்பிரஸ்தம் சென்றவர்களுக்கு அடையாளங்கள் அளிக்கப்படுவதில்லை. நான் குடில்முன் சென்றபோது திருதராஷ்டிரர் வெளியே வந்து சிறு மூங்கில் பீடத்தில் அமர்ந்திருக்க அவருடைய ஏவலனாகிய சங்குலன் அவருடைய குழல்களை பின்னால் அள்ளி தோல்சரடொன்றால் கட்டிக்கொண்டிருந்தான். அவர் முகம் உணர்வற்றதுபோல இருந்தாலும் உதடுகள் ஏதோ சொற்களை மெல்வதுபோல் அசைந்துகொண்டிருந்தன. கைவிரல்களை முறுக்கி தளர்த்தி உடல் தசைகளை தளரவைத்து மெல்ல ததும்பிக்கொண்டிருந்தார்.

அவர் நிலையழிந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் அருகே சென்று தலைவணங்கி “நான் உத்கலத்து சௌரிய குடியினனும் பெருவணிகர் மாகேசரின் மைந்தனும் அஸ்தினபுரியில் வணிகம் செய்பவனுமாகிய மிருத்திகன். பெருவணிகன். இங்கு அனைத்தையும் ஒருக்கும் பொறுப்பிலிருப்பவன். அடிபணிகிறேன்” என்று கூறினேன். திருதராஷ்டிரர் சொல்லின்றி கையால் என்னை வாழ்த்தினார். சங்குலன் என்னிடம் “அரசர் எப்போது செல்லவேண்டும் என்று ஆணை?” என்றான். “அவ்வண்ணம் ஆணை ஒன்றில்லை. அரசருக்கு ஆணையிட இங்கு எவர்? அனைவரும் சென்று அமரவேண்டும் என்பதே சுரேசரின் கோரிக்கை” என்றேன்.

“அங்கே அனைத்தும் ஒருங்கிக்கொண்டிருக்கின்றன. அனைவரும் வந்தமர்ந்த பின்னர் பலிநிகழ்வு தொடங்கும். ஏனெனில் இங்கு மூப்பிளமையோ முறைமையோ பார்க்கப்படுவதில்லை” என்றேன். அவன் அவருடைய சடைக்கற்றைகளை கட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். திருதராஷ்டிரரின் தாடியிலும் சடைத்திரிகள் கலந்திருந்தன. அவருடைய குழல் காகச்சிறகென பளபளப்பு கொண்டிருந்ததை ஒரு காலத்தில் எந்தையுடன் இளையோனாக இந்நகருக்கு வந்தபோது பார்த்திருக்கிறேன். எவ்வண்ணம் அப்படி உயிரிழந்து மட்கிய வேர்கள்போல் சடைபெற்றது என்று வியந்துகொண்டேன். கூந்தல் ஓர் அடையாளம் போலும்.

உள்ளிருந்து விழியின்மை நடையில் தெரிய காந்தாரி வெளியே வந்தார். அவருடைய நீள்கூந்தலும் அதேபோல சடைபுரிகளாக மாறிவிட்டிருந்தது. அவரது கைகளில் நகங்கள் வளர்ந்து குருவிகளின் அலகுகள்போல் உள்நோக்கி சுருண்டிருந்தன. காந்தாரி திருதராஷ்டிரரின் அருகே அமர்ந்து மூச்சிரைக்க “இங்கே இளைய யாதவர் வருகிறாரா?” என்றார். நான் “இல்லை, அவர் எங்குளார் என்று எவருக்கும் தெரியவில்லை” என்று சொன்னேன். “ஆம், அவ்வாறு அறிந்தேன். அவர் இங்கே பணிமுடித்துவிட்டார்” என்று காந்தாரி கூறினார். பின்னர் ஒருகணம் கழித்து “குந்தி வந்திருக்கிறாளா?” என்றார். “ஆம், விதுரரும் குந்தியும் வந்து பிறிதொரு குடிலில் தங்கியிருக்கிறார்கள்” என்றேன்.

திருதராஷ்டிரர் திரும்பி “விதுரனை நான் ஒருமுறை பார்க்கவேண்டும்” என்றார். “அவர் பலிக்களத்திற்கு வருவார். பலிநிகழ்வுக்குப் பின் தாங்கள் இருவரும் சந்திக்கும்படி ஒருங்கிணைக்கிறோம்” என்று நான் சொன்னேன். “அவனிடம் சென்று சொல், அவன் பொருட்டு நான் விழிநீர் சிந்தினேன் என்று” என்று திருதராஷ்டிரர் கூறினார். நான் “ஆணை” என்றேன். “அவனுக்கு நிறைவு அமையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். என் துயரை எண்ணியே அவன் வருந்துவான்” என்றார் திருதராஷ்டிரர்.

நான் எழுந்து தலைவணங்கி சங்குலனிடம் தாழ்ந்த குரலில் “முடிந்த விரைவில் அரசரையும் அரசியையும் நீர்முகப்புக்கு கொண்டு வருக!” என்றேன். ”பெண்டிர் நீர்முகப்புக்கு வரும் வழக்கமுண்டா?” என்று அவன் மெதுவான குரலில் கேட்டான். “ஆம், இது சமஸ்தபலி என்றார்கள். அவர்கள் பலியிடவேண்டியதில்லை, ஆனால் நீர்முகப்புக்கு வரலாம்” என்று நான் கூறினேன். அவன் “ஆம்” என்றான்.

பின்னர் மீண்டும் பலிமுகப்புக்கு வந்தபோது அங்கே அமைச்சர்களும் ஏவலர்களும் பிறரும் கூடிக்கொண்டிருப்பதை கண்டேன். திருதராஷ்டிரர் மைந்தர்களின் விதவைகள் தங்கள் சேடியருடன் நிரையாக வந்து கங்கையின் மணல் கரைகளில் அமர்ந்தனர். அவர்கள் வெண்ணிற ஆடையோ இளங்கறுப்பு நிற ஆடையோ அணிந்திருந்தனர். அவற்றை தலைக்குமேல் வளைத்து முகத்தை மூடிக்கொண்டு சிறு சிறு குவியல்களென தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

ஒரு கணத்தில் அங்கு நின்று பார்க்கையில் என் நெஞ்சு விம்மி அடைத்தது. எத்தனை கைம்பெண்கள்! ஒவ்வொருவரும் வாழும் தனி நரகம். அவர்கள் வாழும் உலகம் எத்தகையது? அங்கே அன்பு என்பதும் பற்று என்பதும் எவ்வண்ணம் பொருள்படும்? அறமென்றும் கடமையென்றும் அவர்களுக்கு இவ்வுலகம் எதை உணர்த்தும்?

அப்போர் நெடுங்காலம் கடந்தது போலாகிவிட்டது. ஒன்றன்மேல் ஒன்றென காலம் அதன்மேல் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றையும் நகர்த்தி பின்னால் கொண்டு செல்கிறது அது. ஒவ்வொன்றுக்கும் நடைமுறை சார்ந்த எளிய விளக்கங்களை அளித்து மேலும் மேலும் பொருளின்மை கொள்ளச் செய்கிறது. காலம் மழுங்கடிக்காத எதுவும் இப்புவியில் இல்லை. பெருமலைகள் கூட கரைந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அங்கு நின்று பார்க்கையில் அத்துயர் அவ்வண்ணமே இறுகி காலத்தை அறியாத வைரக் கல்லென மாறிவிட்டிருப்பதை கண்டேன்.

எந்த அறிவிப்புமில்லாமல் தொலைவில் குந்தியும் விதுரரும் வருவதை கண்டேன். அங்கே எவரும் எவரையும் வரவேற்கலாகாது என்பதனால் பெரும்பாலானவர்கள் அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு வணக்கம்போல் சற்றே உடலசைவு காட்டினர். விதுரர் எவரையும் பார்க்காமல் இரு கைகளையும் நெஞ்சோடு கூப்பி தலைகுனிந்து நடந்து வந்தார். குந்திதேவி வெண்ணிற ஆடை அணிந்து அதை முற்றாக முகத்தின் மேல் இழுத்துவிட்டுக்கொண்டு சிற்றடிகளுடன் உடல் குறுக்கி வந்தார்.

இருவருமே மெலிந்து சிறுத்து சிறு பறவைகள் போலாகிவிட்டிருந்தனர். சிறகிலாத சிறுகாலெடுத்து வைத்து நடக்கும் பறவைகள்போல். அவர்களின் காலடிகள் மண்ணில் படுகின்றனவா என்றே ஐயமாக இருந்தது. காற்று சருகுகளைப்போல் அவர்களை தள்ளிக்கொண்டு வருவதாக பட்டது. சுரேசர் அவர்களை அணுகி அவர்கள் அமரவேண்டிய இடத்தை காட்டினார். அவர்கள் அமர்ந்து கொண்டனர். விதுரர் கங்கையை நோக்க குந்தி நிலம்நோக்கி அமர்ந்தார்.

பின்னர் யுதிஷ்டிரனும் சகதேவனும் நகுலனும் நடந்து வந்தனர். யுதிஷ்டிரன் தோளில் புரண்ட குழலுடன், கைகூப்பி தோள் குறுக்கி தலைகுனிந்து நடந்துவந்தார். நகுலனும் சகதேவனும் கூட நிலம் நோக்கியே நடந்துவந்தனர். அவர்களுக்குப் பின்னால் யுயுத்ஸுவும் சம்வகையும் நடந்துவந்தனர். எவரும் அரசஉடையோ அணிகளோ முத்திரைகளோ அணிந்திருக்கவில்லை. அவர்கள் வந்து சுற்றி அனைவரையும் தொழுத பின்னர் தங்களுக்கு விரிக்கப்பட்டிருந்த தர்ப்பைப்புல் பாய்மேல் அமர்ந்தனர்.

திரௌபதி தன் அணுக்கச்சேடியுடன் வந்து தனியாக மணற்பரப்பின்மேல் அமர்ந்தார். அங்குள்ள எவரையுமே அவர் உணர்ந்ததுபோல தெரியவில்லை. என்னிடம் முதிய அந்தணர் ஒருவர் “காசிமன்னரின் மகள்கள் வரவில்லையா?” என்றார். “இல்லை, அவர்கள் அங்கேயே நீர்க்கடன்கள் செய்வதாக சொல்லிவிட்டார்கள்” என்று நான் சொன்னேன். “ஆம், துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் நீர்க்கடன் செய்ய அவர்கள் ஒரு மைந்தனை எடுத்து வளர்க்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றார். நான் “ஆம்” என்றேன்.

யுதிஷ்டிரன் குந்திதேவியைப் பார்த்து ஏதேனும் உணர்ச்சியை அடைவார் என்று நான் எண்ணினேன். ஆனால் இயல்பாக ஒருமுறை குந்தியை பார்த்தபின் அவர் வெற்றுவிழிகளுடன் திரும்பிக்கொண்டார். அவருடன் வந்த நகுலனும் சகதேவனும்கூட எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அது ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. ஆனால் மீண்டும் குந்தியை பார்த்தபோது மைந்தரை குந்தி பார்த்ததாகவே தெரியவில்லை என்று தோன்றியது. குந்தியில் அவர்கள் உணர்வெதையும் உருவாக்கவில்லை என்பதே அவர்களிலும் எதிரொலிக்கிறது போலும். விதுரரும் அவர்களை பொருட்டென எண்ணவில்லை. முற்றிலும் அயலவர்களாக அவர்கள் அங்கிருந்தார்கள்.

நான் அர்ஜுனனும் பீமனும் தனித்தனியாக நடந்துவருவதை பார்த்தேன். அவர்களை குந்தி பார்க்கிறாரா, குந்தியை அவர்கள் எவ்வண்ணம் எதிர்கொள்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தொலைவிலேயே அவர்கள் குந்தியை பார்த்துவிட்டாலும்கூட முகத்தில் எந்த உணர்வும் எழவில்லை. அருகணைந்து அமைச்சர்கள் காட்டிய இடங்களில் அமர்ந்தபோதுகூட முற்றிலும் அயலவர்கள், ஒருவரோடொருவர் எந்த உறவும் இல்லாதவர்கள் என்றே இருந்தனர்.

உண்மையிலே அவ்வண்ணம்தானா? மானுடருக்கிடையே உறவென்று ஏதுமில்லையா? தெய்வங்கள் அறிந்த உண்மை அது. உறவென அறிந்ததும், அதிலிருந்து கிளைத்த விழைவுகளும், வெறுப்புகளும், அலைக்கழிவுகளும் நடுவே வந்து அவ்வண்ணமே சென்றவைதானா? அந்த இடம் அவ்வாறு நடந்துகொள்ளச் செய்கிறதா? அங்கே தலைக்குமேல் இருந்த காற்று பெரும்பாறையாக மாறிவிட்டதைப்போல் சாவு நின்றிருந்தது. அதன்முன் எதுவும் எப்பொருளும் கொள்வதில்லை.

நான் திருதராஷ்டிரரும் காந்தாரியும் வரும்போது அவர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று பார்க்க விரும்பினேன். விதுரரை திருதராஷ்டிரர் உணர்வுடன் உசாவியதை எண்ணிக்கொண்டபோது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து நெகிழக்கூடும், தழுவிக்கொள்ளக்கூடும், ஓரிரு அன்புச்சொற்களேனும் கூறிக்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்த்தேன். சாவின் முனையிலும் கடந்தெழும் ஓர் உறவேனும் இப்புவியில் எஞ்சியிருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

திருதராஷ்டிரர் காந்தாரியின் கைபற்றி சங்குலனால் தோள்பற்றி நடத்தப்பட்டு எடைமிக்க காலடிகளை எடுத்து வைத்து மணலில் மெதுவாக வருவதை பார்த்தேன். தலையை சற்றே சரித்து வந்தவர் அருகணைந்ததும் அவரிடம் சங்குலன் விதுரர் பற்றி கூறுவதை கண்டேன். அவர் தலை திருப்பி செவிகளால் பார்ப்பதுபோல விதுரர் இருந்த திசையை அறிந்தார். பின்னர் இயல்பாக திரும்பிக்கொண்டார்.

விதுரர் அவரை பார்த்தபோதும் அவர் உடலில் எந்த மெய்ப்பாடும் நிகழவில்லை. என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. விதுரர் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லையா, எப்படி அவரிடம் தெரிவிப்பது? நான் அவர் அருகே அணுகி தலைவணங்கி “அரசே, நான் பெருவணிகன் மிருத்திகன். தங்கள் இளையவர் விதுரர் அங்குள்ளார். தாங்கள் விழைந்தால் அருகணையச் செய்கிறேன்” என்றேன். வேண்டியதில்லை என்பதுபோல் திருதராஷ்டிரர் கையை அசைத்தார். நான் அதை எதிர்பார்த்திருந்தேன் எனினும் ஏமாற்றம் அடைந்தேன். தலைவணங்கி பின்னகர்ந்தேன்.

சடங்குகளை நிகழ்த்தி வைக்கும் அந்தணர் எழுவர் வந்து அறிவிக்க பலியளிப்போர் ஒவ்வொருவராகச் சென்று மணல்மேடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிறு அடுப்புகள் முன் அமர்ந்தனர். ஏவலர்கள் உதவ அனைவருக்கும் அனல் அளிக்கப்பட்டது. அடுப்புகளை பற்றவைத்து அதில் பசுங்கலம் வைத்து எள்ளுடன் அன்னம் சமைத்தனர். திருதராஷ்டிரரும் பாண்டவர்களும் இளமைந்தர்கள் பலரும் அதை செய்வதை மணல்மேல் அமர்ந்து குந்தியும் பிற அன்னையரும் நோக்கியிருந்தனர்.

நான் மணல்மேட்டில் நின்று நோக்கியபோது நூற்றுக்கணக்கான அடுப்புகள் மணல்மேட்டில் எரிவதை பார்த்தேன். புகை எழுந்து மென்மையான பெரிய இறகுபோல காற்றில் அலைந்தது. பின்னர் அது ஒரு தூண் என ஆகி விண்ணை தொட்டது. கங்கைக்காற்றில் கரைந்து அப்பகுதியெங்கும் எரிமணத்தை நிரப்பியது. காகங்கள் கரைந்தபடி வந்து மணற்பரப்புகள் மேல் அமர்ந்தும் எழுந்தும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. அந்த ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

அன்னம் சமைக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் கைகூப்பியபடி எழுந்து சென்று கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டனர். சடங்குகளை செய்விப்போர் அவர்கள் முன் அமர்ந்து தொன்மையான நுண்சொற்களைச் சொல்லி அவர்களின் கைகளில் தர்ப்பைப்புல்லால் கணையாழி அணிவித்தனர். அன்னத்தை இலையில் பரப்பி ஏழு உருளைகளாகப் பிரித்து அவற்றில் அருகம்புல் வைத்து, நீத்தோர் பெயர்களை உரைத்து வணங்கி எழுந்து, பின்நோக்காமல் நீரிலிறங்கி, மூழ்கி ஒழுகும் பெருக்கிலிட்டனர். நீர்ப்பெருக்கில் பல்லாயிரம் மீன்கள் எழுந்து துள்ளி அவ்வன்னத்தை உண்டன. மேலிருந்து பல்லாயிரம் கூழாங்கற்கள் நீரில் விழுந்துகொண்டிருப்பதைப்போல தோன்றியது. நீர் கலங்கி கலங்கி துள்ளிய மீன்கள் வெள்ளிக் கீற்றுகளென தெரிந்து மெல்ல அடங்கின.

அதன் பின்னரே இளவரசர் பரீக்ஷித் கங்கைக்கரைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் வந்த அந்தக் கலத்துடன் அப்படியே சுமந்து அவரை கொண்டுவந்தனர். கங்கைக்கரையில் மணலில் அக்கலத்தை இறக்கி அவரை பட்டுத்துணியால் உறையிடப்பட்ட கைகளால் பற்றி மேலே எடுத்தனர். மணற்பரப்பில் விரிக்கப்பட்ட இலைக்கு முன் அவரை அமரச்செய்தனர். மும்முறை அன்னத்தை அவர் தொட்டு வணங்கச்செய்து அவ்விலையுடன் எடுத்து நீரிலிட்டனர். நீர்த்துளிகள் சிலவற்றை மும்முறை அவர் தலையில் தெளித்துவிட்டு மீண்டும் கலத்திற்கே கொண்டுசென்றார்கள்.

குந்தி எழுந்து வரக்கூடும் என்று எண்ணினேன். அல்லது அவர் மைந்தனை கொண்டுவரச் சொல்லக்கூடும். ஆனால் அவர் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவில்லை. திருதராஷ்டிரரும் காந்தாரியும் அவரை அறியவில்லை. விதுரரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடம் ஏதோ ஒன்று நிகழும் என்று. ஏன் அவரிடம் அதை எதிர்பார்த்தேன் என்று எனக்கு புரிந்ததே இல்லை.

ஈர உடைகளுடன் ஒவ்வொருவராக மேலே வந்தனர். அனைவரும் அந்தப் பெருமணலில் அமர்ந்தனர். யுதிஷ்டிரன் எழுந்து கைகூப்பி முகவுரைகள் இன்றி “பிறிதொரு பெரும் சடங்கினூடாக செய்யவேண்டிய கடமை இது. அதை என் இளமைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைகையில் இங்கு முடிசூடி அமர்ந்திருப்பவர் இயற்றட்டும். இப்பொழுது அவன் இங்கு தன் மூத்தாருக்கு நீர்க்கடன் அளிக்கும் இத்தருணத்தில் அவையோர் முன் நின்றிருக்கவேண்டும் என்பதற்காக அழைத்து வந்தோம். அஸ்தினபுரியின் தொன்மையான குருதிவழியில் எஞ்சியிருக்கும் மைந்தன் அவன். இக்குடியினர் அனைவரின் வாழ்த்தும் தெய்வங்களின் அருளும் அவனை நீடுவாழச் செய்யட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அங்கிருந்தோர் வாழ்த்துரைத்தனர். நான் நெஞ்சு படபடக்க குந்தியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திருதராஷ்டிரர் உரக்க கனைத்தார். “என் மைந்தனை இங்கே கொண்டுவருக!” என்றார். கலத்துடன் மைந்தனை அவர் அருகே கொண்டுசென்றனர். அவர் கைநீட்ட சங்குலன் அக்கையைப் பிடித்து மைந்தன் மேல் வைத்தான். “நலம் பெறுக, மைந்தா! அன்னம் உன்னை வாழ்த்தட்டும். உன் உடல் பெருகுக! அரசு, மனையாட்டி, செல்வம், புகழ் என்னும் நான்கு சிறப்புகளும் அமைக! உன் குருதிவழி பெருகுக!” என்று அவர் எடைமிக்க குரலில் வாழ்த்தினார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்து சொட்டியது.

காந்தாரி “என் மடியில் படுக்க வையுங்கள்” என்றார். அவர் மடியில் ஒரு பட்டு விரிக்கப்பட்டு அதில் மைந்தனை படுக்கவைத்தனர். காந்தாரி தன் மெல்லிய கைகளால் மைந்தனை வருடினார். அவர் தலையில் கையை வைத்து வாழ்த்தினார். சுரேசர் குந்தியிடம் சென்று “மைந்தன் வந்துள்ளான்” என்றார். குந்தி தலைகுனிந்து நிலம் நோக்கி அமர்ந்திருந்தார். சுரேசர் சற்றுநேரம் காத்தபின் கொண்டு செல்க என்று கைகாட்டினார்.

பரீக்ஷித்தை மீண்டும் கலத்தில் இட்டு கொண்டுசென்றனர். “அஸ்தினபுரியின் இளவரசர் வெல்க! வெல்க குருகுலம்! வெல்க ஹஸ்தியின் குடி! வெல்க அமுதகலக்கொடி” என்று கூடியிருந்தவர்கள் வாழ்த்தினர்.

முதலாவிண் - 7

பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில் அமர்ந்தனர். ஏழு வகை கலவைச் சோறுகள் அன்று சமைக்கப்பட்டிருந்தன. ஷத்ரியர்களுக்கும் தொழிற்குடியினருக்கும் உரிய உணவு தனியாகவும், அந்தணருக்குரிய உணவு அவர்களாலேயே தனியாகவும் சமைக்கப்பட்டது. கைம்பெண்களுக்குரிய நோன்புணவு தனியாக அவர்களின் ஏவலர்களால் பிறிதொரு இடத்தில் சமைக்கப்பட்டது. அவர்கள் உண்பதற்குரிய இடமும் மறைவாகவே அமைக்கப்பட்டிருந்தது.

ஷத்ரியர்களுக்கு மூன்று வகை ஊன்உணவுகளும், நான்கு வகை காய்உணவுகளும் இருந்தன. அடுமனைகளிலிருந்து பெரிய மூங்கில் கூடைகளில் அன்னத்தை நிறைத்து மூங்கில் வைத்து காவடிகளாக்கி கொண்டுவந்து இறக்கிவைத்து மரக்குடுவைகளில் அள்ளி ஒவ்வொருவருக்கும் பாளைத்தொன்னைகளிலும் இலைத்தட்டுகளிலும் பரிமாறினர். அன்று காலையிலிருந்தே எவரும் உணவு உண்ணவில்லை என்பதனால் பலரும் ஆவலுடன் அதை வாங்கி உண்டனர். அமர்ந்தபோதிருந்த அமைதி அன்னம் வந்ததும் கலைந்தது. உண்ணும்போது மகிழ்ச்சிக்குரல்கள் எழுந்தன.

நான் உணவு முறையாக பரிமாறப்படுகிறதா என்று பார்த்தபடி நடந்தேன். அந்தணர் பலரும் உரக்க பேசிக்கொண்டிருந்தனர். ஒரு அந்தணர் இன்னொரு அந்தணரை சந்திக்கும்போது இயல்பாகவே ஒரு பூசல் தொடங்கிவிடுகிறது. பெரும்பாலும் அது நூல்களில் ஓரிரு சொற்களைச் சுற்றி மட்டுமே அமைந்திருக்கும். எது சரியான சொல்வடிவம், எது பிழையற்ற நூல் என்பது அவர்களால் ஒவ்வொருமுறையும் பேசப்பட்டது. அப்பூசலை அவர்களால் முடிக்க இயலாது. ஏனெனில் அப்படி ஒரு மாறாத நூல் இல்லை. அவர்கள் தங்கள் ஆணவங்களையும் கசப்புகளையும் அந்த நூலைச் சார்ந்துள்ள பூசல்களினூடாகவே தீர்த்துக்கொண்டனர். உணவின் முன் நூலை மறந்து அவர்கள் முகம் மலர்ந்து பூசலின்றி ஒன்றாயினர்.

அரசகுடியினர் வெவ்வேறு இடங்களில் தனித்திருந்தனர். விதுரரும் குந்தியும் மணல்மேட்டில் முற்றிலும் தனிமையில் இருப்பதை கண்டேன். விதுரர் கைகளை மடியில் வைத்து கங்கை நோக்கி அமர்ந்திருந்தார். குந்தி அருகே அமர்ந்திருந்தாலும் நெடுந்தொலைவில் என்றும் தோன்றினார். அவர்கள் ஒரு சொல்லும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்பதை பிறரும் உணரத்தொடங்கியிருந்தனர். பெரும்பாலும் விதுரர் கையசைவுகளால், முகபாவனைகளால் குந்தியிடம் தேவையானவற்றை சொன்னார். விதுரருக்குரிய எளிய பணிவிடைகளையெல்லாம் குந்தியே செய்தார்.

நான் குந்தி பாண்டவர்களை பார்க்கிறாரா என்று பார்த்தேன். ஒருமுறைகூட அவர் மைந்தரை ஏறிட்டுப் பார்க்கவில்லை என்றே தோன்றியது. பார்க்காமல் இருக்கும் பொருட்டு உடலையும் முகத்தையும் இறுக்கிக்கொள்ளவும் இல்லை. பலமுறை பீமனும் அர்ஜுனனும் குந்தியின் கண்களுக்கு பட்டனர். அவர்கள் அவரிடம் எந்த விளைவையும் உருவாக்கவில்லை. அவர்கள் முற்றிலும் அயலவர் என்றே அவருக்கு தோன்றினார்கள் என்பது விந்தையாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அதற்கு நான் பழகிக்கொண்டுமிருந்தேன்.

நான் இடையில் கைவைத்து நின்று நெடுநேரம் குந்திதேவியை நோக்கிக்கொண்டிருந்தேன். அது தனக்குத்தானோ பிறருக்கோ காட்டிக்கொள்ளும் நடிப்பல்ல. மெய்யாகவே மைந்தர் அவருக்கு ஒருபொருட்டே அல்ல என்று ஆகிவிட்டிருக்கிறார்கள் என்று உணருந்தோறும் சீற்றம்கொண்டேன். பின்பு ஏக்கம். பின்பு கசப்பு. அதனூடாக வெறுமை ஒன்றுக்கு சென்றுசேர்ந்தேன். இன்றும் அவ்வெறுமையை ஒரு பருப்பொருள் என அருகே உணர்கிறேன்.

பாண்டவர்கள் அன்னையிடம் சென்று உரையாடவில்லை. யுதிஷ்டிரன்கூட தன் அன்னையை நோக்கி செல்லவில்லை. அவர்கள் அங்கு முற்றிலும் அயலவர்போல, அச்சடங்குக்கென வந்திருக்கும் வேற்று நிலத்தவர் போலிருந்தார்கள். அங்கிருக்கும் எவரையுமே அவர்களுக்கு தெரியவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. பலமுறை உணவுக் காவடிகளுடன் அவ்வழியாக பீமன் சென்றார். அர்ஜுனன் ஒருமுறை கங்கை நீர் விளிம்பினூடாக வந்து குனிந்து நீரள்ளி முகம் கழுவி கடந்துசென்றார். யுதிஷ்டிரன் தம்பியருடன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து இயல்பாகத் திரும்பி அன்னையை பார்த்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எவரும் அவரை பார்க்கவில்லை.

நான் உணவுண்பவர்களை நோக்கி சென்றேன். அங்கே பலியிட வந்தவரும் பிறரும் உணவு உண்டுகொண்டிருப்பதை அகன்று நின்று பார்த்தபோது எழுந்த வியப்பு எளிதல்ல. அவர்கள் இரு வேளை உணவொழிந்திருந்தனர். ஆனால் உணவையே கண்டிராதவர்கள்போல, பிறிதொருமுறை உணவு கிடைக்காது என்பதுபோல, அவ்வுணவுக்காகவே பலநாட்கள் காத்திருந்தவர்கள்போல அள்ளி அள்ளி உண்டனர். பலருக்கு விக்கல் எடுத்தது. அருகிலிருந்தோர் நீர்க்குவளைகளை எடுத்துக்கொடுத்தனர். அன்னம் கொண்டுபோனவர்களை கைநீட்டி தட்டுகளில் போடக் கோரினார்கள். கைம்பெண்களும் துயருற்ற அன்னையரும்கூட உணவை வாரி வாரி உண்பதை பார்த்தேன்.

சற்று முன் எழுந்த கசப்பு எரிச்சலாக, சினமாக மாறியது. அவர்கள் மேல் அல்ல, என் மேல். உடலுருக்கொண்டு அங்கு நின்றிருப்பதன் மேலேயே கசப்பும் வெறுப்பும் கொண்டேன். ஆனால் கங்கைக்கரைக் காற்று என்னை உடலாறச் செய்தபோது உள்ளமும் ஆறியது. உண்மை, மானுடர் அப்படித்தான். நீர்க்கடனுக்குப் பின் கூட்டுணவு உண்ணவேண்டும் என்று ஏன் வகுத்தனர்? சாவின் முன் அமர்ந்து உண்பதில் ஒரு மீள்கை உள்ளது. ஓர் அறைகூவல் உள்ளது. மானுடர் இதை மட்டுமே செய்யமுடியும். இதைத்தான் செய்யவேண்டும். அங்கிருப்பவர்களில் பலர் அன்றிரவு உறுதியாக காமத்திலும் ஈடுபடுவார்கள். சாவுக்கு எதிராக நின்றிருப்பவை அவை இரண்டு மட்டுமே.

தனிமையில் நடந்து விலகிச்சென்றபோது காந்தாரியும் திருதராஷ்டிரரும் தனித்தமர்ந்திருப்பதை பார்த்தேன். அவர்கள் அருகே எவருமில்லை. காந்தாரி சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்ததிலிருந்து அவர்களை எவரும் அறியவில்லை என்று தோன்றியது. நான் ஓடி அருகே சென்றேன். விழி கட்டப்பட்டிருந்த காந்தாரி என் ஓசைகளுக்காகத் திரும்பி “யாரங்கே? யாரங்கே? பசித்திருக்கிறார், பசி பொறுக்காது ஓசையிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றார்.

திருதராஷ்டிரர் இரு கைகளாலும் மணலை ஓங்கி ஓங்கி அறைந்து தலையை சுழற்றியபடி உறுமிக்கொண்டிருந்தார். “இதோ! இதோ கொண்டுவருகிறேன்” என்று சொல்லி நான் ஓடினேன். அதற்குள் பீமன் பெரிய உணவுக்கூடை ஒன்றை இரு கைகளில் ஏந்தி ஓடிவருவதை கண்டேன். அக்கூடையிலிருந்த ஊனுணவை திருதராஷ்டிரர் அருகே வைத்து தன் பெரிய கையால் சோற்றை அள்ளி உருட்டி கவளத்தை அவர் கையில் அளித்தார். அவர் அதை வாங்கிய பின் “பீமா, நீயா?” என்றார். “ஆம் தந்தையே, தங்களுக்காக” என்றார் பீமன்.

“கொடு” என அவர் அதை வாங்கி பெரும்பசியுடன் உண்ணுவதை நான் பார்த்தேன். ஒருகணத்தில் அதுவரையில் இருந்த அனைத்து அலைக்கழிப்புகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்தும் விடுபட்டேன். என் உடலின் எல்லாத் தசைகளும் எளிதாயின. முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. தனித்து மெல்லடி வைத்து நடந்து பாண்டவர்கள் உணவுண்டுகொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றேன். என் அருகே வந்துகொண்டிருந்த ஏவலன் திரும்பி அவர்களை பார்த்த பின் “தன் நூறு மைந்தரைக் கொன்ற கையால்…” என்றான். “ஆம், பசி!” என்றேன்.

அவன் திரும்பிப் பார்த்துவிட்டு “பசிதான்!” என்றான். “வைஸ்வாநரன்! இப்புவியை ஆளும் மெய்யான தெய்வம்! இங்கு அறம், நெறி, அளி, அறிவு அனைத்தையும் ஆள்பவன்” என்று நான் சொன்னேன். அவன் மீண்டும் திரும்பிப் பார்த்துவிட்டு “ஆனால் இதில் வியப்பதற்கேதுமில்லை. அனைத்து இல்லங்களிலும் முதியவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்” என்றான். “அன்னத்திற்கு மேல் அனைத்தும் சூட்டப்படுகின்றன. காலத்தின் போக்கில் அன்னத்திலிருந்து அனைத்தும் உதிர்ந்துவிடுகின்றன. அன்னம் அன்னத்தை மட்டுமே அறியும்” என்று நான் சொன்னேன்.

உண்டாட்டு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. நான் கங்கைமணல்மேட்டை நோக்கி நடந்தேன். சுரேசர் என்னை அருகழைத்து “மகாவியாசர் இங்கு வருகிறார்” என்றார். அப்போதுதான் அவரை நான் நினைவுகூர்ந்தேன். “அவர் நீர்ப்பலி நோக்க வரவில்லையே?” என்றேன். “ஆம், அவர் மங்கலப்பணியில் இருப்பதனாலும் துறவு பூண்டிருப்பதனாலும் நீர்க்கடன் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் தன் மைந்தரையும் குடியினரையும் பார்க்க விழைந்தார். ஆகவே இங்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் சுரேசர்.

“இங்குள உளநிலை அவரை மகிழ்விக்குமா என்று தெரியவில்லை” என்று நான் சொன்னேன். “இன்று இங்கு பிதாமகர் என்று இருப்பவர் அவரே. அரசரும் அவர் மைந்தர்கள் அனைவரும் அவரிடம் நீடுவாழும் சொல் பெற்றால் இந்தச் சடங்கு இங்கு நிறைவுறும்” என்று சுரேசர் சொன்னார். “அவர் வந்தது இறையாணை என்றே தோன்றுகிறது. இனி இங்கல்லாது எங்கும் அவர் எவரையும் சந்திக்க இயலாது.”

“உணவுண்டு அனைவரும் ஒருங்கு கூடட்டும். கங்கைக்கரையில் உணவால் எச்சில்படாத பரப்பொன்றிருக்கிறது. அனைவரையும் அங்கு செல்லச் சொல்வோம்” என்று நான் சொன்னேன். “ஆம், அதுவே உகந்தது” என்றபின் சுரேசர் ஏவலரை அழைத்து அம்மணற்பரப்பில் இருக்கும் அனைத்து கற்களையும் முட்களையும் விலக்கி தூய்மைப்படுத்தும்படி ஆணையிட்டார். உண்டாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே வீரர்கள் அப்பகுதியை சீரமைத்தனர்.

அதற்குள் இரவு எழத்தொடங்கிவிட்டது. அன்று கருநிலவுநாள். கரிய வானில் விண்மீன்கள் தோன்றத்தொடங்கின. கங்கையின் நீர்ப்பரப்பு விண்ணின் மெல்லிய ஒளியை ஏற்று கருமையாக கொப்பளித்தது. அலைகளில் இருந்து எழுந்த ஒளி நீருக்கு மேல் காற்றுப் பரப்பையும் ததும்ப வைத்தது. நுண்ணிய சிற்றுயிர்கள் நீர்ப்பரப்பின்மேல் சுழன்று பறந்தன. கங்கையை பார்த்தபடி நின்றபோது அது ஒழுக்கொழிந்து நிலைகொண்டுவிட்டதுபோல தோன்றியது.

உண்டாட்டு முடிவை அறிவிக்கும் விதமாக கொம்பொலி எழுந்தது. நிமித்திகர் ஒருவர் உண்டு முடித்தவர் அனைவரும் பெருங்களத்தில் கூடவேண்டும் என்றும் அங்கு வியாச மாமுனிவர் வந்து அனைவருக்கும் வாழ்த்துரைக்கப் போகிறார் என்றும் கூறினார். “சொல்நிறைவு கொண்ட முனிவரான குருகுலத்தின் பிதாமகரிடம் சொல்பெற்று மீளும் நற்பேறு இங்கு அமைந்துள்ளது. இறையருள் கூடுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவர் அறிவித்தார்.

ஆனால் எவரிடமும் அவ்வறிவிப்பு உளஎழுச்சி எதையும் உருவாக்கவில்லை. எவரும் ஆவல்கூட கொள்ளவில்லை. அவர்கள் வியாசரை ஒரு தொல்கதைமானுடர் என்றே அறிந்திருந்தார்கள். உண்மையில் அவர் முதியவர் என்பதே பலர் உள்ளத்தில் பதியவில்லை. வசிட்டர், விஸ்வாமித்ரர்போல அவரும் வழிவழியென தொடரும் முனிவர் நிரையில் இன்றிருக்கும் ஒருவர் என அவர்கள் எண்ணியிருக்கலாம்.

ஒவ்வொருவராக எழுந்து மணற்பரப்பை நோக்கி சென்று அமரத்தொடங்கினர். அனைவரும் தோளோடு தோள் முட்டும் அளவுக்கு நெருங்கி அமர்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அமர்ந்திருந்தார்கள் என்று தோன்றியது. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் இன்னொருவருக்கு இடம் காட்டவோ, அமர்க என்று இன்முகம் காட்டவோ, முகமன் உரைக்கவோ இல்லை. முடுக்கப்பட்ட பாவைகளென அமைந்திருந்தன அவர்களின் அசைவுகள். உணவுண்கையில் அவர்களிடமிருந்த உயிர்த்தன்மை மறைந்து மீண்டும் நிழலுருக்களாக மாறிவிட்டிருந்தனர்.

சுரேசர் ஆணையிட விளக்குகளைப் பொருத்தி அப்பகுதியெங்கும் வைத்தனர். கங்கைக்காற்றில் அவை அணையாமலிருக்க தொன்னைகளால் அணைவைத்தனர். கங்கைவிளிம்பினூடாக நான் செல்கையில் அக்கோணத்தில் சுடர்களே தெரியவில்லை. செவ்வொளியில் முகங்களும் தோள்களும் மட்டும் தெரிந்தன.

யுதிஷ்டிரனும் நகுலனும் சகதேவனும் சென்று மணல்மேல் அமர்ந்தனர். பீமனும் அர்ஜுனனும் வந்தனர். அர்ஜுனன் அங்கு வந்து ஒருகணம் நோக்கியபின் விலகி சென்றுவிட்டார். குந்தியும் விதுரரும் வந்து அமர்ந்தனர். திருதராஷ்டிரர் உண்டு முடித்த நிறைவுடன் சற்றே உடல் தளர்ந்திருந்தார். காந்தாரியிடம் மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவர் துயில்கொள்ள விரும்புகிறார் என்பது தெரிந்தது.

சற்று அப்பால் கொம்பொலி கேட்டது. வியாசர் அவருடைய மெலிந்த சிறு கால்களால் மணலை மிதித்து சுண்டுப்புழுபோல மெல்லிய தாவல்களாக நடந்து வந்தார். அவருடைய மாணவர்கள் சிலர் உடன் வந்தனர். சம்வகையும் யுயுத்ஸுவும் எதிர்கொண்டு சென்று அவரை அழைத்துவந்தனர். வியாசர் வந்ததும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கி “மூதாதை வாழ்க! வெல்க குருகுலம்! வெல்க அழியாச் சொல்!” என்று அவரை வாழ்த்தினர். ஆனால் அவ்வாழ்த்தே ஒரு முறைமைச்சொல் என உணர்ச்சியேதும் இன்றி ஒலித்தது. யுதிஷ்டிரன் அவருடைய மேலாடையைக் கலைத்த காற்றை நோக்கி முகம் சுளித்தார்.

மணலை நீவி தர்ப்பைப்புல் பாய் விரிக்கப்பட்ட பீடத்தில் வியாசரை வரவேற்று கொண்டுசென்று அமரவைத்தனர். சம்வகையும் யுயுத்ஸுவும் அவரை கால் தொட்டு வணங்க அவர் மிக மெல்லிய குரலில் வாழ்த்துரைத்தார். யுதிஷ்டிரனும் நகுலனும் சகதேவனும் வாழ்த்து பெற்றனர். ஒவ்வொருவருக்கும் அவர் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரே போன்ற அசைவுகளால் வாழ்த்து கூறினார். மெய்யாகவே அவர் அவர்களை உணர்கிறாரா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.

பீமன் வாழ்த்து பெற்றபின் வியாசரின் அருகிலேயே நின்றிருந்தார். என்னிடம் முதிய காவலர் “பிதாமகரின் அருகே நின்றிருக்கிறார் பீமசேனன். அது நன்றல்ல, விலகச் சொல்லுங்கள்” என்றார். “ஏன்?” என்று நான் கேட்டேன். “அவர் மைந்தர் நூற்றுவரைக் கொன்ற மைந்தர் அல்லவா அவர்?” என்றார். நான் ”தந்தை அவர் கையால் உணவுண்டார்” என்றேன். “ஆம், ஆனால் அது பசி” என்று அவர் சொன்னார். “இது பிறிதொன்று… நாமறியாதது” என்று நான் சொன்னேன்.

யுயுத்ஸு சுரேசரிடம் அர்ஜுனன் எங்கே என்று கேட்பதை நான் வாயசைவாக பார்த்தேன். நான் அருகே சென்று “அவர் விலகிச்சென்றுவிட்டார்” என்றேன். “எங்கு சென்றான்? அழைத்து வாருங்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “பிதாமகரின் வாழ்த்துக்களைப் பெறாமல் எங்கே சென்றான், அறிவிலி?” நான் திரும்பி அர்ஜுனனை தேடிச் செல்லப் போனேன். என்னை மறித்து “வேண்டாம்” என்று வியாசர் சொன்னார். “அவன் இங்குதான் இருப்பான்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

வியாசரின் முகத்தில் எவ்வுணர்ச்சியும் இல்லை. “ஐவரும் இணைந்து அமரவேண்டியதில்லை. அரிய பயணம் ஒன்றுக்கு நீங்கள் ஐவரும் ஒன்றிணைந்தால் போதும்” என்று அவர் கூறினார். அவர் உணர்வது என்ன என்பதை புரிந்துகொள்ளமுடியாமல் பாண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

குடிகள் அனைவரும் வரிசையாக வந்து அவரிடம் கால் தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றுச் சென்றனர். இளமைந்தரைக் கொண்டுவந்து அவரை வணங்கச்செய்தனர். அவர் கைகளைத் தூக்கி அவர்களின் தலையில் வைத்து வாழ்த்திக்கொண்டிருந்தார். ஊன்சிலை, மானுடத்தெய்வம். சொற்கள் இவ்வண்ணம் மானுடரை நெடுந்தொலைவுக்கு கொண்டுசெல்லமுடியுமா என்ன?

அனைவரும் சென்று அமர்ந்தபோது அதுவரை மெழுகென உயிரின்மை கொண்டிருருந்த அவருடைய முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று எழுந்தது. எதையோ எண்ணிக்கொள்பவர்போல. முதியவர் அப்போது சிறுகுழவியென ஆனார். “நான் இங்கு நிகழ்ந்த போர்வெற்றியைக் குறித்து ஒரு காவியம் எழுதியிருக்கிறேன். குடிமரபுகளில் தொடங்கி இப்போர்வெற்றி வரை வந்து நிறையும் பெருங்காவியம் அது. இங்கு நிகழ்ந்ததென்ன என்று வரும் தலைமுறைகள் அறியவேண்டும். பெற்றதும் இழந்ததும் பதிவென்று இருக்கவேண்டும்.”

ஆனால் எவரிடமும் எந்த ஆர்வமும் வெளிப்படவில்லை. “நான் ஒவ்வொன்றையும் எழுதிக்கொண்டே இருந்தேன். என் கண்ணெதிரே நிகழும் ஒன்றை எதிர்காலத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தேன்” என்று வியாசர் சொன்னார்.

“கேட்ட கதைகளிலிருந்தும் உய்த்தறிந்ததில் இருந்தும் தெய்வங்கள் அளித்ததிலிருந்தும் அழியாப் பெருநூல்களிலிருந்தும் நான் எடுத்துக் கோத்து இதை ஆக்கினேன். இங்கு சில பகுதிகளை படிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார். “எங்கள் நல்லூழ், பிதாமகரே” என்று யுதிஷ்டிரன் கூறினார். கூட்டமே மெல்ல பெருமூச்சுவிட்டதுபோல தோன்றியது.

வியாசர் கைகாட்ட அவருடைய மாணவர் ‘ஜய’ என்ற அப்பெருங்காப்பியத்தின் முதல் இரு பகுதிகளை படித்தார். காசியபப் பிரஜாபதியின் குருதியில் இருந்து பெருநாகங்கள் பெற்றெடுத்த தேவர்கள், அசுரர்கள், மானுடர்களின் குடிமரபைப் பற்றி. அவை ஒன்றுடன் ஒன்று ஊடியும் முயங்கியும் உருவாக்கிய ஆடலைப்பற்றி.

சலிப்பூட்டும் அந்தத் தொல்கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். இருள் சூழ்ந்து அப்பகுதியே வானில் மறைந்தது. அங்கே எரிந்த நெய்விளக்குகளின் சிறுசுடர்களில் முகங்கள் அனல்துண்டுகள்போல சிவப்பாகத் தெரிந்தன. அவை அனைத்திலும் ஒரே உணர்வே திகழ்ந்தது, சலிப்பு. காலம் உருவாக்கும் அறுதியான உணர்வு ஒன்றே, அச்சலிப்பு. அதை அகற்றத்தான் அத்தனை கதைகளும் உருவாக்கப்படுகின்றனவா?

அங்கிருந்து அகன்று சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அக்காவியத்தின் ஒரு வரியையேனும் கேட்க நான் விழையவில்லை. ஆனால் என் செவிகள் அதை கேட்டுக்கொண்டிருந்தன. என் உள்ளம் அதை நோக்கி குவிந்திருந்தது.

“இந்திரன் முதலான தேவர்கள் மெய்யறிந்தவரும் படைப்புச் செயலாற்றுபவரும் இனியவருமான பிரம்மனின் சொற்களைக் கேட்டு அதை தலைமேற்கொண்டனர். அவர்கள் ஒன்றாக அழிப்பவரும், பாற்கடலில் துயில்பவருமாகிய விஷ்ணுவை நாடிச் சென்றார்கள். ஆழியும் சங்கும் ஏந்தியவரும், கதைப்படை கொண்டவரும், மஞ்சளாடை அணிந்த கரியமேனியரும், தாமரை மலரென உந்தி சுழித்தவரும், அசுரர்களை அழிப்பவரும், விரிந்து அகன்ற விழிகளை உடையவரும், பிரம்மனுக்கு தந்தையும், தேவர்களுக்கு அரசனும், அளவிலா ஆற்றல்கொண்டவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மணிமார்பு உடையவரும், ஐம்புலன்களை ஆள்பவரும், முனிவர்களால் வணங்கப்படுபவருமான பரமபுருஷரை வணங்கினர். ‘புவியை தூய்மைசெய்ய தாங்கள் மண்நிகழவேண்டும், தலைவா’ என்று இந்திரன் தொழுது வேண்டிக்கொண்டான். தேவர்களும் ‘ஆம், அடிபணிகிறோம்’ என்றார்கள். கண் மலர்ந்து புன்னகைத்த விண்ணவன் ‘ஆம், அவ்வாறே ஆகுக!’ என்றார்.”

முதலாவிண் - 8

வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும் தேவதைக்குரிய எழிலுடலும் கொண்ட பெண்ணுருவை அடைந்த கங்காதேவி நீரிலிருந்து கரையேறி அவனுடைய வலத்தொடைமேல் வந்தமர்ந்தாள்.”

“தந்தையே!” என்று கரடு தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்த திருதராஷ்டிரர் “எனக்குப் புரியவில்லை, தந்தையே. என் அறிவின்மையை நீங்கள் பொறுத்தருள வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையை தாங்கள் ஏன் எழுதவேண்டும்? உங்கள் குருதியில் பிறந்த குழந்தைகள் விழைவு-பகை-வஞ்சங்களால் பூசலிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை?” என்றார்.

அத்தனைபேர் உள்ளத்திலும் எழுந்த வினா அது என்பதை, முகங்களில் தெரிந்த உயிரசைவிலிருந்து நான் அறிந்தேன். வியாசர் பெருமூச்சுவிட்டார். “இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பல மாதங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. என்னால் எங்கும் அமரமுடியவில்லை. எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதை கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுடகுலத்தின் நினைவில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன்? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா?”

வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். “கங்கையை நோக்குக! பெருங்காப்பியம் என்பது கங்கைபோல. அது இமையமலைமுடிகளில் ஏன் உருவாகிறது? அங்கே காலமில்லாது உறைந்த வெண்பனி அடுக்குகளில் எங்கோ ஒரு சிறு நிலைகுலைவு உருவாகிறது. ஒரு விரிசல் எழுகிறது. உடைவு என ஆகி சரிவென விழுந்து ஊற்றென உருகி வழிகிறது. துணையாறுகளும் சிற்றாறுகளும் பல்லாயிரம் ஓடைகளும் கலந்து பெரும்பெருக்காக மாறி கடலில் கலக்கிறது. கடலை மலை அறியும் வழி அது. கடல் மலையை பெற்றுக்கொள்வதும் கூட.”

வியாசர் தனக்குள் உலவத் தொடங்கிவிட்டிருந்தார். “நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக் காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒருபோது வியப்புடனும், மறுபோது எக்களிப்புடனும், பிறிதொருபோது செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நிற்கிறேன். கங்கை மீது காற்று பரவும்போது தோன்றும், அனைத்துமறிந்த கை ஒன்று நீர்ச்சுவடி மீது எழுதிச் செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிகள். மறுகணம் தோன்றும், காவியம் கங்கைபோல என்றும் மாறாத பொருளாழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருப்பதாக. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளை கணம்தோறும் எழுதிக்கொண்டிருக்கின்றன. நீர்மேல் எழுத்து. ஆம், நீர்மேல் எழுத்து!”

“ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும். நீரின் பெருவெளி அறியும் சொற்களின் முடிவிலியை.” வியாசர் மீண்டும் தன் மெளனத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அந்தச் சொல்லின்மையில் ஊடுருவி எழுந்து “பிதாமகரே, தங்கள் காவியத்தில் அறம் மறம் என்னும் பாகுபாட்டுக்கு என்ன அளவையை கொண்டுள்ளீர்கள்?” என்றார். வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல ஒரு கணம் தயங்கி “மானுடரின் வாழ்வறிவைத்தான்” என்றார்.

“என்ன அறமும் மறமும்!” என்று திருதராஷ்டிரர் தலையை அசைத்தார். “வெல்பவன் அறத்தோன், தோற்றவன் மறத்தோன். இதுதான் என்றும் உலகநெறி. இதுமட்டும்தான்.” சலிப்புடன் கையசைத்து “அத்தனை எளிதல்ல, மைந்தா” என்றார் வியாசர். திருதராஷ்டிரர் “போதும், தந்தையே. சொற்களால் என் செவி நிறைந்துவிட்டது. என் மைந்தன் தொடை உடைந்து கிடந்தான்… என் மைந்தர்கள் களம்பட்டனர். அது ஒன்றே மெய். நான் எத்தனை தவம் செய்தாலும், எத்தனை முதிர்ந்து ஒடுங்கினாலும் துளியும் குன்றாத மெய் அது” என்று கூவினார்.

பீமன் உடலில் ஓர் அசைவு எழுந்தது. யுதிஷ்டிரனின் கண்கள் அவரை தொட்டு மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை இருந்தது. பீமன் உரக்க “ஆம், தந்தையே! நான்தான் உமது மகனை கொன்றவன். தீச்சொல்லிடுக என்னை!” என்றார். திருதராஷ்டிரர் வாழ்த்துவதுபோல வலக்கையை தூக்கி காட்டினார்.

“நான் அறத்தின் முடிவிலா வழிச்சிக்கல்களையே இக்காவியத்தில் பேசுகிறேன்” என்றார் வியாசர். அப்பால் நின்ற அர்ஜுனன். “அறமா? இங்கு நடந்தது ஒரு தற்கொலை! ஆணவத்தாலும் பொறாமையாலும் ஒரு குலம் தன்னைத்தானே கொன்றுகொண்டது. பிணத்துக்கு அணி செய்ய முயலவேண்டாம், பிதாமகரே” என்றார்.

வியாசர் அதை கேளாதவர்போல “எனது காவியம் வெற்றியை பாடுகிறது என்பது உண்மை. அதற்குப் பின்னால் உள்ள தோல்விகளையும், சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள பெருமைகளை பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும், வஞ்சத்தின் ஊற்றுமுனையாகிய அன்பையும் சொல்கிறது. ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வையே என் காவியம் கூறுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பெருக்கைப் பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பெருக்கை வழிநடத்துவது விண்பேரறம். அப்பேரறத்தின் காட்சி இங்குள்ள வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே” என்றார்.

“இனி என்ன பயன் அதனால்?” என்றார் அர்ஜுனன். “கைம்பெண்களுக்கும் தந்தையில்லா மைந்தருக்கும் எவருமில்லா பெற்றோர்களுக்கும் உங்கள் அறம் என்ன வழிகாட்டப் போகிறது?” வியாசர் “முடிந்தது குருக்ஷேத்ரப் போர் மட்டுமே. அறத்துக்கும் மறத்திற்குமான போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை. நாம் கற்றதை நம் வழித்தோன்றல்களுக்கு பயன்படும்படி நாம் அளிக்க வேண்டாமா?” என்றார்.

அர்ஜுனன் சிரித்தார். “பிதாமகரே, இந்த வயதிலும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பது வியப்பு தருகிறது. நான் அறிந்த மெய்மை ஒன்றே ஒன்றுதான். மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு. இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அடையும் ஒவ்வொன்றிற்கும் நாம் ஆயிரம் மடங்கு விலை தருகிறோம். நாம் தரும் ஒவ்வொன்றுக்கும் இளமையில் ஆயிரம் பங்கு எடை. நாமோ இளமையைத் தந்து பட்டறிவுகளை பெற்றுக்கொள்கிறோம். காலம் முடுகி அணையத் தொடங்குகையில், தொலைவில், கனவுவெளியென இளமை ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது. ஏக்கம் மிகுந்த கண்ணீருடன் இந்தக் கரையில் நின்றபடி நாம் புண்களையும், உதவாத நாணயங்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்…”

“பிதாமகரே” என்று யுதிஷ்டிரன் தணிந்த, உறுதியான குரலில் கூறினார். “தாங்கள் காவியத்தை படியுங்கள். என் வழியாக பேரறம் ஆடிய விளையாட்டு என்னவென்று கூறுங்கள்…” வியாசர் பெருமூச்சுடன் தொடரும்படி கைகாட்ட மாணவர் படிக்கத் தொடங்கினார். சூழ்ந்திருந்த அனைவரும் விழிகளில் ஈரப்படலம் தெரிய உணர்வுகளில் முகத்தசைகள் நெளிய அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

சொல்லொழுக்கின் நடுவே மெல்லிய குரலில் ஒரு முதுமகள் “பிதாமகரே” என்றாள். வியாசர் “யார்?” என்றார். “என் மைந்தரை நான் பார்க்கவியலுமா?” என்றாள் அவள். “அவர்கள் விண்புகுந்துவிட்டனர், மகளே” என்றார் வியாசர். அக்கணம் ஒரு பெண் எழுந்து ஓடிவந்து தன் நெஞ்சில் அறைந்துகொண்டு வீறிட்டாள். “என் குழந்தைகள்! அவர்களை நான் பார்க்கவேண்டும். நான் இறந்த பிறகாவது அவர்களை பார்க்கவேண்டும்.” கதறியபடி அவள் தரையில் சரிந்தாள். மார்பில், வெறியுடன் ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதாள்.

விரிந்த தலையுடன் பெண்கள் நாலாபக்கமிருந்தும் எழுந்து வியாசரை நோக்கி ஓடிவந்தனர். அவர்கள் அலறினார்கள். “என் மைந்தரை காட்டுக, பிதாமகரே! உங்கள் சொல்தவத்தால் என் மைந்தரை காட்டுக!” என்று அலறினார்கள். வியாசர் “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?” என்றார். முதிய பெண் ஓடிவந்து வியாசரின் காலில் விழுந்தாள். காதுகளும் மார்புகளும் நீண்டு தொங்கின. வெண்ணிறத் தலைமயிர் விரிந்து, சுருக்கம் பரவிய வெற்று முதுகில் ஈரமாக ஒட்டியிருந்தது.

“மாமுனிவரே, ஒன்பது பிள்ளைகளையும் பதினேழு பெயரர்களையும் பறிகொடுத்த பெரும்பாவி நான்! என் மைந்தரை காணமுடியும் என்று சூதர் சொன்னதை நம்பியே வந்தேன். எவ்வண்ணமோ என் குழந்தைகள் மீண்டு வந்துவிடுவார்கள் என்று நம்பினேன். ஏதோ ஒரு மாயம் நடக்கும் என்று எண்ணியிருந்தேன். தந்தையே, என் கனவை வீணடித்துவிடாதீர்கள். என்னை கைவிட்டுவிடாதீர்கள்” என்று அவள் கதறி அழுதாள். “எங்கள் குழந்தைகளை நாங்கள் பார்க்கவேண்டும், உத்தமரே!” என்று குரல்கள் வீறிட்டன. அழுகைகளும் புலம்பல்களும் நான்கு திசைகளிலிருந்தும் வந்து பெருகின.

“நான் என்ன செய்யமுடியும்? நான் வெறும் கவிஞன், தாயே!” என்றார் வியாசர் தளர்ந்த குரலில். “பிதாமகரே, நீர் அறிவீர். எங்கள் குழந்தைகள் எங்கே?” ஒரு பெண் கூவினாள். “அவர்கள் வீரருக்குரிய விண்ணுலகில் இருக்கிறார்கள். வீரர்களுக்குரிய களியாட்டுகளுடன், வீரர்களுக்குரிய பெருமைகளுடன்” என்றார் வியாசர். “நீங்கள் எப்படி கண்டீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டாள். “நான் கவிஞன். சொற்களை பருவடிவு விட்டு ஊழ்கவடிவம் கொள்ளவைக்கும் பேறு பெற்றவன். ஊழ்கவடிவாக அனைத்துலகங்களையும் தொட்டு விரியும் என் அகம். நான் கண்டேன், என்னை நம்புங்கள்.”

“பிதாமகரே!” என்று ஒரு கிழவி அலறினாள். “எங்கள் குழந்தைகளை எங்களுக்கு காட்டுங்கள். நீங்கள் கூறுவது உண்மையென்றால் காட்டுங்கள்! அறத்தின் மீது ஆணை!” வியாசர் அவளுக்கு மறுமொழி சொல்ல திரும்புவதற்குள் “காட்டுங்கள்! காட்டுங்கள்!” என்று ஓலமிட்டது நதிக்கரை. “ஒரு கணம் பிதாமகரே, கனிவு காட்டுங்கள். ஒரு கணம்” ஒரு பெண் கதறியழுதாள். வியாசர் மாறி மாறி பார்த்து பதைக்கும் கைகளால் ஏதோ சொல்ல முயல அவர்கள் நெஞ்சில் அறைந்து அலறிக்கூச்சலிட்டனர். மணலில் விழுந்து கைகளால் அறைந்துகொண்டு அழுதனர்.

கங்கையில் ஒரு மீன் துள்ளி விழுந்தது. அலைகள் கரிய வளையங்களாக பரவின. வியாசர் கைகளை தூக்கினார். “சரி, காட்டுகிறேன்! அவர்களைப் பார்ப்பது உங்களுக்கு உளஅமைதியைத் தருமா? தங்கள் புகழுலகில் அவர்கள் ஒளியுடன் இருப்பதைக் கண்டால் உங்கள் தீ அணையுமா?” என்றார். “ஒரு கணம் என் குழந்தையை பார்த்தால் போதும், பிதாமகரே! வேறு எதுவும் வேண்டாம்!” என்று ஒரு பெண் கதறினாள்.

நான் குந்தியை பார்த்தேன். அவர் அங்கிருப்பதாகத் தோன்றவில்லை. திரௌபதியும் எங்கோ அந்த உணர்வலைகளுக்கு அப்பாலெனத் திகழ்ந்தார். பாண்டவர்களின் முகங்களில் உணர்வுகள் கொந்தளித்தன. ஏக்கம், துயர், சீற்றம் என. யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பி நின்றார்.

வியாசர் கங்கையை நோக்கி திரும்பினார். அழுத்தமான குரலில் அவர் கூறிய சொற்களை நான் உதடசைவுகளைக்கொண்டே உணர்ந்தேன். “கங்கையே, நீ என் மூதாதை. என் சித்தம் உன் பெருக்கு. என் சொற்தவம் மெய்யானது எனில் நீ என் காவியமாகி விரிக! ஓம், அவ்வாறே ஆகுக!”

என் உள்ளம் கூர்கொண்டது. விழிகூர்ந்து கங்கையை பார்த்தேன். கங்கைமீது நிலவொளிபோல ஒரு துலக்கம் தோன்றியது. அது அலைகளாக விரிவடையத் தொடங்கியது. மெல்ல ஒளி கூடியபடியே வந்தது. ஒளிபெற்ற படிகவெளியாக அது ஆயிற்று. நீரின் பொன்னிற ஆழம் தெரிந்தது. அங்கு நெடுந்தொலைவில் நிலா ஒன்று சுடர்ந்தது. பளிங்கு மாளிகைகள் நிரம்பிய பெருநகரம் ஒன்று கனவுபோல தெரிந்தது. அது அஸ்தினபுரம் என்பதை நான் வியப்புடன் அறிந்தேன்.

தெருக்களில் பொற்பல்லக்குகள் நகர்ந்தன. புரவிகள் வெண்ணிற முகில்கள்போல ஓடின. அங்கிருந்து பொன்னொளி சுடரும் பாதை ஒன்று கிளம்பி மேலே வந்தது. அதன் வழியாக மெதுவாக நடந்து ஒருவர் வந்தார். ஒளிசிதறும் வைரமுடியும், மணிக்குண்டலங்களும் பொற்கவசமும் அணிந்திருந்தார். கையில் பொற்கதாயுதம். அது துரியோதனன் என்பதை நான் மார்பை அடைத்த வியப்புடன் அறிந்தேன்.

துரியோதனனின் முகம் பொலிவு நிரம்பியதாக இருந்தது. கண்களில் மகிழ்ச்சி சுடர அவர் நீர் மீது எழுந்து நின்றார். திருதராஷ்டிரர் உரத்த குரலில் “மகனே! துரியோதனா!” என்று வீறிட்டார். மதயானையின் பிளிறல் போலிருந்தது அது. அவருக்கு எப்படி தெரிகிறது அந்தக் காட்சி? இதெல்லாம் என் உளமயக்குதானா? காந்தாரி “மைந்தா! மைந்தா!” என்று கைகளை விரித்தார்.

கவசகுண்டலங்கள், செஞ்சூரியக்கதிர்கள் என ஒளிவிட கர்ணன் வந்து துரியோதனனின் அருகே நின்றார். துச்சாதனன் புன்னகை தவழும் இனிய முகத்துடன் எழுந்தார். சகுனியும், துரோணரும், பீஷ்மரும் வந்தனர். துர்முகனும் துர்மதனும் முகப்பில் வர இளைய கௌரவர்கள் வந்தனர். லட்சுமணனும் துருமசேனனும் அழைத்துவர கௌரவ மைந்தர்கள் வந்தனர். சாரிசாரியாக அவர்கள் வந்தபடியே இருந்தனர்.

கையில் பாசாயுதத்துடன் உயர்ந்த கரிய உடலை மெல்ல ஆட்டியவனாக யானைக்குட்டிபோல கடோத்கஜன் நடந்து வந்தான். அவன் மைந்தன் பார்பாரிகன் அருகே பிறிதொரு களிறு என நடந்துவந்தான். அபிமன்யுவும் பிரதிவிந்தியனும், சுதசோமனும், சதானீகனும், சுருதகீர்த்தியும், சுருதசேனனும் வந்தனர். நிர்மித்ரனும் யௌதேயனும் சர்வதனும் அரவானும் எழுந்து வந்தனர். கூட்டம் கூட்டமாக அலைகளில் இருந்து பாவைகள் என நெளிந்து நெளிந்து ஓருருவம் ஆயிரமெனப் பெருக அவர்கள் வந்தபடியே இருந்தனர்.

இமைத்தால்கூட அந்தக் காட்சி நழுவிவிடும் என்று பயந்தவன்போல பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த முதுமகள் திடீரென்று “மகனே!” என்று கூவியபடி நீரை நோக்கி ஓடினாள். எங்கும் வீறிட்ட அலறல்கள் வெடித்துப் பரவின. பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக நீரை நோக்கி ஓடினர். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று வியாசர் கூவினார். கூட்டம் கூட்டமாக பெண்கள் நீரில் விழுந்தனர். கங்கை நீர் ஆயிரம் வாய்களைப் பிளந்து அவர்களை விழுங்கியது.

“அர்ஜுனா! நிறுத்து அவர்களை. அர்ஜுனா!” என்ற வியாசரின் குரல் அங்கிருந்த கூச்சல்களில் மறைந்தது. உடல் தவிக்க முன்னும் பின்னும் ஆடியபடி வியாசர் கூவினார். கையில் காண்டீபத்துடன் கண்ணீர் வழிய அர்ஜுனன் வெறுமனே நின்றார். “அர்ஜுனா… அர்ஜுனா” என்று கைநீட்டி அலறினார் வியாசர். “அவர்கள் போகட்டும், பிதாமகரே. அவர்களுக்கு இனிமேலாவது அமைதி கிடைக்கட்டும்” என்றார் அர்ஜுனன்.

“இது என்ன அறிவின்மை! நில்லுங்கள் நில்லுங்கள்! போகாதீர்கள்!” வியாசர் கண்ணீருடன் கூவினார். மறுகணம் காட்சி அணைந்து, கங்கை இருண்டது. “அர்ஜுனா, அவர்கள் உன் குடிமக்கள். அவர்களைக் காப்பது உன் கடமை” என்று வியாசர் சொன்னார். “இல்லை, பிதாமகரே! அவர்கள் சாவின் குடிமக்கள். தங்கள் மைந்தர்களுடனும் கணவர்களுடனும் அவர்கள் சென்று சேரட்டும். பிதாமகரே, அபிமன்யுவையும் அரவானையும் பார்த்தபோது ஒரு கணம் என் கால்கள் தவித்தன. ஏன் நான் ஓடவில்லை என வியந்துகொள்கிறேன். உயிர்விழைவா? அல்ல, ஆணவம். எளிய பாமர மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகள்கூட இல்லாதவன் நான்.”

“பார்த்தா! உனக்குத் தெரியாது” என்றபடி வியாசர் சொன்னார். “நான் அறிவிலி! நான் அறிவிலி! பெரும் பிழை செய்துவிட்டேன்.” என்று விம்மினார். இரையுண்ட பாம்புபோல கங்கை அமைதியாக விரிந்து கிடந்தது. அதன் கருமையை நோக்கியபடி நான் கைகூப்பி நின்றிருந்தேன்.

“தந்தையே!” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் அங்கு தங்கள் குழந்தைகளுடன் வாழ்வதைவிட மேலானதா இங்கு நடமாடும் பிணங்களாக வாழ்வது? என்னை யாராவது பிடித்து அங்கு இட்டுச் சென்றிருக்கலாகாதா?” வியாசர் திரும்பி அவரிடம் “எப்படி சொல்வேன், குழந்தைகளே? நீங்கள் பார்த்தது என் காவியத்தின் ஓர் உருவெளித்தோற்றம் மட்டுமே. கங்கை என் காவியமாக ஆயிற்று. காவியம் நாம் எண்ணுவதன் ஒரு பாவை மட்டுமே” என்றார்.

அர்ஜுனன் “அப்படியானால் இங்கே தெரிந்தவர்கள் எவர்?” என்றார். வியாசர் மெல்ல அடங்கினார். ”அவர்கள் என் காவியத்தில் வாழும் வடிவமே இங்கு தெரிந்தது. காவியத்துக்கு அப்பால் இவர்கள் எங்குள்ளனர் என நான் அறியேன்.” அவர் கண்களில் கண்ணீர் ஒளிவிட்டது. பெருமூச்சுடன் கங்கையையே பார்த்தார்.

பெருமூச்சுடன் “காவியத்தில் நாம் பார்ப்பது வானை பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை மட்டுமே. ஆழத்தில் இருண்ட பேருருலகங்கள் விரிந்து கிடக்கின்றன. அங்கு கோடிகோடி மானுடர் உறைகின்றனர். அவர்களுடைய கூறப்படாத துயரங்கள், பகிரப்படாத கனவுகள். அங்கு எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. காலத்தின் விரல்நுனி அங்கு துயில்பவர்களை ஒரு போதும் தீண்டப் போவதில்லை. காவிய ஆழம் ஓர் அணிச்சொல்லின் மின்மினிகூட வழிதவறிச் செல்லமுடியாத பேரிருள்…” என்றார் வியாசர்.

பீமன் “பிதாமகரே, இக்கங்கையின் ஆழத்தில் இருந்துதான் இவையனைத்தையும் தொடங்கிய முதல்நஞ்சு எனக்கு அளிக்கப்பட்டது” என்றார். “அந்நஞ்சும் உங்கள் காவியத்தில் இருந்தா எனக்கு வந்தது?” வியாசர் ஒன்றும் சொல்லவில்லை. நடுங்கும் தலையுடன், கைகளை கூப்பியபடி கங்கையை பார்த்துக்கொண்டிருந்தார். “கூறுக, பிதாமகரே!” என்றார் பீமன். வியாசர் கண்களை மூடி நடுங்கிக்கொண்டிருந்தார்.

என் மனம் நடுங்கி உறைந்தது. என்னால் கங்கையை பார்க்கமுடியவில்லை. கரிய வாள்போல அது கிடந்தது. அதன் ஆழத்தில் நிழல் நிழலாக கரைந்திறங்குவது என்ன? என்னுள் தேங்கிய வெறுமையை எல்லாம் பெருமூச்சாக மாற்றி வெளித்தள்ள முயன்றேன். மார்பு ஒழியவேயில்லை. நான் திரும்பி காட்டை நோக்கி நடந்தேன். இருளில் திமிறிப் புணர்ந்த மரங்கள் காற்றில் உறுமும் காடு. அங்கு நிழல்கள் ததும்பின. பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 9

அஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும் தங்கள் குலத்தை அறிவிக்கும் கொடியை ஏந்திய இளையோன் ஒருவன் முன்னால் செல்ல, இன்னொருவன் கொம்பூதி வருகையை அறிவிக்க, தங்கள் குலமுறைப்படி ஆடைகளும் தலையணிகளும் அணிந்து சிறு குழுக்களாக சென்றனர்.

குடித்தலைவர்கள் பட்டிலும் மென்மயிரிலும் தோலிலுமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். மலைக்கழுகின் இறகோ இருவாய்ச்சிப் பறவையின் இறகோ மலையணிலின் வாலோ முகப்பில் நிறுத்தப்பட்ட, தோலாலும் மரத்தாலுமான தலையணிகளை சூடியிருந்தார்கள். குலமுத்திரைகள் மரத்திலும் வெண்கலத்திலும் வெள்ளியிலும் செய்து பொருத்தப்பட்ட கோல்களை ஏந்தியிருந்தனர். முதியவர்கள் இளையவர்களின் தோளில் கைவைத்து மெதுவாக நடந்து சென்றனர். முற்றமெங்கும் பல வண்ண அசைவுகளாக அவர்கள் பெருகியிருந்தனர்.

உத்கலத்தின் குபேரரின் தலைமையில் அவருடைய குழுவினர் முற்றத்தில் மஞ்சலில் இருந்து இறங்கினர். குடித்தலைவர்களைப் பார்த்த பின் “இவர்கள் தங்கள் தொல்குடி அடையாளங்களுடன் இங்கு நீடிக்கிறார்களா?” என்று குபேரர் கேட்டார். “இல்லை. இவர்களில் பலர் இக்குடி அடையாளங்களுக்கு உரியவர்களே அல்ல. இவ்வண்ணம் கூறுவதற்கு ஒரு குடியோ கொடியடையாளமோ இல்லாதிருந்தமையாலேயே தங்கள் ஊரிலிருந்து கிளம்பி இத்தனை தொலைவு வந்தவர்கள். அடையாளம் உடையவன் நிலத்தை உதறுவதில்லை. நிலத்தை உதறுபவனுக்கு அடையாளம் மறைகிறது. இவர்கள் இங்கே வந்து வேரூன்றி, மண்ணும் மாளிகையும் அடைந்து, தனிக் கருவூலமும் காவல்படையும் கொண்டு, குடி பெருக்கியபோது குலம் தேவைப்பட்டது. அதை உருவாக்கிக்கொண்டார்கள்” என்றான் மிருத்திகன்.

“அது இயல்பாக உருவாகி வந்தது. இங்கே ஓராண்டு முழுக்க அடையாள உருவாக்கம்தான் நிகழ்ந்தது. உன் அடையாளத்தை நான் ஏற்கிறேன், என் அடையாளத்தை நீ ஏற்றுக்கொள் என்னும் வணிகம் நிகழ்ந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் ஏதேனும் ஒரு அடையாளத்தை குலமுத்திரையாக ஆக்கிக்கொண்டார்கள். சான்றாக அதோ முன்னால் கரடித்தோல் சால்வை அணிந்து மலைக்கழுகின் இறகு சூடிய தலையணியுடன் கரடிக்கோல் தலைகொண்ட குடிக்கோலை ஏந்தி சென்றுகொண்டிருப்பவர் ஜாம்பவ குலத்தவர். அவர்களை நான் அறிவேன்.”

“பிரக்ஜ்யோதிஷத்துக்கு அப்பால் உள்ள ஊஷரம் என்னும் ஊரை சேந்தவர்கள். காமரூபத்தின் எல்லையில், பெருக்கெடுக்கும் பிரம்மபுத்திரையின் கரையில் அமைந்திருக்கும் சிற்றூர் அது. அங்கு இவர்கள் சதுப்பு நிலத்தில் பரவி வேளாண்மை செய்து குடியிருப்புகளை அமைத்திருந்தனர். ஆண்டுதோறும் திசைமாறும் பிரம்மபுத்திரையின் வெள்ளத்தில் அவர்களின் ஊர் மொத்தமாகவே அழிந்துபட்டபோது அங்கிருந்து பிரக்ஜ்யோதிஷத்துக்குள் வந்தனர். குடியேறி வந்தவர்களை கீழ்க்குடிகளாக அமர்த்தும் தொல்வழக்கத்தின்படி அவர்கள் அங்கே நிலமற்றவர்களாகவும் இல்லமற்றவர்களாகவும் பிறருக்கு அடிமையும் ஏவலும் செய்து வாழ்ந்தனர்.”

“அஸ்தினபுரியில் புதிய வேதம் எழுந்துவிட்டதை சூதர்கள் சொன்னதும் அங்கிருந்த முதியவர் அங்கிருந்து கிளம்பிச்செல்லலாமா என்ற ஆணையை தங்கள் தெய்வங்களிடம் கேட்டார். ஏழு தெய்வங்களும் அவர் மகள் உருவில் தோன்றி ‘செல்க! பொலிக!’ என்று ஆணையிட்டன. அவர் அதை கூறியதும் அங்கிருந்த பன்னிரண்டு குடிமரபுகளில் எட்டு கிளையினர் கிளம்ப ஒத்துக்கொண்டனர். எஞ்சியோர் அங்கேயே நீடித்தனர். அவர்கள் எண்மரும் வழிப்பயணத்துக்கான பொருட்களை மட்டுமே எடுத்துக்கொண்டு பிரக்ஜ்யோதிஷத்திலிருந்து கிளம்பி நீண்ட நடையாக வந்து கங்கையில் இறங்கி படகுகளில் யமுனைக்குள் புகுந்து இங்கு வந்தனர்.”

“இந்நகர் கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அவர்கள் இங்கே முழுதுளத்துடன் வரவேற்கப்பட்டனர். குடிமுறைமைகள் ஏதும் அவர்களுக்கு வகுக்கப்படவில்லை. அவர்களே இங்கு தங்களை வேளாண்குடிகளாக நிலைநிறுத்திக்கொண்டார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே அனைவரும் இல்லங்களைக் கட்டி வேரூன்றினார்கள். அப்போது அவர்களுக்கு குடி தேவைப்பட்டது. அவர்கள் இங்கு வந்தபோது தங்கும்பொருட்டு கொடுக்கப்பட்ட நிலத்தில் முன்பு ஒரு கரடி வேட்டையாடி கொல்லப்பட்டதனால் அதற்கு ஜாம்பவனம் என்று பெயர் இருந்தது. ஆகவே அக்குடித்தலைவர் தன்னை ஜாம்பவர் என்று அழைத்துக்கொண்டார். அந்தக் குலம் ஜாம்பவ குலம் என்றாயிற்று” என்றான் மிருத்திகன்.

“சிலர் தங்கள் குடும்பத்திற்குரிய பெயர்களையே தங்கள் குலமாக மாற்றிக்கொண்டார்கள். சிலர் வணிகத்தின்பொருட்டு தமக்கு அளிக்கப்பட்ட கொடியடையாளங்களை குலமாக அமைத்துக்கொண்டனர். சிலருடைய குடியடையாளங்கள் அவர்களுடைய பூசகர்களுக்கோ மூத்தோர்களுக்கோ தெய்வங்கள் கனவில் வந்து சொன்னதாக இருந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் விட்டுச்சென்ற குலஅடையாளங்களை தாங்கள் எடுத்துக்கொண்டனர் சிலர். அத்தனை குல அடையாளங்களும் அரசரால் ஏற்கப்பட்டன.”

“அவ்வண்ணம் இங்கே குடிபெருகியது. செல்வம் ஈட்டியவர்கள் ஓராண்டிலேயே அரசவையில் இடம் வகுக்கப்பட்ட பெருங்குலத்தார் ஆயினர். ஆனால் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டு பெருமையை சொல்லிக்கொள்கிறார்கள். குடிப்பெருமையையும் குலப்பெருமையையும் கூறாத எந்தக் குடியையும் இங்கே பார்க்க முடியாது. இன்று அதன்பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் பூசலிடுவார்கள். ஒருவரை பிறர் சுட்டிக்காட்டத் தொடங்கினால் ஓர் எல்லையில் மூத்த ஒருவர் எழுந்து அனைவர் நாவையும் அடக்குவார். அவ்வண்ணமே அப்பேச்சு நிற்கும்.” மிருத்திகன் உரக்கச் சிரித்து “ஆம், ஒருவர் ஆடையை இன்னொருவர் அவிழ்க்கும் விளையாட்டுதான் அது” என்றான்.

“எங்கும் அதுதான் கதை. இங்கு இப்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சில ஊர்களில் சில நூறாண்டுகளாகியிருக்கின்றன. மகதமும் வங்கமும் கலிங்கமும் விலக்கல்ல” என்றார் குபேரர். “இவர்கள் இங்கு மூத்த குடிகள் எனில் சிறுகுடிகள் யார்? இல்லப்பணி எடுக்கவும் அடிமையென நிற்கவும் எவ்வண்ணமேனும் சிலர் வேண்டுமல்லவா?” என்றார் மரகதர். “இந்நிலம் உருவாகி வருகையில் வந்த குடிகள் அனைவருமே மூத்த குடிகள். நிலம் உருவாகி நிலைகொண்டபின் பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு நிலம் அளிக்கப்படவில்லை. அவர்கள் முந்தைய குடிகளுக்கு ஏவல் குடிகள் என்றாயினர். அவர்கள் இவ்வடுக்கில் கீழ்க்குடியினர்” என்றான் மிருத்திகன்.

“ஆம், அது எங்கும் அவ்வாறுதான்” என்று குபேரர் கூறினார். “இன்னொரு தொல்குடி இங்கு வரவேண்டும் என்றால் தங்கள் தொன்மைக்கான சான்றுகளுடன், செல்வத்துடன், அரசருக்குரிய முறையான காணிக்கைப் பொருட்களுடன் வந்து வணங்கவேண்டும். தங்கள் குடிக்கு அவையொப்புதல் பெற்ற பின்னரே அவர்கள் இங்கு நிலைகொள்ள முடியும். அப்போதுகூட இங்குள்ள தொல்குடியினர் அவர்களை ஏற்க மறுத்து பூசலிடுவார்கள். அவர்கள் தங்கள் படைவல்லமையால், செல்வத்திறனால், தங்களை உயர்குடிகள் என்று நிறுவிக்கொள்ளும் வரையில் அவர்களை இங்குள்ளோர் ஏற்க மாட்டார்கள்.”

“நான் கூற வருவது என்னவெனில் அமர்ந்தவர்கள் பின்னர் வந்தவர்களை கீழ்க்குடியினராக நிற்கவைத்திருக்கிறார்கள், அமர இடம் அளிப்பதில்லை என்பதைத்தான். சான்று இந்தக் கரடிக்குடியினர்தான். இவர்கள் இங்கு நிலைபெற்றுவிட்ட பின்னர் போரில் நலமழிந்த பிரக்ஜ்யோதிஷம் வணிகமும் இழந்து வீழ்ச்சி அடையத்தொடங்கியது. பிரக்ஜ்யோதிஷத்தில் இவர்களுடன் வர மறுத்த நான்கு குடிகளும் வறுமை தாளாமல் மூன்று ஆண்டுக்குப் பின் இங்கு வந்தனர். தங்கள் குருதியினர் இங்கே வேரூன்றியிருப்பதை அறிந்து அவர்கள் இவர்களை நாடி வந்தபோது அவர்களை இங்கிருந்தோர் ஏற்கவில்லை. தாங்கள் விட்டு வந்த தங்கள் குருதியினரை இன்று தங்களைவிடத் தாழ்ந்தவர்களாக எண்ணுகிறார்கள்.”

“இங்கு நிலைபெற்றுவிட்டவர்களுக்கு ஸ்தவிரர் என்று பெயர் சொல்லப்படுகிறது. பிந்தி வந்தவர்கள் அமூலர் எனப்படுகிறார்கள். வேரற்றவர்கள். அமூலர் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள், தங்களுக்கு ஏவல்பணி எடுக்க கடமைப்பட்டவர்கள் என்று இவர்களே வகுத்துக்கொண்டார்கள். வந்தவர்களுக்கும் வேறு வழியில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே அவர்கள் இவர்களை விட தாழ்ந்த குடியினராக இங்கு கதைகளாலும் மரபுகளாலும் நிலைநிறுத்தப்பட்டார்கள். பெருங்குடியினரிடம் இணையாக அமர்ந்து உரையாடவோ, மன்றில்களில் குரல் எழுப்பவோ, மணம்கொள்ளவோ, விருந்துகளில் உடன் அமரவோ, இல்லங்களில் முகப்புக்கு அப்பால் சென்று தொடவோ, ஒரு குவளையை பகிர்ந்துகொள்ளவோ உரிமையற்றவர்கள் ஆனார்கள்” என்றான் மிருத்திகன்.

“ஆனாலும் அவர்கள் ஒரே குருதியினர் அல்லவா?” என்று இளைஞனான சங்கமன் கேட்டான். “ஆம், குருதி ஒன்றே. பலர் தாய்மாமன் மருகன் உறவு கொண்டவர்கள். சிலர் நேரடியாகவே உடன்பிறந்தவர்கள். ஒரே அன்னை வயிற்றில் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்களில் மூத்தவர் தாழ்ந்த குடியாகவும் இளையவர் மேற்குடியாகவும் மாறி, இளையவர் மூத்தவரிடம் தனக்கு எதிராக நேர்நின்று பேசலாகாது என்று ஆணையிடும் விந்தையை இங்கு பார்க்கலாம்” என்றான் மிருத்திகன்.

குபேரர் உரக்க நகைத்து “உலகிலுள்ள அனைத்துக் குடியினரும் ஒரு குடியினரே என்று தொல்குடிகளில் பாடல் ஒன்று உண்டு” என்றார். “அதற்கு அவர்கள் என்ன கதை சொல்கிறார்கள்?” என்றார் மரகதர். “அதற்கான கதையை உருவாக்கி அளிப்பதற்குத்தான் இங்கு சூதர்கள் இருக்கிறார்கள்” என்று மிருத்திகன் கூறினான். “சூதர்களின் கதைப்படி அவர்கள் கடலோரத்தில் வேளாண்மை செய்து துயருற்றிருந்தார்கள். அப்போது இந்திரனை வணங்கி தங்கள் மீட்புக்குரிய வழி என்ன என்று கேட்டார் குடிமூத்தவர். இந்திரன் அவர்களுக்கு பன்னிரண்டு பசுக்களைக் கொடுத்து ‘இப்பசுக்கள் செல்லும் வழியே நீங்கள் செல்லுங்கள், இவை எங்கு சென்று தங்கள் மேய்ச்சலை கண்டடைகின்றனவோ அங்கே உங்களுக்கும் வேர்பரப்ப நிலம் கிடைக்கும்’ என்று ஆணையிட்டார்.”

“பன்னிரண்டு குடிகளும் அவ்வண்ணமே காமரூபத்திலிருந்து கிளம்பி வந்தனர். வரும் வழியில் அவர்களுக்கு உணவோ உறைவிடமோ அமையவில்லை. கொடுமழையிலும் வெயிலிலும் மரத்தடிகளில் தங்கி, தளிர்களையும் கிடைத்த காய்கறிகளையும் சிறுபூச்சி புழுக்களையும் பிடித்து உண்டு அவர்கள் நடந்து வந்தார்கள். ஒருகட்டத்தில் உண்ண உணவென்று எதுவுமே இல்லாதாயிற்று. அவர்களில் ஒருவர் ‘அருகேதான் பிரக்ஜ்யோதிஷம் என்ற நாடுள்ளது. அங்கு போனால் குடி நிலைகொள்ள முடியும். ஆனால் அங்கு செல்வதுவரை நமக்கு உணவு தேவை. நம் குழந்தைகள் இப்போதே பசிக்கு அழுகின்றன. இப்போது நம்மிடம் உணவு என உள்ளவை இப்பசுக்களே. இப்பசுக்களைக் கொன்று உண்டால் அங்கு செல்வது வரை நாம் சாகாமல் வாழமுடியும்’ என்றார்.”

“குடித்தலைவர் பதறிப்போய் ‘கூடவே கூடாது. இவை இறைவனால் அருளப்பட்டவை. பசுவைக் கொல்வதென்பது பெரும்பழி’ என்றார். ‘ஆனால் உயிர்வாழும்பொருட்டு செய்வன எதற்கும் பழியில்லை’ என்றார் முதல்வர். ‘உயிர்விட்டாலும் செய்யக்கூடாதன சில உண்டு’ என்றார் குடித்தலைவர். அப்பூசல் வலுத்தது. எட்டு குடிகள் பட்டினியில் உயிர் துறந்தாலும் பசுவை கொல்லமாட்டோம் என்று உறுதி கொண்டனர். நான்கு குடிகள் தங்கள் பசுக்களைக் கொன்று உண்டபின் பிரக்ஜ்யோதிஷத்திலேயே சென்று குடியமரலாம் என்று முடிவு செய்தனர். பசுவைக் கொன்று உண்டவர்கள் பிரக்ஜ்யோதிஷத்தில் சதுப்பு நிலத்தை அடைந்தனர். பசுவை கொல்லாமல் இருந்தவர்கள் பிரக்ஜ்யோதிஷத்தைக் கடந்து பசுவைத் தொடர்ந்தனர். பசு வழிகாட்ட தங்களுக்குரிய நிலத்தை தேடி வந்து அஸ்தினபுரியை கண்டனர்.”

“பசுவின் அருளால் அஸ்தினபுரியில் அவர்கள் குலம் செழித்தது. பிரக்ஜ்யோதிஷத்திற்குள் சென்றவர்கள் பசுவின் பழி கொண்டவர்கள். அங்கே அவர்கள் வறுமையுற்றனர். அவர்கள் உழும் நிலத்தில் மழை பொழிவதில்லை. வெள்ளம் எழுந்து இல்லங்கள் அழியும். நோய் வந்து கால்நடைகள் மறையும். இந்திரனின் தீச்சொல் அவர்கள் மேல் விழுந்துள்ளது. ஆகவே அவர்கள் செல்லுமிடமெங்கும் மழை பொய்க்கும். அவர்களுக்கு நிலமும் புல்வெளியும் அளிக்கப்பட்டாலும் அங்கு இந்திரனின் சினம் இருப்பதனால் அவர்களால் செழிக்க முடியாது. இந்திரனின் அருள்கொண்டவர்களை ஒட்டியே அவர்கள் வாழமுடியும். அவர்கள் பிறருக்கு ஏவல் செய்தே வாழவேண்டியவர்கள்.”

குபேரர் நகைத்து “சிறு வேறுபாடுகளுடன் அத்தனை குலமுறைகளுக்கும் இக்கதையே கூறப்படுகிறது” என்றார். அவர்கள் வாயிற்காவலனுக்கு கணையாழியைக் காட்டி உள்ளே சென்றனர். “நேற்று வியாசர் இங்கு வந்ததைப் பற்றி சொன்னீர்கள். அதன்பின் அவர் அஸ்தினபுரிக்கு வரவில்லையா?” என்று குபேரர் கேட்டார். “இல்லை, அவர் கங்கைக்கரையில் இருந்தே நேராக வடபுலம் நோக்கி சென்றுவிட்டார். பின் எங்கிருக்கிறார் என்று செய்தியே இல்லை” என்றான் மிருத்திகன். “பாண்டவ இளையவர்களும்கூட அங்கிருந்தே திசைவெல்லும் பயணத்திற்கு சென்றுவிட்டனர். இந்நகருக்குத் திரும்பியவர் யுதிஷ்டிரன் மட்டுமே.”

அவையில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய குலமுறைப்படி அமரச்செய்யப்பட்டனர். அந்தணரும் ஷத்ரியர்களும் அவர்களுக்கான வெண்ணிறமும் செந்நிறமும் கொண்ட பட்டு விரிக்கப்பட்ட பீடங்களில் அமரவைக்கப்பட்டனர். ஆயர்களுக்கு மஞ்சள் நிறத்திலும், வேளாண்குடிகளுக்கு பச்சை நிறத்திலும், வணிகர்களுக்கு பொன்னிறத்திலும் பீடங்கள் அளிக்கப்பட்டன. காவலர்களுக்கு இறுதி நிரையும் நீல வண்ண இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. மெல்லிய ஓசைகளுடன் அவைக்கூடம் நிரம்பிக்கொண்டிருந்தது.

“யுதிஷ்டிரனால் அமைக்கப்பட்டது இந்தப் பெரிய அவைக்கூடம். இது ஆயிரம் தூண்கள் கொண்டது. பொன்பூச்சுள்ள பித்தளைப் பட்டைகளால் மூடப்பட்டதனால் இதற்கு ஹிரண்யமண்டபம் என்று பெயர்” என்றான் மிருத்திகன். “ஆனால் அரசர் இங்கே பெரிய நிகழ்ச்சிகள் எதையும் நடத்தவில்லை. இதை உருவாக்கியதுமே அவர் ஆட்சியில் ஆர்வமிழந்து கானேகிவிட்டார். இக்கூடத்தில் அரசமர்ந்து ஆட்சி செய்தது பெரும்பாலும் பேரரசி சம்வகைதான்.”

அதன் மையத்தில் போடப்பட்டிருந்த அரசமேடையில் அரசருக்கும் அரசிக்கும் அரியணைகள் போடப்பட்டிருந்தன. “இப்போது இங்கு அவை அமரப்போவது யார்?” என்று குபேரர் கேட்டார். “வேறெவர், யுதிஷ்டிரன்தான். யுதிஷ்டிரன் முடிதுறந்து போன இடத்தில் அவரது தொடர்ச்சியாகத்தான் யுயுத்ஸு அவை அமர்ந்திருக்கிறார்” என்றான் மிருத்திகன். “ஆனால் யுயுத்ஸு ஹஸ்தியின் அரியணையில் ஒருமுறைகூட அமர்ந்ததில்லை. யுதிஷ்டிரனின் மேலாடையோ தலைப்பாகையோதான் அவ்வரியணையில் வைக்கப்படும். அருகே சிறிய அரியணையில் அமர்ந்து யுயுத்ஸு முடிசூடியிருப்பார்.”

“பேரரசி சம்வகையும் தேவயானியின் அரியணையில் அமர்வதில்லை. தனியான அரியணையையும் தனக்கான மணிமுடியையும் அவரே உருவாக்கிக்கொண்டார்” என்றான் மிருத்திகன். “ஆனால் யுதிஷ்டிரன் முடிதுறந்து சென்றவர்” என்றார் குபேரர். “முடிதுறப்பதற்கென்று அவர் எந்தச் சடங்குகளையும் செய்யவில்லை. அது ஒரு உளநிலையாகவே அவரிடம் இருக்கிறது. ஆகவே அவர் இன்னும் அஸ்தினபுரியின் அரசரே” என்றான் மிருத்திகன். “அஸ்தினபுரியின் அரசரென குடிகள் அவரை நினைக்கலாம். அவர் உள்ளத்தால் முடிதுறந்ததனால் அக்கணமே அவர் அஸ்தினபுரியின் அரசராக அல்லாமல் ஆகிவிட்டார்” என்றார் குபேரர். “அவர் உள்ளத்தால் துறந்தாரா என எவருக்குத் தெரியும்?” என்று மிருத்திகன் சொன்னான்.

அவர்கள் காத்திருக்க யுதிஷ்டிரனின் நட்புநாடுகளின் அரசர்களின் அரசவைத் தூதர்கள் ஒவ்வொருவரக வந்து அவை அமர்ந்தனர். மகதம், வங்கம், கலிங்கம், அங்கம், சிந்து என அனைத்து நாடுகளிலிருந்தும் அரசத் தூதர்கள் வந்திருந்தனர். அவர்களை சூழ பார்த்தபின் “இன்று முதன்மையான அரசநிகழ்வொன்று நடக்கப்போகிறது” என்றான் மிருத்திகன். “ஆனால் அதற்கான அறிவிப்போ ஒருக்கங்களோ நிகழவில்லை” என்று குபேரர் சொன்னார். “ஆம், இதை பெருநிகழ்வாக அன்றி ஓர் அரசமுறைச் செயலாக மட்டுமே நிகழ்த்தவிருக்கிறார்கள் போலும்” என்றான் மிருத்திகன்.

கொம்பொலியும் குழலும் எழுந்தன. கொம்பூதியைத் தொடர்ந்து அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் ஒரு வீரன் அவைக்குள் நுழைந்தான். மங்கலத்தாலமேந்திய சேடியரும் இசைச்சூதரும் வர தொடர்ந்து யுயுத்ஸுவும் சம்வகையும் கைகூப்பியபடி அவை புகுந்தனர். கொடியுடன் வந்த வீரன் அதை அவையில் நாட்டி தலைவணங்கி அகன்றான். அந்தணர் கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி அவர்களிருவரையும் வாழ்த்தினர். யுயுத்ஸு கைகூப்பியபின் சென்று அரியணையின் அருகே நின்றான். சம்வகை அரசிக்குரிய அரியணை அருகே நின்றாள். அதில் அவர்கள் அமர்ந்து செங்கோல் கொள்ளவில்லை.

மீண்டும் கொம்போசை எழுந்தது. ஒற்றை வீரன் அவை புகுந்து “குருகுலத்துக் கொடிவழி வந்த யுதிஷ்டிரன் அவை புகுகிறார்” என்று சுருக்கமாக அறிவித்தான். யுயுத்ஸுவும் சம்வகையும் கைகூப்பி நிற்க யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பி தலைகுனிந்து நடந்துவந்தார். அவர் இடையில் மரவுரி அணிந்து, குழலை ஒரு நாணலால் கட்டியிருந்தார். உடலில் அணிகளேதுமில்லை. காதுகளிலிருந்து குண்டலங்களும் கழற்றப்பட்டிருந்தன. அரசருக்குரிய கணையாழியும் அவர் விரல்களில் இல்லை. நரைத்த குழல் சடை கொண்டிருந்தது. ஈரமான புரிகள் அவருடைய தோளில் விழுந்து கிடந்தன. தாடியிலும் சடைத்திரிகள் இருந்தன.

அவர் தோள்களைக் குறுக்கி கைகூப்பி சிற்றடி எடுத்துவைத்து வந்து இருமுறை அவையை வணங்கினார். “இவரை இப்படியே நான் முன்பு பார்த்திருக்கிறேன்” என்றார் குபேரர். “யுதிஷ்டிரனை நீர் முன்னர் பார்த்திருக்கலாம்” என்றான் மிருத்திகன். “இல்லை, நான் பார்த்தது வேறு ஒருவரை. ஆம், கௌதம முனிவர்! கௌதம முனிவரின் அதே தோற்றம்!” என்று குபேரர் கூறினார். “நன்று, அவர் கௌதம முனிவரை மிக வளைந்த நெடும்பாதைகளூடாகச் சென்று அடைந்துவிட்டார்” என்று அருகிலிருந்த முதியவர் சிரித்தார்.

தொடர்ந்து அர்ஜுனனும் பீமனும் வந்தனர். அர்ஜுனன் தோள் மெலிந்து, உடல் சுருங்கி, சிறுவனைப்போல் ஆகிவிட்டிருந்தான். கைகள் இரு சுள்ளிகள்போல் இருந்தன. கன்னம் ஒடுங்கி, கண்கள் குழிந்து, நரைத்த சடைகள் பின்னால் ஒரு துணியால் கட்டப்பட்டிருக்க, அணிகள் ஏதுமின்றி அலைந்து திரியும் நாடோடி போலிருந்தான். “யாரது?” என்று எவரோ கேட்டார்கள். “பார்த்தன், விஜயன், அர்ஜுனன்” என்று எவரோ சொன்னார்கள். அவை முழுக்க வியப்பும் பெருமூச்சும் எழுந்தன.

“அவரா? அவரேதானா?” என்றார் ஒருவர். “காண்டீபத்தை கைவிட்டுவிட்டார் என்றார்கள்” என்றது ஒரு குரல். “காண்டீபத்தையா?” என்றார்கள் பலர். “காண்டீபம் அவரை கைவிட்டுவிட்டது. இளைய யாதவர் விண்புகுந்த அக்கணமே அது தன் அனைத்து ஆற்றல்களையும் இழந்து மண்ணில் விழுந்துவிட்டது. ஒரு நிழலென எடுக்கமுடியாமல் மண்ணில் படிந்துவிட்டது.” ஒரு வணிகன் “காண்டீபமில்லாத விஜயன் பொருளிலாச் சொல்போல் என்று ஒரு சூதன் பாடினான்” என்றான். இன்னொருவன் “உயிர் நீத்த உடல்போல. இனி அவருக்கு புவியில் எஞ்சுவது எதுவுமில்லை” என்றான்.

அவர்கள் பேச்சு சொல் துலங்கா முழக்கமென எழுந்து தலைக்குமேல் ஓங்காரமாக மாறியது. பீமன் பேருடலுடன் இரு கைகளையும் அசைத்து யானைபோல் நடந்துவந்தான். “அவர் உடல் பெருத்திருக்கிறது. மேலும் பெருந்தோள் கொண்டவராக ஆகிவிட்டிருக்கிறார்” என்றார் மரகதர். “அதுவும் பிறிதொரு கையறுநிலைதான். பிற அனைத்தையும் கைவிட்டுவிட்டார். பயணம் செய்வதையும் மானுடரை சந்திப்பதையும் கூட. இன்று அவரிடம் எஞ்சியிருப்பது உண்பது மட்டுமே. ஒரு நாளைக்கு எட்டு பொழுது உண்கிறார் என்கிறார்கள்” என்றான் மிருத்திகன்.

நகுலனும் சகதேவனும் இரு வயோதிகர்களாக நடந்து அவை புகுந்தபோது அவையிலிருந்த அனைவரும் அமைதியாயினர். ஒருவர் “அவர்கள் நகுலனும் சகதேவனும்தானே?” என்றார். “நூல்களில் கதைகளில் நாம் அறிந்தவர்கள். இத்தருணத்தில் சூடிய அனைத்தையும் இழந்திருக்கிறார்கள்” என்றார் குபேரர். மிருத்திகன் “நகுலனை பேரழகன் என்பார்கள். இத்தருணத்தில் அனைத்தையும் இழந்து, தசை வற்றி, விழிகளின் ஒளியை இழந்த இரு முதியவர்கள். ஆடிப்பாவைகள்போல் ஒருவருக்கொருவர் துயர் பெருக்குபவர்கள்” என்றான்.

“ஆனால் இன்று ஐவரும் சேர்ந்து அவை அமர்ந்திருக்கிறார்கள். ஐவரும் சேர்ந்து அவை அமர்ந்தால் அது விண்புகுவதற்காகத்தான் இருக்கவேண்டும் என்பது வியாசரின் ஆணை என்று ஒரு சொல் உண்டு” என்றார் ஒரு முதியவர். “மெய்யாகவா? இங்கு இன்று விண்புகுபயணம் தொடங்கப்போகிறார்களா?” என்றார் குபேரர். “அவ்வாறு ஒரு பேச்சு அடிபடுகிறது. இளைய யாதவரின் இறப்புச் செய்தியைக் கேட்டே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இன்று அரச முடிவுகள் அறிவிக்கப்படும், இன்றுடன் அவர்கள் அஸ்தினபுரியைத் துறந்து செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது” என்றார் முதியவர்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 10

முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா இறவா பரம்பொருள் என விஷ்ணு. விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தார்” என்று அவன் சொன்னான்.

“ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப் புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக!” கோலைச் சுழற்றி “மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!”

“குலமூதாதை குருவுக்குப் பின் எழுந்த ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என நீளும் மாமன்னர்களின் வரிசையில் எழுந்த ஒளிமிகுந்த விண்ணவனாகிய பிரதீபரின் புகழ் வெல்க! பிரதீபரின் மைந்தர் சந்தனுவும் அவர் மைந்தர் விசித்திரவீரியனும் புகழ் குன்றாது நிலைகொள்க! விசித்திரவீரியனின் மைந்தர்கள் பாண்டுவும் திருதராஷ்டிரரும் விண்ணிலிருந்து நம்மை வாழ்த்துக! வீரப் பேருலகில் இருந்து மாமன்னர் துரியோதனன் இக்குடியை காத்தருள்க!” அவையில் ஒரு மெல்லிய முணுமுணுப்போசை சிற்றலைபோல எழுந்து அமைந்தது.

அக்குடிவரிசை அங்கு ஒரு கொடியென பறந்துகொண்டிருந்தது. அங்கு பறந்த அனைத்துக் கொடிகளும் மட்கி மறைகின்றன, மலர்கள்போல. புதிய கொடிகள் விரைந்து எழுகின்றன. அரும்புகளென. அழியா மலர்போல அந்தக் கொடிவரிசை அங்கு பறந்துகொண்டிருக்கிறது என்று குபேரர் உணர்ந்தார். இன்னும் நெடுங்காலம் அவ்வண்ணம் அது பறக்கும் என்னும் எண்ணம் தனக்கு ஒரு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் நிறைவையும் அளிப்பதை கண்டார். கைகளை மடியில் கட்டிக்கொண்டு நிமித்திகன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“அவையீரே, இங்கே நிலம் துறந்து சென்ற அரசர் யுதிஷ்டிரனும் இளையோர் நால்வரும் வருகை தந்துள்ளனர். அரசி திரௌபதியும் அவைகொள்வார். அனைத்துக் குடிகளும் கூடியிருக்கும் இந்தக் குடிப்பேரவையில் அரசர் இறுதியாக முடிவெடுத்து சில உரைக்கவிருக்கிறார். இக்குடி இங்கு நீடூழி வாழவும் அவர்களின் கொடிவழிகள் செழிக்கவும் நலம் நிகழவும் இவற்றை அவர் முன்வைக்கிறார். நலம் திகழ்க!” என்றான் நிமித்திகன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவை கைகளைத் தூக்கி வாழ்த்துரைத்தது.

அந்த ஓசை எழுந்து அடங்கிய கார்வையில் அமைதி வந்து நிறைந்தது. அங்கு சொல்லப்பட்ட அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். அது முறையாக நிகழத்தொடங்குகையில் பொறுமையின்மையும் துயரமும் அவர்களுக்குள் எழுந்தன. அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று தாங்கள் அறிந்த அன்றாடத்திற்குள் நுழைய விரும்பினர். அவர்களின் உடல்களில் அந்தத் ததும்பல் இருந்துகொண்டே இருந்தது. அவைக்கூடத்திலிருந்தவர்களின் உடலில் அந்த அசைவு சிற்றலை எனத் தெரிந்தது.

உள்ளிருந்து மெல்லிய அசைவொலி கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்த்தனர். தனியாக எளிய மரவுரி ஆடை அணிந்து, கட்டிய கூந்தல் தோளில் சரிந்திருக்க, அணிகளோ அகம்படியோ எதுவுமின்றி திரௌபதி வந்து பெண்களுக்குரிய பகுதியில் சிறு பீடத்தில் அமர்ந்தாள். அங்கிருந்த பெரும்பாலோருக்கு அவள் திரௌபதி என்றே தெரிந்திருக்கவில்லை. ஒருவருக்கொருவர் “திரௌபதி! பாஞ்சாலி!” என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டார்கள். வியப்பொலிகளை வெளியிட்டார்கள். அதன் பின்னரே பிறர் மீண்டும் கூர்ந்து பார்த்தார்கள்.

“இந்த அவையில் நிகழ்ந்ததா?” என்று எவரோ கேட்டார். “இல்லை, பிறிதொரு அவை. அது முற்றாக கலைக்கப்பட்டு இந்த அவை கட்டப்பட்டது.” எவரோ “கொற்றவை!” என்றனர். “எரியமர்ந்த பீடம் என உருகி மாற்றுருக் கொண்டுள்ளது இந்நகர்.” அந்தக் கலைசல் ஒலி அடங்க சற்று நேரம் பிடித்தது. நிமித்திகன் மீண்டும் அவையை வணங்கி “இந்த அவை சிறப்புறுக! இங்கே மூத்தோரும் குடித்தலைவரும் அரசர்களும் அமர்ந்திருக்கையில் அறமே உரைக்கப்படுக! தேவர்களும் நீத்தோரும் தெய்வங்களும் சான்றென அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி கைக்கோலைச் சுழற்றி இறங்கினான்.

யுதிஷ்டிரன் மெல்லிய தள்ளாடும் நடையுடன் தன் பீடத்தில் இருந்து எழுந்து அரசமேடைக்கு வந்தார். கைகூப்பியபடி அவர் நின்றபோது அவையில் மூச்சொலிகளே எழுந்தன. யுதிஷ்டிரன் முதிர்ந்த குரலில் “குடியினரே, இங்கு இந்த அவையில் நின்றிருக்கையில் நான் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன் என்று உணர்கிறேன்” என்றார். “ஒரு பிறவிக்குள் ஏழு பிறவி எடுப்பவனே முக்தி அடைகிறான் என்று ஒரு சொல் உண்டு. ஆறு பிறவிகள் வழியாக நான் வந்துவிட்டேன் என உணர்கிறேன். இளமையில் இந்நகருக்கு வருவதற்கு முன் அங்கே சதசிருங்கத்தில் எந்தையுடன் எத்துயரும் அறியாத சிறுவனாக வாழ்ந்தேன். அவருடைய இறப்பு என் முதற்சாவும், இரண்டாம் பிறப்புமாகும்.”

அவையிலிருந்தவர்களுக்கு அவர் சொன்னவை சென்றடையவில்லை என்பது அவர்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்ததில் தெரிந்தது. அவர்கள் எவருமே யுதிஷ்டிரனை இளமையில் கண்டவர்கள் அல்ல. யுதிஷ்டிரன் சொன்னார் “முற்பிறவிக்கு என நான் அடிக்கடி அங்கே சென்று மீள்கிறேன். இப்போது அகவை நிறையும்போது மீண்டும் மீண்டும் தெளிவாக, ஒரு புல் ஒரு நீரலை குறையாமல் கனவுகளில் எழுகிறது அந்நிலம். அங்கே தெளிந்த விழிகளுடன் எந்தை என்றுமிருக்கிறார். சில நாட்களுக்கு முன் நான் கண்ட கனவில் அவர் தன் உடலெங்கும் மைந்தரைச் சுமந்தபடி தலையில் மலைத்தேனின் அடைகளை நாரில் கட்டி எடுத்துக்கொண்டு நடந்தார். அவர் உடலெங்கும் தேன் வழிந்துகொண்டிருந்தது. அவர் முகம் மகிழ்ச்சியில் தேவர்களுக்குரிய மலர்வை கொண்டிருந்தது. அவையோரே, மானுட வாழ்வென்பது ஒரு பெருங்கனவு. அக்கனவு மெல்லமெல்ல கலைவதையே ஞானமென்றும் வீடுபேறென்றும் சொல்கிறோம்.”

இந்நகரில் வந்து கல்வி கற்று இளையோருடன் கூடி பிறிதொரு வாழ்க்கை வாழ்ந்தேன். அவ்வாழ்வும் இனிதே. வாரணவதத்தில் மீண்டும் இறந்தேன். சிதையில் எரிந்தேன். குகை வழியாக மீண்டும் பிறந்தேன். மீண்டும் கானக வாழ்க்கை. அது மூன்றாம் பிறப்பு. அஸ்தினபுரிக்கு வந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தது நான்காம் பிறப்பு. இந்திரப்பிரஸ்தத்தில் ஒரு சிறுபோது அரச வாழ்க்கை. சூதில் தோற்றபோது மீண்டும் இறந்தேன். நூறுமடங்கு கொடிய இறப்பு அது. உலகமே தன்மேல் காழ்ப்புகொள்வதை உணர்ந்தவனைப்போல தனியனும் துயருற்றவனும் வேறில்லை. தானே தன்மேல் காழ்ப்புகொண்டிருப்பதை உணர்பவன் கீழினும் கீழோன். கொடிய சாவு அது, அவையோரே. நூறு சிம்மங்களால் கிழிக்கப்படுவது, ஆயிரம் கழுகுகளால் கொத்திச் சிதறடிக்கப்படுவது.

நகரிழந்து கானேகியது ஐந்தாம் பிறப்பு. மெய்தேடி, உள்ளுறையும் பொய்யை மீளமீள அறிந்து ஒரு நீண்ட அலைவு. அறியா நிலங்களில் நாளும் இறந்துபிறக்கும் ஒரு பயணம். மீண்டு வந்து உபப்பிலாவ்யத்தில் அரசுசூடி அமர்ந்து பெரும்போரை நிகழ்த்தினேன். களத்தில் துரியோதனன் இறந்த அன்று நானும் உடனிறந்தேன். நீர்க்கடன் முடித்து இந்நகரில் நுழைந்தபோது ஆறாம் முறையாக பிறந்தேன். பிறவி ஒவ்வொன்றிலும் துயர் மகிழ்வு எனும் இரு நிலைகளின் உச்சங்களை அடைந்திருக்கிறேன். நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் என்னுள் கூர்கொண்டு முழுமைகொண்டு அலைக்கழித்திருக்கின்றன. விண்ணுறை ஒளித்தெய்வங்களையும் இருளிறைகளையும் அருகருகே பார்த்திருக்கிறேன். நான் வாழ்க்கையை வாழ்ந்து சலித்துவிட்டேன்.

இதுவரை என்னை ஆறு முறை உருக்கி மறுபடியும் வார்த்திருக்கிறேன். ஏழாவது முறை என்னை உருக்கி மீண்டும் புதிய அச்சில் ஊற்றிக்கொண்டாலொழிய எனக்கு மீட்பில்லை. உகந்த வாழ்வென்பது ‘போதும் இது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும்போது நிறைவடைவது என்பார்கள். நான் அவ்வண்ணம் போதும் போதும் என்று எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டாலும் கூட ஒவ்வொரு முறையும் மெய்யாகவே அது எனக்கு போதவில்லை என்றும் அறிந்திருந்தேன். போதும் என நான் தெய்வங்களிடம் சொல்லும்போது என்னை இங்கு நிறுத்தி வைப்பதற்காக எதையேனும் அவர்கள் எடுத்துப்போடுவார்கள் என்றும் அதை பற்றிக்கொண்டு மீண்டும் வாழ்ந்துவிடுவேன் என்றும் நான் நம்புவது எனக்கு தெரிந்திருந்தது. ஏனென்றால் அது வாழ்வின் மாயம்.

“இங்கு மண்ணாளும் தலைமை, நோயிலா உடல், பெருகி இனிக்கும் உறவுகள் என திருமகள் அருளும் அனைத்தும் அளிக்கப்பட்டாலும் கூட, அவற்றை முழுதறிந்து திளைத்தாலும் கூட வாழ்பவனுக்கு இங்குள்ள வாழ்க்கை போதுமென்று தோன்றுகையிலேயே அவ்வாழ்க்கை நிறைவுறுகிறது. போதும் என்று முழுதுளத்தாலும் தோன்றவேண்டும். எச்சமென துளியும் இருக்கலாகாது. என் வாழ்க்கையில் இப்போதுமட்டும்தான் அவ்வண்ணம் உணர்கிறேன். இதை நூறுமுறை விலகி நின்று எட்டு திசைகளிலிருந்தும் நோக்கி நோக்கி அவ்வண்ணமே அவ்வண்ணமே என உறுதிசெய்துவிட்டேன்.”

அங்குளோர் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தும் புரியாமலும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். “அவர் விட்டுச்செல்லப் போகிறார்” என்று குபேரர் சொன்னார். “ஆம், அது அறிந்ததுதானே?” என்று மிருத்திகன் சொன்னான். “அவரால் இந்நகரை ஆள முடியாது என நன்கறிந்திருக்கிறார், அவர் எண்ணியதைவிட இது மிகப் பெரியதாக ஆகிவிட்டது” என்று எவரோ சொன்னார்கள். “அவர் இளையோரின் துணையுடன் வாழ்ந்தவர். இன்று இளையோர் ஆற்றலிழந்துள்ளனர்.” எவரோ எங்கோ “நம்மை விட்டுச்செல்வதை நாம் துறப்பது அறிவுடைமை” என்றார். சிரிப்பொலிகள் எழுந்தன.

மேடையில் யுதிஷ்டிரன் தொடர்ந்து சொன்னார் “இந்நகர் என் இளவல் யுயுத்ஸுவின் ஆட்சியில் சிறப்புறுகிறது. அவன் துணைவி அரசி சம்வகையால் அன்னையென பேணப்படுகிறது. இங்கு என் கொடிவழி சிறக்க வேண்டும். என் இளையோனின் குருதிவழியில் எழுந்த மைந்தன் பரீக்ஷித் இங்குளான். அவன் குருதியில் எழும் மைந்தர்கள் இந்நகரை ஆள்வார்கள். பொலிவுற்று இன்னும் நெடுங்காலம் இது இங்கிருக்கும். இது நீடுவாழ்க!” அவையினர் கோல்களைத் தூக்கி “வெல்க அஸ்தினபுரி! சிறப்புறுக அமுதகலக்கொடி!” என்று ஏற்றுரை எழுப்பினர்.

“இங்கு அவையில் இரு செய்திகளை முறையாக நான் அறிவிக்க விரும்புகிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “ஏற்கெனவே அச்செய்தி இங்கு அனைவரும் அறிந்ததே. அரசுமுறையாக அறிவிக்கப்பட்டு உரிய சடங்குகளும் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் இங்கே அவற்றை நான் என் வாயால் அறிவிக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் என் குலத்தின் முடிவை நான் இங்கே தெய்வங்கள் மூதாதையர் சான்றோர் கேட்க உரைத்தாகவேண்டும். நான் இங்கிருந்து கிளம்புவதற்கான சடங்குகளில் அதுவே முதன்மையானது.”

“அவையோரே, என் தந்தையரில் ஒருவரும், அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரருக்கும் பாண்டுவுக்கும் இளையவரும், கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் மைந்தருமான விதுரர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கங்கைவாயிலாகிய ரிஷிகேசம் என்னுமிடத்தில் சதகுண்டம் என்னும் காட்டில், சதயூப முனிவரின் குருநிலையில் உயிர்துறந்தார்.” அவையினரில் உணர்ச்சிகளென ஏதும் எழவில்லையாயினும் முறைப்படி “பேரறிவர் வெல்க! நிலைகொள்க விதுரர் புகழ்!” என்று வாழ்த்தொலிகள் எழுப்பியபடி எழுந்து நின்றனர்.

வாழ்த்தொலிகள் ஓய்ந்து அவை மீண்டும் அமர்வது வரை யுதிஷ்டிரன் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் கைகூப்பி நின்றார். அவை அமைதியடைந்ததும் அவர் மீண்டும் சொல்லத்தொடங்கினார். “நான் கான்வாழ்வில் இருந்தபோது விதுரரிடமிருந்து அஸ்தினபுரிக்கு வந்த செய்தி எனக்கு அனுப்பப்பட்டது. விதுரர் தன் காலம் முடிந்ததென்று உணர்ந்து என்னை சந்திக்கவேண்டும் என்று அழைத்தார். நானும் எப்படியோ அதை எதிர்பார்த்திருந்தேன். நான் உபகௌதமர்களாகிய என் தவத்துணைவருடன் அக்காட்டிற்கு சென்றேன்.”

அன்னையும் விதுரரும் எளிய புற்குடிலில் இருந்தனர். விதுரர் நான் செல்வதற்கு எட்டு நாட்களுக்கு முன்னரே உணவும் நீரும் ஒழித்து வடக்குநோன்பில் இருந்தார். மெல்லிய துடிப்புபோல அவரிடம் சிறிதளவே உயிர் எஞ்சியிருந்தது. நான் சென்று சொல்லில்லாது அவர் காலில் வணங்கினேன். அவர் மிக மெலிந்து உதிரும் தருணத்தில் இருந்தார். என் அன்னை அங்கிருந்தார். என்னை அவர் விழிகளாலும் அறியவில்லை. எனக்கும் அவர் முற்றிலும் அயலவராகத் தோன்றினார். நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. அவரை என்னிடம் ஒப்படைப்பதுபோல நான் சென்றதுமே அவர் குடிலில் இருந்து வெளியே சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தார். நான் உள்ளே தர்ப்பைப் படுக்கைமேல் கிடந்த விதுரரின் அருகே அமர்ந்தேன்.

வடக்கிருந்து உயிர்நீப்பவர்கள் இறுதியை அருகே காணும்போது ஒரு நிறைவை அடைகிறார்கள். அதை நான் விதுரரிடம் கண்டேன். விதுரர் என்னிடம் ‘மைந்தா, நான் மண்நீங்கப் போகிறேன். விடைகொடு’ என்றார். நான் ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்றேன். ‘இன்னும் சிலகாலம் கழித்து எங்கோ இளைய யாதவர் மண் நீங்குவார். அவர் இங்கிருந்து செல்கையில் துவாபர யுகம் முற்றிலும் முடிகிறது. கலியுகம் அக்கணமே பிறந்துவிடுகிறது. ஒருகணம் கூட கலியுகத்தில் வாழலாகாது என்பதே எனது விழைவு. ஆகவே இம்முடிவை நான் எடுத்தேன்’ என்றார். நான் ‘நிறைவுறுக, தந்தையே!’ என்று தலைவணங்கினேன்.

அவர் என் கையை பற்றிக்கொண்டு ‘உண்ணாநோன்பில் உடல் நலிந்திருக்கிறேன். இப்போது என்னால் எழுந்து நடக்க முடியாது. இந்தத் தவநிலையின் தெற்கு மூலையில் இருக்கும் பேராலமரத்தின் அடியில் என்னை கொண்டு அமர வை’ என்றார். நான் அவர் கைபிடித்து அந்தப் பேராலமரத்தின் அடியில் அமர்த்தினேன். அவர் என்னிடமங்கே ஒரு சிறுகல்லில் யமனை நிறுவும்படி ஆணையிட்டார். நான் கிடைக்கல் மேல் நிலைக்கல்லாக யமதேவனை நிறுவினேன். அருகே அவர் ஊழ்க நிலையில் அமர்ந்தார். தன் கைகளை துறத்தல் முத்திரையில் மடியில் வைத்துக்கொண்டார். ‘என்னைத் தொட்டவாறு இரு. என் உடலில் இருந்து ஒளி அகன்றதும் கையை எடுத்துக்கொள்’ என்றார்.

நான் அவர் அருகே அமர்ந்து அவர் உடலை தொட்டுக்கொண்டிருந்தேன். நெய்குறையும் அகலில் சுடர் என அவர் உடலில் ஒளி குறைந்து வந்ததை கண்டேன். மரத்தின் மேலிருந்து ஒரு காகம் இறங்கி வந்து அவர் தோளில் அமர்ந்தது. அப்போது ஒரு சிறு துடிப்புடன் அவர் உடலில் எஞ்சிய உயிரின் ஒளி முற்றாக அகன்றது. ஊன்சிலை என அவர் மாறினார். நான் கையை எடுத்துக்கொண்டேன். அக்கணத்தில் என்னில் நிகழ்ந்தது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அதை சொல்லாக ஆக்க நான் முயலப் போவதுமில்லை. ஆனால் இப்போது இங்கு நின்று அனைத்தையும் கடந்துவிட்டேன், இனி ஏதும் இல்லை என்று சொல்லும் இவ்வுளநிலையை அப்போதுதான் முதல்முறையாக அடைந்தேன். அவர் அருகே நானும் ஊழ்கத்தில் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன்.

என் தவத்துணைவர் என்னைத் தேடி வந்தனர். அவர்களிடம் விதுரர் விண்ணேகிய செய்தியை சொன்னேன். விதுரரின் உடலை என்ன செய்வது என்னும் வினா எங்களுக்குள் எழுந்தது. அவர் இல்லறத்தார் என்பதனால் முறைப்படி எரியூட்டவேண்டும். அவர் குருதியில் பிறந்த மைந்தர்கள் நீர்க்கடன் செய்யவேண்டும். ஆனால் அவர் மைந்தர்களையும் மைந்தர்கள் அவரையும் துறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவர் மைந்தர்கள் மதுராவிலும் மதுவனத்திலும் இருந்தனர். அவர்கள் தங்களை யாதவர்களாகவே மாற்றிக்கொண்டுவிட்டிருந்தனர். மைந்தன் என என்னை நிறுத்தி அக்கடன்களை நான் செய்யலாகும்தான். அவர் இல்லறத்தாருக்குரிய நோன்புகள், கடன்கள் எதையும் இயற்றியவர் அல்ல. அவரை இல்லறத்தார் என்று கொண்டு எரியூட்டினால் அவர் விண்புகாது போகக்கூடும் என்றேன்.

அவர் முறைப்படி துறவும் பூணவில்லை. முனிவருக்குரிய வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளவில்லை. அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் தன் அகம்செலுத்திய வழியில் கட்டின்றி அலைபவராகவே இருந்திருக்கிறார். ஆகவே அவரை முனிவருக்குரிய முறையில் ஊழ்க அமர்வில் மண்ணில் புதைப்பதும் முறையானது அல்ல. அந்த ஐயம் எழுந்ததும் நாங்கள் சென்று சதயூபரிடமே அவர் உடலை என்ன செய்வது என்று கேட்டோம்.

சதயூபர் சொன்னார். ‘விதுரர் தான் எவர் என அறிவார். அவர் தன்னை யமனுக்குரிய திசையில் ஆலமரத்தின் அடியில் அமரச்செய்தது அதனால்தான். அவர் இல்லறத்தாரோ துறவியோ அல்ல எனில் பரிவிரஜர் என்ற நிலையில் இருப்பவர். அலைந்து திரிபவர், அமராதவர், இடங்களை முற்றொழிந்து செல்பவர். ஆகவே அவரை அவ்வண்ணமே அந்த மரத்தடியிலேயே விட்டுவிடுவதே நன்று. அவர் பறவைகளைப்போல இயல்பாக காட்டில் உதிர்ந்து பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் உணவாவார். அதுவே பரிவிரஜர்களுக்கு உகந்த இறுதியாகும்.’

நாங்கள் விதுரரை வணங்கி அவ்வண்ணமே அந்த ஆலமரத்தடியில் விட்டுவிட்டு மீண்டோம். அன்னையைப் பற்றி அப்போதுதான் உணர்ந்தேன். அவர் எங்கே என்று கேட்டேன். நான் குடிலுக்குள் நுழைந்ததுமே அவர் வெளியே சென்று மேற்குத்திசை நோக்கி சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்னையைத் தொடர்ந்து செல்லவேண்டும் என்று விரும்பினேன். விரக்தரைத் தொடர்வது பழி சேர்ப்பது என்று சதயூபர் என்னிடம் சொன்னார். ஆகவே நான் அவரை பின்தொடர முற்படவில்லை. ஆனால் ஏழாம் நாள் மலைக்குறவர்கள் வழியாக அன்னை திருதராஷ்டிரரும் காந்தாரியும் வாழ்ந்த சுகிர்தம் என்னும் காட்டுக்குச் சென்றுவிட்டதை அறிந்தேன்.

அஸ்தினபுரிக்கு முறையாக விதுரரின் மறைவை அறிவித்துவிட்டு நான் அங்கேயே சதயூபரின் குருநிலையில் காத்திருந்தேன். அவர் விதுரரின் தோற்றத்தைப் பற்றி சொன்னார். மாண்டவ்யர் என்னும் முனிவரின் கதை அது. மாண்டவ்யர் கொடுங்காட்டில் ஒரு குகையில் தனியாக சொல்லொடுங்கு தவம் செய்கையில் அரசனால் துரத்தப்பட்டு தப்பியோடும்போது அவ்வழி வந்த திருடர்கள் நிதிக்குவையை அவர் அருகே வைத்துவிட்டு விலகி ஓடினர். துரத்திவந்த அரசன் அவரே திருடன் என நினைத்து அவரைப் பிடித்து உசாவினான். தன் நோன்பை உடைக்க விழையாத மாண்டவ்யர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆகவே அவன் அவரை கழுவிலேற்றினான்.

உடலில் ஏற்றப்பட்ட ஆணியுடன் மாண்டவ்யர் விண்ணுலகு புகுந்தார். அங்கே யமனைக் கண்டு அவ்வண்ணம் பெருந்துயர் தனக்கு அமைந்தது ஏன் என்று கேட்டார். முற்பிறவியில் அவர் சிற்றுயிர்களைப் பிடித்து நாணலில் கோத்து விளையாடியமையால் என்று யமன் மறுமொழி சொன்னான். ஆனால் அவ்வாறு தான் செய்தது பன்னிரு அகவைக்கு முன்பு என்றும், பன்னிரு அகவை வரை செய்யும் செயல்கள் நேரடிப் பழி அளிப்பவை அல்ல என்று இந்திரநீதி சொல்கிறது என்றும் ஆணிமாண்டவ்யர் சொன்னார். ஆம் ஆம் ஆம் என்று இந்திரனின் உலகில் முரசு எழுந்தது.

‘துயருற்ற யமன் இந்திரனிடம் அப்பிழைக்கு நிகர்செய்ய தான் என்ன செய்யவேண்டும் என்று உசாவினான். அவன் மண்ணில் பிறந்து அத்துயரை தானும் அடையவேண்டும் என்று இந்திரன் சொன்னான். அதன்படியே யமன் அரண்மனைச் சேடி சிவையின் வயிற்றில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் குருதியில் விதுரராகப் பிறந்தான். சூதன் என்னும் சுடுசொற்களைக் கேட்டு வளர்ந்தார். விரும்பிய பெண்ணை இழந்தார். மணந்த பெண்ணுக்கு நிறைவளிக்கவில்லை என்று உணர்ந்து துயருற்றார். அவ்வண்ணம் நூற்றெட்டு முறை இவ்வாழ்வில் அவர் கழுவிலேற்றப்பட்ட வலியை அறிந்தார். திரௌபதி அவைச்சிறுமை செய்யப்பட்டபோதும், பீஷ்மரும் துரோணரும் கௌரவ மைந்தர்களும் கொல்லப்பட்டபோதும் கழுவில் அமர்ந்து துடித்தார். வலிநிறைவு அடைந்து விண்புகுந்தார். அவர் வெல்க!’ என்று சதயூபர் சொன்னார்.

“விதுரரின் உடலை மலைக்கழுகுகளும் கழுதைப்புலிகளும் ஓநாய்களும் இணைந்து விருந்தென உண்டன. பின்னர் சிறுபறவைகள் உண்டன. இறுதியாக எறும்புகளும் வண்டுகளும் உண்டன. வெள்ளெலும்புகள் அங்கே கிடந்தன. ஏழு நாட்கள் தொடர்ந்து மழை பொழிந்தது. மழை ஓய்ந்தபோது அவ்வெலும்புகளும் மறைந்துவிட்டிருந்தன. அவர் அமர்ந்திருந்த இடத்தில் இளநீல மலர்களுடன் சிறிய செடிகள் முளைத்திருப்பதைக் கண்டேன்” என்றார் யுதிஷ்டிரன். “அங்கிருந்து கிளம்புகையில் சதயூபர் சொன்னார். அவ்வண்னம் யமன் இங்கு வந்தது நன்று. விண்ணின் மலைமுடி என நின்ற அறம் இங்கே மண்ணில் துலாக்கோல் முள் என அலைவுறுவதை நேரில் கண்டு மீண்டான்.”

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 11

அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.

யுதிஷ்டிரன் சொன்னார். “அவையோர் அறிக, கங்காமுகம் எனப்படும் ரிஷிகேசத்தில் அமைந்த சிருங்கபாதம் என்னும் மலையடிவாரத்தில் குருகுலத்தின் பிதாமகரும் விசித்திரவீரியரின் மைந்தருமான எந்தை திருதராஷ்டிரரும் காந்தாரத்து சுபலரின் மகளும், அஸ்தினபுரியின் அரசியும், என் உடன்பிறந்தாரின் அன்னையுமான காந்தாரிதேவியும், யாதவ போஜகுலத்து குந்திபோஜரின் மகளும், எங்கள் அன்னையுமான குந்திதேவியும் ஆறாண்டுகளுக்கு முன்பு காட்டெரியில் சிக்கி உயிர்துறந்தனர்.”

அவையில் இருந்தவர்கள் “மாமன்னர் திருதராஷ்டிரர் வெல்க! குருகுலத்து மூத்தோன் விண்புகுக! காந்தாரத்து அரசி நிறைவுறுக! யாதவ அரசி நிறைவுறுக!” என்று கூவி தங்கள் கைக்கோல்களைத் தூக்கி வாழ்த்துரை எழுப்பினர். கைகளைக் கூப்பி எந்த உணர்ச்சியுமில்லாமல் அதை கேட்டுக்கொண்டிருந்தார் யுதிஷ்டிரன். ஓசை அடங்கியதும் அவர் பேசத்தொடங்கினார்.

“விதுரரின் உயிர்நீப்புக்குப் பின்பு சதயூபரின் குருநிலையில் நான் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். என் அன்னை அருகே திருதராஷ்டிரரின் காட்டிலிருப்பதை அறிந்திருந்தேன். நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அன்னையைச் சென்று பார்க்கவேண்டும் என்றும் அவர் என்னிடம் சொல்ல ஏதேனும் எஞ்சியிருக்கிறதா, நான் ஆற்றவேண்டியவை குறித்த ஆணையேதேனும் உள்ளதா என்று அறியவேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் செல்லவும் துணிவு வரவில்லை. அன்னைக்கும் எங்களுக்குமிடையே நெடுந்தொலைவு உருவாகிவிட்டிருந்தது. அத்தொலைவை இவ்வுலகிலுள்ள எவ்வுணர்வைக்கொண்டும் கடந்துவிட முடியாது.”

அப்போது திருதராஷ்டிரரின் காட்டிலிருந்து ஓர் ஒற்றன் வந்து செய்தியை அறிவித்தான். திருதராஷ்டிரர் காந்தாரியுடன் வாழும் காடு அனல்கொண்டிருக்கிறது. அவர்கள் அதில் சிக்கிக்கொண்டிருக்கலாம். நான் உடனே கிளம்பி அவர்களை மீட்கவேண்டும் என்று முனைப்பு கொண்டேன். சதயூபர் தன் குடிலில் இருந்து வெளியே வந்து தொலைவில் இருந்து எழுந்த பறவைக்குரல்களையும் எரிபுகையின் மணத்தையும் கொண்டு கணித்து ‘அந்நெருப்பை நீங்கள் சென்றடையவே முடியாது. அது மலையிறங்கி வரும் நெருப்பு. மிக விரைவாக வரும். இரு கைகளை விரித்து சூழ்ந்துகொள்ளும். அதிலிருந்து அவர்கள் எவ்வகையிலும் தப்பமுடியாது’ என்றார்.

நான் அதில் துயர்கொள்ளவில்லை. எவ்வுணர்வையும் அடையவில்லை. அங்கே நிகழ்ந்தது என்ன என்பதை மறுநாள் அங்கிருந்து வந்த சங்குலன் சொன்னான். எந்தையின் உடற்காவலனாகவும் அணுக்கனாகவும் அஸ்தினபுரியில் திகழ்ந்தவன் அவன். காட்டிலும் அவனே அவர்களுடன் இருந்தான். தந்தைக்குரிய உணவை வேட்டையாடிக் கொண்டுவந்து அளிப்பதிலிருந்து இரவில் அவருக்காக தர்ப்பை மஞ்சம் அமைப்பது வரை அனைத்தையும் அவனே செய்தான்.

குந்திதேவி தனித்து காட்டினூடாக அங்கே வந்ததைப் பற்றி சங்குலன் சொன்னான். ஒருநாள் உச்சிப்பொழுதில் காட்டில் அசைவு எழக் கண்டதுமே கையில் வில்லம்புடன் அவன் எழுந்துசென்று நோக்கினான். செடிகளை ஊடுருவி அணுகியது குந்திதேவி எனக் கண்டதும் அருகணைந்து வணங்கினான். குந்திதேவியை அழைத்துச்சென்று காந்தாரியிடம் சேர்த்தான். காந்தாரியின் அருகில் திருதராஷ்டிரர் இருந்தார். விதுரர் விண்புகுந்தார் என்று திருதராஷ்டிரரிடம் குந்திதேவிதான் சொன்னார். ‘அவர் விண்புகுவதை காகங்கள் எனக்கு அறிவித்தன’ என்றார்.

திருதராஷ்டிரர் ஓசையின்றி கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார். காந்தாரியும் அமைதியாக விழிநீர் சிந்தினார். ஆனால் குந்திதேவி எவ்வுணர்வையும் காட்டவில்லை. அவர்கள் அத்துயரால் இணைந்தவர்களாக ஒன்றாக அங்கிருந்தனர். அதன்பின் குந்திதேவி காந்தாரிதேவியின் குடிலிலேயே தங்கியிருந்தார். அவர்களிருவருக்கும் தேவையான பணிவிடைகளை செய்தார். காலையில் மூவரும் கங்கைக்கரைக்குச் சென்று ஆற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அந்தியில் மலைகளில் கதிரணைவதை பார்த்துக்கொண்டிருந்தனர். இரவில் ஒன்றாக, ஒரு சொல்லும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் வாழ்ந்த காடு கோடையில் கருகத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கே பெரும்பகுதி தலைக்குமேல் எழுந்த நாணல்கள்தான். முதல் மழையில் செழித்து கோடையில் வறண்டு காய்வன. காற்றில் அவை சலசலக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. புல்விதைகள் பறந்து சுழன்ற காற்றுவெளியில் முகம் சுளித்து அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் சங்குலனிடம் ‘எரியெழுகையில் இவை அழியும், விதைகள் அழிவதில்லை. அவை மண்ணுக்கு அடியில் வாழும்’ என்றார். ‘மேலே எரி எழுவதென்பது உள்ளிருப்பவை முளைப்பதற்கான வழியொருக்குவதற்காக மட்டுமே. புகை வானில் சென்று தொட்டு முகில்களிடம் சொல்கிறது, களமொருங்கிவிட்டது என்று.’

சங்குலன் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். அவர் அவ்வாறு மிகையாகப் பேசுபவர் அல்லர். ‘புல்லுக்குத் தெரிந்திருக்கிறது, அது ஆயிரம்மேனி விதைபெருக்கினால் அரைமேனியே பொலியும் என்று. ஒவ்வொரு உயிருக்கும் எஞ்சுவதென்ன என்னும் தெளிவிருக்கிறது. அவை துயர்கொள்வதில்லை’ என்று அவர் சொன்னார். ‘எழுந்து அழிந்து எழுந்து முடிவில்லாமல் அவை தங்களுக்கு பிரம்மம் அளித்த ஆணையை நடிக்கின்றன. அதுவே உயிர்களின் கடன்.’ இரு கைகளையும் விரித்து ‘பறக்கும் இவ்விதைகளுக்குமேல் புல்லுக்கு என்ன உரிமையும் உறவும் உள்ளது? கொண்டுசெல்லும் காற்றுக்கும் அவற்றின் பயணமென்ன என்று தெரியுமா?’ என்றார்.

அன்று காலையில் திருதராஷ்டிரர் கங்கையில் நீராடச் சென்றபோது மூக்கைச் சுளித்து தலையை சரித்து ஒரு திசையை பார்த்தார். பின்னர் காற்றில் மீண்டும் மீண்டும் மூக்கை வைத்தபின் சங்குலனை அருகழைத்து ‘அக்காட்டிற்குமேல் மலைகளின் இடுக்கில் புல்லில் அனலெழுந்துள்ளது’ என்றார். ‘அந்த அனல் மேலிருந்து கீழிறங்கி வந்துகொண்டிருக்கிறது. உச்சிப்பொழுதுக்குள் அது இங்கே வந்துவிடும்.’ சங்குலன் பதறி ‘உடனே கிளம்பிவிடுவோம்’ என்றான். ‘இல்லை, நேற்றே எனக்கு என் மூதாதையர் ஆணையை அளித்துவிட்டனர். நான் இங்கிருப்பேன். இந்த எரியில் உயிர்துறப்பேன்’ என்றார்.

சங்குலனும் அனல்மணத்தை உணர்ந்துகொள்ளத் தொடங்கினான். காட்டில் இருந்து பறவைகள் கலைந்து எழுந்து விண்ணில் கூவியபடி சுழன்று அகன்று செல்லும் ஓசைகள் கேட்டன. முட்டையிட்ட பறவைகளும் சிறகு முளைக்காத குஞ்சுகள் கொண்ட பறவைகளும் தவித்து கூவின. புல்லை வகுந்தபடி நாகங்கள் அப்பால் சென்றன. எலிகள் கூட்டமாகச் சென்று கங்கை நீரில் பாய்ந்து தளதளத்து நீந்தி சதுப்புகளை நோக்கி சென்றன. எறும்புகள் மண்ணுக்குள் சென்று மறைந்தன. எரிபுகை கொடி என எழுந்து விண்ணைத் தொட்டு நின்றது.

திருதராஷ்டிரர் காந்தாரியிடமும் குந்தியிடமும் ‘இன்று உச்சிப்பொழுதுக்குள் இங்கு அனல் எழும்’ என்றார். காந்தாரி ‘ஆம்’ என்றார். குந்திதேவி ‘அனல் நன்று’ என்றார். திருதராஷ்டிரர் சங்குலனிடம் ‘மைந்தா, அருகணைந்து என் கால்தொட்டு வணங்கு. உன்னை நான் வாழ்த்துகிறேன்’ என்றார். கண்ணீருடன் சங்குலன் அவருடைய காலைத் தொட்டு வணங்கினான். அவர் தலைமேல் தொட்டு வாழ்த்தி ‘அனலில் இருந்து தப்பும் வழி ஒன்றே, கங்கையில் பாய்ந்துவிடு… நீர் வழியாகவே நீந்திச் சென்று சதயூபரின் குடில்களை அடைந்து இங்கு நிகழ்ந்ததை சொல்’ என்றார். சங்குலன் ‘ஆணை’ என்று வணங்கினான்.

‘நீ இங்கிருந்து சென்ற பின்னர் மூன்று மங்கையரை மணம்கொள்ள வேண்டும், உனக்கு முப்பது மைந்தர் பிறப்பார்கள். உன் கொடிவழிகள் செழிக்கும்’ என்றார் திருதராஷ்டிரர். ‘நீ எனக்கு ஆற்றிய ஒவ்வொன்றையும் அரசனாக அல்ல, தந்தையாக நின்று பெற்றுக்கொள்கிறேன். குலமூத்தோனாக நின்று உன் கொடிவழிகளுக்கும் துணை என அமைவேன். உன் குடியின் ஒவ்வொரு நலத்திற்கும் வாழ்த்துரைப்பேன். உன் மரபினர் என்னை உங்கள் முற்றங்களில் மூதாதையென நிறுவி வழிபடுக!’ என்றார். அவன் விழிநீர் சொட்ட கால்தொட்டு வணங்கினான். ‘செல்க!’ என்றார் திருதராஷ்டிரர்.

அப்போது அக்குடிலின் மண்திண்ணையில் செவ்வண்ணப் பறவை ஒன்று வந்தமைந்தது. அவர் ஓசை கேட்டு திரும்பி ‘அது என்ன பறவை?’ என்றார். ‘செவ்வண்ணத்தில் ஒரு சிறு குருவி’ என்றான் சங்குலன். ‘அது அனல்பறவை. எங்களுக்கான அழைப்பு வந்துவிட்டது. நன்று. செல்க!’ என்றார். சங்குலன் தலைவணங்கி ‘ஆணை’ என்று கூறி அங்கிருந்து கிளம்பி கங்கையை நோக்கி வந்தான். தொலைவில் அனலும் புகையும் எழுந்து சூழ்வதை அவன் கண்டான். கங்கைக்கரை அருகே ஒரு பேராலமரத்தின்மேல் ஏறி அவன் பார்த்தபோது அவர்கள் வாழ்ந்த காடு செந்தழலால் ஆனதாக இருந்தது. தொலைவில் இருந்து பார்த்தபோது அது கோடையில் மலர் பூத்து பொலிந்திருக்கிறது என்றே தோன்றியது.

சங்குலன் கீழிறங்கி வரும்போதே எரியெழுந்த காட்டின்மேல் மழை இறங்கத் தொடங்கிவிட்டிருந்தது. அங்கு மட்டும் வானம் உருகி மண்ணில் இறங்கியதுபோல தோன்றியது. சூழ்ந்திருந்த கோடை வெம்மைக்குள் அத்திசையிலிருந்து வந்த புகைக்காற்றில் நீராவியும் குளிரும் இருந்தன.

அவையினர் “திருதராஷ்டிரர் வெல்க! குருகுல மைந்தர் வெல்க! மும்முடி சூடிய அரசர் வெல்க! விண்புகுக பெருந்தோளர்! சிறப்புறுக பெருந்தந்தை! பிரஜாபதிகளுடன் அமர்க விசித்திரவீரியரின் மைந்தர்! இளையோனுடன் தோள் தழுவுக இணையிலா பேரன்பர்! மைந்தருடன் குலவுக பெருங்களிறு! கௌரவர்கள் வாழ்க! வாழ்க துரியோதனன்! வாழ்க துச்சாதனன்! வாழ்க நூற்றுவர்ப்பெருங்குலம்!” என்று வாழ்த்தினர். காந்தாரிக்கும் குந்திக்கும் விதுரருக்கும் வாழ்த்துரைகள் எழுந்தன.

“சங்குலன் சதயூபரின் குருநிலைக்கு நீர்வழியாக வந்தான். எனக்குரிய செய்தியை உரைத்துவிட்டு வடக்கு நிலம் நோக்கி சென்றான்” என்று யுதிஷ்டிரன் தொடர்ந்தார். ”நான் என் தவத்தை முடிவுசெய்தாகவேண்டும் என்று விரும்பினேன். ஆகவே சதயூபரின் குருநிலையிலேயே கடுநோன்பு ஆற்றி ஒடுங்கியிருந்தேன். தவநிறைவு அடைந்த பின்னர் என்னை இங்கிருந்து செல்ல ஒப்புதல் அளிக்கும் ஒரு செய்திகாக காத்திருந்தேன். அவ்வண்ணமே இளைய யாதவர் விண்புகுந்த செய்தி என்னை வந்தடைந்தது. அதன் பின்னரே நான் அஸ்தினபுரிக்குத் திரும்ப முடிவெடுத்தேன். என் இளையோருக்கு செய்தியை அனுப்பும்படி யுயுத்ஸுவுக்கு தெரிவித்தேன். நான் அஸ்தினபுரியின் அரசன் அல்ல என்பதனால் இந்நகரின் எந்தப் படகுகளையும் வண்டிகளையும் ஏற்காமல் நடந்து இந்நகர் நோக்கி வந்துகொண்டிருந்தேன்.

நான் வரும் வழியெங்கும் சிற்றூர்களிலெல்லாம் இளைய யாதவரின் விண்புகுதலை மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இளஞ்சிறுவர்களுக்கு நீலவண்ணம் பூசி, மஞ்சளாடை அணிவித்து, பீலி சூட்டி, குழல் கையில் அளித்து தங்கள் இல்லமுற்றங்களில் விளையாடவிட்டனர். அவர்களுக்கு வெண்ணையை உண்பதற்கு அளித்தனர். வெண்ணையை உருட்டி அம்மைந்தரை எறிந்து துரத்தி விளையாடினர். மலர்மாலைகளால் மைந்தரை அடித்தும் கைகளைக் கட்டி கொண்டுவந்து உரலில் பிணைத்தும் நகையாடினர். எங்கும் சிரிப்பும் கூச்சலுமாக இருந்தது. ஒரு விண்புகுதல் அவ்வண்ணம் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டதை நான் முன்பு அறிந்ததே இல்லை.

இந்நகரை நான் தனியாக அணுகியபோது என் இளையோன் அர்ஜுனன் எனக்காக கோட்டைக்கு வெளியே சாலையில் காத்து நின்றிருந்தான். அவன் முன்னரே அனைத்தையும் அறிந்திருந்தான். இளைய யாதவர் விண்புகுந்த முறையைப் பற்றி அவன் எனக்கு விரித்துரைத்தான். இருபுறமும் நின்றிருந்த கொன்றைகள் பூத்து பொன் சொரிந்தன. பொன்பொடி பரவிய தரையில் இளைய யாதவரின் விண்ணெழுகையைச் சொல்லியபடி நாங்கள் நடந்தோம். அப்போது எவனோ ஒரு பாணன் ‘**பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே’ என்று பாடிக்கொண்டிருப்பதை கேட்டேன். என் உடல் மெய்ப்பு கொண்டது. கண்ணீருடன் கைகூப்பி நின்றேன்.

அதன்பின் இந்நகருள் வரும் வழியெல்லாம் அவ்வரியே வெவ்வேறு நாவுகளிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. ‘நல்லவர்களைக் காக்க அல்லவர்களை அழிக்க அறம் நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பேன்.’ கடலில் இருந்து ஓர் அலை எழுந்து வந்து நிலத்தை அறைந்தது. இங்கு இருந்த அனைத்தையும் இடித்துத் தள்ளியது. ஒரு கல்மேல் இன்னொன்று இல்லாமல் ஆக்கிவிட்டு மீண்டது. அதன் ஆணைப்படி நாம் மீண்டும் கட்டியுள்ளோம். இதைக் காப்பது கடலின் பொறுப்பு. அலை ஓயாத பெருங்கடலுக்கு வணக்கம்.

“பராசரரின் புராணசம்ஹிதையில் விண்ணில் மாலவன் உறையும் பாற்கடல் பெருமுரசென ஓயாது அலையெழுந்து அறைந்து கொண்டிருந்தது என்று சொல்லப்படுகிறது. வெண்பெருமுரசு. அவ்வலைகள் அமுதை திரட்டிக்கொண்டே இருக்கின்றன. இங்கு சொல்லென்று நாம் உணர்வது அதன் ஓசையை, அறமென்று நாம் அறிவது அதன் அலைகளை, மெய்மையென்று சுவைப்பது அதன் அமுதின் இனிமையை. அமுதின் ஆழியில் அவன் மீண்டும் சென்றமைக! அறிதுயிலில் அவன் அமிழ்க! அவன் கனவில் புடவிகள் எழுந்து நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரன்.

அவையில் இருந்தவர்கள் எழுந்து “வெல்க யாதவர் புகழ்! நிலைகொள்க ஆழியன் சொல்! எழுக அவன் படை! திகழ்க அவன் உரைத்த வேதம்!” என்று கூவினர். “அழியாச் சொல் வெல்லட்டும்! உலகுபுரக்கும் வேதம் வெல்லட்டும்! நிலைகொள்க பெருநெறி! வெல்க என்றுமுள மெய்யறிதல்!”

யுதிஷ்டிரன் மீண்டும் கைகூப்பி “இறுதியாக ஒன்றை அறிவிக்க விழைகிறேன். என் பெயர்மைந்தன் பரீக்ஷித் இங்கு அவை புகுவான். இனி இந்நகர் அவனுக்குரியது. அவனுக்கு ஏழு அகவை ஆகிறது. இன்னும் பதினொரு ஆண்டில் பதினெட்டாவது அகவை நிறைகையில் இங்கு அவன் முடிசூடி அமர்வான். இப்போது அவனை இங்கே குடித்தலைமைக்குரிய மைந்தனாகவும் அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசனாகவும் அறிவிக்கிறேன்” என்றார்.

“பதினொரு ஆண்டுகளுக்குப் பின் இங்கே நிகழவிருக்கும் அந்த விழாவை இங்குள்ள மூத்தவரும் சான்றோரும் அந்தணரும் அறிவரும் படிவரும் இணைந்து சிறப்பிக்கவேண்டும் என்று இப்போதே கோருகிறேன். அப்போது நாங்கள் இருக்கப்போவதில்லை. நாங்கள் இன்று அந்தி எழுகையிலேயே இங்கிருந்து நகர்நீங்குகிறோம். இந்நகரில் என்றும் இளைய யாதவரின் அழியாச் சொல் திகழவேண்டும். யயாதி, குரு, ஹஸ்தி, பீஷ்மர் முதல் துரியோதனன் ஈறாக குருகுலத்தின் மூதாதையர் பேணப்படவேண்டும். என்றும் நெறிகளும் முறைகளும் வழுவாதொழுக வேண்டும்.”

“நாங்கள் நகர்நீங்கும் முடிவுடனேயே இந்நகருக்குள் நுழைந்தோம். இப்பிறவியில் இனி நாங்கள் செய்வதற்கொன்றுமில்லை. எழுயுகத்தில் நாங்கள் இங்கு நடித்த வாழ்க்கை ஒரு அழியாத பாடமென்று அமைக! இதை நம் மைந்தர்கள், வருந்தலைமுறையினர் ஆய்ந்து தெளிக! இது அரங்கொழியும் பொழுது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “எவருமறியாது உடலிலிருந்து உயிர் என இறுதி நகர்நீங்கல் நிகழவேண்டும் என்று நூல் சொற்கள் கூறுவதனால் இக்கணமே எங்களுக்கு விடை கொடுங்கள். நான் விண்புகுவதற்குரிய பயணம் அது. மானுடனாக நின்று என் குடிகளுக்கும் கொடிவழியினருக்கும் நான் அளிக்கும் இறுதி வாழ்த்து இது. நலம் பெறுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரன்.

குடியினர் விழிநீருடன் கைகூப்பி “அறச்செல்வர் வாழ்க! யுதிஷ்டிரன் வாழ்க! பாண்டுவின் மைந்தன் வாழ்க! குருகுலத்து மூத்தோன் வாழ்க! அஸ்தினபுரியின் மும்முடி சூடிய சக்ரவர்த்தி வாழ்க!” என்று வாழ்த்துரைத்தனர். அலையலையாக அவ்வாழ்த்து ஒலித்துக்கொண்டிருக்க பாண்டவர்கள் மேடையில் தோன்றி அவையினரை வணங்கினர். “பெருந்தோள் பீமன் வெல்க! வெல்வேல் விஜயன் வாழ்க! நகுல சகதேவர்கள் வெல்க!” என அவை வாழ்த்து கூவிக்கொண்டே இருந்தது.

முரசொலியும் கொம்பொலியும் எழுந்தன. அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியுடன் வீரன் ஒருவன் உள்ளே வந்தான். தொடர்ந்து மங்கலச்சேடியர் தாலங்களுடன் இரு நிரைகளாக வந்தனர். இசைச்சூதர்கள் முழக்கமிட்டபடி தொடர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் மூன்று அந்தணர்களால் கங்கை நீர் தெளித்து தூய்மைப்படுத்தப்பட்ட வழியினூடாக பரீக்ஷித் மெல்ல நடந்து மேடைக்கு வந்தான். அவனை தொட்டும் தொடாமலும் தாங்கியபடி இரு ஏவலர் பின்னால் வந்தனர்.

அவனைக் கண்டதும் அவையினர் “இளவரசர் வாழ்க! குருகுலத்து தளிர் வெல்க!” என்று வாழ்த்துரைத்தனர். ஆனால் பரீக்ஷித்தின் தோற்றத்தையே அவர்களின் விழிகள் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்தன. ஆகவே குரல்கள் செயற்கையாக உரக்க ஒலித்தன. பரீக்ஷித்தால் நடக்க முடியவில்லை, ஆங்காங்கே நின்று நடந்தான். அவன் கால்கள் நடப்பதற்கு உரியவை அல்ல என்று தோன்றியது, அவை குழந்தைகளின் உள்ளங்கைகள் போலவே தோன்றின.

யுயுத்ஸு மைந்தனை தலைவணங்கி கைபற்றி அழைத்து வந்து அங்கிருந்த பொன்னாலான அரியணையில் அமரவைத்தான். மைந்தன் சற்று உயரமாக வளர்ந்திருந்தான். ஆனால் வெளிறி அகழ்ந்தெடுத்த கிழங்கு போலிருந்தான். அவன் உடலில் அப்போதும் தோல் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. ஆங்காங்கே பாசி படிந்ததுபோல் செந்நிறமும் பச்சை நிறமும் இருந்தது. சிறிய உதடுகளும் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. நீலக் கண்களில் நோக்கும் தெளியவில்லை. அவன் ஒரு நீர்த்துளிபோல, எத்தருணத்திலும் உதிர்ந்துவிடுபவன்போல தெரிந்தான்.

யுயுத்ஸுவும் சம்வகையும் கைகாட்ட ஏழு குலமூத்தோர் பெரிய தாலத்தில் பட்டத்து இளவரசர் மணிமுடியை கொண்டுவந்து அவனுக்கு அணிவித்தனர். குடிமூத்தோர் இளவரசனுக்குரிய செங்கோலை அவனிடம் கொடுத்தனர். அந்தணர்கள் அரிமலரிட்டு வாழ்த்தி கங்கை நீர் தெளித்து அவனுக்கு முழுக்காட்டு செய்தனர். சடங்கு சுருக்கமாகவும் விரைவாகவும் நடந்தது. அவை வாழ்த்துரைத்துக் கொண்டே இருந்தது. அவையிலிருந்தோர் அனைவரும் அரிமலரிட்டு வாழ்த்தியபின் பரீக்ஷித் எழுந்து அவையினரை வணங்கினான். நெடுநேரம் அரியணையில் அமர்ந்திருக்க இயலாதென்பதனால் மும்முறை அவையை வணங்கி ஏவலர் கைபற்றி மெல்ல நடந்து அவை நீங்கினான்.

யுதிஷ்டிரன் மீண்டுமொருமுறை அவையை வணங்கி திரும்பி வெளியே சென்றார். அவருடன் இளையோரும் அகன்றனர். அவையில் கலைவொலி எழுந்தது. “நகர்நீங்குகையில் அவர்கள் அரசியையும் உடன் அழைத்துச் செல்கிறார்களா?” என்று குபேரர் கேட்டார். “பெண்டிரை அவ்வாறு அழைத்துச் செல்லும் வழக்கமில்லை. ஆனால் காட்டுப்பயணங்களுக்கெல்லாம் அரசி உடன்சென்றிருக்கிறார். ஆகவே செல்லக்கூடும்” என்று மிருத்திகன் சொன்னான். நிமித்திகன் மேடைக்கு வந்து அவை கலைவதை அறிவித்தான். நிரைநிரையாக அனைவரும் எழுந்து வாயில்களை நோக்கி சென்றார்கள். ஆனால் முற்றத்தை நோக்கி சென்று தங்கள் தேர்களை நாடவில்லை. அங்கேயே தயங்கி நின்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

குபேரர் அங்கு நின்றிருந்த முதுநிமித்திகரிடம் “விண்ணேகும் பயணத்தில் ஐவரும் அரசியை அழைத்துச் செல்கிறார்களா?” என்றார். “ஆம், அவர் முடி சூடி நாடாண்டவர். அரியணை அமர்ந்து செங்கோல் ஏந்தியவர். அரசருக்குரிய நெறிகளையே கடைபிடிக்க வேண்டும்” என்றார் நிமித்திகர். “பிற அரசியர்?” என்று மிருத்திகன் கேட்டான். “அவர்கள் அரசியருக்குரிய நெறிகளுக்குள் நிற்பவர்கள். பாண்டவரின் பிற துணைவியர் அவரவர் நாடுகளில் இருப்பார்கள். கொழுநர் விண்ணேகிய பிறகு கைம்மை நோன்பு நோற்று வாழ்வை நிறைவு செய்வார்கள். முதலரசி மட்டும் அவருடன் விண் வரைக்கும் செல்வார்” என்றார்.

“அவர்கள் எப்போது கிளம்புகிறார்கள்?” என்று மரகதர் கேட்டார். “அதை அவர்களே அறிவித்துவிட்டனர், இன்று அந்தியில்” என்றார். “அந்தி நற்பொழுது அல்ல” என்றார் குபேரர். “அது உலகச்செயல்களுக்கு. அவை இருபுறம் கொண்டவை. இது ஒருபுறம் மட்டுமே கொண்ட செயல்” என்றார் நிமித்திகர். அங்கே நின்றிருந்தவர்கள் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் நிறைந்தவர்களாகத் தெரிந்தனர். ஒரு முதியவர் அருகே வந்து “நிமித்திகரே, மெய்யாகவே இளைய யாதவர் விண்புகுந்துள்ளாரா?” என்றார். “ஏன் ஐயம்?” என்றார் நிமித்திகர். “அவர் இறவான் அல்லவா? அவருக்கே இறப்பென்றால் இங்கே எதற்குத்தான் வாழ்வு?” என்று அவர் கேட்டார். “இங்கே அவையில் அவர் இறக்கவில்லை என்னும் சொல் அளிக்கப்படும் என்று நம்பியே நான் வந்தேன்.”

“இறவாத ஒன்றே உள்ளது” என்றார் நிமித்திகர். “அது இளைய யாதவரின் சொல். அவர் அளித்த ஐந்தாம் வேதத்தின் மணிமகுடம் அது. அது படைக்கலமாகும்போது கூர்முனை. மரமாகும்போது மலர்த்தேன்.” முதியவர் நிறைவின்மையுடன் “அவர் எவ்வண்ணம் இறக்கமுடியும்? அது இயல்வதா என்ன?” என்றார். நிமித்திகர் புன்னகைத்தார். “அவர் இறக்கவில்லை, அவர் இங்கிருக்கிறார். நான் அவரை உணர்கிறேன். அவர் எழுவார். நான் அழைத்தால் அவர் வருவார்” என்று முதியவர் உணர்வெழுச்சியால் கலங்கிய விழிகளுடன் சொன்னார்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 12

அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே அவர்களை முற்றாக மறந்து வேறெங்கோ திகழ்ந்துகொண்டிருந்தது.

அரண்மனையின் தெற்குவாயில் வழியாக தெற்குக் கோட்டைமுகப்புக்கு தனிப்பாதை இருந்தமையால் அவர்கள் செல்வதை எவரும் பார்க்கவில்லை. தெற்குக் கோட்டைக்கு அப்பால் நீத்தோர் நிலம் வழியாக குறுங்காட்டுக்குள் நுழைந்து அவர்கள் கங்கைக் கரைநோக்கி சென்றனர். செல்லும் வழியெங்கும் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை.

மறுநாள் முதற்காலையில் யுதிஷ்டிரனும் இளையோரும் தேவியும் அஸ்தினபுரியின் கங்கைப்படித்துறையில் அமைந்திருந்த அம்பையன்னையின் ஆலயத்தை சென்றடைந்தனர். முதற்காலைப் பொழுதில் அங்கே பூசகர் மட்டுமே இருந்தார். நெடுங்காலம் சிற்றாலயமாக இருந்த அதை அரசி சம்வகையின் ஆணையின்படி எடுத்துக் கட்டியிருந்தனர். கல்லாலான ஆலயம் மூன்றடுக்கு கோபுரமும் பதினெண்கால் முகப்புமண்டபமும் சுற்றம்பலமும் கொண்டதாக இருந்தது. அவ்வளைவுக்குள்ளேயே குகனடியாரின் சிற்றாலயமும் இருந்தது.

அஸ்தினபுரியின் புதிய குடிகளுக்கு அம்பையன்னை எவரென்று தெரிந்திருக்கவில்லை. சூதர்களால் அவர்களுக்கு சொல்லப்பட்ட கதை பலவாறாகத் திரிந்து பிறிதொன்றாக அவர்களின் உள்ளத்தில் அமைந்திருந்தது. காசிநாட்டு அரசனின் மகளாக தீத்தழலில் பிறந்த அன்னை கங்கையின் அலைகளுக்கு அடியில் வாழ்ந்த ஏழு அசுரர்களை அழித்து மீண்டும் தீத்தழலாகவே ஆனாள் என்று அக்கதை சொன்னது. பெண்குழந்தை பிறந்தால் ஓராண்டு அகவைநிறைவு நாளில் அதை அங்கே கொண்டுவந்து, நாவில் முப்புரி வேலால் எழுதி படையலிட்டு, கொடை அளித்,து வணங்கி மீளும் வழக்கமிருந்தது. அஸ்வினிமாதம் எழுநிலவு எட்டாம்நாள் அங்கே திருவிழா கொண்டாடப்பட்டது.

காலையில் செவ்விளக்கொளியில் செம்பட்டாடை அணிந்து செம்மலர்மாலை சூடி மும்முடி தலையில் எழுந்திருக்க, முப்புரிவேல் ஏந்தி அன்னை அமர்ந்திருந்தாள். எரிகழல் அணிந்த வலக்கால் சற்றே முன்னகர்ந்திருந்தது. அதன்கீழிருந்த பீடத்தில் தலை அக்காலடிக்குக் கீழே அமையும்படி அஸ்தினபுரியின் அரசனின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அது விசித்திரவீரிய மன்னரின் வடிவில் அமைந்திருந்தது. அன்னையின் வெள்ளிவிழிகளில் சுடர்கள் ஒளிவிட்டு அசைந்தன.

யுதிஷ்டிரன் குகனடியாரை வணங்கிவிட்டு அன்னையின் கருவறைக்கு முன் வந்து நின்றார். அன்னையின் தழலாடும் விழிகளை நோக்கியபோது மெல்லிய முனகலோசை ஒன்று அவரிடமிருந்து எழுந்தது. கைகளை தலைக்குமேல் கூப்பி எட்டுறுப்பும் நிலம்பட விழுந்து வணங்கினார். எழுந்து திரும்பி நோக்காமல் கங்கையை நோக்கி சென்றார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக திரௌபதியும் வணங்கி அவரைத் தொடர்ந்து சென்றனர். அன்னை அவர்களை அறியாத பிறிதொரு அசையாத காலத்தில் விழிதுலக்கி அமர்ந்திருந்தாள்.

அவர்கள் கங்கைக் கரையோரமாக நடந்து கங்கையின் தோற்றுவாயான கங்கோத்ரியை நாற்பத்தியாறு நாட்களில் சென்றடைந்தனர். அப்பயணத்தில் அவர்கள் ஒருமுறைகூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் விழிகளை பிறிதொருவர் பார்க்கவில்லை. ஒருவர் உடன் வருவதை பிறர் அறியலாகாது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தை முழுத் தனிமையுடன் வைத்திருக்கவேண்டும் என்பதும் நகர்நீங்குதலின் நெறி.

மரவுரி ஆடை அணிந்து, மண்ணில் படுத்து, மலை உணவுகளை உண்டு, ஆற்று நீரள்ளிக் குடித்து, அனைத்து நாளொழுங்குகளையும் துறந்து, கால் வெடிக்க, தலைமயிர் சடைகொள்ள, உடல் ஒளியிழந்து பொடி படிய சென்ற அவர்கள் காட்டுவிலங்குகள் போலவே மாறிவிட்டிருந்தனர். காட்டுவிலங்குகளுக்குரிய உடல் அசைவுகளும் புலன்கூர்மையும் சொல்லில்லா விழிகளும் அவர்களுக்கும் அமைந்துவிட்டிருந்தன. உள்ளுணர்வால் அவர்கள் வழி உணர்ந்தனர். மணத்தாலும் விழியாலும் தங்கள் உணவை தாங்களே தேடிக்கொண்டனர். இரவுகளில் ஒற்றைப்புலன் விழித்திருக்க துயின்றனர். ஒரு சொல்லின்றி காலையில் விழித்தெழுந்தனர்.

அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியபோதே அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை நிறுத்தியிருந்தனர். பின்னர் விழிதொட்டுக்கொள்வதை முற்றாகத் தவிர்த்தனர். உள்ளத்தில் கொந்தளித்த சொற்கள் ஒழுகி வற்றி வறண்டபோது முயன்றாலும் பேசிக்கொள்ள முடியாதவர்களாக மாறினார்கள். உடல் அசைவுகளாலன்றி ஒருவருக்கொருவர் தொடர்புறுத்திக்கொள்ள இயலாதவர்களாக ஆயினர்.

முன்னரே அவர்களிடமிருந்து அரசகுடிப்பிறப்பும் நகர்வாழ்வும் அகன்றுவிட்டிருந்தது. ஆத்மாவின் மேல் எடையென ஆகி அமையும் புகழ்ச் சிறப்பும், பேரெடையாகும் தன்னுணர்வும் மறைந்தன. அதன்பின் எளிய இருப்புணர்வொன்றே எஞ்சியிருந்தது. அதுவும் அகன்றபின் அவர்கள் உடலுறுப்புகளை ஒன்றெனக் கோக்கும் உயிருணர்வொன்றே கொண்டவர்களாக மாறினார்கள்.

அவர்களை எவரும் அடையாளம் காணவில்லை. பெரும்பாலும் காட்டுவிலங்குகளைப்போல முற்காலையிலும் எழும் அந்தியிலும் மட்டுமே அவர்கள் பயணம் செய்தனர். பகற்பொழுதில் வெயிலில் குறுங்காடுகளுக்குள் புதர்களுக்குள் சுருண்டு உறங்கினர். சொல்நீத்த உள்ளங்களில் கனவுகளும் எழவில்லை. திகழ்வதில் மறைவன வெளிப்படும் கனவும் மறைந்தபோது அவர்கள் திகழ்வதை அவர்களின் திகழ்கணம் மட்டுமே அறிந்தது.

கங்கோத்ரியில் அமைந்த வசிட்டரின் குருநிலைக்கு அவர்கள் சென்றுசேர்ந்தபோது தொலைவில் அவர்கள் வருவதை பறவை அறிவிப்புகளினூடாகவே வசிட்டர் உணர்ந்துகொண்டார். மாணவர்களுடன் சொல்லாடிக்கொண்டிருந்த அவர் குருநிலையிலிருந்து எழுந்து வந்து பார்த்தபோது அவர்களின் நிழல்களிலிருந்தே அவர்கள் யார் என்று புரிந்துகொண்டார்.

அக்குருநிலைக்குள் நுழைய விரும்பாமல் அவர்கள் வெளியே இருந்த ஆலமரத்தின் அடியில் தங்கியிருந்தனர். அங்கு வந்த வசிட்டர் “வருக, உங்கள் வருகைக்காக சில நாட்களாக இங்கு காத்திருக்கிறேன்!” என்றார். “நீங்கள் இங்கு வந்துசேரும் தருணத்தில் இயற்றவேண்டியதென்ன என்பதை எழுபதாண்டுகளுக்கு முன் எனது ஆசிரியர் என்னிடம் உரைத்தார். உங்களுக்கான சொற்களுடன் இங்கு அமைந்தேன்” என்றார். “நாங்கள் இனி எந்த இல்லத்திற்குள்ளும் குருநிலைக்குள்ளும் நுழைவதாக இல்லை” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், ஆகவேதான் நானே இங்கு வந்தேன்” என்றார் வசிட்டர்.

பாண்டவர்கள் அவர் அருகே அமர்ந்தனர். வசிட்டரின் மாணவர்கள் அவர்களுக்கு உணவும் நீரும் கொண்டுவந்து அளித்தனர். “உங்களிடம் எஞ்சியிருக்கும் வினா ஏதேனும் இருந்தால் கேட்கலாம்” என்றார் வசிட்டர். அவர்கள் அமைதியாக இருந்தனர். “நான் இங்கே தனித்தமர்கிறேன். ஒவ்வொருவராக வந்து என்முன் அமர்ந்து சுட்டுவிரலால் நிலம்தொட்டு அவ்வினாவை என் செவிகளுக்கு மட்டுமென உரைக்கலாம்” என்றார் வசிட்டர்.

சகதேவன் எழுந்து அவர் அருகே வந்து கைவிரலால் மண்ணைத் தொட்டு மெல்லிய குரலில் “முனிவரே, ஊழ் என இங்கே திகழ்வது, தனக்கென ஏதேனும் இலக்கு உள்ளதா? ஒவ்வொருவரின் ஊழ் என்றிருப்பது ஒட்டுமொத்தமாக எதில் சென்று அமைகிறது?” என்றான். அவர் புன்னகைத்தார். அவன் எழுந்து அகன்றபின் நகுலன் வந்து “ஆசிரியரே, இங்குள்ள இயற்கையின் ஒரு பகுதியா நாம்? அன்றி மானுடர்க்கு ஏதேனும் தனித்த நோக்கத்தை தெய்வங்கள் வகுத்துள்ளனவா?” என்றான்.

அர்ஜுனன் சற்றுநேரம் தயங்கி பின்பு அருகணைந்து “அறுதியாக அறிவதற்கு ஒன்றே உள்ளது. ஒன்றன்பின் ஒன்றென அறிவின் அலைகள் இங்கே எழுந்துகொண்டிருக்கின்றன. ஒன்று பிறிதை வென்று எழுந்து அமைகிறது. அறிவென தன்னை வெளிப்படுத்தும் ஒரு முழுமை உள்ளதா? அன்றி இவ்வலைகளே அதுவா?” என்றான். பீமன் “உத்தமரே, உறவுகளின் இந்த வலைப்பின்னலில் மானுடன் கொள்ளும் உணர்வுகள் அனைத்தையும் அறுத்துக்கொண்டால் எஞ்சுவதென்ன? அன்னம் அன்னத்துடன் கொள்ளும் உறவு மட்டும்தானா?” என்றான்.

யுதிஷ்டிரன் “அறமென மண்ணில் ஒன்று நிலைநிற்கக்கூடுமா? ஒருபோதும் அறம் நிலைகொள்ளாதென்றால் அறமென்ற ஒன்றுக்கான இப்போர்களும் பூசல்களும் என்ன பொருள்கொள்கின்றன?” என்றார். “இங்கே புதிய வேதம் ஒன்று எழுந்தது. ஆனால் அது எதையும் தலைகீழாக புரட்டிவிடவில்லை என்று தெரிகிறது. பேருருவனாக தெய்வம் எழுந்து வந்து சொன்னால்கூட எதுவும் மாறிவிடாதென்றால் வேதங்கள் எதன் பொருட்டு?”

திரௌபதி அமைதியாக அமர்ந்திருந்தாள். “கேளுங்கள், தேவி” என்றார் வசிட்டர். திரௌபதி மிக அருகே வந்து நிலம்தொட்டு “முனிவரே, சருகுகள் உதிரும் நெறி புரிகிறது, தளிர்களும் ஒடிந்து சரியும் புயலை ஏன் எழுப்புகின்றன தெய்வங்கள்? எனில் தளிர்களை அழகும் இளமையும் கொண்டு படைத்த தெய்வங்கள் வீண்செயல் புரிகின்றனவா?” என்றாள். அவள் குரல் சற்றே இடறியது. அவள் அழக்கூடும் என்று வசிட்டர் நினைத்தார். ஆனால் அவள் “ஒரு தளிர் மண்ணில் விழும்போது அது வளர்ந்து கிளையாகி மலராகி காயாகி கனியாகி விதைபெருக்கி உருவாக்கவிருந்த அந்தக் காடு எங்கே செல்கிறது?” என்றாள்.

வசிட்டர் “இவ்வினாக்களுக்கான விடைகள் முன்னரே ஒருங்கியிருக்கின்றன” என்றார். “நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதோ எழுந்து நின்றிருக்கும் இந்தக் குன்றின் பெயர் தேவப்பிரஸ்தம். இதன் உச்சியில் விண்ணவர்கள் வந்திறங்குகிறார்கள் என்று முனிவர்களால் சொல்லப்பட்டுள்ளது. எண்திசைக் காவலர்களாகிய அக்னியும் இந்திரனும் ஈசானனும் குபேரனும் நிருதியும் வருணனும் வாயுவும் யமனும், அழியாச் சுடர்களான சூரியனும் சந்திரனும் அங்கு தங்களுக்குரிய நாட்களில் வருகிறார்கள். ஆதித்யர்களும் வசுக்களும் அதை காவல் காக்கிறார்கள்” என்றார்.

நீங்கள் இதன்மேல் ஏறி உச்சிக்குச் சென்று உங்கள் நிறைவை அடையலாம். நிறைவெனில் அது இதுகாறும் நீங்கள் வாழ்ந்த முழு வாழ்க்கையையும் பொருளுள்ளதாக ஆக்கும் ஒரு முடிவு. இதுவரை நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றோடொன்று இணைத்து ஒற்றைக் கதையென மாற்றுவது. உங்கள் பிறப்பிலிருந்து தொடங்கி இதுகாறும் வருவது போலவே அத்தருணத்திலிருந்து தொடங்கி பின்னும் செல்லமுடியும். பிறப்பின் தருணத்தில் விடுபட்ட ஒன்று இங்கே நிறைவடையும். பிறப்பில் எழுந்த ஒன்று தன்னை தான் வென்று முழுதமையும்.

அறிக, உங்கள் வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும். ஆனால் அந்த விடைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. விளக்கத் தொடங்கினால் அது சொல்லொழுங்காகும், எண்ணக்கட்டமைப்பாகும். சொல்லென்றும் எண்ணமென்றும் ஆன எதுவும் இணையான மறுப்பையும் கொண்டிருக்கும். ஓயாத அலைவுறுதலும் தொடங்கும். ஆகவே அடைந்ததை உங்களுக்குள் செலுத்துங்கள். உங்கள் உயிர் என மூச்சென அது உங்களுக்குள் மட்டும் இருக்கட்டும்.

தேவப்பிரஸ்தம் எனும் மலைமேல் ஏறி முடிவரை செல்வதற்கு வகுக்கப்பட்ட வழிகள் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வழியை தாங்களே கண்டடைந்து செல்லவேண்டியுள்ளது. மேலே செல்பவர்கள் செல்லும் வழியில் ஏதேனும் ஒரு படியில் உடல் களைத்தோ, உளம் தளர்ந்தோ, ஆத்மா சலிப்புற்றோ நின்றுவிடுவதுண்டு. இதில் ஏறத் தொடங்குபவர்கள் லட்சத்தில் ஒருவரே உச்சி வரை சென்றடைய முடியும் என்பார்கள்.

இம்மலையின் ஐந்து தளங்களில் முதலில் எழுவது அன்னத்தாலானது. தொடர்ந்து எழுவது பிராணனால் ஆனது. அடுத்தது உள்ளத்தால் ஆனது. மேலும் உயரத்தில் விஞ்ஞானமும் அதற்கும் அப்பால் ஆனந்தமும் உள்ளது எனப்படுகிறது. உடல், மூச்சு, உள்ளம், நுண்நிலை, பெருநிலை என்னும் ஐந்தையும் கடந்தவர் அறியும் வெறுமையின் முழுமை இதன் உச்சி. ஐந்தையும் அடைந்தும் துறந்தும் இப்பயணம் அமையவேண்டும். இது அறிதலின் பயணம் அல்ல, அறிந்தவற்றை துறத்தல்.

“இதன் நெறிகளில் முதன்மையானது, ஒருவர் பிறிதொருவரின் இருப்பை உணரலாகாது, முற்றிலும் தனித்து மேலே செல்லவேண்டும் என்பது. ஒருவர் பிறிதொருவரை திரும்பிப் பார்த்தால், ஒரு சொல் உரையாடினால், அவருடன் உள்ள அனைத்து எண்ணங்களையும் துயர்களையும் எடைகளையும் தானும் கொண்டவராவார். அதன் பின் அவன் தன்னுடன் அவரையும் சுமந்துகொண்டு மேலேறவேண்டும். நீங்கள் ஐவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பற்றை அறுக்காவிடில் ஐவரும் ஐவரையும் சுமந்துகொண்டு ஏறவேண்டியிருக்கும். அவ்வெடை உங்கள் இடையை முறிக்கும். அதன் வழிகளில் சரிந்து விழுந்து மறைவீர்கள்.”

“ஆம், நான் கிளம்புகிறேன்” என்று யுதிஷ்டிரன் எழுந்தார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் எழுந்தனர். சற்று தயங்கி அமர்ந்தபின் திரௌபதியும் எழுந்தாள். “இன்றே, இப்போதே கிளம்புக!” என்றார் வசிட்டர். “அங்கே செல்வதற்கான நுழைவாயிலை நான் காட்டுகிறேன். வருக!” அவர் எழுந்துகொண்டு நடக்க அறுவரும் அவரை தொடர்ந்து சென்றார்கள்.

வசிட்டர் அவர்களை அடிவாரத்தில் மலைவளைவை சுற்றிச் சுழன்று சென்ற ஒற்றையடிப் பாதையினூடாக அழைத்துச் சென்றார். அவர்கள் எந்த விழைவும் மறுப்பும் அற்றவர்களாக வெற்றுவிழிகளுடன் அவரை தொடர்ந்து சென்றனர். “இந்தப் பாதை விலங்குகள் சென்று சென்று உருவானது. இங்கு மானுடர் நடமாட்டம் இல்லை. இவ்வழியே எவரேனும் நடப்பது என்பது என் ஆசிரியர் என்னை அழைத்துச் சென்று காட்டிய நாளுக்குப் பின் இப்பொழுதுதான் என்று எண்ணுகிறேன்” என்றார் வசிட்டர்.

அப்பாதை தேய்ந்து மறைந்து உருளைக்கற்களும் குட்டை முட்புதர்களும் நிறைந்த பரப்பாக மாறியது. அதனூடாக காலெடுத்து வைத்து மிக மெல்ல நடந்து வசிட்டர் செல்ல அவர்கள் அவரைத் தொடர்ந்து நீள்நிரையாக நடந்தனர். “இங்குள்ளது ஒரு குகையின் வாயில். அக்குகையினூடாக சென்று மறுபக்கம் உள்ள திறப்பை அடையவேண்டும். அங்கிருந்து இந்த மலைக்குமேல் செல்வதற்கான வழி உள்ளது. இது கர்ப்பபதம் என்று அழைக்கப்படுகிறது. கருவறையினூடாக மீண்டும் பிறந்து செல்வது இது. இது உங்களை மேலெடுத்துச் செல்லும், கீழே வீழ்த்தும், சுழல வைத்து உடல் பிதுங்க வைத்து கொண்டுசெல்லும். இது உங்களை வீழ்த்தும் இடத்திலிருந்து உங்கள் பயணம் நிகழவேண்டும்.”

அவர் அக்குகை வாயிலை அடைந்தார். அங்கிருந்த முகப்புக்கல் ஒன்றைக் கண்டு அவர்கள் நின்றனர். இரண்டுஆள் உயரம் கொண்ட பெரும்பாறை ஒன்றால் அக்குகை மூடப்பட்டிருந்தது தெரிந்தது. அக்கல்லை எவராலும் புரட்ட முடியாது என்று எண்ணி பீமன் மலைத்திருக்கையில் வசிட்டர் அக்கல்லின் அடியிலிருந்த பிறிதொரு கல்லை எளிதாக உருட்டி அகற்றினார். அக்கல்லால் தாங்கப்பட்டிருந்த பெரும்பாறை உருண்டு உரசல் ஒலியுடன் அப்பால் விழுந்து மலைப்பள்ளத்தை நோக்கி யானைபோல் சென்றது.

“நுழைக!” என்று உரத்த குரலில் வசிட்டர் கூறினார். அவர்கள் அஞ்சியவர்கள்போல் ஒருகணம் நின்றபின் பாய்ந்து உள்ளே நுழைந்தனர். பீமன் முதலில் உள்ளே செல்ல அர்ஜுனனும் திரௌபதியும் தொடர்ந்தனர். பின்னர் நகுலனும் சகதேவனும் உள்ளே செல்ல இறுதியாக யுதிஷ்டிரன் உள்ளே சென்றார். வசிட்டர் உருட்டி எடுத்த சிறு கல்லை அதே இடத்தில் வைத்தார். பிறிதொரு பெரும்பாறை மேலிருந்து அசைவு கொண்டு உருண்டு வந்து அச்சிறு கல்லில் முட்டி நின்று அக்குகையை முற்றாக மூடிக்கொண்டது.

உள்ளிருந்த இருட்டில் அவர்கள் விழியிலாது நின்றனர். பின்னர் விழிகளுக்குள்ளிருந்து எண்ணத்தின் வெளிச்சம் வந்து புறவுலகை துலங்கச்செய்தது. சித்தப்பிரகாசத்தின் தடத்தினூடாக அவர்கள் அக்குகைக்குள் சென்றனர். அக்குகை ஒன்றிலிருந்து ஒன்று தொடுத்துக்கொண்ட பல பகுதிகளாலானதாக இருந்தது. அடுத்த அறைக்குள் முதல் பேரறைக்குள் இருந்த மையிருள் மறைந்து எங்கிருந்தோ ஒளி விழுந்து சுவர்கள் துலங்கிக்கொண்டிருந்தன. உள்ளே குளிர்ந்த காற்று சுண்ண மணத்துடன் நிறைந்திருந்தது. அங்கிருந்த ஒலியின்மை ஒரு பருப்பொருள்போல சூழ்ந்திருந்தது.

அர்ஜுனன் குகைக்குள் சுவர்களில் ஓவியங்கள் இருப்பதை பார்த்தான். நீலம் சிவப்பு வெண்மை மஞ்சள் என வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள். அவை ஒன்றுடன் ஒன்று ஊடுபாவென பின்னப்பட்டு ஒரு ஓவியத்தை இன்னொன்றிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதபடி ஒற்றைப்பெரும்படலமாக இருந்தன. ஓர் ஓவியப்பரப்பு பல்லாயிரம் ஓவியங்களின் துளிகளால் ஆனதாக இருந்தது. அவற்றினூடாக மலைத்த சித்தத்துடன், பதறி தொட்டலையும் விழிகளுடன், வெறுமனே நோக்கிச் செல்லவே இயன்றது.

அவற்றில் அவன் அறிந்த அனைத்தும் இருந்தன. மானுடர், விலங்குகள், சிற்றுயிர்கள், நாகங்கள், செடிகள், மரங்கள், மலர்கள். சூரியனும் சந்திரனும். ஆநிரைகளும் மான்களும் கூட்டம் கூட்டமாக மேய்ந்தன. அவற்றை புலிகள் வேட்டையாடின. பருந்துகளும் கழுகுகளும் மேலே பறந்தன. மலைகள் பனிமுடி சூடி சூழ்ந்திருந்தன. குளங்களும் ஆறுகளும். அவன் தொலைவில் அலையலையென நின்ற கடலையும் கண்டான். கடலுக்குள் மீன்கள் நீந்தின. எட்டுக் கைகள் கொண்ட நீராளிகள், பேருருவ ஓங்கில்கள்.

மனிதர்கள் வாழும் சிற்றூர்கள் வண்டிகள் செல்லும் வழிகளாலும் ஆறுகளாலும் இணைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வண்டிகளும் ஆறுகளில் படகுகளும் சென்றன. ஊர்களைச் சூழ்ந்த வயல்வெளிகளில் உழவர்கள் ஏரோட்டினர். பெண்கள் குனிந்து நாற்றுநட்டனர். ஆநிரைகள் மேய ஆயர்கள் குழலூதினர். திருவிழாக்களின் அணித்தேர்களில் தெய்வங்கள் அமர்ந்திருக்க முகபடாம் அணிந்த யானைகள் நிரைகொண்டன.

ஏழுநிலை மாடங்களால் ஆன தெருக்களும் ஓங்கிய காவல்நிலைகள் கொண்ட கோட்டைகளும் கொண்ட நகரங்கள். அங்காடிகள், ஆலயங்கள், அரண்மனைகள். அரசர்கள் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். காடுகளில் யானை மேலேறி வேட்டையாடினர். யானைகளும் புரவிகளும் தேர்களுமாக படைகள் கிளம்பிச்சென்றன. கொம்புகளும் முரசுகளுமாக சூதர்கள் முகப்பில் சென்றனர். போர்க்களக் காட்சிகள் மனிதர்களை நூலெனக்கொண்டு நெசவுசெய்யப்பட்ட துணிப்பரப்பென விரிந்திருந்தன.

மிகப் பெரிய ஓவியவெளி. அத்தகைய ஒன்றை உருவாக்க முடியுமென்பதே திகைப்பூட்டியது. அதை ஒற்றை உள்ளம் உருவாக்கியிருக்க முடியாது. பல்லாயிரவர் அவரவர் கற்பனைகளை வரைந்திருக்கவேண்டும். சிதல் புற்றுகட்டுவதுபோல அந்த ஓவியத்துளிகள் பலநூறாண்டுகளாக இணைந்து இணைந்து அவ்வண்ணம் ஒரு பெருவெளியாக மாறியிருக்கவேண்டும். அந்த ஓவியப்பரப்பு ஒரு திரையென விலகி பிறிதொன்றை காட்டும் என அவன் உள்ளம் கற்பனை செய்தது.

விழி பதறிச் சென்ற அப்பயணத்தில் ஏதோ ஒரு கணத்தில் அவன் அதில் தன்னை அடையாளம் கண்டான். அக்கணமே தொட்டுத் தொட்டு தங்கள் ஐவரின் உருவத்தையும் பார்த்தான். திரௌபதி அதற்கப்பால் தெரிந்தாள். பின்பு அன்னை, மனைவியர், மைந்தர்கள், நண்பர், பகைவர் என அனைவரையும் கண்டான். பீஷ்மரும் துரோணரும் தெரிந்தனர். பெருந்தோள்களுடன் திருதராஷ்டிரரும் பால்ஹிகரும் தெரிந்தனர். மூதாதையர் முகங்கள். மைந்தரைச் சுமந்த பாண்டு, மானை வேட்டையாடும் விசித்திரவீரியர், கங்கையைப் புணர்ந்த சந்தனு, மடியில் கங்கையுடன் பிரதீபர்…

அப்பால் நீர்நிலையில் தன் முகம் நோக்கி அமர்ந்திருக்கும் சித்ராங்கதன், நோயுற்ற தேவாபி, சிம்மத்துடன் விளையாடும் பரதன், பொன்னேர் உழும் குரு, பெருந்தோள்கொண்டு யானையுடன் மற்போரிடும் ஹஸ்தி, இளமையில் முதுமையுடன் புரு, பறக்கும் ஊர்வசியைப் பற்ற கைநீட்டிய புரூரவஸ், தேவயானியும் சர்மிஷ்டையும் இருபுறமும் நின்றிருக்க எங்கோ நோக்கி நின்றிருக்கும் யயாதி. அங்கே அனைவரும் இருந்தனர். அவர்களைப் பற்றிய அனைத்தும் தெளிந்தன. ஒன்றை நோக்கினால் பிறிதொன்று மறைந்தது. அனைத்தையும் நோக்கினால் ஒட்டுமொத்தமான வண்ணஅலையே தெரிந்தது.

அவன் விழிகள் அவனை அறியாமலேயே தேடியவரை அவன் கண்டுகொண்டான். ஆழி வெண்சங்கு ஏந்தி, பீலி முடி சூடி குழலூதி நின்றிருந்த யாதவரைக் கண்டு அவன் நின்றான். எந்த உணர்வுமில்லாமல் சற்று நேரம் அதை நோக்கிக்கொண்டிருந்தான். யாதவரின் கீழே நான்கு பசுக்கள் அவர் குழலிசைக்கு விழிமயங்கியிருந்தன. ஐந்தாவதாக ஒரு கன்று அவர் காலடியில் நின்று மேலே நோக்கியது. அவர் வேறெங்கோ நோக்கிக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து அரக்கரும் அசுரரும் நாகரும் நிஷாதரும் என பல்வேறு குடிகள் நின்றிருந்தனர். வானில் இந்திரனும் சூரியனும் தெளிந்திருந்தனர். அந்தப் பரப்பெங்கும் நூறுநூறு முகங்களுடன் அவரே திகழ்ந்தார்.

அவர் விழிதொட அலைகொண்ட கடல் என அங்கு நிகழ்ந்த போரின் பேரோவியம். வென்றவர்களும் தோற்றவர்களும் அழிந்தவர்களும் நின்றவர்களும் அங்கு இருந்தனர். ஒருவர்கூட எஞ்சாது அனைவரும் திகழ்ந்தனர். ஆனால் அவர்களுடன் தொடர்பற்றவர்கள் பல்லாயிரவர் அங்கிருந்தனர். அறியப்படாதவர். அவர்கள் ஒருவரோடொருவர் பின்னி இருந்தனர். ஒற்றைப் பாசிப்படர்வென மானுட உடற்திரள்.

அவர்களில் எழப்போகிறவர்களும், பிறவிகாத்து பெருவழியில் எங்கோ இருப்பவர்களும் உண்டென்று அர்ஜுனன் அறிந்தான். தான் அறிந்த நிகழ்வுகள் அப்பெரும்படலத்தின் ஒரு சிறு துளியே என்றும் அறியாத பல்லாயிரம் மடங்கு நிகழ்வுகள் அதை வகுத்தன என்றும் உணர்ந்தான். தன்னை தாங்கி நின்றிருந்த பெரும்பாலான உடல்களும் தோள்களும் தான் ஒருமுறைகூட பார்த்திராதவை என்று கண்டான். தன் உடலை தொட்டுக்கொண்டிருந்தவர்கள் அவர்களுடன் தொட்டுக்கொண்டு சரடென மேலே சென்றவர்கள் பெயராகவோ முகமாகவோ சொல்லாகவோகூட அவனால் அறியப்படாதவர்கள்.

அடுத்த அறையில் அவன் ராகவராமனை கண்டான். அவன்முன் எழுந்த பத்துதலைகொண்ட அரக்கர்கோன். அஞ்சனை மைந்தன், வாலியும் சுக்ரீவனும். கதையென அறிந்த ஒவ்வொன்றும். ஆனால் அவன் அறிந்தவை அங்கிருந்தவற்றில் துளியினும் துளியே. அங்கு ராகவராமனுக்கு நிகராக நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தனர். அவர்களும் ஒளியுடன் திகழ்ந்தனர். ஓவியப்பரப்பை தங்களைச் சுற்றிச் சுழித்தனர். அவர்கள் எவர்? அத்தகையோரை பாடாமலொழியுமா காவியங்கள்? எனில் ஒரு சொல்லும் இன்றி அவர்கள் எங்கு சென்றனர்?

இருளிலிருந்து இருளுக்கென நடக்கையில் தன் தலைக்கு மேல் எழுந்த குகைச்சுவர்கள் மட்டும் உள்ளிருந்து எழுந்த ஒளியால் என துலக்கப்பட்டிருப்பதை கண்டான். மேலும் மேலுமென மடிப்பு நிமிர எழுந்து வந்த அறையில் உலகளக்க எழுந்த குறியோனை, சிம்மமுகத்து அண்ணலை பார்த்துக்கொண்டே சென்றான். புவிமகளை தோளில் வைத்து நின்றிருக்கும் பன்றிமுகப்பெருமான். ஆமை என மீன் என. ஆனால் கண்டவை கடலில் துமியே. நூறுநூறாயிரம் முகங்களில் எழுந்திருந்தவன் ஒருவனோ என்று மயங்கியது உள்ளம்.

நாகப்பேருரு என, பருந்து என, சிட்டுக்குருவி என, எண்கால் சிலந்தி என, எறும்பு என, விழிவெறித்த புழுவென, அணுவடிவச் சிற்றுயிர் என, மலையென எழுந்த கடலுயிர் என தோன்றித்தோன்றி நிறைந்திருந்தான். ஆயிரம்கோடி உயிர்களில் ஆயிரமாயிரம்கோடிமுறை பிறந்தெழுந்து விளையாடி மீண்டவன். பல்லாயிரம்கோடி மொழிகளில் பல்லாயிரம்கோடி வேதங்களை செய்தவன். வேதங்களை அழித்தவன். வேதமென்றாகி வேதம்கடந்தவன். கோடிகோடி வேதங்களின் மெய்ப்பொருளை அழிக்கும் மாபெரும் பொருளின்மையின் பொருள்.

இருளில் காலெடுத்து வைத்து, இருளை மிதித்து, மேலும் இருளில் புதைந்து எழுந்தெழுந்து வந்த அறைகளுக்கு சென்றான். இருளில் புதைந்து கிடந்த அவ்வறைகள் இன்னும் அடைகாக்கப்படாத முட்டைகள் என்று தோன்றின. விலங்குகளும் மானுடரும் கலந்த உருவங்கள். நாகர்கள் நாகினிகள். சிறகெழுந்த சிம்மங்கள். சீறி எழுந்த பாம்புப்பல்லிகள். எட்டுகால்மானுடர், முதலைமானுடர், பூச்சிமானுடர். எண்ணிநோக்கவே முடியாத உயிருடல்கள். சித்தம் செயலறச் செய்யும் வடிவக் கொந்தளிப்பு. என்றோ எவரோ வரைந்தது. அன்று மானுடன் தானும் முழுதுருப் பெறாது இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு உயிரிலும் நுழைந்து ஒவ்வொரு உடலையும் நடித்து அவன் தன்னை நிகழ்த்தியிருக்கவேண்டும்.

மேலும் முன்னால் சென்றபோது அவன் கண்ட ஓவியங்களிலிருந்த முழுமையும் தெளிவும் இருக்கவில்லை. ஒவ்வொரு உருவமும் சற்றே உருப்பெற்று, மறுபகுதி சிதைந்து பிறிதொன்றுடன் கலந்திருந்தது. கோடுகளும் வண்ணங்களும் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு விளையாடின. மேலும் தொல்காலம். அன்று மானுடர் தேவரிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் திரண்டு உருப்பெற்று வந்துவிட்டிருக்கவில்லை. அந்த ஓவியவெளி மேல் பதறிப் பதறிச் சென்ற விழிகளுக்குள் ஓர் உருவம் தட்டுப்பட அவன் உளமழிந்து நின்றான்.

விலங்குகளும் மானுடரும் வேறுபாடின்றி மறைந்த அப்பெருவெளியில் ஆழிவெண்சங்கு ஏதும் இன்றி, ஆனால் பீலி முடி சூடி, குழலூதி ஒருவன் மலைப்பாதை ஒன்றில் அமர்ந்து சேய்மை வானை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கால்கள் சிம்மங்களுடையவை போலிருந்தன. அவன் தலையில் காளைகளுக்குரிய கொம்புகள் இருந்தன. அவன் புன்னகை மட்டும் அர்ஜுனன் நன்கறிந்ததாக இருந்தது.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 13

குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால் உடலை அழுத்திச் செலுத்தி, அதை துளைத்து ஒவ்வொரு அடியாக முன் வைத்து நடந்தனர். ஒவ்வொரு அடிவைப்பிலும் மேலும் திசையின்மைக்கு சென்றனர். மெல்ல மெல்ல அவர்களின் உள்ளம் விசையழிந்தது. செல்வதும் நிற்பதும் பின்னடைவதும் ஒன்றே என்று ஆன அந்த இருளில் அவர்கள் உணர்ந்த பொருளின்மை உடலை அசைவிழக்கச் செய்தது.

அப்போது யுதிஷ்டிரன் ஒரு மெல்லிய முனகலோசையை கேட்டார். அது ஒரு நாயின் ஓசையென்று தெரிந்தது. அவர் உரத்த குரலில் நாயை நோக்கி ஓர் ஓசையை எழுப்பினார். மானுடர் நாயுடன் பேசுவதற்காக உருவாக்கிய மொழி அது. சொல்லற்றது. சீழ்க்கையாகவும், உதடசைவாகவும், தனிச்சொற்களாகவும் ஒலிக்கக்கூடியது. நாய் நின்று செவிகூர்வதை உணர முடிந்தது. பின்னர் இருட்டில் இரு மின்மினிகள்போல் அதன் விழிகள் தெரிந்தன. மூக்கு கூர்ந்து மெல்ல காலடி வைத்து அவர்களை நோக்கி வருவதை யுதிஷ்டிரன் காலடி ஓசையால் தெரிந்துகொண்டார்.

யுதிஷ்டிரன் அது தன்னருகே வரும்பொருட்டு அழைத்துக்கொண்டே இருந்தார். நாய் அவரது மணத்தை அறிந்ததும் முனகல் மெல்லிய குரைப்பாகியது. யுதிஷ்டிரன் தான் கட்டுண்டு கிடப்பதாகக் காட்டும் ஓசையை எழுப்பினார். நாய் குரைத்தபடி பாய்ந்து வந்து அவர் மேல் முட்டியது. அவர் காலை முகர்ந்து சுற்றி வந்து துள்ளியது. வாலைச் சுழற்றியபடி எழுந்து எழுந்து அவர் கையை முத்தமிட்டது. அதன் கொஞ்சலோசை சிறு குழவிகள் தன்னை தூக்கிக்கொள்ளும் பொருட்டு எழுப்பும் குரல் போலிருந்தது.

யுதிஷ்டிரன் அதன் தலையில் கையை வைத்து காதுகளுக்கு நடுவே வருடினார். அதன் காதுகளைப் பிடித்து நீவிவிட்டார். தாடைக்கு அடியில் கையை வைத்து சுரண்டுவதுபோல் வருடினார். அது மகிழ்ந்து அப்படியே தரையில் படுத்து நான்கு கால்களையும் மேலே தூக்கி அசைத்தது. அவர் அதன் அடிவயிற்றை நீவினார். அவர் உடலில் தன் உடலை உரசிக்கொண்டு பக்கவாட்டில் சென்றது. முன்னால் ஓடிச் சென்று, உடலை பக்கவாட்டில் நிறுத்தி, வாலை விரைப்பாக்கி துடிக்க வைத்தபடி அவரை நோக்கி வந்தது. பின்னர் அவரை முகர்ந்துவிட்டு முன்னால் ஓடியது. அங்கு நின்று குரல் எழுப்பிய பின் மீண்டும் அருகே வந்து கையை முத்தமிட்டது.

அது அளித்த ஓசைகளையும், அதன் காலடிகள் படிந்த இடத்தையும், கூர்ந்து நோக்கி அதனூடாக யுதிஷ்டிரன் அக்குகையிலிருந்து வெளிவந்தார். அவரைத் தொடர்ந்து அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் திரௌபதியும் வந்தனர். தொலைதூரத்தில் சிறு கையளவு வெளிச்ச வட்டம் தெரிந்தது. ஒரு நிலவு எழுந்ததுபோல. பின்னர் அது பெரிதாகியபடி வந்தது. அதன் வெளிச்சத்தில் அக்குகையின் சுவர்கள் தெரியத்தொடங்கின. தசைகள்போல அச்சுவர்கள் ஈரமும் நெகிழ்வும் கொண்டிருந்தன.

குகைப்பாதை ஒருவர் மட்டுமே நகர்ந்து செல்லும் அளவுக்கு சிறியதாகியது. பின்னர் படுத்து முழங்கைகளால் ஊர்ந்து மட்டுமே செல்லும் அளவுக்கு குறுகியதாகியது. சுவர்களிலிருந்து வழுப்புள்ள சேறு அவர்கள் மேல் படிந்ததால் புழுக்களைப்போல அந்தச் சிறு பாதையினூடாக தவழ்ந்துதான் செல்ல முடிந்தது. பின்னர் அப்பாதை சரிந்து செங்குத்தாக கீழிறங்கத் தொடங்கியது. வழுக்கிச் சென்றமையால் அவ்விசையை கட்டுப்படுத்த யுதிஷ்டிரனால் முடியவில்லை.

வழுக்கி வழுக்கி அப்பாதையினூடாகச் செல்கையில் சிறு சிறு கல்நீட்சிகளில் சிக்கி அவருடைய ஆடை முற்றகன்றது. தலை ஒரு சிறுதுளையில் சென்று அறைந்து அதை திறக்க பிதுங்கி கலங்கிய சேறும் நீருமாக தலைகீழாக வெளியே விழுந்தார். அவருக்கு மேல் பீமனும் விழுந்தான். அவர் எழுந்து தன் உடலை உதறி நின்றபோது ஆடையற்ற உடலில் இருந்து சேறு வழிந்தது. அந்தச் சேறு உடனே உலர்ந்து அரக்கென்றாகியது. அதை கிழித்து தன்னை பிடுங்கிக்கொண்டே வெளியேற முடிந்தது.

உடலை உதறிக்கொண்டு யுதிஷ்டிரன் சற்று அப்பால் நின்று துள்ளித் துள்ளி குரைத்துக்கொண்டிருந்த நாயை நோக்கி சென்றார். நாயின் உடலில் சேறில்லை என்பதை அப்போதே கண்டார். அது தன் உடலை உதறி காதுகளை அடித்துக்கொண்டு அவரை முகர்ந்து பார்த்து பின் ஓசை எழுப்பி அவரை அழைத்துக்கொண்டு முன்னால் சென்றது. பீமனும் எழுந்து அவருக்குப் பின்னால் வந்தான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் இறுதியாக திரௌபதியும் வந்து விழுந்தனர். ஆடையற்ற உடலுடன் சேறு படிந்து மண்சிலைகளென அவர்கள் அப்பாதையில் நடந்து மேலே சென்றனர்.

அது முட்களும் கூழாங்கற்களும் நிறைந்த மலைஏற்றமாக இருந்தது. ஒவ்வொரு காலடிக்கும் வெவ்வேறு விலங்குகள் நடமாடிய வழிகள் பிரிந்து பின்னிக் கிடந்தன. ஒருமுறை வழிதவறினால் கூட மீண்டு வழிக்கு வருவதற்கு பல நாட்களாகும். யுதிஷ்டிரன் அந்த நாயை மட்டுமே நோக்கினார். அது முகர்ந்து வழி தேடிச்செல்ல அதை தொடர்ந்து சென்றார். அது பல இடங்களில் சுற்றுவழிகளில் செல்கிறதோ என்று தோன்றினாலும்கூட தன் அகம் சுட்டிய வழிகளை நோக்கி திரும்பவில்லை. இயல்பாகவே திரௌபதியும் பிறரும் அவரைத் தொடர்ந்து வந்தனர்.

முடிவிலாது சுருளவிழ்ந்துகொண்டிருந்தது அந்தப் பாதை. செல்லுமிடத்திற்கே மீண்டும் சென்றுகொண்டிருப்பதுபோல. எங்குமே செல்லவில்லை என்பதுபோல. திரௌபதி வழியில் கால் தளர்ந்து ஒரு பாறையில் அமர்ந்துவிட்டாள் என்று தெரிந்தது. பீமன் நின்று அவளை பார்த்தான். பின்னர் ஓடிச்சென்று அவளை அணுகி கையை நீட்டினான். திரௌபதி அவன் கையை விலக்கி “செல்க!” என்றாள். “இல்லை, நீயில்லாது செல்லப்போவதில்லை” என்றான் பீமன்.

“என் எடையையும் நீங்கள் சுமக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். “நீ என்றும் எனக்கு சுமையாக ஆனதில்லை” என்றான் பீமன். “செல்க, செல்க, எனக்காக நீங்கள் எதையும் இழக்கவேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “உன்னை இழந்து நான் பெறுவதொன்றுமில்லை” என்று பீமன் சொன்னான். “எழுக, உன்னை நான் தூக்கிக்கொள்கிறேன்!” என்றபோது அவன் புன்னகை புரிந்தான். “நம் இளமையில் உன்னைச் சுமந்தபடி கங்கையில் நீந்தினேன்.” அவள் முகம் மலர்ந்து “ஆம்” என்றாள். “நம் முதல் சந்திப்பில்.”

அந்த இனிமையால் இருவருமே எடைகொண்டவர்களானார்கள். பீமன் கால் தளர்ந்து அவளருகே அமர்ந்தான். “எடை நான் நினைத்ததைவிட மிகுதி” என்றான். அவளால் கையையே அசைக்க முடியவில்லை. “துயருக்குத்தான் எடைமிகுதி என எண்ணியிருந்தேன்” என்றாள். “சென்றகாலத்து இன்பம் பலமடங்கு எடைகொண்டது” என்றான் பீமன். “இனி நாம் செல்ல இயலாது. நம் மீட்பு இதுவரை மட்டுமே” என்று பீமன் கூறினான். “எனில் இந்த இடமே நன்று” என்றாள் திரௌபதி. “இங்கே இனிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது. முடிவிலி வரையென்றாலும் இங்கிருப்பது நன்றே.”

அந்த இனிமையில் திளைத்தபடி தேவர்கள் என முகம் மலர்ந்து அவர்கள் கைகளை தொட்டுக்கொண்டு அங்கே அமர்ந்திருந்தனர். திரௌபதி தன் குழல்முடிச்சில் இருந்து ஒரு மலரை வெளியே எடுத்தாள். “இது என்னவென்று தெரியுமா?” என்றாள். “இது கல்யாண சௌகந்திகம்” என்று பீமன் வியப்புடன் சொன்னான். “இதை நீ கொண்டுவந்தாயா என்ன?”

“ஆம், என் உடைமைகளை துறக்கவேண்டும் என்று எண்ணி ஒவ்வொன்றாக அகற்றியபோதெல்லாம் இதை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். இங்கு வரும்பொருட்டு கிளம்பியபோதும் இறுதியாக இதை வைத்திருந்தேன். நூறுமுறை வீச எண்ணினேன். என்னால் இதை வீச முடியாதென்று அறிந்தேன். அந்தக் குகையினூடாக வந்தபோது என் ஆடையனைத்தும் அகன்றது. ஆனால் எழுந்தபோது என் குழற்சுருளில் இது எஞ்சியிருந்தது” என்றாள் திரௌபதி. “இதன் எடையால்தான் நான் நடை தளர்ந்தேன்.”

அவர்களைச் சூழ்ந்து பொன்னிற வானம் இறங்கி வந்தமைந்தது. அவர்கள் பொன்னொளிரும் உடல் கொண்டவர்களானார்கள். “நீங்கள் என்னை தேரில் வைத்து இழுத்த நாளை நினைவுறுகிறேன்” என்று திரௌபதி நாணத்துடன் சொன்னாள். பீமன் உரக்க நகைத்தான். அக்கணம் முதல் அவர்கள் வாழ்ந்த காலத்தின் இனிய காதற்கணங்களை மட்டுமே தொடுத்து உருவாக்கிய ஒரு காலத்தில் அவர்கள் அங்கிருந்தனர். அக்கணங்களில் பல்லாயிரத்தில் ஒன்றுமட்டுமே புறத்தே நடந்தது, எஞ்சியவை எல்லாமே அகத்தில் பொலிந்தவை என்று அவர்கள் உணர்ந்தனர்.

நகுலன் யுதிஷ்டிரனின் அருகே வந்து “மூத்தவரே, திரௌபதி விழுந்துவிட்டாள், அதைக் கண்டு பீமசேனன் திரும்பிவிட்டார்” என்றான். யுதிஷ்டிரன் அச்சொற்களை கேட்கவில்லை, அவ்வண்ணம் ஒருவர் தன் அருகே வந்ததையே உணரவில்லை. அவருக்கு முன்னால் நாய் வாலைச் சுழற்றி துள்ளி, திரும்பிப்பார்த்து முனகி, அழைத்து வழிகாட்டிச் சென்றது. நகுலன் சீற்றத்துடன் “அவரை விட்டுவிட்டு எவ்விண்ணுலகையும் நாம் ஈட்ட இயலாது” என்றான். யுதிஷ்டிரன் திரும்பாமல் நடப்பதைக் கண்டு “என் விண்ணுலகில் அவர் இருப்பார்” என்றபடி திரும்பிச்சென்றான்.

நின்று நகுலனைப் பார்த்தபின் ஒரு சொல்லும் கூறாமல் சகதேவன் உடன் சென்றான். செல்லும் வழியில் அவர்கள் கைகோத்துக்கொண்டனர். தோள் தொட்டனர். உடல் இணைந்தனர். ஓருடலாக மாறி நின்றபோது அவர்களைச் சூழ்ந்தது ஒரு பொன்னொளி. பிறந்த கணம் முதல் தொடர்ந்திருந்த தவிப்பொன்று அகல அவர்கள் ஆகமெல்லாம் தித்திக்க நின்று ததும்பினர். கருவறைக்குள் ஓருடலென இருந்த புதைவுக்கு மீண்டனர். அங்கே முடிவிலாத கனவுகளால் ஆனதாக இருந்தது காலம்.

முற்றிலும் மணல் நிரம்பி பல்லாயிரம் சுவடுகள் மட்டுமே ஆகிக்கிடந்த வழியினூடாக யுதிஷ்டிரன் நடக்க பின்னால் வந்த அர்ஜுனன் “மூத்தவரே, நானும் செல்கிறேன். அவர்கள் நால்வரும் அங்கு விழுந்துகிடக்கையில் மேலும் சென்று நான் அடைவதென்ன?” என்றான். அவன் திரும்பி நடந்ததைக்கூட யுதிஷ்டிரன் அறியவில்லை. “மூத்தவரே, நாம் அடைந்தபோதெல்லாம் இழந்திருக்கிறோம். இழந்தவையே மேலானவை என்று அடைந்தபின் உணர்ந்திருக்கிறோம்” என்றான். அதன்பின் “என் அறம் இதுவே” என்று திரும்பி நடந்தான்.

அவன் திரும்பிச்சென்ற பாதை வழி பிரிந்து அவனை தனித்து அழைத்துச் சென்றது. அவன் அங்கே நிலத்தில் ஒரு மயிற்பீலி கிடப்பதை கண்டான். நெஞ்சு விம்ம ஓடிச்சென்று அதை எடுத்தான். அவன் செவியில் ஒரு குழலோசை எழுந்தது. எண்புறமும் பொன்னொளிமுகில்கள் வந்து சூழ்ந்துகொண்டன. “சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ!” என்னும் விண்முழக்கத்தை அவன் கேட்டான்.

யுதிஷ்டிரன் சென்ற பாதை சுழன்று மலைமேல் ஏறியது. காற்று குளிர்கொள்ளத் தொடங்கியது. உடலைக் குறுக்கி நடுங்கியபடி அவர் நடந்தார். காற்றில் வெண்பனித்துருவல்கள் பொழிந்தன. கரிய நாய் வெண்ணிறப் பனிப்பொருக்கால் மூடப்பட்டது. உடலை உதறிக்கொண்டு கருமை மீண்டு உடனே மீண்டும் வெண்ணிறமாகியது. தரையில் வெண்பனி நுரையென, பொருக்கென படிந்திருந்தது. அதில் கால்கள் புதைந்து புதைந்து எழ யுதிஷ்டிரன் சென்று கொண்டிருந்தார்.

சூழ்ந்திருந்த திசைகள் அனைத்தும் வெண்மையாக மாறின. வானும் வெண்ணிறம் கொண்டிருந்தது. வெண்மையன்றி பிற வண்ணங்கள் ஏதும் அங்கிருக்கவில்லை. கண்களே வண்ணங்களை இழந்துவிட்டிருந்தன. அவர் திரும்பிப்பார்க்கையில் தனது கால்தடம் மட்டும் நீள்சரடு என விழுந்துகிடப்பதை கண்டார். நாய் களைத்து அவருக்குப் பின்னால் மூக்கு தாழ்த்தி, வாலை காலிடுக்கில் செருகிக்கொண்டு தளர்ந்த நடையுடன் வந்துகொண்டிருந்தது.

தன் உடலை இறுதி எண்ணத்துளியால் உந்தி அவர் முன்னால் கொண்டு சென்றார். ஏறுகிறோமா இறங்குகிறோமா என்று தெரியவில்லை. நின்று கொண்டிருக்கிறோமா நடக்கிறோமா என்பதற்கும் அத்தொலைவிலா வெளியில் வேறுபாடு இருக்கவில்லை. சென்றுகொண்டிருப்பது என்பது தன் உள்ளத்தில் மட்டும் நிகழ்கிறதா, அது ஒரு ஆழ்கனவு நிலையா என்று அவர் எண்ணினார். முற்றிலும் தன்னை அந்த விழிக்கு அளித்துவிடுவதன்றி செய்யக்கூடுவது ஒன்றில்லை.

அவர் நடந்துகொண்டிருக்கையில் ஒவ்வொன்றும் சுருங்கி உட்புகுந்து மறைந்தன. நெடுநேரத்திற்குப் பின் அவர் தன்னிலை உணர்ந்தபோது இங்குளேன் என்னும் உணர்வாக மட்டுமே எஞ்சியிருந்தார். அதை அவர் நோக்கியதுமே அதுவும் அகன்று வேறெங்கோ வேறு எவருடையதோ என நின்றது. அந்தப் பனிவெளியில் தாமரைக்கூம்புக்குள் என தன்னுள் எஞ்சிய சிறு வெம்மை. அதுவும் மறைந்து மறைந்து மீண்டது.

தொலைவில் பொன்னிற மலைமுடி ஒன்றை கண்டார். அந்த மலையை கூர்செதுக்கியதுபோல. வானில் கதிரவன் இல்லை. வான் ஒளி கொண்டிருக்கவும் இல்லை, ஆயினும் அந்த மலைமுடி பொற்சுடரெனத் தெரிந்தது. அசையாது நிற்கும் அகலின் தழல். அவர் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார். செல்லச்செல்ல அது பெரிதாகவோ சிறிதாகவோ மாறவில்லை. அவர் அணுகவோ அகலவோ இல்லை என உணர்ந்தார்.

நெடும்பொழுது அவர் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார். பின்னர் அவர் உணர்ந்தார் அந்த நாய் அவருக்கு நெடுந்தொலைவு பின்னடைந்திருந்தது. முற்றாக அவரை கைவிட்டதுபோல். திரும்பிப்பார்த்தபோது தனது காலடிகள் பனியில் இல்லை என்பதை கண்டார். அவை பனிமூடி மறைந்திருக்கவில்லை, அங்கு எப்போதும் எக்காலடியும் விழுந்ததில்லை என, வெண்தளிர் பரப்பெனத் தெரிந்தது பனிநிலம்.

அவர் முன்னகர்ந்து சென்றார். எப்போதோ அந்த ஒளிரும் பொன்மலையின் மேலேயே அவர் ஏறிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முகத்தருகே தூக்கி பார்த்தபோது அவரது கைகள் பொன்னிறமாகத் தெரிந்தன. தழலென தன் உடல் சுடர்வதை அவர் கண்டார். அவர் உடலுக்குள் இருந்து பொன்னொளி தோலினூடாக கசிந்து சூழச் சுடர்ந்தது.

மலையின் உச்சியை அவர் அடைந்தபோது அங்கு எவரும் இருக்கவில்லை. அங்கு ஒருவர் மட்டுமே நிற்க இடமிருந்தது. ஏறிய பின் ஒரு கால் வைப்பதற்கு மட்டுமே அதன் முனையில் இடமிருந்தது என உணர்ந்தார். மறுகால் விண்வெளியில் தவித்தது. தன்னை நிகர்நிலைப்படுத்திக்கொண்டு ஒரு காலில் அவர் நின்றார். கைகளை பறப்பவர்போல் விரித்து வைத்துக்கொண்டார்.

விண்ணில் முகில் நிரைகள் இல்லை. விண்ணென்பதே இல்லை. மெல்லிய வெண்பரப்பென பத்து திசைகளிலும் அவரைச் சூழ்ந்து இருந்தது வெண்வெளி. அது மிக மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. பனிநொறுங்குவதுபோன்ற ஓசை. அது குரலாகியது. அவர் செவிகளில் எவரோ சொன்னார்கள். “அக்காலை எடுத்துவிடு. விண் உனக்கு திறக்கும்.”

அவர் சித்தமின்றி அவ்வண்ணமே நின்றிருந்தார். “கனியின் இறுதிக் காம்பு அது. எடு அக்காலை. உதிர்க விண்நோக்கி!” என்றது அக்குரல். “இல்லை, என்னை இதுகாறும் கூட்டிவந்த அந்த நாயை விட்டுவிட்டு இக்காலை நான் எடுக்க இயலாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அது நின்றுவிட்டது, அதற்கு இங்கு வர ஊழ் இல்லை” என்றது அக்குரல். “இல்லை, அது வரவிழைகிறது. பனியில் உந்தி ஏறிக்கொண்டிருக்கிறது.”

“அது ஒரு விலங்கு. கானகத்தெய்வங்கள் தன் குடிக்கு அளித்த நெறிகளை உதறி மானுடருடன் இணங்கியமையால் இழிவடைந்தது. நன்றியெனும் சரடால் மானுடருக்கு அடிமையாகப் பிணைக்கப்பட்ட கீழ்மை கொண்டது” என்றது அக்குரல். “மானுடனாக, அறச்செல்வனாக, ஊழ்கநிறைவு கொண்டவனாக நீ செல்லும் இடங்களுக்கு அது ஒருபோதும் செல்ல முடியாது.” யுதிஷ்டிரன் “இது என்னுடைய கடமை, அதன் தகுதி இங்கு ஒரு பொருட்டு அல்ல” என்றார்.

“இந்த இடத்தில் நன்று தீதில்லை. அறமும் அல்லதும் இல்லை. இரண்டின்மையின் உச்சம் இது. இங்கே மீண்டும் கடமையைச் சுமந்து நின்றிருக்கப் போகிறாயா?” என்றது குரல். “தெய்வங்களேயானாலும் மீறமுடியாதவை சில உண்டு, அறம் அதில் ஒன்று” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நான் அதன்பொருட்டு உயிர்துறக்கச் சித்தமானவனாகவே இதுவரை வாழ்ந்திருக்கிறேன்.”

“ஆம், நீ மானுடனாக அடைந்த துயரங்கள் அனைத்தினூடாகவும் இங்கு வந்திருக்கிறாய்” என்றது அக்குரல். “நான் அடைந்த அனைத்துத் துயர்களையும் சென்ற அத்தனை பாதைகளையும் என் இளையோரும் அடைந்துள்ளனர். ஆனால் அறுவரில் நான் மட்டுமே இங்கு வந்திருக்கிறேன். அது ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். “உன் வாழ்நாளெல்லாம் அறமென்று ஒன்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாய். ஆகவே அன்றாடச் செயல்கள் அனைத்திலும் நிலையற்றவனாக, உசாவுபவனாக, துயர்கொண்டவனாக, தனித்தவனாக இருந்தாய். நிலையற்றவர்கள், உசாவுபவர்கள், துயர்கொண்டவர்கள், தனியர்கள் தெய்வத்திற்கு இனியவர்கள்.”

“அறத்தின்பொருட்டு துயருறுபவனை நம்பியே அறம் மண்ணில் வாழ்கிறது. மானுடன் கொள்ளும் உணர்வுகளில் குற்றவுணர்வுக்கு நிகரான தூய்மையும் மாண்பும் கொண்டது பிறிதில்லை. வாழ்நாளெல்லாம் நீ கொண்ட அந்த குற்றவுணர்வின்பொருட்டே விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறாய்” என்றது அக்குரல். “எனில் என்மேல் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து வந்த அந்த நாயின்றி நான் விண்ணேக முடியாது. இதுவரை என்னை கொண்டுவந்து சேர்த்த ஒன்றை இக்கணத்தில் உதறுவேன் என்றால் விண்ணகத்திலும் நான் மகிழ்ந்திருக்கமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரன்.

“ஆனால் இங்கு ஒருவர் ஒற்றைக் கால் வைப்பதற்கே இடமுள்ளது” என்று விண் அவரிடம் சொன்னது. “ஆம். அது இங்கு வரட்டும். நான் இறங்கிக்கொள்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “இறங்கியவர்கள் இதில் மீண்டும் ஏற முடியாது. மீண்டும் ஏழு பிறவிகள் எடுத்து, ஏழு துயர்ப்பரப்புகளில் உழன்று, ஏழு வகையான தவங்கள் இயற்றியே இங்கு வந்துசேர முடியும்” என்றது வான். “ஆகுக, ஒருவன் தன்னை இழந்து அடைவதுதான் என்ன? குறையுணர்வுடன் நான் இதை எய்தலாகாது. என் ஊழ் தகைவுகொள்ளவில்லை என்று கொள்கிறேன்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.

“நன்று, எனில் நீ இறங்கிக்கொள்ளலாம். அந்நாய் அங்கு நின்றிருந்தால் அதை மேலேற்றுக!” என்றது ஆழ்குரல். யுதிஷ்டிரன் கீழிறங்கிப் பார்த்தபோது நாக்கு தொங்க, மூச்சிரைத்தபடி மேலேறி வந்த நாய் அவரைக் கண்டு வாலாட்டியது. அவர் கை நீட்டி அதன் கழுத்தை பற்றித் தூக்கி மேலெடுத்தார். “செல்க, கரியோனே! விண் உனக்கு உரித்தாகுக!” என்று அதைத் தூக்கி அம்மலைமுடியின் முனையில் விட்டார்.

நாய் அங்கு சென்றதுமே பேருருக்கொண்டு எழுந்து கரிய முகில் உருவமாக நூற்றெட்டு கைகளும் ஆயிரத்தெட்டு முகங்களும் கொண்டு விண்நிறைத்து நின்றது. “யுதிஷ்டிரனே, நீ இதுகாறும் நம்பிய அறத்தின் காவலனாகிய நான் காலதேவன். என்னை சாவின் தெய்வமாகிய யமன் என்றும், நீத்தோருலகின் தலைவனாகிய தென்றிசையோன் என்றும் அறிக! நீ இனிய மைந்தன். நீ என்னை நம்பியதனால் உன்னை நம்பும் பொருட்டு பணிக்கப்பட்டேன். எழுக, விண்ணகம் திறந்துள்ளது உனக்கு!” என்று இடியோசை முழக்கமிட்டது.

“எந்தையே, துறந்து செல்லவேண்டும் என்ற விழைவு இறுதியில் அக்குகைக்குள் நுழையும்வரை என்னுள் இருந்தது. அதற்குள் நான் அறிந்தது நான் துறப்பவன் அல்ல என்றே. பெரும்பற்றினாலானவன் நான். துறப்போர் அறத்தையும் துறக்கலாகும். நான் அறம்துறக்க ஒப்பாதவன், ஆகவே எதையும் துறக்க இயலாதவன். என் உடன்பிறந்தாரும் சுற்றமும் உடன்சூழும் விண்ணுலகொன்றை மட்டுமே விரும்புகிறேன். அவர்களை விட்டுவிட்டு இந்த மலைமுடியிலேறி நான் அடையப்போவதென்ன?”

“உன்னை உணர்ந்துளாய், நன்று. நீ சென்றமரவிருக்கும் இடம் தவத்தோரும் தந்தையரும் இருக்கும் உலகு அல்ல, பேரன்னையருடன் சென்றமைவாய் நீ” என்றார் காலப்பேருருவன். “என் இளையோர் என்னை விண்ணிலும் சூழ்ந்திருக்கவேண்டும். என்னை நம்பி கைபிடித்தவள் உடனமர வேண்டும். என் உறவும் சுற்றமும் சூழ நான் அங்கிருக்கவேண்டும். என் தந்தை பாண்டுவை நான் காணவேண்டும். அன்னை மாத்ரியை, குந்தியை, என் மைந்தர்கள் அனைவரையும் நான் தழுவிக்கொள்ளவேண்டும். என் மூத்தவர் கர்ணன் என்னை வாழ்த்தி நெஞ்சோடணைக்க வேண்டும்.”

“தந்தையே, புவியில் நான் பகைமையும் அச்சமும் ஐயமும் விலக்கமும் கொண்ட அனைவரும் என்னுடன் இருக்கவேண்டும். பீஷ்மரும் துரோணரும் நான் வணங்கும் பாதங்களுடன் எழவேண்டும். எந்தை திருதராஷ்டிரரும் அவர் மைந்தர் நூற்றுவரும், அவர் குடியினர் ஆயிரத்தவரும் என்னுடன் இருக்கவேண்டும். மாதுலர் சகுனியும் அவர் இளையோரும் மைந்தர்களும் அங்கிருக்கவேண்டும். ஒருவர் குறையலாகாது. ஒருவர் குறைந்தாலும் அவ்வுலகை நான் ஏற்கமாட்டேன்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.

இருண்ட வானில் காலதேவனின் தோற்றம் முகிலெனக் கரைந்து மறைந்தது. மின்னல்கள் வெட்டின, இடியோசை திசைகளனைத்தையும் நிறைத்தது. “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றது விண்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 14

ஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது.

வியாசர் தன் அமைதியை கலைத்தார். அறியாக் காற்றில் பெருமரம் சற்றே நலுங்குவதுபோல அவர் அசைய அவர் உதடுகளில் செவி வைத்து சொற்களைக் கேட்டு வைசம்பாயனர் அவைக்கு அறிவித்தார். “ஆம், இதுவே இப்பெருங்காவியத்தின் நிறைவாகும். மானுடர் உணர்ந்தவை அனைத்தையும் கூறுவது. மானுடர் சென்ற வழிகள் அனைத்தையும் ஆராய்வது. மானுடருக்கு தெய்வங்கள் அளித்தவை அனைத்தையுமே தொட்டுச் செல்வது. இது மானுட விழைவுகளின், அச்சங்களின், பிழைகளின் கதை. மானுட வெற்றிகளின், கடத்தல்களின், நிறைவுகளின் கதை.”

“இது இந்த முக்கடல் சூழ் பாரதப்பெருநிலம்போல என்றும் இங்கிருக்கும். இது அக்கடல்களைப் போலவே ஓயாது அலையடிக்கும். இது பனிபடு வடமலை எழுந்த இந்நிலத்தின் மேல் ஒரு வைர மகுடமென நிலைகொள்ளும். அப்பனிமலைகளைப் போலவே அனைத்திற்கும் அழியாச் சான்றென அமையும். ஆம், அவ்வாறே ஆகுக!” அவருடைய சொற்கள் ஒலித்ததும் வேள்விப்பந்தலுக்குள் ஒரு செம்பருந்து உள்ளே நுழைந்து வேள்விமரத்தின் மேல் சிறகு மடித்து அமர்ந்தது. அந்தணரும் முனிவரும் “இந்திரனே, உன் வருகையே சான்று!” என்று குரலெழுப்பினர்.

நடுங்கும் கைகளை நெஞ்சுடன் கோத்து வியாசர் சொன்னார். இச்சொற்களில் நான் சிக்கியது நெடுங்காலம் முன்பு. எவ்வண்ணம் என்று நினைவுறுகிறேன்.  என் இளையோனாகிய பீஷ்மன் என்னை காண வந்தான். அவன் அன்று ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருந்தான். தன் இளையோன் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசியரை கவர்ந்து வரவேண்டும் என்று எண்ணி அது அறமா என்று தயங்கி அலைபாய்ந்தான். விடைதேடி என்னை அணுகினான்.

என்னிடம் அவன் கேட்டான் ‘மூத்தவரே, ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எது? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப் பிழைகளும் பொறுத்தருளப்படும்?’ நான் சொன்னேன் ‘ஷத்ரியனின் ஒரே கடமை நாட்டுக்காகவும் குடிகளுக்காகவும் வாழ்வதே. முற்றளித்து அவன் செய்யும் அனைத்தும் தெய்வங்களால் ஏற்கப்படும்.’ அன்று என் குடிலுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த கந்தினி என்னும் பசுவை சித்ரகர்ணி என்னும் சிம்மம் கவர்ந்துசென்றது. என் மாணவனாகிய சுதன் கையில் நீரள்ளி சிம்மத்துக்கு தீச்சொல்லிட முற்பட்டான். அப்போது நான் அவனைத் தடுத்து ‘பசுவைக் கொல்வதுதான் சிம்மத்தின் உயிரறம். ஆகவே அதற்கு பசுக்கொலை பழி கிடையாது’ என்றேன்.

அன்று மாலை கௌசிக சதுர்புஜன் என்னும் சூதன் என்னை தேடிவந்தான். அவன் என் முன் அமர்ந்து ஒரு பாடலை பாடினான். என்னை பார்க்கவருகையில் அவன் கங்கைக்கரையில் நீத்தார்சடங்குகள் செய்யும் ஹரிதகட்டம் என்னும் படித்துறைக்கு அப்பால் ஒரு கடம்பமரத்தடியில் நின்றிருக்கையில் ஒரு சிம்மம் பசு ஒன்றை கிழித்து உண்டு நிலமறைந்து ஓசையிட்டதை கேட்டான். அவன் அக்கணத்தில் எழுந்த சொல்லைக்கொண்டு எழுதிய கவிதை அது. முதற்கவி வான்மீகியின் குருமரபைச் சேர்ந்தவன் அவன். அவர் பறவையை வீழ்த்திய வேடனைக் கண்டு உளமுருகிப் பாடிய கவிதையின் மாற்றொலி என அது ஒலித்தது. அப்போது உணர்ந்தேன், நான் பேருருக்கொண்டு வளரவிருக்கும் ஒன்றை தொடங்கிவைத்துவிட்டேன் என்று.

நான் சொன்னது நெறி. நூல்களை நவிலும் எவரும் சொல்லக்கூடுவது. அதை அத்தனை ஐயமின்றி நான் சொன்னதுமே விண்ணகம் ஒருமுறை புரண்டுவிட்டது. அந்த ஒரே கணத்தில் என்னுள் வாழ்ந்த அத்தனை சொற்களும் உறுதியான பொருளை இழந்துவிட்டன. நிலையழிந்திருந்தேன். கானகத்தில் அலைந்தேன். பின்னர் ஒருநாள் என் காட்டிலேயே சித்ரகர்ணி என்னும் சிம்மம் இறந்துகிடப்பதை பார்த்தேன். அதை கழுதைப்புலிகள் கிழித்து உண்டன. குட்டிக்கழுதைப்புலி ஒன்று முதிர்ந்த சிம்மத்தின் இதயத்தை கவ்விக் கிழித்து உண்பதை கண்டேன். செயலும் விளைவும் என தொடரும் அம்முடிவிலியை அன்று நேரில் அறிந்தேன்.

அந்த கழுதைப்புலிக் குட்டியின் பெயர் குஹ்யசிரேயஸ். அது என்னிடம் சொன்னது ‘நான் விதைக்குள் வாழும் அழியா நெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன.’ அந்த முதல் வரியிலிருந்தே இந்தப் பெருநூலை நான் இயற்றலானேன். ஆயிரம் ஆயிரமென பாடல்கள் என்னிலிருந்து எழுந்தன. அவை என்னிலிருந்து சென்று நாடெங்கும் பரவி என்னிடமே மீண்டன. அவ்வாறு மீண்டு வந்தவற்றை மட்டுமே நான் வைத்துக்கொண்டேன்.

பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.

‘நான் ஐயமின்றி சொன்ன அச்சொல்லில் இருந்து தொடங்கிய அழிவு இது இளையோனே, இங்கே இனி அறம்சார்ந்த எச்சொல்லையும் ஐயமின்றி அறுதியாகச் சொல்லமுடியாது என்று ஆக்கவிழைகிறேன்’ என்றேன். ‘அதன்பொருட்டே பெருங்காவியமொன்றை ஆக்குகிறேன்.’ அவன் புன்னகை புரிந்தான். நான் திரும்பி வருகையில் குஹ்யசிரேயஸை பார்த்தேன். என்னை நோக்கி வந்து வணங்கியது. ‘இளையோனே, குருதியால் நிறைந்துள்ளாயா?’ என்றேன். ‘உண்ணும் விலங்கின் குருதியால் நிறைகையிலேயே நான் நிறைவடைகிறேன்’ என்று அது சொன்னது. மீண்டும் ‘விதைக்குள் வாழும் அழியா நெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன’ என்றது.

வியாசர் தொடர்ந்தார். ‘நாராயணம் நமஸ்கிருத்ய’ என்று சொல்லி தொடங்கிய இக்காவியம் என்னை தன் இடையிலேற்றிக்கொண்டு பறந்தது. சென்ற ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இக்காவியத்தில் வாழ்ந்திருக்கிறேன். தெய்வங்கள் ஆத்மாவிற்கு உடலை அருளென்றும் தீச்சொல்லென்றும் அளிக்கின்றன. உடலினூடாகவே திகழவும், வெளிப்படவும், எய்தவும் இயல்கிறது. உடலே முற்றிலும் திகழவும், முழுமையாக வெளிப்படவும், இறுதியாக எய்தவும் தடையாக அமைகிறது. இக்காவியமும் அவ்வாறே. இதை உதறுகையிலேயே இதிலிருந்து விடுபடுகிறேன். இதனூடாக எய்திய அனைத்தையும் இதில் சேர்த்து இதிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்.

இனி ஒருபோதும் இந்நூலில் ஒரு சொல்லையும் நான் செவிகொள்ளப்போவதில்லை. ஒரு சொல்லையும் என் நா உரைக்கப்போவதில்லை. இக்காவியம் இருக்கும் வரை மண்ணில் எனது இருப்பும் உண்டென்பது தெய்வங்கள் எனக்கு அருளியது. ஆகவே அழிவிலி என்றும் நீடுவாழி என்றும் நான் அறியப்படுகிறேன். அதனால் இக்காவியம் எண்ணப்படும், உரைக்கப்படும், எழுதப்படும் எவ்விடத்திலும் எவ்வண்ணமும் நான் திகழப் போவதில்லை. எங்கு ஒருவன் இக்காவியத்தினூடாக கடந்து வந்து, இதை முற்றாக மறந்து, ஒரு சொல் எச்சமின்றி ஊழ்கத்தில் அமர்கிறானோ அவன் அருகிலேயே நான் அமர்ந்திருப்பேன்.

இக்காவியம் ஒரு மாபெரும் சொல்வலை. இதன் நடுவே நச்சுக்கொடுக்குகளுடன் எட்டுகாலில் அமர்ந்திருப்பது நானல்ல, அவன். சிக்குந்தோறும் விடுவிக்கும் முயற்சியிலேயே மேலும் சிக்குறுகிறார்கள். அவனுக்கு பலியாகிறார்கள். நான் இதை கடப்பவர்களுக்குரியவன். தான் அறிந்த ஒவ்வொன்றாலும் இதை ஆராய்பவர்களுக்கு பிறிதொன்றென வெளிப்படுவேன். தன் அறிவின்மையை இதன்மேல் சேணமென, கடிவாளமெனப் போடுபர்களுக்கு மேலும் அரியவனாக வெளிப்படுவேன். நான் மெய்யாக வெளிப்படுவது இதன் அறியவொண்ணாமையை அறிந்தவர்களுக்கு மட்டுமே.

இந்நூல் இன்னும் வளரும் இதன் விழுதுகளே மரங்களாகும். தனி மரம் காடென்றாகும் வியப்பை இதில் மானுடர் உணர்வார்கள். நிலமறிந்தவை அனைத்தும் இதில் எழும். வானறிந்தவை அனைத்தும் இதில் வந்து சேரும். மழைக்கால ஏரி என நாள்தோறும் விரியும். நவில்தோறும் வளரும். அத்தனைக்கும் அப்பால் இது மாற்றமில்லாததாக நீடிக்கவும் செய்யும். ஆசிரியனைக் கொன்று வெளிவரும் நூல் இரக்கமற்றது, அது தெய்வங்களால் மானுடம் மீது ஏவப்பட்டது என்று உணர்க!

இது அறிதலின் உச்சமென அமையும் நூல். அறிதலின் உச்சம் அறிதொறும் அறியாமை கண்டற்றால் என்பதால் இது அழிவிலாத அறியமுடியாமையின் வெளிப்பாடென நிலைகொள்ளும். இப்பல்லாயிரம் சொற்களினூடாக நான் ஒருவனை அறிய முயன்றேன். இப்புவி கண்ட புதிர்களில் அவனே முதன்மையானவன். அறிந்து அறிந்து வகுத்து வகுத்து ஆயிரம் பல்லாயிரம் பாடல்களினூடாகச் சென்று எங்கு தொடங்கினேனோ அங்கேயே அவ்வண்ணமே நின்றிருக்கிறேன் என்று அறுதிச்சொல்லினூடாக அறிந்தேன்.

என்றும் அவ்வண்ணமே அணுகும் அனைவருக்கும் இனியவனாகவும், அணுக அணுக அகல்பவனாகவும், அறிவோருக்கு தன்னை அளிப்பவனாகவும், அறிய ஒண்ணாமையில் அமைந்திருப்பவனாகவும் அவன் இருப்பான். ஆழிவெண்சங்கினூடாக அவனை அணுகுவோர் அறிகிறார்கள். அழகிய பீலி நலுங்கலினூடாக அவனை அணுகுவோர் அவனில் மகிழ்கிறார்கள். அவன் சொற்களினூடாக செல்பவர் தங்கள் சொற்களை கண்டடைகிறார்கள். அவன் செயல்களினூடாக செல்பவர் தங்கள் செயலை முடிக்கிறார்கள். அவனை முற்றாக அடிபணிவோர் அவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்நூல் இவ்வண்ணம் இங்கு திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!

வியாசர் கூறி முடித்ததும் ஜனமேஜயனின் அவையிலிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினார்கள். வாழ்த்தொலிகள் அலையலையாக எழுந்துகொண்டே இருந்தன. மெல்ல அவை அடங்கியதும் “அவையோரே, இந்த சர்ப்பசத்ர வேள்வி இங்கு நிறைவுறுக! தேவர்கள் மகிழ்க! மூதாதையர் நிறைவுறுக! அழியா நாகங்கள் பெருகுக! அவ்வண்ணமே ஆகுக!” என்று வியாசர் தன் இரு கைகளையும் தூக்கி வாழ்த்தினார். அவையிலிருந்தோர் அனைவரும் தங்கள் அருகே நிலத்தை தொட்டு “வாழ்க ஐந்தாம்வேதம்! வெல்க அழியாச் சொல்! நிலைகொள்க ஆசிரியன் புகழ்!” என்று வணங்கினர்.

வைதிகர்களும் குடித்தலைவர்களும் எடுத்துக்கொடுக்க ஜனமேஜயன் மீண்டும் முடிகொண்டு கோல்சூடி அரியணையில் அமர்ந்தார். அவர் ஆணைப்படி வைசம்பாயனர் முன்னமர அந்தணர்கள் வேள்விச்செயலை தொடங்கினர். அவிகுளங்கள் அனல் கொண்டன. வேள்விப்புகை எழுந்து மானுடஅறிவின் வெண்கொடியென விண்ணில் நின்றது. தூய அறிவென வானில் கரைந்தது, வானே ஆயிற்று.

வேள்வி முடிந்து பெருவிருந்து அங்கு நிகழ்ந்தது. அஸ்தினபுரியின் குடிகள் அனைவரும் திரண்டெழுந்து அந்த ஊண்பந்தல்களில் அன்னம் உண்டு திளைத்தனர். விடுதலை பெற்று மீண்ட தட்சன் அங்கே ஒரு சிறுகல்லை மும்முறை கொத்தியபின் ஒரு சிறு துளைக்குள் சென்று மறைந்தான். அங்கே அவன் குடியினர் பண்டு தோண்டிய பாதைகள் இருந்தன. அவன் மூதாதை ஒருவர் விட்டுவிட்டுச் சென்ற நாகமணியின் அருகே அவன் சென்று நின்று படமெடுத்தான். அவன் நிழல் நூறென ஆயிரமென பல்லாயிரமென பெருகியது. அவையெல்லாம் நாகங்களாயின. கணமாயிரம் மறுகணம் பல்லாயிரம் என நாகர்கள் அங்கே எழுந்துகொண்டிருந்தனர்.

நாகம் தொட்ட கூழாங்கல்லை ஓர் இளைஞன் மிதித்தான். அவனில் ஒரு சிறு அனல்துளியென காமம் எழுந்தது. தன்னுடன் வஞ்சத்தையும் பொறாமையையும் அது இட்டுக்கொண்டு வந்தது. அவ்வனல் பற்றிக்கொண்டதும் களியாட்டுகள் தொடங்கின. காமம் போரின்றி அமையதென்பதனால் அங்கு தடை செய்யப்பட்டிருந்த குருக்ஷேத்ரப் போரின் கதைகள் எழுந்து வந்தன. ஒரு தலைமுறைக்கு மேலாக அவர்கள் மறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த அப்பெரும்போரின் நுண்ணோவியங்கள் ஒவ்வொன்றும் தெளிந்து விரிந்தன.

அக்கதைகள் பாடல்களாக காற்றை நிறைத்தன. நடனங்களாக தெருவெங்கும் நடந்தன. பாணரும் சூதரும் மாகதரும் பாடினர். கூத்தரும் ஆட்டரும் விறலியரும் ஆடினர். பின்னர் அனைவரும் பாடி ஆடலாயினர். அஸ்தினபுரியே மாபெரும் நாடகமேடையென்றாகி அத்தனை குடிகளும் அதில் களியாட்டமிட்டனர். இனிய ஆடல்கள் முதலில் எழுந்தன. பீமனின் மற்போர்கள், மலர்ப்பயணம், அர்ஜுனனின் வில்வெற்றிகள், அவன் எய்திய காதல்கள். அவர்கள் அனைவரும் அர்ஜுனனும் பீமனும் ஆயினர். அவர்களின் காதலியரும் ஆயினர்.

பின்னர் வஞ்சமும் தீமையும் அழிவுமே களியாட்டாயின. வாரணவதத்தில் மாளிகை எரிந்தது. பாஞ்சால நாட்டில் வில் முறிந்தது. இந்திரப்பிரஸ்தத்தில் துரியோதனன் நீரில் விழுந்தான். அவைச்சிறுமை கொண்டு திரௌபதி வஞ்சம் உரைத்தாள். கானக வாழ்வில் தேவர்களை நேருக்குநேர் கண்டனர் பாண்டவர். மும்முறை தூது சென்றான் ஆழிவெண்சங்கு ஏந்திய ஆசிரியன். எழுந்தது குருக்ஷேத்ரப் பெரும்போர். தந்தையரும் ஆசிரியரும் ஒருபுறம் நிற்க காண்டீபம் ஏந்தி நின்ற பெருவீரன். அவனுக்கு தேர் தெளித்த வேதமுதல்வன்.

அவர்கள் அக்கதையை ஆயிரம் முறை தங்களுக்குள் எவரோ சொல்லிக்கொண்டிருந்ததை அறிந்தனர். அதில் ஒரு சொல்லைக்கூட தாங்கள் மறந்ததில்லை என்று உணர்ந்தனர். அதில் வாழ்கையிலேயே இங்கு வாழ்வதன் எச்சங்கள் அனைத்தும் நிரம்புகின்றன என்று உணர்ந்தனர். அஸ்தினபுரியின் தெருக்களெங்கும் அக்கதையே நிரம்பியிருந்தது. அப்பெருங்காவியத்திலிருந்து சூதர்கள் பாடல்களை பாடிப்பாடி அங்கே புத்தம் புதியதென நிலைநாட்டினர்.

அரசனாலும் அந்தணராலும் வணங்கப்பட்டு விடைபெற்ற வியாசரை அவருடைய மாணவர்கள் மஞ்சலில் சுமந்து கொண்டுசென்று தேரில் ஏற்றினர். குடிகளின் வாழ்த்தொலிகள் சூழ வியாசர் நகரிலிருந்து கிளம்பிச்சென்றார். அவர் சென்ற பாதை முழுக்க குடிகள் அந்தத் தேர்த்தடத்தை தொட்டு வணங்கினர். அந்தப் பொடியை எடுத்து தங்கள் மைந்தரின் நெற்றியிலிட்டு சொல் வளரவேண்டும் என்று வாழ்த்தினர்.

வியாசர் வியாசவனத்திற்கு செல்லவில்லை என்றும் அங்கிருந்து பிறிதெங்கோ சென்றுவிட்டாரென்றும் கூறப்பட்டது. வியாச மாணவர்கள் நால்வரும் அவரின்றி திரும்பி வந்தனர். அவர் எங்கிருந்தார் எங்கு சென்றார் என்பதை அவர்கள் கூற மறுத்துவிட்டனர். வைசம்பாயனர் அஸ்தினபுரியின் அமைச்சரென தொடர்ந்தார். சுமந்து வியாசவனத்திலேயே இருந்தார். ஜைமினியும் பைலரும் வடபுலமும் தென்புலமும் சென்றனர்.

வேள்வி முடிந்த ஏழாம் நாள் சூததேவராகிய உக்ரசிரவஸ் நைமிஷாரண்ய காட்டிற்கு சென்றார். உக்ரசிரவஸ் மட்டுமே அப்பெருங்காவியத்தின் முழுச் சொல்லையும் தன்னுள் வைத்திருந்தார். அவர் இறுதியாக அந்நகரிலிருந்து செல்கையில் அந்நகரே ஒரு நாடக அரங்கென அக்காவியத்தை நடத்திக்கொண்டிருப்பதை கண்டார். ஒருபால் துரியோதனன் பீமனால் தொடையறைந்து கொல்லப்பட்டான். பிறிதொரு இடத்தில் கர்ணன் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டான். பிறிதொரு இடத்தில் அஸ்வத்தாமனும் கிருபரும் அர்ஜுனனுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். பீஷ்மரை இளையோர் எதிர்கொண்டனர்.

அஸ்தினபுரியை விட்டு நீங்குகையில் கிழக்குக் கோட்டைவாயிலில் நின்ற உக்ரசிரவஸ் தான் அறிந்த அனைத்தும் அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதை கண்டார். நோக்க நோக்க அது வளர்ந்து உருமாறிக்கொண்டிருப்பதை அறிந்தார். விழியை வலப்பக்கம் திருப்பியபோது காந்தாரி வஞ்சமகளெனத் திகழ்வதையும் இடப்பக்கம் திருப்பியபோது அவளே பேரன்னையென அருள்வதையும் பார்த்தார். குந்தி வலப்பக்கம் மூதன்னையென்றும் இடப்பக்கம் விழைவின்வடிவென்றும் தெரிந்தாள். சகுனியின் பகடையிலமைந்த தெய்வம் எழுந்து நின்று வெறியாட்டமாடியது. இந்திரப்பிரஸ்தத்தின் ஆடிமாளிகையில் தேவர்கள் களியாட்டமிட்டனர்.

உக்ரசிரவஸ் புன்னகையுடன் இறங்கி கோட்டை முற்றத்தை அடைந்து குறுங்காட்டினூடாக தனித்து நடந்து சென்றார். ஒவ்வொரு சொல்லாக தான் கற்ற அக்காவியத்தை தன்னுள் மீட்டிக்கொண்டிருந்தார். பன்னிரு நாட்கள் காட்டினூடாகச் சென்று அவர் நைமிஷாரண்யத்தின் விளிம்பை அடைந்தபோது அவ்விரவில் மரத்தழைப்புக்குள் பந்தங்களின் ஒளியைக் கண்டு அருகணைந்தார். அங்கே நாகர்களின் ஒரு தெய்வக்கொடை நடந்துகொண்டிருந்தது.

மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள் பூசி நீல மலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீல நீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பலியிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளை பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த நாகர்குலத்து முதுமகளின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையா விழிகளாக ஆயின. அவள் மூச்சு பாம்புச்சீறலாகியது.

“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீல நீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர். அப்பால் மரத்தின்மேல் அமர்ந்து அதை கண்ட உக்ரசிரவஸ் நாகம் புற்றுக்குள் நுழைகையில் தலையை வாயிலில் முதலில் வைத்து உடலை வளைத்து உள்ளிழுப்பதுபோல அந்தக் காவியம் தன்னுள் நுழைவதை உணர்ந்தார்.

நைமிஷாரண்யத்தில் சௌனகரும் அவர் மாணவர்களும் தவம் செய்துகொண்டிருந்தனர். புலரியில் அங்கே வந்து சேர்ந்த சூததேவரிடம் சௌனகர் “கூறுக சூதரே, வியாசரின் பெருங்காவியத்தின் முழு வடிவை அறிந்திருக்கிறீரா?” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் சூததேவர். “எனில் கூறுக!” என்று அவர்கள் அமர்ந்தனர். உக்ரசிரவஸ் “இந்தத் தொல்கதையை அழிவற்றதென்று அந்தணர் சொல்கிறார்கள். முன்பு நைமிஷாரண்யத்தில் இருந்த அந்தணர்கள் என் தந்தையாகிய லோமஹர்ஷணரிடம் இக்கதையை கேட்டனர். அவர் அவர்களிடம் இக்கதையை சொன்னார். நான் அவர்களிடம் கேட்டபடி சொல்வேன்” என்றார்.

உக்ரசிரவஸ் மாநாகங்களின் கதையிலிருந்து தொடங்கினார். “முதற்றாதை தட்சரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க!”

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 15

தென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண துவைபாயன வியாசரின் புகழை பாடினான். பின்னர் நூற்றெட்டு பாடல்களில் அவர் யாத்த அப்பெருங்காப்பியத்தின் விதைவடிவை பாடி முடித்தான்.

பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியும் அவன் அமைச்சர் தென்குன்றூர் பெருஞ்சாத்தனாரும் புலவர் பிறரும் அதைக் கேட்டு அமர்ந்திருந்தனர். துடுப்பை ஊன்றி தன் உடல் எடையை அதில் சாய்த்து விழிமயங்கி கண்ணன் கீரத்தன் அதை கேட்டுக்கொண்டிருந்தான். “ஐந்தாம் வேதமென்று எழுந்த இதை முழுதறிந்தோன் வேதப்பொருளறிந்தோன், ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சீர்ஷன் பாடி முடித்தான்.

விளக்கும் கைமலர்வுடன்

யோகபீடத்தில் அமர்ந்திருப்பவரும்

இடதுகையை இடது கால்முட்டின்மேல் வைத்தவரும்

கல்விக்கருவூலமும்

அந்தணரால் சூழப்பட்டவரும்

மலர்ந்த உள்ளத்தவரும்

தாமரையென ஒளிர்பவரும்

புனிதமான கதைகொண்டவருமாகிய

வேதவியாசரை

வீடுபேறின் பொருட்டு வணங்குகிறேன்

மாபாரதக் கதை என்னும் நெய்விளக்கில்

மெய்மையெனும் சுடர் கொளுத்தி

இவ்வுலகை துலக்குபவரும்

மலர்ந்த தாமரையின் இதழ்கள்போல

அழகிய கண்கள் கொண்டவரும்

எல்லையற்ற அறிவுடையவருமாகிய

வியாசரை வணங்குகிறேன்

ஆழியின் ஓரலையும்

ஆழியென்றே ஆனவரும்

அலகில் வெளியென்றும்

வானுறை முகிலென்றும்

பொழியும் மழையென்றும்

பெருகும் ஆறென்றும்

என் இல்லத்து கிணறென்றும்

என் கைக்குவை நீரென்றும்

ஆகி உலகுபுரப்பவரை

மண்படிந்து வணங்குகிறேன்

என்று வேதவியாசரை அவன் வாழ்த்தி யாழை விலக்கி தலைதாழ்த்தி நிலம் தொட்டு வணங்கினான்.

பாண்டியன் “இப்பெருங்காவியம் என் அவையில் உங்களால் முழுதுற உரைக்கப்படவேண்டும், சூதரே” என்றான். “ஆம், அது என் கடமை” என்றான் சீர்ஷன். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “இக்காவியத்திற்கு சாற்றுகவி என எவை உள்ளன? எந்தெந்த அவைகளில் இது நிலைநாட்டப்பட்டுள்ளது?” என்றார். “இது முழுமைப்பெருநூல் என தேவர்களால் ஏற்கப்பட்டது. அக்கதையை சொல்கிறேன்” என்றான் சீர்ஷன்.

நைமிஷாரண்யத்தில் சூததேவராகிய உக்ரசிரவஸ் நூற்றெட்டுமுறை இப்பெருங்கதையை முனிவர்களுக்கு கூறி முடித்தார். பாரதவர்ஷத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் அவர் அதை கூறுவதை செவிச் செய்தியாக அறிந்து உசாவி வந்த முனிவர்களின் அவை அவர் முன் எப்போதும் அமர்ந்திருந்தது. மடியில் கைவைத்து விழி மூடி அமர்ந்து மலை ஊற்றுகளனைத்தையும் தன்னிலிருந்து வெளிப்படுத்தும் பாறைபோல் அவர் இந்த அழியாப் பெருங்கதையை கூறினார்.

குலக்கதைகளும், குடிக்கதைகளும், ஊர்க்கதைகளும், போர்க்கதைகளும், நெறிக்கதைகளும், அறக்கதைகளும் வந்து கலந்துகொண்டே இருப்பது அக்காவியம். உணர்வுகளும், அறிதல்களும், நெறிகளும், மீறல்களும் கொண்டு மழைக்கால கங்கைபோல் கட்டற்றதாக பெருகுவது. தென்மழைபோல ஒவ்வொரு விதையையும் மரமாக்கும் ஆற்றல் கொண்டது. அதை கேட்டவர்கள் அறியாமையின் தெளிவை இழந்தனர். அறிவின் அலைதலை தொடங்கினர். அதை உணர்ந்தவர்கள் அறிவின் நிமிர்வை இழந்து அமைதலின் தெளிவை அடைந்தனர்.

நூற்றெட்டு முறை கூறப்படும் காவியம் தெய்வங்களுக்குரியதாகிறது. நூற்றெட்டாவது முறையாக அக்கதையை சூததேவர் கூறி முடித்ததும் அவர் அருகே அமர்ந்திருந்த சிறு கிளி மகிழ்ந்து சிறகடித்து எழுந்து சுழன்று மீண்டும் அமர்ந்தது. அவர் கைகூப்பி “இம்மண்ணில் என்றுமழியா முழுமைக் காவியம் என்று இது அமைக! இதை தேவர்கள் அவி என கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

ஆனால் “இல்லை! இல்லை!” என்று கிளி குரல் கொடுத்தது. அவையில் அமர்ந்திருந்த முனிவர்களும் பிறரும் திகைத்து திரும்பிப்பார்த்தனர். “என்ன சொல்கிறாய்?” என்று சூததேவர் கேட்டார். “இது முழுமைக் காவியம் அல்ல” என்று கிளி கூறியது. “நீ எவ்வண்ணம் அறிந்தாய்?” என்று அவர் கேட்டார். “உங்கள் ஆசிரியரின் குடியை சேர்ந்தவள் நான். உங்கள் நெஞ்சில் இருந்து ஒலிப்பவள்” என்றது கிளி.

அவர் அதை திகைத்து பார்த்தார். அக்கிளிக்கான சொற்கள் தன் அகத்திலிருந்து ஊறி அதை சென்றடைகின்றன என்று அவர் அறிந்திருந்தார். “கூறுக கிளிமகளே, இதன் குறையென்ன?” என்றார். “இது இன்னும் முடிவடையவில்லை” என்று அக்கிளி கூறியது.

அமர்ந்திருந்த முனிவர்கள் “இவ்வண்ணம் ஒரு குரல் எழுவதற்கான தருணம் தெய்வத்தால்தான் அமைக்கப்பட முடியும். அதை தடுக்க இயலாது. இக்காவியம் முழுமையடையவில்லை என்றே கொள்ளவேண்டும்” என்றனர். “என்ன செய்வது?” என்றார் உக்ரசிரவஸ். “நீங்கள் உங்கள் சொல்லால் விண்ணவரை அழைக்கமுடியும். விண்ணும் மண்ணும் அறிந்தவராகிய நாரதர் வந்து உரைக்கட்டும். கிளி சொன்ன இச்சொல்லின் பொருளென்ன என்று” என்றனர் முனிவர்.

உக்ரசிரவஸ் மண் தொட்டு ஊழ்க நுண்சொல்லுரைக்க அங்கு நாரதர் தோன்றினார். “திசையாளும் முனிவரே கூறுக, இக்காவியம் நிறைவுற்றதா?” என்று சூததேவர் கேட்டார். ”இது பெருங்காவியம். இப்புவியில் இன்று இதற்கு ஈடில்லை. என்றும் அவ்வாறே திகழும். எனினும் இது இப்போது நிறைவடையவும் இல்லை” என்று நாரதர் கூறினார். “எவ்வண்ணம் என்று அறியேன், இதை நான் வடமலையுடன் ஒப்பிட்டுச் சொல்கிறேன்” என்றார்.

உக்ரசிரவஸ் தனது மாணவர்களை நிலமெங்கும் அனுப்பினார். அஸ்தினபுரியில் அமைச்சராகத் திகழ்ந்த வைசம்பாயனர் யயாதியில் தொடங்கும் அஸ்தினபுரியின் மூதாதையரின் கதைகள் அனைத்தையும், யதுகுலத்தவர் கதைகள் முழுமையையும் இணைத்து கொடிவழிகளின் ஓவியத்தை சொல்லாக்கி அக்காவியத்திற்கு முற்கதை ஒன்றை எழுதி காவியமாக ஆக்கியிருப்பதாக அறிந்தார். தானே நேரில் சென்று அவரை வணங்கினார். அக்காவியத்தை கேட்டு வாங்கி வந்து பயின்றார்.

மீண்டும் அந்த அவையில் வைசம்பாயனர் கதையுடன் காவியத்தை தொடங்கினார். அவர் அதை கூறி முடித்து “இக்கதை இங்கு நிறைவுறுக! இது முழுமைக் காவியம் என்றாகுக! இதை தேவர்கள் அவியெனக் கொள்க!” என்றபோது “அல்ல! அல்ல!” என்றது கிளி. திகைப்புடன் அமர்ந்திருந்த உக்ரசிரவஸ் பின்னர் நாரதரை வரவழைத்து உசாவினார்.

“ஆம், இப்போது இது பேருரு கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் குலத்தொடர்முறையின் பெரும் சரடொன்றில் கோக்கப்படுகையில் பெரும்பொருளும் பொருளின்மையும் கொள்கின்றன. ஒவ்வொன்றும் இங்கு நிகழ்ந்தவை என்றும், நிகழ்ந்தே ஆகவேண்டியவை என்றும் தோன்றுகின்றன. எனினும் இன்னும் இது நிறைவடையவில்லை” என்றார் நாரதர்.

அதன் பின் உக்ரசிரவஸ் தன் மாணவர்களை அனுப்பி பாரதவர்ஷம் முழுக்க தேடியபோது ஜைமினி வேதப் பொருளனைத்தையும் அப்பெருங்காவியத்தின் நிகழ்வுகளினூடாக ஆராய்ந்து மெய்யறிதல்களை தொகுத்து எழுதிய பெருநூல் ஒன்றைப்பற்றி அறிந்தார். தானே நேரில் சென்று வணங்கி அந்நூலை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதையும் அக்காவியத்துடன் இணைத்து அவர் நைமிஷாரண்யத்தில் உரைத்தார்.

ஆனால் கூறி முடித்து உளநிறைவுடன் “இப்பெருங்காவியம் நிறைவடைவதாக! தெய்வங்கள் படைத்த மலைகள்போல் தன்னில் நிறைவு கொள்க!” என்றார். கிளி “அல்ல! அல்ல!” என்று சிறகடித்து எழுந்து சுழன்று அமர்ந்தது. அங்கே அகல்சுடரில் எழுந்த நாரதர் “ஆம், இன்று இக்காவியம் உலகியலையும் மெய்யியலையும் ஒருங்கு சொல்லும் பெருநூலாகியுள்ளது. தெய்வங்கள் மகிழும் களம் இது. எனினும் இது முழுமை கொள்ளவில்லை” என்றார்.

மீண்டும் தன் மாணவர்களை நிலமெங்கும் அனுப்பிய உக்ரசிரவஸ் உபவியாசரான சுமந்து அந்நூலில் திரண்டுவரும் தொல்நெறிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதற்கான தருணங்களுடன் பொருத்தி ஒரு நூலை யாத்திருப்பதாக அறிந்தார். நேரில் சென்று வணங்கி அந்நூலை பெற்றுக்கொண்டார்.

நெறிநூல்கள் இணைந்ததும் ஒவ்வொரு தருணத்திலிருந்தும் பாலில் திரண்டு வரும் வெண்ணை என நெறிகள் கொண்டதாக அக்காப்பியம் மாறியது. அதை நைமிஷாரண்யத்தில் கூறி முடித்து அவை வணங்கி உக்ரசிரவஸ் சொன்னார் “நிறைவுற்றதாகுக இந்நூல்! கடலென அலை கொண்டிருக்கையிலும் தன் எல்லைக்குள் தான் நின்றிருக்கும் முழுமை என்றாகுக!”

அப்போதும் “அல்ல! அல்ல!” என்று கிளி எழுந்தமர்ந்தது. நாரதர் தோன்றி “எளியோர் நூல் பயில்வது நெறிகளை கற்பதற்காகவே. நிகழ்வுகள் நெறிகளை அளிப்பதல்ல, அவை நெறியின்மைகளுக்கு செல்லவும் கூடும், எளியோருக்காக ஒவ்வொரு தருணத்திலும் உகந்த நெறிகள் இங்கு கூறப்பட்டமையால் இது அனைவருக்கும் உரிய நூலாகும். இந்நெறிநூல்களைத் தவிர்த்து இவற்றை படிப்பவர் அறிஞர், இது அறிஞர்களுக்குள்ள நூலும் ஆகும்” என்றார்.

“நிகழ்வுகளை தெய்வத்தின் நாற்களக் கருக்களாகக் காண்போர் யோகியர். அவர்களுக்கும் இந்நூல் உகந்ததே. இது இவ்வண்ணம் ஆகியது என்றாலும் ஒரு குறையை நான் காண்கிறேன். இன்னும் இதில் எஞ்சுவது ஏதோ உள்ளது” என்றார். திகைத்து செயலற்று அமர்ந்திருந்த சூததேவர் நீள்மூச்சுடன் மீண்டு தன் மாணவர்களை மீண்டும் நிலமெங்கும் அனுப்பினார்.

அவர்கள் வடக்கே ஒரு மலைச்சாரலில் அமர்ந்து உபவியாசரான பைலர் எழுதிக்கொண்டிருந்த நூலைப்பற்றி அறிந்து சொன்னார்கள். அது அப்பெருங்கதையில் இருந்து கிளை விரியும் முனிவர்களின், தேவர்களின் கதைகளாலான நூல். சூததேவர் அங்கே சென்று பைலரை வணங்கி அந்நூலை கொண்டுவந்து பயின்று தன் பெருநூலுடன் சேர்த்துக்கொண்டார்.

நான்குமுறை விரிவுபடுத்தப்பட்ட அப்பெருநூலை நைமிஷாரண்யத்தில் கூறி முடித்து அவர் விரல்தொட்டு “இது நான்குமுறை நிறைவுற்றது. நான்குமுறை செறிவுற்றது. நான்கு அரண்களால் காக்கப்படுவது. நான்கு போகிகளால் தூக்கப்படும் பல்லக்கு. இது இவ்வண்ணமே ஆகுக! இது நிறைவுறுக” என்றார்.

கிளி “இல்லை! இல்லை!” என்று எழுந்தது. அதன் சிறகசைவைப் பார்த்து அவர் திகைத்து அமர்ந்திருந்தார். நாரதர் “ஆம், இது நிறைவுற்ற நூலென்றே என் ஞானம் அறிகிறது. என் உளமும் ஆம் என்கிறது. எனினும் ஆழத்தில் ஒன்று எஞ்சியிருக்கிறது என்ற குரல் ஒலிக்கிறது” என்றார்.

சூததேவர் உளம் சலித்தவராக நைமிஷாரண்யத்திலிருந்து கிளம்பி தெருக்கள் தோறும் பாடி இரந்து, பொருள் கொண்டு உண்டு, விடுதிகளிலும் மரத்தடிகளிலும் துயின்று அலைந்தார். வேசரநாட்டில் ஒரு வயல்கரையில் தன் சுரைக்காய்க்குடுவை வீணையுடன் அமர்ந்திருந்தபோது, சற்று அப்பால் வயலிலிருந்து சேற்றுக் கைகளை உதறியபடி கரையேறி வந்து, ஓடையில் நீரில் கைகழுவிய பின்னர், வரப்புகளில் சிதறி அமர்ந்து தாங்கள் கொண்டுவந்த கலவை உணவை உண்ணத்தொடங்கிய உழவரை கண்டார்.

அவர்கள் உண்டபடி ஒருவரோடொருவர் நகையாடி சிரித்துக் கொண்டிருக்கையில் அவர்களில் ஒருவன் யுதிஷ்டிரனின் அவைக்கு வந்த கீரியின் கதையை கூறினான். ஒரு கீரி தன் உடலில் பாதியை தங்கமாக ஆக்கிக்கொண்டது. யுதிஷ்டிரனின் அவைக்கு வந்து தன்னை அடகுவைக்க முயன்றது. பாதிப் பொன் என்பதனால் பாதி விலை அளிக்கக் கோரியது. மீதி பொன்னல்ல என்பதனால் விலையே இல்லை என்றார் யுதிஷ்டிரன். தன்னை முழுக்க பொன்னாக்கும் பொருட்டு அது அலைந்தது.

அது முற்றிலும் பிறிதொரு கதையாக இருந்தது. சூததேவர் திகைத்தெழுந்து அதை கேட்டுக்கொண்டிருந்தார். “இக்கதையை எங்கு கேட்டீர்கள்?” என்று அவர் அவர்களிடம் கேட்டார். “இவ்வண்ணம்தான் நடந்தது, எங்கள் முன்னோர் கூறிய கதை இது” என்றனர் உழவர்.

அங்கிருந்து அவர் செல்லும்போது ஆய்ச்சியர் சிலர் தயிர் கடைந்தபடி பேசிக்கொண்டிருப்பதை கேட்டார். திரௌபதி இளமையில் தன் சுட்டுவிரலால் முடிசுழிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாள். அவ்வழக்கம் தீயதென்று அவள் அன்னை விலக்கினாள். முடிசுழிப்பவர் தன்னில் தான் ஆழ்ந்திருப்பவர், அவர் பிறிதொன்று அறிய இயலாது, முடி உனக்கு அழிவை கொண்டுவரும் என்று சொல்லி ஆசிரியர் விலக்கினார். ஆனால் அவ்வழக்கத்தை திரௌபதி விடவில்லை.

பின்னர் அவையில் ஆடை களையப்பட்டு, சிறுமை கொண்டு நின்று, அழுது வஞ்சினம் உரைத்து கானேகுகையில் அந்தத் திரளில் நின்ற தொல்குடிகளில் முதுமகளொருத்தி ‘முடிசுழித்ததால் கூந்தல் முடியாத நிலையை வந்தடைந்தாள்’ என்றாள். அதைக் கேட்டு திரௌபதி திரும்பிப்பார்த்து தன் ஊழை எண்ணி ஏங்கி கண்ணீர் வடித்தாள் என்றாள் ஓர் ஆய்ச்சி. இன்னொருத்தி “ஆமாம், முடிசுற்றி முடிசுற்றி திரௌபதியும் கெட்டாள், தொடைதுள்ளி தொடைதுள்ளி துரியோதனனும் கெட்டான்” என்றாள்.

சூததேவர் அந்த ஆய்ச்சியரிடம் சென்று “அன்னையே, இக்கதையை எங்கு கேட்டீர்கள்?” என்றார். “இது என் அன்னை எனக்கு சொன்னது” என்று அவர்களில் இளையோள் சொன்னாள். “உன் அன்னையை எனக்கு காட்டு” என்று சூததேவர் சொன்னார். அச்சிறுமகளுடன் சென்று அவ்வன்னையை கண்டார். “அன்னையே கூறுக, இந்தக் கதையை நீங்கள் எவ்வண்ணம் அறிந்தீர்கள்?” ஆய்ச்சி “இது என் அன்னை எனக்கு சொன்னது, எங்கள் நாவழியில் திகழ்வது” என்றாள்.

“அன்னையே, என் முதலாசிரியர் ஒரு சொல்லும் எஞ்சாமல் பெருநூல் யாத்தவர். அவருடைய மாணவர்களாகிய நாங்களோ மேலும் மேலும் சொல்சேர்த்து ஆழிபோல் குறையாததாக வளராததாக இந்நூலை ஆக்கியிருக்கிறோம். எங்களுக்குத் தெரியாதது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நான் எப்படி நம்பமுடியும்?” என்றார். “ஆழி மழையால் குன்றுகிறது, ஆறுகளால் கூடுகிறது. தானே அளித்து தானே பெற்றுக்கொண்டிருக்கிறது” என்று ஆய்ச்சி சொன்னாள்.

“இக்கதைப்பெருக்கு எங்கள் அனைவருக்கும் உரியது. இது எளியோர் நாவினூடாக கணம் கணமென பெருகிக்கொண்டேதான் இருக்கும். அறிஞர்களும் பாணர்களும் தொழுது பின்வந்தாகவேண்டியவர்கள்.” என்றாள் ஆயர்குலத்து அன்னை. சூததேவர் தன் ஆணவம் புண்பட்டு “நான் அறியத்தக்க ஒன்றின்பொருட்டு அடிபணியக் கடமைப்பட்டவன். ஆனால் அவ்வறிவு என்னை வென்று எழுந்து கிளைமலர்ந்ததாக இருக்கவேண்டும்” என்றார்.

“எனில் ஒன்று கேட்கிறேன், கூறுக! இளைய யாதவரென எழுந்த ஆழிவெண்சங்கு ஏந்திய அண்ணலின் குருதி இப்புவியில் நீடிக்கிறதா?” என்றாள் ஆய்ச்சி. “நூல்களனைத்தும் கூறியதன்படி அவர் வானில் ஒரு நீலப்பறவை பறந்துசென்றணைந்ததுபோல தடமில்லாது மறைந்தார்” என்றார் சூததேவர். “தெய்வமே ஆனாலும் மானுடனாகப் பிறந்தால் நீர்க்கடனின்றி விண்புகலாகுமா?” என்றாள் அன்னை. “இயலாது” என்றபின் சூததேவர் சொல்லிழந்தார்.

ஆய்ச்சி கேட்டாள் “கூறுக, அண்ணலின் குழல் எங்கு சென்றது?” சூததேவர் “அது அவர் விழியிலா மைந்தர் முரளியின் மாணவர்நிரை வழியாக சென்றுகொண்டிருக்கிறது” என்றார். புன்னகைத்து ஆய்ச்சி கேட்டாள் “எனில் பீலி எங்கு சென்றது?” சூததேவர் திகைத்தார். “பீலி எங்கு செல்லும்?” என்று ஆய்ச்சி மீண்டும் கேட்டாள். சூததேவர் “அடிபணிகிறேன் அன்னையே, கூறுக!” என்றார். “அது கோகுலத்திலேயே என்றுமிருக்கும். யமுனைக்கரையிலேயே திகழும். ராதையிலன்றி வேறெங்கும் இப்பெருங்கதை நிறைவுறாது” என்றாள்.

அடிபணிந்து வணங்கி சொல்பெற்று சூததேவர் கோகுலத்திற்கு சென்றார். யமுனையில் அவர் படகிறங்கியபோது பீலிமுடி சூடிய இளஞ்சிறுமி மின்னும் கரிய நிற உடலுடன் விரிந்த ஒளிர்விழிகளுடன் சிரித்தபடி ஓடிவருவதைக் கண்டு கைகூப்பி நின்றார். அவளை நோக்கி கைநீட்டியபடி நடைநிலைக்காத ஆண்குழந்தை ஆடையற்ற கரிய உடலில் மண்பொடி படிந்திருக்க, தலையில் சுருட்டிக் கட்டிய மென்குழலில் மயிற்பீலி நலுங்க ஓடிவந்து குப்புற விழுந்து கையூன்றி எழுந்து மீண்டும் துரத்தியது.

சிரித்து கைகூப்பி துள்ளிய அச்சிறுமியிடம் “அரசி, உன் பெயர் என்ன?” என்று சூததேவர் கேட்டார். “ராதை, என் அன்னை பெயரும் ராதை” என்று அவள் சொன்னாள். “இம்மைந்தன் பெயர் என்ன?” என்றார். “இவன் பெயர் கிருஷ்ணன். இவன் அன்னை பெயரும் ராதையே” என்றாள். சூததேவர் மெல்லிய நடுக்குடன் கைகூப்பி நின்றார். பின் “அவன் மூதன்னை யார்? அவன் கொடிவழி எது?” என்றார். “சூதரே, துவாரகையின் இளவரசி மயூரியன்னையின் மகள் ராதையின் மகள் ராதையே இவன் அன்னை” என்றாள் ராதை. சூததேவர் அவ்விளமைந்தனின் சிறுகாலடி படிந்த நிலத்தில் தன் தலையை வைத்து வணங்கி விழிநீர் உகுத்தார்.

சூததேவர் அங்கே யமுனைக்கரையில் நின்றிருந்த நீலக்கடம்பின் அடியில் சென்று அமர்ந்தார். அங்கே கல்பீடத்தின் மேல் யமுனையில் இருந்து எடுத்த ஒரு நீளுருளை நீலக்கல்லாக யாதவமைந்தனாகிய கிருஷ்ணன் நிறுவப்பட்டிருந்தான். அருகே சற்று பெரிய வெண்ணிற உருளைக்கல்லாக ராதை. நீலக் கல்மேல் ஒரு மயிற்பீலி சூட்டப்பட்டிருந்தது. ராதையின்மேல் ஒரு வெண்மலர். முன்னால் புற்குழல் வைக்கப்பட்டிருந்தது. நீலக்கடம்பு பூத்து மலர்கள் அக்கற்களின்மேல் உதிர்ந்துகொண்டிருந்தன.

சூததேவர் அங்கே அமர்ந்து யமுனையை பார்த்துக்கொண்டிருந்தார். பிறந்து சொல்லறிந்த கணம் முதல் அவர் உணர்ந்த ஆணவத்தை முற்றழித்து சுருங்கி இன்மையென்றாகி மறைந்து மீண்டும் எழுந்தார். அவர் கோகுலத்தில் எவரையும் சந்திக்கவில்லை. அங்கிருந்து கிளம்பி பதினெட்டு ஆண்டுகள் பாரதப் பெருநிலம் முழுக்க தானும் அலைந்தார். தன் மாணவர்களை நிலம்தோறும் அனுப்பினார். மக்கள் கூறும் அனைத்துக் கதைகளையும் கேட்டு தெரிந்துவரச் சொன்னார். அவையனைத்தையும் தொகுத்து உரிய இடங்களில் அமைத்து அப்பெருங்காவியத்தை முழுமை செய்தார்.

மீண்டும் அவர் அதை நைமிஷாரண்யத்தில் கூறியபோது இனி ஒன்றும் இல்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இப்புவியில் இனி ஒருதுளிகூட எஞ்சியிருக்க வாய்ப்பில்லை என்று தனக்கே சொல்லிக்கொண்டார். “இது நிறைவுறுக! பிரம்மம்போல பெருகும்போதும் குறையாதது என்றே ஆகுக!” என்று அவர் கூறுகையில் “இல்லை! இல்லை!” என்று கூறியது அக்கிளி.

அவர் துயரடைந்து பார்த்துக்கொண்டிருக்க அனலில் தோன்றிய நாரதர் “ஆம், இனி இப்புவியில் சொல்லவும் கேட்கவும் ஏதுமில்லை. எனினும் இக்காவியத்தில் ஏதோ ஒன்று எஞ்சுகிறது என்று எனக்குள் குரலொன்று சொல்கிறது. இது பிரம்மம் என்றே ஆகவேண்டுமெனில் அதுவும் தேவை” என்றார்.

உளம் சோர்ந்து அங்கிருந்து கிளம்பிய சூததேவர் பதினெட்டாண்டுகள் கதையை பாரதவர்ஷமெங்கும் சொல்லி அலைந்து மீண்டும் நைமிஷாரண்யத்திற்கு வந்தார். அங்கு அவர் வந்தபோது முற்காலை. பறவைகள் துயிலெழுந்துகொண்டிருந்தன. கிளிகள் அக்காவியத்தின் வரிகளை கூறுவதை கண்டார். அக்காடு முழுக்க பல்லாயிரம் பறவைகளால் அது பாடப்பட்டது. சொற்கள் ஒவ்வொன்றும் பறவை மொழிக்கு மாற்றப்பட்டிருந்தன.

அதை கேட்டபடி மெய்ப்புகொண்டு விழிநீர் மல்கி மண் தொட்டு அவர் சொன்னார். “இக்காவியமே மண்ணிலெழுந்த நூல்களில் முதல்முழுமை கொண்டது. நிகர் வைக்க பிரம்மம் அன்றி பிறிதொன்றிலாதது!” அவர் தோளில் இருந்த கிளி எழுந்து சிறகடித்து “ஆம்! ஆம்! ஆம்!” என்றது. அவர் முன் தோன்றிய நாரதர் “மெய்! மெய்! மெய்!” என்றார். காட்டிலிருந்த பறவைகள் அனைத்தும் “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றன.

“ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது வளி. “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது ஒளி. “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது நிலம். “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது நீர். “ஆகுக! ஆகுக! ஆகுக!” என்றது வான். அவ்வண்ணம் இது தெய்வங்களால் ஏற்கப்பட்டது என்றான் சீர்ஷன்.

நிலவு பரந்த கடலில் இருந்து அலைகளெழத் தொடங்கின. அதன் ஓசை வலுத்துச் சூழ்ந்தது. கண்ணன் கீரத்தன் “முரசெழுகை” என்றான். “நிலவில் இக்கடல் ஒரு மாபெரும் வெண்முரசென்றாகிறது. என்றும் மாறா ஒற்றைச் சொல்லை உரைத்துக்கொண்டிருக்கிறது” என்றான்.

“கிளம்புவோம்” என்று சொல்லி சீர்ஷன் யாழுடன் எழுந்தான். அவர்கள் மீண்டும் படகில் ஏறிக்கொண்டார்கள். அலைகள் எழுந்து கொந்தளித்தன. “இப்பெருநூல் என்றுமுள தென்மொழிக்கும் மாற்றப்படவேண்டும்” என்று பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதி கூறினான். “சிப்பியில் ஆழியின் மொழியை படிக்கக் கற்ற ஒருவனால் அது நிகழ்க!” என்றான் சீர்ஷன். “மீனவனின் சொல் மீனவனில் பெருகுக!”

படகுகள் பேரலைகளில் ஏறி அமைந்து ஏறி விழுந்து அகன்று செல்ல மகேந்திரமலை மெல்ல அலைகளால் மூடப்பட்டு உள்ளே சென்றது. கடல் அவர்களை ஏந்தி அலைக்கழித்தது. கண்ணன் கீரத்தன் துடுப்பிட்டு கரைநோக்கி கொண்டுசென்றான். கன்னி காத்திருக்கும் முக்கடல் முனை எழுந்து அவர்களை நோக்கி வந்தது.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முதலாவிண் - 16

தென்னிலத்தில் இருந்து மீள்கையில் சீர்ஷன் ஆஸ்திகமுனிவரின் நாகர்நிலத்துக்கு சென்றான். வேசரதேசத்தில், கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில், புஷ்கரவனத்தில் அமைந்திருந்த நாகர்குலத்து அன்னை மானசாதேவியின் ஆலயத்தையும், அருகே அன்னைக்கு ஜரத்காரு முனிவரில் பிறந்த மைந்தன் ஆஸ்திகனுக்கு அமைந்த ஆலயத்தையும் வழிபட்டுவிட்டு வடக்கு நோக்கி சென்றான்.

அன்று சிறப்புநாள் ஏதுமில்லை என்றாலும் மானசாதேவியின் ஆலயத்திற்கு பலநூறு அடியவர்கள் வேசரநாடெங்கிலுமிருந்து வந்திருந்தனர். கமுகுப்பாளையாலான நாகபட முடியை சூடி, இளநீல ஆடை அணிந்து, அன்னையின் பெயர்சொல்லி பாடி ஆடியபடி, கால்நடையாக வந்தவர்கள். நாகபட முனைகொண்ட கோலேந்திய குடித்தலைவர்கள். இளஞ்சிவப்பாடை சுற்றி நாகாக்ஷமாலை அணிந்த பெண்கள். அவர்கள் அரிசிப்பொடியும் மஞ்சள்பொடியும் இட்டு நாகவடிவளான அன்னையை வணங்கினர். அருகமர்ந்த நாகச்சுருளுடல் கொண்ட மைந்தனுக்கும் வழிபாடு செய்தனர்.

வணங்கிவிட்டு அருகிருந்த அம்பலத்தில் அன்னம் உண்ண அமர்ந்தபோது “அருகென தழைப்பதே ஆலெனப் பெருகும். ஆலெனப் பெருகுவது அருகென உறையவும் அறிந்திருக்கும்” என்று அங்கிருந்த நாகமுதியவர் சொன்னார். “இன்று பாரதவர்ஷமெங்கும் மானசாதேவி அன்னைக்கு நூற்றெட்டு ஆலயங்கள் உள்ளன. அவை நாகஸ்தலங்கள் என்று அறியப்படுகின்றன. அவற்றில் ஒன்பதில் பதினெட்டில் நூற்றெட்டில் சென்று வழிபடுவதை நோன்பெனக்கொண்டவர்கள் நாகர்கள். நாகரில்லா நிலம் இன்று பரதகண்டத்தில் எங்கும் இல்லை.”

“ஆனால் இங்கு வருபவர்கள் நாகர்கள் மட்டுமல்ல” என்றார் இன்னொரு நாகர்குலத்து முதியவர். “நாகர்களுடன் பிற குடியினர் நிகழ்த்திய போர்கள் முடிந்துவிட்டன. இன்று இப்பெருநிலத்தில் குடிகள் மழைக்கால நீரோடைகளென ஒன்றுடனொன்று கலக்கின்றன. ஒன்றை ஒன்று வளர்க்கின்றன. நாகர்களில்லாத வழிபாடுகளேதும் இன்றில்லை. ஆழிவண்ணனின் படுக்கையென, அனல்வண்ணனின் ஆரம் என, அன்னையின் மேகலை என அனைத்திடங்களிலும் நாங்களே திகழ்கிறோம். வென்றவர்கள் நாங்களே.”

சீர்ஷன் மேலும் வடக்கே சென்று விஜயபுரியில் வணிகர்களுடன் தங்கும்போது நாகர்குலத்தில் எழுந்த அருகப்பேருருவனைப் பற்றி கேட்டறிந்தான். “ரிஷபதேவரில் தொடங்கும் அகம்வென்ற பெருவீரர்களின் நிரையில் இருபத்து ஒன்றாமவரான நமிநாதர் ராகவராமனின் குலத்தில் எழுந்தார். இருபத்தி இரண்டாமவரான நேமிநாதர் ஆழியேந்திய அண்ணலின் யாதவக்குடியில் தோன்றினார். இருபத்தி மூன்றாமவரான பார்ஸ்வநாதர் நாகர்களின் குருதியில் பிறந்தார்” என்று முதுவணிகர் ஒருவர் சொன்னார். “ஐம்புலன் வென்றவர். அமுதனைத்தையும் நஞ்சென்றாக்கி இப்புவியிருப்பைக் கடந்து மெய்யிருப்பை அடைந்தவர்.”

“அன்னை மானசாதேவியின் குருதிவழியில் வந்த வாமையை காசிநாட்டரசர் அஸ்வசேனர் மணந்தார். அவர் வயிற்றில் பிறந்தவர் பார்ஸ்வநாதர். அருகத் தவநெறி ஓங்கி பாரதவர்ஷத்தை தன் ஆயிரம் கைகளால் தழுவிக்கொண்டிருக்கிறது” என்றார் முதுவணிகர். “இன்று பாரதவர்ஷமெங்கும் குடிப்போர்களும் முடிப்போர்களும் நின்றுவிட்டன. நிலையரசர்களுக்கும் எழுமரசர்களுக்கும் நடுவே என்றும் இலங்கும் எல்லையென்ன என்பது வரையறுக்கப்பட்டுவிட்டது. போரிலாதபோது வணிகம் செழிக்கும். வணிகர் செழிப்பதனால் வணிகர்களின் மெய்மைவழி சிறக்கிறது.”

சீர்ஷன் அவருடன் சென்று விஜயபுரியின் வடக்கே மலைப்பாறை ஒன்றில் செதுக்கப்பட்ட பார்ஸ்வநாதரின் பேருருவச் சிலையை பார்த்தான். அசோகமரத்தடியில், காலடியில் பத்மாவதி யக்ஷி பணிந்து அமைந்திருக்க ஊழ்கத்தில் நின்றிருந்த பேருருவரின் தலைக்குமேல் ஏழுதலை நாகம் படமெடுத்து குடைபிடித்திருந்தது. விழிமூடி நின்றிருந்த மாமத்தகம் தொடுவான்கோட்டிலென எழுந்திருந்தது. அங்கே ஆடையில்லா மண்படிந்த மேனியராகிய அருகநெறியினர் கூடி பெருமானை வாழ்த்தி வணங்கிக்கொண்டிருந்தனர்.

விஜயபுரியில் இருந்து வடக்கே செல்கையில் மையச்சாலையில் இருந்து சற்றே வழிதவறி வேளாண்சிற்றூர்களினூடாக சீர்ஷன் அலைந்தான். நெடுவழிக் களைப்புடன் அந்தியில் ஒரு சிற்றூரை அடைந்தான். அவ்வூரின் மூங்கில்வேலிக்கு வெளியே நின்று “அன்னையரே, அயலவன், நெடுவழியன். அந்திக்கிடக்கை நாடிவந்தேன்” என்றான். உள்ளிருந்து வந்த முதியவர் அவனைப் பார்த்ததும் கைகூப்பி “வருக, பாணனே! இச்சிற்றூருக்கு சொல் தருக!” என்று அழைத்துச் சென்றார்.

இரவுணவாக பால்சேர்த்து சமைத்த கஞ்சியும் இன்கிழங்குப் புழுக்கும் உண்டு, அவர்களின் விருந்தினர் குடிலின் சிறுதிண்ணையில் உடல் ஓய மல்லாந்து படுத்து, அரைநிலவு எழுந்த வானை பார்த்துக்கொண்டிருந்தான் சீர்ஷன். ஊர் அடங்கிவிட்டிருந்தது. தொலைவில் தொழுவத்து மாடுகளின் கழுத்துமணி ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சூழ்ந்திருந்த காட்டிலிருந்து சீவிடுகளின் ஓசை எழுந்தது. அவன் துளித்துச் சொட்டவிழைவன என எழுந்த விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது சிறுமதலை ஒன்று அழுதது. அதன் அன்னை மெல்ல தட்டியபடி தாலாட்டு பாடத் தொடங்கினாள். வண்டென ரீங்கரித்த மெல்லோசை மெல்ல திரண்டு சொல்லாகி பொருள் கொண்டது.

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்றழைத்த சிறுகரிச்சான் பைதலே, பாடுக மைநீலம் விலக்கி மணித்தளிர் விழித்துக்கொள்ள மால்திகழ் பெருஞ்சோலை அறிந்த குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை. மணிக்கழுத்து மரகதப் புறாத் தொகையே சாற்றுக அவன் மயிற்பீலி நலுங்கலில் எழுந்த நீலவிழி நகைப்பை.

கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? இறையோய்! இங்குளாய்! கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்! கருநீலத் தழல்மணியே! வானெழுந்த சுடரொளியே! காட்சியில் கண்ணே, கண்ணில் கருத்தே, கருத்தில் மெய்யே, மெய்யென்றானவனே, மெய்கடந்துறைபவனே.

மெல்லிய குரலில் அந்தப் பாடலை அவள் பாடிக்கொண்டிருந்தாள். அங்கு வீசிய காற்றே குளிர்ந்து துளித்து அச்சொற்களென்றானதுபோல. அங்கிருந்த இருளின் முழுப்பே ஒளிகொண்டதுபோல. மானுடர்பாடும் குரலுக்கு அவ்வினிமை எவ்வண்ணம் அமைந்தது என அவன் வியந்தான். அன்றி, மானுடர்க்கன்றி அவ்வினிமை மண்ணில் அளிக்கப்பட்டுள்ளதா என உளம்பொங்கினான்.

பாலாழியின் சுழிப்பென்றெழுந்த ஆழியே, அதிலெழுந்த முத்தெனும் வெண்சங்கே காத்தருள்க! விழிகொண்ட நீலப்பீலியே, ஏழு துளைகொண்ட பொன்மூங்கிலே, கொன்றை மலர்ந்தெழுந்த பட்டாடையே காத்தருள்க! இசையில் விழிமயங்கிய கன்றே, எழுந்து குடையான அரவே, சூழ்ந்து அலைகொண்ட காற்றே காத்தருள்க என் கண்ணனை. சுடரை ஒளி என சூழ்ந்துகொள்க!

இரண்டென்று எழுந்த மயக்கே, இங்கு இன்று இவ்வண்ணமென்று அமைந்த சழக்கே, இனியென்று ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே, யானென்று எனதென்று எழுந்த பெருக்கே, தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே, மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே, வாழ்வென்று சாவென்று காட்டும் பசப்பே, காத்தருள்க என் மகவை! கதிரை காத்தமைவது இருளின் பொறுப்பென்று உணர்க!

சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே, சற்றென விலகி விரிமலரின் முதலிதழோ எனத் தோன்றும் பெருவிரலே, இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே, அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே, அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே, அமைக என் தலைமேல்! அமைக இப்புவிமேல்! அமைக திருமகள் மடிமேல்! அமைக இக்ககனவெளிமேல்! அமைக காப்பென்று அமைக!

செவ்விதழ் சிறுதளிர்மேல் பால்துளி எழுந்த நகைப்பு. முகிழ்த்த வேதமுதற்சொல். இது அறிதற்கொண்ணாது ஆயிரம்கோடி அருந்தவ முனிவரை அகற்றும் பெருஞ்சுடர். அள்ளி முலையோடணைத்து சின்னஞ்சிறு பண்டி தடவி சிரித்துக் குழையவைக்கும் அன்னையர் கைவிரல் கணையாழியின் சிறு மின்னொளிச்சுடர். களியாடும் கன்னியர் தோழியர் கையிலெடுத்து கழற்சியாடும் மாமலை.

முலைக்கண் முனையில் சொட்டிநின்றிருக்கும் கொழும்பால் வெண்துளி தயங்க, அன்னை குனிந்து நோக்கிக் கனியும் விழிமுனை ஒளிகொள்ள, சிறுகுமிண்வாய் விலக்கி கைவிரித்து சுட்டுவிரல் தூக்கி எதையும் சுட்டாமல் ஒலித்த முதற்சொல். சொல்லென்று திரளாத இன்பறவைச் சிற்றொலி. அன்னை நெஞ்சறிந்த பொருளனைத்தும் சென்றமையும் குளிர்மலைமுடி.

கைத்தளிர் விரித்து ஆடுக செங்கீரை! கால்மலர் கொண்டு ஆடுக செங்கீரை! சின்னஞ்சிறு நகையொலியுடன் இணையும் விழிச்சுடரொளித்துளியுடன் ஆடுக செங்கீரை! இச்சிறுகுடிலின் முன் இளங்கதிரெழும் புலர்காலையில் முதல்மலர்மணம் சூழும் மென்காற்றில் ஆடுக செங்கீரை!

ஆயர்குடிபிறந்த அழகே, இச்சிற்றில் நிறைக்கும் ஆழிப்பால் பெருக்கின் அலையே, எழுதிசை தொட்டு விழுதிசை முட்டி மீண்டு புவியாள ஆடுக! இன்மையென்ற ஒருமுனையும் இருத்தலென்னும் மறுமுனையும் தொட்டுத்தொட்டு ஆடுக! பொருளென்று அங்கும் மயக்கென்று இங்கும் ஆகி விளையாடுக!

கூரைமூங்கிலில் கட்டிய கொடிவள்ளிக் கயிற்றில் பிணைத்த அன்னை பழஞ்சேலை குவிப்பில் கால்மேல் கால்வைத்து, நெஞ்சில் சிறுகை சேர்த்து விழிமயங்குக! இத்துணியில் எழுகின்றது அன்னையின் அடுமனை புகைமணம். அவள் உடல்கொண்ட வியர்வை வாடை. கண்வளர்க கண்ணே, அதிலுள்ளன அன்னையின் விழிநீர் வெம்மையும் நெடுமூச்செறிந்த வெதுப்பும். பறக்கும் கருவறையே தொட்டிலென்றறிக! அங்கே நீ காணும் கனவுகளில் உடன் வந்தாடும் அந்த மழலைச்சிறுமியே உன் அன்னையென்றுணர்க!

சிறுதொட்டிலாடி அமைக! சொல்லுரைத்து செயல்காட்டிச் சென்ற அரசே, இங்கு சொல்லவிந்து செயலமைந்து மயங்குக! உன் சிறுகைவிரல்கள் தளர்க! உன் தளிர்க்கால் சரிந்தமைக! நீள்பீலி நெடுவிழிகள் வளர்க! உன் முடியிலெழுந்த பீலிவிழி மட்டும் இமையாதாகுக! கண்ணே, இப்புடவிமேல் உன் நோக்கு ஒருகணமும் அணையாதாகுக!

கொட்டும் கைகொண்டு குவிக்கும் கைகள் பற்றி அன்னை சொல்லும் மழலைக்குச் சப்பாணி கொட்டி அருள்க! தொட்டு இதழொற்றி, மீண்டும் தொட்டு விழியொற்றி, விடாய்மீளாது அன்னை கொள்ளும் தவிப்புக்கு சப்பாணி கொட்டி அருள்க! விழிவிரித்து மகிழ்ந்து, தன் விழியெண்ணி அஞ்சி, அன்னை கொள்ளும் அலைவுக்கு சப்பாணி கொட்டி அருள்க!

கூட்டுச் சிறுகுருவிக் குஞ்சின் சிறகென எழுந்தசைக உன் கைகள்! துள்ளி வாய்விரித்து கூவிக் கரைக உன் இதழ்மலர்கள்! விடாயென்றும் பசியென்றும் விம்மி எழுக உன் சிற்றுடல்! முலையுண்டு, அன்னை உளமுண்டு, ஆழத்து கனவுண்டு, கடந்த வெளியுண்டு, உடற்கூடென்று இங்குதிர்த்து விண்ணென்றாகி எழச்செய்க! ஆயர்குலத்தெழுந்த ஆழியனே, உன் நெஞ்சிலெழுக அன்னை அனலனைத்தும் அணைக்கும் அலகிலா பெருவெள்ளக் குளிர்க்கடல்!

பாய்ந்து எழுந்து மென்தளிர் கைகளால் சூழ கழுத்தை அணைத்து, இதழ்நீர் குளிர்ந்து கன்னம்தொட முத்தமிடுக! உன் மூச்சுக்காற்றுபட்டு செவிமடல் சிலிர்க்க அன்னை அறிக சொல்லிச் சொல்லி நால்வேதமும், வேதம்கடந்த சொல்லும், வேறுஆயிரம் மெய்நூல்களும் ஆற்றிய பிழைசுட்டி நின்றிருக்கும் அறியா முழுமையை!

பால் உலர்ந்த கன்னங்களுக்கு ஆயிரம் முத்தம். குழைந்த தோள்களின் மென்மடிப்புகளுக்கு பல்லாயிரம் முத்தம். சிறுபண்டிச் சுழிக்கு பல்லாயிரம் பல்லாயிரம் முத்தம். தொடைத்தசையின் அடுக்குகளுக்கு, தண்டை இறுகிய கணுக்கால்களுக்கு, இதழ்ப்பாத மென்மைக்கு முத்தங்கள் பல்லாயிரமாயிரம்.

அன்னை சிரிக்கும் முகம்கண்டு துள்ளும் சிற்றுடலுக்கு கோடி முத்தம். நெற்றிப்பரப்பில் கலைந்து விழுந்த கருங்குருவி மெல்லிறகுபோன்ற குழலிழைக்கு கோடி முத்தம். சிரிப்பில் நீண்ட இதழ்களுக்கு, கன்னத்து நீள்குழிகளுக்கு, காதிலாடும் முத்துச்சிறுதுளி குழைகளுக்கு கோடி முத்தம். கண்ணெழுந்த ஒளியே, உன் சிறுமார்பில் சொட்டிய வாய்த்துளியின் ஈரத்திற்கு பல்லாயிரம்கோடி முத்தம்.

முத்தம்போல் பொருளற்ற பிறிதொன்றுண்டோ? ஒற்றி ஒற்றி வெறிகொள்ளுதல். பருகப்பருகத் தீராத இன்கடல். செய்வதற்கொன்றிலாதோள் செய்து செய்து கலிதீர்க்கும் வீண்செயலன்றி அது வேறென்ன? உண்ணாது உண்ணுதல், ஒன்றாது ஒன்றுதல் அன்றி முத்தம் என்பதுதான் என்ன? உடல்கடந்தெழும் உள்ளப்பெருக்கை உடலால் வெளிப்படுத்தலன்றோ அது? ஆனால் மானுடருக்கு வேறென்ன அளிக்கப்பட்டுள்ளது?

மெல்ல வருக சிற்றடியே! ஒன்று ஒற்றி பிறிதொன்று, காற்றில் வைத்து மற்றொன்று ஊன்றி, இக்கணம் இக்கணம் என்று தள்ளாடி அருகணைக என் அரசே! கைதட்டி அழைத்து, களிப்பேறி நகைத்து அன்னையரும் செவிலியரும் அருகே சூழ அடிவைத்து அடிவைத்து அகிலத்தை ஆள வருக!

ஒற்றிய சிற்றடித் தடங்கள் பதிக என் அடுமனைச் சாணிமெழுக்கில். என் கூடத்து பட்டுக்கோரைப்பாயில். என் மஞ்சத்து ஆடையில். விடாய்திகழும் மார்பில். ஆழிவண்ணத்து அழகனே, அவை பதிக என் தலையில். என் தலைகொண்ட அனலில். என் ஆயிரம்கோடி மூதாதையரின் பெயர்களில்.

இது குருவிச்சிற்றடி. தொட்டுத்தொட்டு எழுந்தமையும் சிறு எழுத்துக்களின் நிரை. இது மென்பூனைக் காலடியின் பதுங்கிய பஞ்சுத் தொடுகை. இது சிறுநாய்க்குட்டியின் நான்குகால் தடம். நாலில் ஒன்று நிரைபிழைக்க எழுந்து விழுந்து, கண்ணில் ஒளிதுள்ள, வாலில் உவகைசுழல எழும் உயிர்த்துடிப்பு. இது கன்றுக் காலடியின் துள்ளல். முரசுக் கழிமுழையின் தாளம்.

வருக கரியோனே! நீர்வெம்மை நிறைகாற்றின் அசைவென்று. தென்மூலை வானோசையின் சிறுமுரளல் என. ஆடி திருப்பி காட்டிய ஒளிச்சுழல்போல அதிராதெழுந்தமைந்த சிறுமின்னல் என. இலையசையாது ஊழ்கமியற்றி காடு காத்திருக்கும் முதுவேனில் பெருமழையே வருக!

ஆயிரம் பல்லாயிரம் தவளைகள் வாழ்த்துரைக்க பொழியும் விரிவானே வருக! ஆயிரம் கோடி சிற்றுயிர்கள் இசைமுழக்கி எதிரேற்கும் குளிர்ப்பொழிவே வருக! ஓசையிட்டுப் பெருகியணைந்து, மண்ணறைந்து சூழத்தழுவி, துளிகோடிப் பெருகி, வீழ்கடலென்றாகி, வான்மூடி மண்மூடி நீரொன்றே என்றாகி நின்றிருக்கும் பேரளியே வருக!

நிலவெழுந்த முகில்நிரையில் ஒளிர்வதென்ன நகைப்பு? கருமுகிலை பொன்னாக்கும் ஒளியென்ன ஒளி? இங்கெழுந்த விழியொளியே அங்கெழுந்து அம்புலியென்றானதோ? நோக்குக விழியோனே, கைவீசி அள்ள முயல்க அங்கே பூத்தெழுந்த அப்பொன்மலரை!

தேய்வதொன்று, வளர்வதொன்று, திகழ்வதொன்று வானில். தேய்விலாது வளர்ந்தெழுந்து எந்நாளும் திகழ்வதொன்று என் கையில். ஒளிர்வதொன்று, மறைவதொன்று, முகில்திரை விலக்கி எழுவதொன்று, மண்ணெல்லாம் மிளிர்வதொன்று அவ்விண்ணில். ஒளிர்வதொன்று, என் ஆடையில் மறைவதொன்று, முந்தானை நுனிவிலக்கி எழுவதொன்று, இப்புற்குடிலும் சூழ்காடும் புவியும் பொலிய மிளிர்வதொன்று என் மடியில்.

விழிப்பீலி சுடர்கொள்ள, வீழ்நிழல் அசையாதமைய நோக்குக அந்நிலவை! தண்காற்றில் மெய்ப்படைந்த தளிருடல் மடிவெம்மை கொண்டு ஒடுங்க, தண்டைச்சிறுகால் ஒன்றின்மேல் ஒன்று அமைய, வளையணிந்த கையிரண்டும் வயிற்றின்மேல் பூண்டிருக்க, காலமில்லா கனவொன்றில் காணுக இம்முழுநிலவை! விழிப்புற்று புன்னகைத்து, அண்ணாந்து முகவாய் தொட்டுத்திருப்பி சுட்டுக அன்னைக்கு அவள் முதல் நிலவை!

அள்ளி மணல்கூட்டி, அதன்மேல் வரியிட்டு, நீ அமைத்த இந்நகர்தான் அத்தனை அழகு. மென்மணல்மேல் படிந்த உன் சிறுவிரல் கோடுகள் பேரழகு. இடைக்கிண்கிணி வெள்ளிச்சரடு மண்மேல் விழுந்து இழுபட கால்மடித்தமர்ந்து, தன்னுள் தான்பேசி தலையாட்டி, தன்னைத் தானே ஏற்று தருக்கி, தான் படைத்ததை தள்ளி நின்று நோக்கி தானே மகிழ்ந்து, நீ அமைக்கும் இந்த மணல்நகரம் நிகரற்ற அழகு.

சுற்றிவந்து அமர்ந்தெழுந்து, மண் அள்ளி பொத்தி அழுத்தி அமைத்து, விழும்போது சலிப்புற்று, விடாமல் மீண்டும் அமைத்து, மெல்ல அகழ்ந்து உள்ளறைகள் அமைத்து, இலைபறித்து கொண்டுவந்து சரிவில் பொருத்தி, உச்சிமுகடில் மலர்கொண்டுவந்து சூட்டி நீ சமைத்த சிற்றில்மேல் சுற்றிச் சுழன்றுசெல்லும் சிறுகாற்றும் சரிந்தாடும் கிளைநிழலும் சிதறொளியும் காட்டுவதொன்றுண்டு கண்ணே, படைக்கும்போது நீ அழகன்.

கட்டிய சிற்றிலைக் கடந்து அப்பால் நின்று நோக்கி கைதூக்கி கூவி ஆர்ப்பரித்து ஓடிவந்து கால்தட்டி வீழ்த்தி நீ விளையாடும் கோலம் கண்டு திகைக்கின்றனர் தோழியர். உன் தோழர் உடன்சேர்ந்து களியாடுகின்றனர். திண்ணைமேல் நின்று தன் நெஞ்சோடு கைசேர்த்து அன்னை அறிந்த அழியாமெய் ஒன்றுண்டு அரசே, அழிக்கையில் நீ பேரழகன்.

செவிநூறு நிறைய, தொழுக்கன்று உவகைகொண்டு துள்ள, தோழர் துணையாகிவர சிறுபறை முழக்கிச்செல்க! தோல்வட்டம் அதிர துள்ளிக் கூத்தாடுக இணைக்கோல்கள்! இயைக இருகால் நடனம்! இணைந்தெழுந்தாடுக உன் தோழர் கூட்டம்!

நோயெழும் மழைமுன்காலம். நனைந்த மண்ணிலிருந்து நச்சு ஆவியெழும் பருவம். உன் கால்தொட்டுச் செல்லும் பாதைகளிலெல்லாம் மருந்தென மண்குழைக! உன் பறையோசை கேட்டு செவிமடல் மடித்து நின்றிருக்கும் கன்றுகளெல்லாம் அமுதெனச் சொரிக! பல்லாயிரம்கோடி நாவுகளுடன் சூழ்ந்திருக்கும் மரங்களெல்லாம் கேளாச் சொல்லுரைத்து வாழ்த்துக! வாழ்த்துக வெளிவானம்! வாழ்த்துக கண்ணே உன்னை அன்னை உளம்!

முகில்கணம் முழங்குக! முழங்குக மாமலைகள்! முழங்கி அலைகொள்க ஆழிப்பெருவெளி! எளியோருக்கென எழுந்த புதுவேதம் சொல்பெருக ஓங்குக உன் பறையோசை! முட்டை விரிய ஈரச்சிறகு உதறி எழுந்த சிறுகிளிக்குஞ்சு செவ்வலகு விரித்துச் சொல்லட்டும் ‘ஆகுக, ஆழிவண்ணா’ என்று. சிறுவளைவிட்டு முகம்நீட்டி ஒளிநோக்கும் முயல்குட்டி உரைக்கட்டும் ‘அவ்வண்ணமே, அணிச்சங்கனே’ என்று. தேவர்க்கிறைவனே, பனிக்குடம் உடைத்து எழுந்து தள்ளாடி நின்று நாநீட்டி இளமூக்கை நக்கி கன்று உரைக்கட்டும் ‘ஆம், அலைமலர்கண்ணா’ என்று.

துவாபரம் கலியை முட்ட, ஆர்ப்பரித்த மாந்தர் அலைகொண்டு சூழ, விண்ணெலாம் கண்ணென்றாகி விழியிமையார் நிறைய, சொல்லெல்லாம் பொருள்மாறும் பெருங்களத்தில், பொருளெல்லாம் உதிர்ந்தழியும் குருதிப்பெருவெளியில், எழுந்த பெருஞ்சொல் அன்று திகழ்ந்த மணித்தேரே உருள்க! அறவாழியென்றே உருள்க உன் அணிச்சகடங்கள் நான்கும்!

ஏந்தாத படையாழி, இசைக்காத வேய்குழல், ஒருபோதும் உலையாத பொற்பட்டு திகழ்ந்த தேர்த்தட்டே, போருழன்ற பெருஞ்சகடே, அழியாத சொல்லெழுந்த அணிமன்றே உருள்க! செங்குருதிமேல், துயர்கள்மேல், சாவின்மேல் உருள்க! அமுதின்மேல் அழிவின்மைமேல் உருள்க! உருள்க பெருந்தேரே, இப்புவியின்மேல் சுடராழியென்றே உருள்க!

வெண்பனி மாமலைமேல் உருள்க! கங்கைமேல், காவிரிமேல் உருள்க! சிந்துவின்மேல், பிரம்மபுத்திரையின்மேல் உருள்க! விந்தியன்மேல் சஹ்யன்மேல் உருள்க! அணித்தேரே, அறத்தேரே, அழியாவேதத் திருத்தேரே, மாநதியின்மேல், துங்கையின்மேல், கிருஷ்ணையின்மேல், கோதையின்மேல் உருள்க! அலைகொண்ட கடல்சூழ தவம்கொள்ளும் கன்னியின் காலடியில் சென்றமைக! கண்ணே, தென்முனைமேல் சென்றமைக! முந்தையோர் சென்றமைந்த ஆழிப்பேராழத்தைச் சுட்டும் சிறுவிரல்நுனிமேல் அமைக! அங்கமைக கண்ணா, என்றும் அவ்வண்ணமே அமைக! ஆம், அவ்வாறே ஆம்.

ஒரு வயிற்றில் தோன்றி, ஒரு நெஞ்சில் முலையுண்டு, ஓருடலில் திகழ்ந்து, ஓரம்பில் மறைந்து, ஓராயிரம் கோடியெனப் பெருகிய கண்ணனுக்கே சரண். கருதோறும் எழுந்து, முலைதோறும் அமுதுண்டு, மடிதோறும் திகழ்ந்து, மண்ணெல்லாம் நிறைந்த மன்னனுக்கே சரண். ஆழிவெண்சங்கு அழகனுக்கே சரண்.

அன்னையின் சொல் தேய்ந்து மீண்டும் இன்னொலியென்றாகியது. இருள்வெம்மையில் விழிமயங்கும் புவிக்குஞ்சின்மேல் பெருஞ்சிறகணைத்து அமர்ந்த அன்னைப்பெரும்பறவையின் ஓசை என. அது ஓய்ந்த பின்னரும் சீர்ஷன் அது சென்றடைந்த இடத்திலேயே இருந்தான். அங்கே அவன் இரு கரிய குழவிச்சிற்றடிகளை கண்டான். அவற்றை தன் தலைசூடி கைகூப்பி உள்ளமெல்லாம் இனிக்க, உடலே தித்தித்து தவிக்க “மாமழைக்கண்ணா, உனக்கே சரண்” என்றான்.

[வெண்முரசு நாவல்நிரை நிறைவு]

வெண்முரசு விவாதங்கள் தளம்